Monday, December 11, 2023

அணில்களை வேட்டையாடுவது தேசியக் குற்றம்

அணில்கள் கொரித்து உண்ணும் இனத்தைச் சேர்ந்தவை. உலகெங்கிலும் 250 வகையான அணில்கள் உள்ளன. மர அணில், தரை அணில் மற்றும் பறக்கும் அணில் போன்றவை நாம் அன்றாடம் பார்க்கும் வகைகளில் சில.

பொதுவாக அணில்கள் தாவர உண்ணிகள் என அறியப்பட்டாலும் சிறு பூச்சிகள், வண்டுகள், முட்டைகள், சிறிய பாம்பு, போன்றவற்றையும் உண்ணுகின்றன.

அணில்கள் 3லிருந்து 6 வாரங்களில் குட்டி ஈனும். கால இடைவெளியும் குட்டிகளின் எண்ணிக்கையும் இனத்திற்கு இனம் வேறுபடும். பெண்ணே குட்டிகளைக் கவனித்துக்கொள்ளும். பிறந்தவுடன் குட்டிகளுக்குக் கண் தெரியாது. காதும் கேட்காது. தாயின் வெப்பத்தை தொடுதலின் மூலமே உணர்ந்துகொள்ளும். இவை தாயிடம் 7 வாரத்திற்குப் பால் குடிக்கும்.|

வளர்ச்சியின்போது தானியம், குருவிகளின் முட்டை போன்ற சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளும். ஒரு வருடம் ஆனதும் தாய் தனது குட்டிகளை விரட்டிவிடும். பிறகு குட்டி அணில் தன் சுய வாழ்வைத் தொடங்குகிறது. அணில்களின் தோல் மற்றும் மயிர்க்கால்கள் வெளிநாட்டவரின் நாகரிகத் தொப்பிகள் அங்கிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பகின்றன.

தென் அமெரிக்காவில் அணில்களைக் கொன்று நிறைய வருமானம் ஈட்டி வருகின்றனர். இதனால் அணில்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகின்றன. தற்பொழுது ஐ.நா. சபை, அணில்களை வேட்டையாடுவதைத் தேசியக் குற்றமாக அறிவித்துள்ளது.

நன்றி : பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

அலையாத்திக் காடுகள்

வெப்ப மண்டலப் பகுதிகளில், கடலோரங்களில் அலை பரவும் பகுதிகளில் நிலைபெற்று வளரும் ரைசோபோரா, அவிசினியா, ஆகிய மரங்களும் பெரும் செடிகளும் சதுப்பு நிலக் காடுகள் எனப்படுகின்றன. இவை கடல் நீரிலேயே வளர்கின்றன. சீறிவரும் நீர¨லைகள் கரையைக் கடக்கும்பொழுது இவை பாதுகாப்பு அரண்கள் போன்று அலைகளின் வேகத்தைக் குறைத்து நிலப்பகுதியைக் காக்கின்றன. சுனாமி போன்ற பேரலைகளிலிருந்து நம்மைக் காக்க கடற்கரைதோறும் இக்காடுகள் வளர்ப்பது நல்லது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். 

மேலும் இக்காடுகள் கடல் அரிப்பைத் தடுக்கின்றன. சதுப்பு நிலப்பகுதி வளம் நிறைந்து இருப்பதால் நைட்ரேட், பாஸ்பேட் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம். அதனால் நுண்ணுயிர்த் தாவர வகைகளும், நீர்வாழ்வனவும், மீன் உற்பத்தியும் இந்த நீரில் அதிகம். 20 முதல் 30 மடங்கு வரை இந்நீரில் மீன்வளம் காணப்படுகிறது. கடல் மீன்களுக்கும் கடல் உணவைச் சார்ந்திருக்கும் நீர்நாய், முதலை போன்ற பல்வேறு நிலம் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கும், மீன் உணவை உண்ணும் பறவைகளுக்கும் இந்த

சதுப்பு நிலக்காடுகள் வீடுகளாக உள்ளன. ஏனெனில் இப்பறவை இனங்கள் இக்காடுகளில் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கின்றன. இக்காடுகள் இல்லாத பகுதிகள் பெரும்பாலும் கடலால் ஏற்படும் நில அரிப்பினால் பாதிக்கப்படுகின்றன.

நன்றி : பினாங்கு பயனீட்டாளர் சங்கம் 2016


சிக்கிம் - இந்தியாவின் முதல் இயற்கை விவசாய மாநிலம்


சிக்கிமில் உள்ள 75,000 ஹெக்டர் விவசாய நிலங்களில் இப்பொழுது பூச்சிக்கொல்லிகளுக்கும் இரசாயன உரங்களுக்கும் இடமில்லை. இந்தியாவின் முதல் இயற்கை விவசாய மாநிலமாக அது உருவெடுத்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளது.



ஆறு லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த மாநிலம் பூக்களின் மாநிலம் என்ற பெயரிலும் திகழ்கிறது. சென்ற ஆண்டு இறுதியில் இயற்கை விவசாயத்தை முழுமையாக அமல்படுத்தும் ஒரு மாநிலமாக சிக்கிம் உருவெடுத்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிக்கிம் மாநிலத்திற்கு வருகை புரிந்து அதிகாரப்பூர்வமாக இதனை அறிவித்துள்ளார். தேசிய இயற்கை விவசாயத் திட்டத்தின் கீழ் இந்த மாநிலம் படிப்படியாக இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு இப்பொழுது முழு இயற்கை விவசாய மாநிலமாக தன்னை முன்னிறுத்தியுள்ளது. 

சிக்கிமை முழு இயற்கை விவசாய மாநிலமாக மாற்ற வேண்டும் என்று 12 வருடங்களுக்கும் முன்பு 2003ல் நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுக்குப் பிறகு விவசாயப் பண்ணைகளில் இரசாயன உபயோகம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பூச்சிக்கொல்லி மற்றும் இரசாயன உரங்கள் விற்பனை தடை செய்யப்பட்டன. சிக்கிம் விவசாயிகள் இரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்தாதவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் இயற்கை உரங்களைப் பயன்படுத்தியே வந்தனர்.

அரசாங்கம் எடுத்த முடிவுக்குப் பிறகு வேறு வழியில்லாமல் விவசாயிகள் இயற்கை விவசாய வழிமுறைகளுக்கு மாறினர். சிக்கிமில் பெரும்பாலும் ஏலக்காய், இஞ்சி, மஞ்சள், அந்தந்த பருவத்திற்கு ஏற்ற காய்கறிகள், ஆரஞ்சு, கிவி, கோதுமை, நெல், சோளம் மற்றும் தானியங்கள் பயிரிடப்படுகின்றன. கலிபோர்னியா, விஸ்கொன்ஸின் போன்ற இயற்கை விவசாயம் செய்யும் வெளிநாட்டு மாநிலங்களின் பட்டியலில் சிக்கிமும் சேர்ந்துவிட்டது. சிக்கிம் மாநிலத்தைப் பார்த்து இந்தியாவின் கேரளா, மிசோராம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களும் இயற்கை விவசாயத்தை நோக்கி அடி எடுத்து வைத்துக்கொண்டிருக்கின்றன.

இயற்கை விவசாய முறையில் இரசாயன உரங்களுக்கும் பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளுக்கும் இடம் கிடையாது. இவற்றைப் பயன்படுத்தாத பட்சத்தில் சூழல் நச்சுத்தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது. தொடர்ச்சியாக இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளும் பட்சத்தில் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இது பல்லுயிர் செறிவுக்கு வித்திடுகிறது" என்று விவசாய செயலாளர் கோர்லோ பூத்தியா கூறினார். 


இயற்கை விவசாயம் மண் நலத்தைப் பெருக்கும். இதன் மூலம் விளைச்சலும் அதிகரிக்கும். சிக்கிம் மாநிலத்தின் சுற்றுலாத் துறை மேம்படவும் இது உதவும். நச்சுக் கலவாத இயற்கை உணவுகளை அளிக்கிறோம் என்று இப்பொழுதே சுற்றுலாத்துறை விடுதிகள் விளம்பரப்படுத்த ஆரம்பித்துவிட்டன. சிக்கிமிற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளும் விஷமற்ற உணவை அருந்தி மகிழலாம்.

ந்ன்றி : பினாங்கு பயனீட்டாளர் சங்கம் 2016

Tuesday, June 13, 2023

இரசாயனத்திலிருந்து இயற்கைக்கு கன்னியப்பனின் உன்னத வேளாண் பணி.

 


ஜோகூர், கூலாயைச் சேர்ந்த கன்னியப்பன் ஒரு காலத்தில் செம்பனைத் தோட்டத்தில் பணி புரிந்தவர். தன்னுடைய வாழ்நாளில்
25 வருடங்களை பல விதமான பூச்சிக்கொல்லிகளோடும் களைக்கொல்லிகளோடும் கழித்தவர். ஆகையால் அவருக்கு எந்தப் பயிருக்கு என்ன பூச்சிக்கொல்லி பயன்படுத்துவார்கள், அது எவ்வளவு வீரியம் வாய்ந்தது, எந்த அளவுக்கு ஆபத்துக்களைக் கொண்டு வரும் என்பதெல்லாம் அத்துப்படி.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அதன் செயலாக்கப் பிரதிநிதியாகத் தொண்டு புரிந்தவர் கன்னியப்பன். இவருக்கு பி.ப.சங்கம் தமிழ்நாட்டில்
ஏற்பாடு செய்திருந்த விவசாயப் பயிலரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு 2005ல் கிட்டியது.

"பூச்சிக்கொல்லிகள் ஆபத்தானவை, களைக்கொல்லிகள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துபவை என்பது எல்லாம் என்னவோ சரிதான். ஆனால் அவற்றுக்கு பாதுகாப்பான மாற்று வழி உள்ளது என்பதையே நான் நம்ப மறுத்த காலம் அது," என்று தான் இயற்கை விவசாயத்திற்கு மாறிய கதையை ஆரம்பித்தார் கன்னியப்பன்.



கன்னியப்பனுக்கு கற்ற வித்தையைப் பரீட்சித்துப் பார்க்கும் ஒரு முனைப்பு இயல்பாகவே இருந்தது. கற்றவற்றை மறந்துவிடாமல் இருக்க உடனேயே களத்தில் இறங்கினார். தமிழ்நாட்டில் கற்றவற்றை சொந்தத் தோட்டத்திலேயே பரீட்சித்துப் பார்த்த அவருக்கு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது. பல விதமான பயிர் ஊக்கிகள், இயற்கையான பூச்சி விரட்டிகள், மண் புழு உரம் ஆகியவற்றை வெற்றிகரமாக செய்ததோடு மட்டுமல்லாமல் அவை பயிர் பாதுகாப்புப் பொருளாக மட்டும் செயல்படாமல் அதிக விளைச்சலைத் தந்தபோது அவருக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.

அன்று ஆரம்பித்த கன்னியப்பனுடைய இயற்கை விவசாயப் பயணம் இன்றளவில் அவரோடு நில்லாமல் எல்லாத் தரப்பினருக்கும் சென்று சேர்ந்து, கிளை விரித்து, மணம் பரப்பி நிற்கிறது.

அவர் பயிர் செய்து வந்த எலுமிச்சை வழக்கத்திற்கு மாறாக இரு மடங்கு பெரிதாகவும் அதிக எடையிலும் இருந்தது. இது சந்தையில் எலுமிச்சையின் விலையை உயர்த்தியது. இதற்கு முன்பு தோட்டத்தில் தொழிலாளர் சங்கத்தை வழிநடத்திச் சென்ற அனுபவம், அதனை இயற்கை விவசாய கருத்துக்களை வழி நடத்திச் செல்வதிலும் உதவியது. வருமானத்திற்காக கன்னியப்பன் இயற்கை பயிர் ஊக்கிகள், பூச்சி விரட்டிகள், மண்புழு உரம் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறார்.

எதிர்கால சமுதாயம் ஆரோக்கியமாக இருக்க பாதுகாப்பான உணவு அவசியம். அதற்கு ஒரே வழி நஞ்சற்ற இயற்கை விவசாயமே. இந்த உன்னத கருத்துக்களைப் பயனீட்டாளர்களிடையே சென்று சேர்க்கும் ஒரு பெரிய பொறுப்பு தனக்கு இருக்கிறது என்பதை உணர்ந்த கன்னியப்பன் அதற்கான பணிகளிலும் தீவிரமுடன் இறங்கியுள்ளார். விவசாயிகள், விவசாய அமைப்புக்கள், தனியார் அமைப்புக்கள், சங்கங்கள், கழகங்கள், தனித்து வாழும் தாய்மார்கள், விவசாய இலாகா அதிகாரிகள், பூர்வீகக் குடிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என்று எல்லாத் தரப்பினருக்கும் அவர்களுடைய தேவைக்கு ஏற்ப இயற்கை விவசாய கருத்துக்களைப் பரப்பிக்கொண்டும், இயற்கை விவசாய செயல்முறைகளை கற்பித்துக்கொண்டும் வருகிறார்.

விவசாயம் என்ற பெயரில் இரசாயனங்களில் ஊறிக்கொண்டிருக்கும் விவசாயிகளை விடாப்பிடியாக பிடித்து இழுத்து இயற்கை விவசாயியாக மாற்றி வருகிறார். விவசாய இலாகாவின் அதிகாரிகளுக்கு மண்புழு மனை கட்டுவதற்கான ஆலோசனைகளை வழங்கியதோடு மட்டுமல்லாமல் அவற்றை நிர்மாணிப்பதற்கும் உதவி செய்திருக்கிறார். கன்னியப்பன் தயாரித்த மண்புழு எருவை பல்கலைக்கழக மாணவர்கள் தங்களுடைய ஆராய்ச்சித் திட்டத்தின் பகுதியாக எடுத்துக்கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மண் புழுக்களை வெவ்வேறு விதமான மக்கிப்போன பொருட்களில் விட்டு, எது சிறந்த மண் புழு எருவை தயாரிக்கிறது என்ற ஆராய்ச்சியின் முடிவுக்குப் பிறகு, கரும்புச் சக்கைகளே சிறந்த மண் புழு எருவைத் தருகின்றன என்ற உண்மையை உணர்ந்தார். இவரின் திறமையை உணர்ந்த விவசாய இலாகாவின் அதிகாரிகள், இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என்ற முனைப்போடு வரும் விவசாயிகளை கன்னியப்பனின் பார்வைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இதுவரைக்கும் மல்லிகை விவசாயி, வெற்றிலை பயிரிடுவோர், டிரேகன் பழம் (dragon fruit) பயிரிடுவோரை தங்கள் தோட்டங்களிலிருந்து நச்சு இரசாயனங்களை முற்றிலும் அகற்றுவதற்கு வழி காட்டியுள்ளார். பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் இயற்கை விவசாய முன்னெடுப்புப் பணிகளிலும் முக்கிய அங்கம் வகிக்கிறார். கன்னியப்பனின் 3 ஏக்கர் செம்பனைத் தோட்டத்தில் ஊடுபயிராக மங்கூஸ்தின் நடப்பட்டுள்ளது. இதுவரைக்கும் யாராவது இப்படிச் செய்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறியே. மலேசியாவில் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லியற்ற செம்பனைத் தோட்டம் என்பது இதுவரைக்கும் கேள்விப்பட்டிராத ஒன்று. ஆனால் அப்படிச் செய்ய முடியும் என்பதற்கு கன்னியப்பன் ஒரு நல்ல உதாரணம். நஞ்சற்ற விவசாயத்தை மக்களிடையே பரப்பி வருவது ஓர.ர்உன்னதப் பணி. ஆபத்தான இரசாயனங்களின் பிடியிலிருந்து மக்களை விடுவிப்பதும் தனக்கு ஆத்ம திருப்தியை அளிப்பதாக கன்னியப்பன் கூறுகிறார்.

CLICK CAP FACEBOOK : KANIAPPAN THIRUVANKODAN

மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம், இறக்குமதி செய்வதற்கு அனுமதி தரக்கூடாது!

மலேசிய சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சு, வெளிநாட்டிலிருந்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோள விதையை இறக்குமதி செய்வதற்கு அனுமதி தந்திருப்பதை மலேசியாவின் 23 பொது அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை தந்துள்ளன.

மரபணு மாற்றம் எனப்படுவது ஒரு விதையின் அடிப்படை பண்புகளை மாற்றாமல், அதன் மூலக்கூறுகளில் சில மாற்றங்களைச் செய்து அதன் வீரியத்தை அதிகப்படுத்துவதே மரபணு மாற்ற தொழில்நுட்பம். பாரம்பரிய சாகுபடி முறையில் உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை என்பதால் இந்த உயிரி தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.

 பாரம்பரிய சோளம் அழிந்துவிடும் . 23 அரசு சாரா அமைப்புகள் எதிர்ப்பு

அமெரிக்காவை தளமாக கொண்டுள்ள ஒரு தனியார் நிருவனம் செய்துகொண்ட விண்ணப்பத்தை அந்த அமைச்சு ஏற்றுக்கொண்டிருப்பது வருத்தம் தருவதாக அந்த அமைப்பின் பேச்சாளரும், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவருமான முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட இந்த விதைகள் இங்கே கொண்டுவரப்பட்டால், அதனால் நமது பாரம்பரிய சோளம் உற்பத்தி அழிந்துவிடும் என்றார் அவர்.

MON87429 எனற அந்த ரகத்திற்கு அரசாங்கம் தடை விதிக்க வேண்டும் என அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அப்படி அச்சோள விதைகள் இங்கே நடப்பட்டால் அசல் மக்காச்சோள இனங்கள் காணாமல் போய்விடும் என்றார் முகைதீன்.

உலகம் முழுவதும் மரபணு மாற்றத்திற்கு எதிராக எதிர்ப்பு இருக்கும் போது, நமது சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சின், தேசிய உயிரியல் பாதுகாப்புத் துறை தனது இணையதளத்தில் இந்த அறிவிப்பை செய்திருப்பது மிகவும் கவலை தருகிறது.

மரபணு மாற்றப்பட்ட களைக்கொல்லி எதிர்ப்பு மக்காச்சோளத்தை, MON87429 இறக்குமதி செய்து விநியோகிக்கவும், மக்காச்சோளத்தை நேரடியாக உணவு, தீவனம் மற்றும் பதப்படுத்தி சந்தையில் விற்பனைக்கு வழங்குவதற்கு இந்த நிறுவனத்திற்கு அனுமதி தரப்படுகிறது.

அதாவது இந்த MON87429 மக்காச்சோள தானியங்கள், பதப்படுத்துதல் அல்லது பேக்கேஜிங்கிற்கான உணவுப் பொருட்கள் அல்லது விநியோகிப்பதற்கு தயாராக முடிக்கப்பட்ட பொருட்களாக அல்லது விலங்குகளுக்கான தீவன உணவாக மலேசியாவுக்குள் இறக்குமதி செய்ய முடியும்.

இந்த மக்காச்சோளத்தின் இறக்குமதி மற்றும் விற்பனையின் விண்ணப்பம் மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழலில் அதன் தாக்கம் குறித்து தீவிர கவலைகளை எழுப்புகிறது.

பல ஆண்டுகளாக, 2010 முதல், மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோயாபீன், உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பருத்தி, எண்ணெய் மற்றும் கனோலா போன்றவற்றால் பல பிரச்சினைகள் உள்ளன.

மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளத்தில் இருந்து வயல்களில் விளையும் வழக்கமான சோளம், வீடுகள் மற்றும் கிராமங்களில் விளையும் மக்காச்சோளம் ஆகியவை சந்தையில் விநியோகிக்கப்படும்போது மரபணு மாசுபடும் அபாயம் உள்ளது.

தற்போது, ​​நாட்டின் முக்கிய பயிராக இல்லாவிட்டாலும், மக்காச்சோளம் மலேசியாவின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக பயிரிடப்படுகிறது, ஏனெனில் இது வளர எளிதானது மற்றும் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலைக்கு ஏற்றது. மக்காச்சோளம் ஒரு திறந்த மகரந்தச் சேர்க்கை இனமாகும் (காற்று மற்றும் பூச்சிகள்). இது மற்ற அண்டை மக்காச்சோள உற்பத்தியை எளிதில் கடக்கும்.

மரபணு மாற்றத்தின் செயல்முறை நிலையற்றது மற்றும் கட்டுப்பாடற்ற விளைவுகளுக்கு வழிவகுக்கும். ஆகவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட மக்கா சோளம் மலேசியாவிற்கு இறக்குமதி செய்து பயிர் செய்யப்பட்டால், அதனால், விவசாயம், விவசாயிகள், பயிர் நிலங்கள், சுற்றுச்சூழல் மற்றும் மக்களுக்கும் பலதரப்பட்ட பிரச்சனைகள் வரும் என்பதால், அமைச்சு இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோள விதையை இங்கே இறக்குமதி செய்வதற்கு அனுமதி தரக்கூடாது என அந்த 23 பொது அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்திருப்பதாக முகைதீன் அப்துல் காதர் கூறினார்.

நன்றி: பினாங்கு பயனீட்டாளர் சங்கம்