Sunday, February 22, 2009

உலகியலும் அருளியலும்-II

ஜீவகாருண்யத்தை கடைபிடித்து மக்கள் உயர்நிலையை அடைய முடியும் என்பதை வள்ளலார் மட்டுமேஎளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தெரிவித்திருக்கிறார். மனித உடலை பிரணவ தேக மாக மாற்றி செய்து நிருபித்தார். பிரவண தேகம் பின் ஞான தேக மாகியது. தியானத்தையும் , யோக முறையும் ஒருவர் கற்றுக்கொண்டு ஒரு குகையிலோ அல்லது தனிமையாகவோ வாழ்ந்தால் அதனால் சமுதாயத்திற்கு ஒரு பயனும் இல்லை என்பதை வள்ளலார் தீவிர மாக கடைப்பிடித்தார்.

கீதையிலே பரமாத்மா கிருஷ்ணன் சொல்கிறார் :(இந்து தர்மத்தின் முக்கிய நூலாக போற்றப்படுவது பகவத்கீதை. இந்த கீதையை உபதேசித்தவனும் கேட்டவனும் சந்நியாசிகள் அல்லர். குடும்பவாழ்விலிருந்தோர்,
மற்றும் மன்னாண்ட மன்னர்கள். வரலாற்று அறிஞர்கள் 5000 வருடத்திற்கு முன் மகா பாரதம் நடந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

இங்கு மதத்தை ப் பற்றி குறிப்பிடுவதை பொறுத்தருளவும்.)

"அர்ச்சுனா, மூன்று உலகங்களிலும் இனி மிஞ்சிற்கும் செயல்,செய்கை ஒன்றும் எனக்குக் கிடையாது. அடையத்தக்கது, அடையப்படாது என ஒரு பேறுமில்லை.எனினும் நான் தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறேன். நான் தொழில் செய்யாது வாளாவிருப்பின், உலகத்தில் எல்லா உயிர்களும், என் வழியையே பின் பற்றும்.

அதனால் இந்த உலகம் அழிவு எய்தும். அந்த அழிவுக்கு நான் காரணமாகாமல் தொழில் செய்துகொண்டிருக்கிறேன். ஓயாமல் தொழில் செய்பவன் சிறந்த கர்மயோகி. அவன் ஜீவாத்மாவை இடைவிடாது துதிக்கிறான். சம்சாரத்தை நேசிக்கிறான். குடும்பத்தை காக்கிறான். மனைவி, மக்களை காக்கிறான்.
சுற்றத்தாரை, அயலவரை போற்றுகிறான். எல்லாவற்றையும் துறந்து சென்றால் அவன் முத்திக்கு தகுதியுடைவனாக மாட்டான். எல்லாவற்றையும் துறந்து செல்கிறவன் கடவுளுடைய இயற்கை விதிகளை துறந்து செல்பவனாகிறான்...

இவ்வாறு நாம் பார்க்கும் போது இல்வாழ்க்கையில் முற்று முழுதாக
விடின் இறைவனை அடையலாமா? என்ற கேள்வி எழும். வாழ்வில் பற்றை விலக்க
வேண்டுமே தவிர ஒழிக்க வேண்டியதில்லை.

'படகு தண்ணீரில் இருக்கலாம். தண்ணீர் படகினுள் இருக்ககூடாது'என்று அருமையாக வழிகாட்டுகிறார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.

இல்லறத்துறவை காட்டிலும், உள்ளத்துறவு சதகோடி மடங்கு மேலானதாகும்.
இல்லாள் அகத்திருக்க இல்லாததது ஒன்றில்லை. கற்புடைய மனைவியை
காதலுற்று, அறம்பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கையாகும்.

கடவுள் அனைத்து உயிர்களிலும் இருக்கிறார். இல்வாழ்க்கையில் இருந்து கொண்டு உற்றார்,உறவினர், உலகத்தாருக்கும் உபசாரம் செய்து கொண்டு அறவழியில் இன்பங்களை அனுபவித்து ஆண்டவனை தொழுது அதனால் மனிதத் துன்பங்களில் இருந்து விடுபட்டு மேன்மையான வாழ்க்கை வாழ்வது மேலான வழியாகும்.

இதனை வள்ளுவப் பெருந்தகை அன்புடைமை, வாழ்க்கை துணைநலம், புதல்வரைப் பெறுதல், விருந்தோம்பல், மற்றும் இனியவை கூறல் என்ற அதிகாரங்களில் மிக சிறப்பாக கூறியுள்ளார்.

"அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போ ஓய்ப் பெறுவது எவன் "

இல்லறத்தினை ஒழுங்காக நடத்துபவன் துறவறத்திற்கு போய் பயன் ஒன்றுமில்லை.

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை"

இல்லறத்தை சரியாக நடத்துகிறவன் புலன்களை அடக்கி முயல்கிற எல்லாரினும் தலை சிறந்தவன்.

"ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து"

சரியான முறையில் இல்லறம் நடத்துகிறவன் , துறவறத்தானை விட பொறுப்புகளும் சகிப்புகளும் உள்ளவன். இல்லறத்தான் பிறருக்குக்குற்ற துன்பங்களையும் தனக்கு வந்தது போல் எண்ணி அதை நோக்கும் பொறுப்புடையவனாகிறான்.

"அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்ப தில்லாயின் நன்று"

மனிதனுக்கு அறம் என்று நூல்களால் தீர்மானிக்கப்பட்டதே இல்லறம்
ஆகவே, இல்லறத்தை சரியாக நடத்துகிறவன் வானுறையும் தெய்வதுள்
வைக்கப்படுவான்.

எதனைப் பற்றியும் ஆராய்ச்சி இல்லாமலே கர்ம ஒழுக்கங்களினால்
இல்லறத்தில் நின்று வீடுபேறு அடைய முடியும். இல்லறம் என்பது பொறுப்புகளும்,சகிப்புத் தன்மையும் உடையது. இல்லறத்தை நாம் கர்மயோகமாக கருதினால் அதுவே சமுதாயத்துக்கு பயனுள்ளது.

பெரியபுராண வரலாறு மூலம் "அடியார்கள் இல்லறத்தை நடத்தி இறைவனை அடைந்ததைக் காணலாம். இதை கதையாக கொண்டாலும் இதனுடைய கருத்து இல்லறத்தை வலியுறுத்துவதே யாகும்.

"இல்லதென் இல்லவன் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணக் கடை"

என்பதற்கேற்ப இளையான் குடிமாற நாயனாரும், காரைக்காலம்மையாரும் இல்லறத்தில் நின்று கொண்டே ஆன்மீகத்தில் உயர்ந்து பேரின்ப பெருவாழ்வு பெற்றதை அறியலாம்.

இல்லற வாழ்விலே தர்மத் தளத்தில் நின்று செய்யும் கடமைகள்தான் ஆன்மீக உணர்விற்கும் ஆன்மீக தேடலுக்கும் வழிவகுக்கும் என்பதை அடுத்த பகுதியில் பல்வேறு சன்மார்க்கிகள் கூறும் கருத்துகளுடன் வள்ளலார் கூறுகிற முடிவுரையையும் காண்போம்.

No comments:

Post a Comment