Sunday, February 7, 2010

அசுரனுக்கும் ஓர் ஆலயம்


பெரும்பாலான புராணங்களில் அசுரர்களின் அட்டகாசத்தால் தேவர்கள் இன்னலுறுவதும் இறை அவதாரங்களால் அசுரர்கள் அழிக்கப்படுவதுமாக இருக்கும். தேவர்கள் இறைவனின் திருவடி பரவி, தோத்திரங்களால் அர்ச்சித்து வழிபடுவர். அவ்வாறு தேவர்கள் வழிபட்ட தலம் யாவும் கோயில்களாக மலர்ந்திருக்கும். இதற்கு மாறாக கந்தனிடம் போரிட்ட ஒரு அசுரனுக்கும் கோயில் உள்ளது. ஆம், அந்த ஆலயம் இருப்பது பழநியில்தான். எப்படி உருவாயிற்று இந்த ஆலயம்?

அந்த அசுரனின் பெயர் இடும்பாசுரன். பண்டைய காலத்தில் அகத்திய மாமுனிவரின் கட்டளைக்கு அசுரர்கள் செவிசாய்ப்பார்கள். அப்படி சக்திகிரி, சிவகிரி என்ற இரண்டு பிரமாண்டமான மலைகளை தமிழகத்தின் தென்பகுதியில் அமைக்க இடும்பாசுரனை பணித்தார் அகத்தியர். இரண்டு மலைகளின் உச்சிகளையும் கயிற்றில் கட்டி, அவற்றினூடே ஒரு நீண்ட கழியைப் பொருத்தி காவடி தூக்குவதுபோல அநாயசமாகத் தூக்கிவந்தான் அசுரன். பழநிக்கு அருகில் அவற்றை வைத்தான். அதே தலத்தில் எதிரே குமரனும் மலைமீது நின்றிருப்பதை கவனித்தான். இதென்ன எங்கு போனாலும் தேவர்களின் தொல்லை அதிகமாக இருக்கிறதே என சீற்றம் கொண்டான். குழந்தை குமரனை சிறிய பாலகன்தானே என அலட்சியத்தோடு பார்த்தான். அடேய்... பாலகா என பாலமுருகனை விளித்தான். போருக்கு வருகிறாயா, அல்லது இப்பொழுதே பணிந்து விடுகிறாயா? என கேட்டான்.

போரிட்டுதான் பார்க்கிறேனே என்று பாலமுருகனும் போருக்கு நின்றான். தொடக்கத்திலிருந்தே சிறுவன் மிகப்பெரிய வீரனாக விஸ்வரூபம் எடுத்ததைப் பார்த்து இடும்பன் மிரண்டான். ஈசனின் ஞானாக்னியிலிருந்து உதித்தவன் எரிமலையாக வெடித்தது கண்டு தலைதெறிக்க ஓடினான். ஆஹா... இது இறையாயிற்றே தவறாக உரசிப் பார்த்து சூடு போட்டுக் கொண்டோமே என பயந்தான். பாலமுருகன் விடாது தொடர்ந்தான். இடும்பனின் மனைவி இடும்பி கந்தா... என் கணவனை மன்னித்து ஏற்றுக் கொள் என பாதம் பணிந்து கதறினாள். இடும்பனும் ஞானமே உருவான பாலமுருகனின் திருவடி பரவினான். தான் எப்போதும் உங்களை தரிசித்தபடியே இங்கேயே இருக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டான். முருகனும் அப்படியே ஆகட்டும் என அருளினார்.


இன்றும் ஒரு மலையில் இடும்பன் தங்கி இருக்க, மற்றொரு மலையில் முருகன் அருள்புரிகிறார். பழநி மலைப்படி பாதையில் இடும்பனின் சந்நிதானம் உள்ளது. பழநி மலைக்கு அருகில் உள்ள மலை இடும்பன்மலை என்று அழைக்கப்படுகிறது. ஏதோ தியானத்தில் இருக்கும் யோகி போல தோற்றமளிக்கிறது இடும்பன் மலை. திடப்பட்ட பக்தியை மலைபோல் இருந்து உணர்த்துவது போல் உள்ளது. இந்த மலையின் 13 அடி உயரத்தில் இடும்பனுக்கு சிலை உள்ளது. இரு மலைகளையும் காவடிபோல் தூக்கிக் கொண்டிருக்கும் சிலை அற்புதம். அதிலும் அபிஷேகத்தின் போது பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இறைவனுக்கு தேவர்கள், அசுரர்கள் என்ற பாரபட்சம் எப்போதும் இல்லை. அதர்மம் தர்மத்தை உரசும்போது அழியும். அசுரர்கள் தர்மம் என தெளிந்தால் இறைவனோடு கலப்பர். அப்படி ஞானக்குழந்தை தன்னுடனே வைத்துக் கொண்ட அசுரக் குழந்தையில் இடும்பனும் ஒருவன்.

பழநி முருகன் மலைக்கு இணையாக உள்ள இடும்பன் மலைக்குச் செல்ல 570 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இடும்பன் மலைக்கு கிழக்குப்பகுதியில் மிக அழகான இடும்பன் குளம் பக்தர்கள் நீராட வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்காலங்களில் இக்குளத்தில் பக்தர்கள் நீராடி இடும்பனை வழிபடுகின்றனர். இதுதவிர இடும்பனை வழிபடவென்றே பக்தர்கள் மாலையணிந்து விரதமிருந்து பழநிக்கு வருகின்றனர். அசுரர் கோலத்தில் பக்தர்கள் வேடமிட்டு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். கடவுளுக்கு இணையாக அசுரனுக்கு கோயில் அமைந்திருப்பது பழநியில் மட்டும்தான் என்றே சொல்லலாம்.

இடும்பன் கோயிலுக்கு செல்ல பழநி பஸ் நிலையத்தில் இருந்து மினி பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்படுகின்ற

Friday, February 5, 2010

உணவுப் பொருட்களின் விலை 50%லிருந்து 140% உயர்வு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

உணவுப் பொருட்களின் விலை 50%லிருந்து 140% உயர்வு
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்
________________________________________________________________________

அண்மையில் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஓர் ஆய்வில், பயனீட்டாளர்கள் வீட்டு சமையலுக்குப் பயன்படுத்தும் பொருட்களின் விலைகள் அதிக அளவு உயர்வு கண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

பூண்டு, துவரம் பருப்பு, உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, கருப்புச்சீனி மற்றும் சீரகம் போன்றவற்றின் விலைகள் 50 விழுக்காட்டிலிருந்து 140 விழாக்காடு வரை உயர்வு கண்டிருப்பதாக பி.ப.சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

உளுந்தின் விலை ஒரு கிலோவுக்கு மவெ. 4லிருந்து மவெ. 6.50க்கு உயர்வு கண்டுள்ளது. சீரகத்தின் விலை ஒரு கிலோவிற்கு மவெ. 4லிருந்து மவெ. 7க்கும், துவரம்பருப்பு கிலோ ஒன்றுக்கு மவெ. 4லிருந்து மவெ. 8க்கும் பாசிப்பயறு மவெ. 3.60லிருந்து மவெ. 6.00க்கும், நிலக்கடலை மவெ. 3.00லிருந்து மவெ. 5.00க்கும், கருப்புச்சீனி கிலோ ஒன்றுக்கு மவெ. 2.00லிருந்து மவெ. 3.00 உயர்த்தி விற்கப்படுகின்றது என்றார் இத்ரிஸ்.

வீட்டில் மிக அதிகமாகப் பயன்படுத்தும் பூண்டின் விலை 140 விழுக்காடு வரை உயர்வு கண்டுள்ளது. கிலோ ஒன்றுக்கு மவெ. 2.50 என விற்கப்பட்ட பூண்டின் விலை மவெ. 6.00க்கு விற்கப்படுகின்றது என்றார் அவர்.

அடுத்த சில வாரங்களில் பால்டின், மைலோ மற்றும் தாளிப்பு பொருட்களின் விலைகள் 5லிருந்து 10 விழுக்காடு வரை உயரக்கூடும் என மொத்த விற்பனையாளர்களும் விநியோகிப்பாளர்களும் கூறியதாக கடைக்கார்கள் தங்களிடம் புகார் செய்திருப்பதாக இத்ரிஸ் கூறினார்.

உள்நாட்டு வாணிப, கூட்டுறவு மற்றும் பயனீட்டு அமைச்சின் அமலாக்கப் பிரிவு இந்த விலை உயர்வை கண்காணித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அடித்தட்டு மட்டும் நடுத்தர வர்க்க மக்கள் இந்த விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணத்தால் அமைச்சு விரைவு நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கேட்டுக்கொண்டார்.

செம்ம ஹோட்டு! செம்ம ஹிட்டு!

செம்ம ஹோட்டு!
செம்ம ஹிட்டு!
இதன் அர்த்தம் என்ன
தமிழ் வானொலியில் இப்படிப்பட்ட அடைமொழியா
வெட்கக் கேடு என்கின்றார்
பி.ப.சங்க அதிகாரி என்.வி.சுப்பாராவ்
_______________________________________________________________________


நமது நாட்டின் தனியார் தமிழ் வானொலி நிலையமான டி.எச்.ஆர். ராகாவின் புதிய அடைமொழி மாற்றப்பட வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏதோ ஆங்கில வானொலி நிலையத்திற்கு சூட்ட வேண்டிய அடை மொழியை தமிழ் வானொலி நிலையத்திற்கு மறந்து போய் சூட்டிவிட்டார்களோ என்றுதான் தோன்றுகிறது என பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.

“செம்ம ஹோட்டு, செம்ம ஹிட்டு” என்ற அடைமொழியை அறிவிப்பாளர்கள் ஒவ்வொரு முறையும் அறிவிக்கும்போது, வெறுப்பு ஆத்திரமும் சேர்ந்தே வருகிறது என்றார் அவர்.

ஒரு தமிழ் வானொலி நிலையத்திற்கு ஏன் இந்த ஆங்கிலம் கலந்த அடைமொழி என்று வினா எழுப்பினார். அதுவும் “ஹோட்டு, ஹிட்டு” என்பது பலதரப்பட்ட பொருளைத் தரக்கூடியதாகும்.
இளைஞர்கள் இதனை உச்சரிக்கத் தொடங்கினால் மோசமான அர்த்தத்தைத் தந்துவிடும் என்றும் சுப்பாராவ் எடுத்துரைத்தார்.

தமிழ் வளர்ச்சி பற்றியும், தாய்மொழியைப் பற்றியும் தமிழ் ஆர்வலர்கள் பிரச்சாரம் செய்து வரும் இவ்வேளையில் டி.எச்.ஆர். ராகா, இப்படி நிமிடத்திற்கு நிமிடம் செம்ம ஹோட்டு, செம்ம ஹிட்டு என்று தமிழை வளர்க்கும் பணிக்குப் புறம்பாக செயல்படுவது நல்லது அல்ல. டி.எச்.ஆர். ராகா சமுதாயப் பொறுப்புடனோடும் செயல்பட வேண்டும் என்று சுப்பாராவ் கூறினார்.

ஆகவே டி.எச்.ஆர்.ராகா உடனடியாக இந்த அடைமொழியை மாற்றியமைக்க ஆவன செய்ய வேண்டும். தமிழ் மொழி அமைப்புக்கள் இந்த அடைமொழிக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் பினாங்கு பயனீட்டாளர் சங்க அதிகாரி என்.வி.சுப்பாராவ் கேட்டுக்கொண்டார்.

என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி