Sunday, January 17, 2010

பலிக்கொடுத்து, இறைவன் மேல் பழிப்போடும் கலாச்சாரமா?

பலிக்கொடுக்கும் கலாச்சாரம் நம்முடைய கலாச்சாரத்தின் ஒரு பகுதியா?
அன்பர்களின் கருத்துகளை நான் வரவேற்கின்றேன்.
நன்றி.
தமி்ழ் மருதம்


Find more videos like this on My Journeys Videos

ஒரு பட்டாம்பூச்சியின் சுயசரிதை - படங்கள்

படம் 1

படம் 2

படம் 3

படம் 4

படம் 5

படம் 6

படம் 7

படம் 8

படம் 9

படம் 10

படம் 11

படம் 12


17-01-2010, தமிழ் நேசனில் வெளியாகிய சித்திரத்துண்டு.

தைப்பூச விழாவின்போது நுரைப்பப் பாத்திரங்களுக்கு தடை விதியுங்கள் உணவு வீணாக்கப்படுவதை நிறுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் சுப்பாராவ் வேண்டுகோள்!


இம்மாதம் 30ம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச சமய விழாவின்பொழுது ஏறக்குறைய 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நாடு முழுவதும் உள்ள முருகன் ஆலயத்தில் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றவிருக்கும் நேரத்தில், இந்த பக்தர்களுக்காக திறந்த மனத்துடன் இலவச உணவு வழங்கவிருக்கும் தொண்டு நிறுவனங்கள் தயவு கூர்ந்து போலிஸ்திரின் எனப்படுகின்ற நுரைப்பப் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதே நேரத்தில் கூடுதல் உணவை சமைத்து குப்பைத்தொட்டியில் கொட்டும் பழக்கத்தையும் நிறுத்தும்படியும் பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கேட்டுக்கொண்டார்.

உலக அளவில் பருவ நிலை மாற்றத்தைப் பற்றிப் பேசப்பட்டு வருகின்ற இக்காலக்கட்டத்தில், தைப்பூச பக்தர்களும் காற்றில் மாசு கலப்பதைத் தடுக்க சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று அவர் கேட்டுகொண்டார்.

தைப்பூசத்தின்போது, வருகின்ற பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் நல்லுள்ளம் கொண்ட தொண்டூழிய அமைப்புக்கள், உணவுகளையும் பானங்களையும் வழங்குவது ஒரு வழக்கமான செயல்பாடாகும்.

அது போன்ற உணவுகள் வழங்கப்படும்போது பெரும்பாலும் நுரைப்பப் பாத்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நுரைப்பப் பாத்திரங்கள் சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் பல கெடுதல்களை ஏற்படுத்துகின்றன. பயன்படுத்திய பிறகு தூக்கி எறியப்படும் இந்த நுரைப்பப் பாத்திரங்கள் குப்பைக் கூளங்களாக உருவெடுக்கின்றன. நுரைப்பக் குப்பைகள் மண்ணோடு மண்ணாக மக்கி அழிந்து போவதற்கு 500 ஆண்டுகளுக்கும் மேல் பிடிக்கும் என்றார் சுப்பாராவ்.

நுரைப்பப் பாத்திரங்கள் புற்றுநோயை வரவழைக்கும் ஸ்டைரின் என்ற இரசாயனத்தை வெளிப்படுத்துகின்றன. எண் “6” அல்லது “PS” என்று பாத்திரத்தின் அடிப்பகுதியில் குறிப்பிடப்பட்டிருந்தால் அது நுரைப்பமாகும்.
நுரைப்பம் புதியதாக இருக்கும் பட்சத்தில் அதனுள் உணவை நிரப்பும்பொழுது அதிலுள்ள இரசாயனங்கள் உணவுக்கு இடம் பெயர்கின்றன. நுரைப்பப் பாத்திரம் பழையதாக இருந்தாலும் ஆபத்துதான். வெப்பம் காரணமாக அதிலிருந்து இரசாயனங்கள் கசிகின்றன.

இப்படி நுரைப்பப் பாத்திரத்தில் உணவு உட்கொள்ளும்பொழுது அதில் உள்ள இரசாயனங்கள் படிப்படியாக உணவின் மூலமாக நம் உடலுக்குள் சென்று நமக்கு ஆரோக்கியக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன என்றார் சுப்பாராவ்.

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக்குழு, பிரிவு 2B ஸ்டைரினை புற்றுநோயை வரவழைக்கும் வஸ்துவாக வரையறுத்துள்ளது. ஸ்டைரின் உடலில் மரபணு மாற்றத்தை ஏற்படுத்தும். இன விருத்தி உறுப்புக்களுக்கும் ஸ்டைரின் சேதத்தை ஏற்படுத்துகிறது. குறைந்த அளவு ஸ்டைரினுக்கு ஒருவர் இலக்கானாலும் கூட உடலில் உள்ள சிவப்பு அணுக்கள் கணிசமான அளவுக்குக் குறைந்துவிடும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

பணியிடத்தில் ஸ்டைரின் வாயுக்களை தினந்தோறும் சுவாசித்து வரும் பெண்கள் மாதவிடாய்க் கோளாறுகளினால் அவதிப்படுவதாக ஆய்வுகள் காட்டுவதாகவும் சுப்பாராவ் சுட்டிக்காட்டினார்.

மலேசியாவில் சாலை விபத்துக்கு அடுத்து அதிமான மக்கள் இறந்துபோவது புற்றுநோயால்தான். ஒவ்வொரு வருடமும் சுமார் 40,000 பேருக்குப் புற்றுநோய் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் 4 மலேசியர்களில் ஒருவருக்கு தன் வாழ்நாளில் புற்றுநோய் ஏற்படுவதாகத் தேசிய புற்றுநோய் பதிவகம் கணித்துள்ளது. ஆகையால் மலேசியர்கள் நுரைப்பப் பாத்திரத்தை உபயோகிப்பதைக் குறைத்துக் கொள்ளும் பட்சத்தில் புற்றுநோய் ஏற்படும் பாதிப்புக்களையும் குறைத்துக்கொள்ளலாம் என்றார் சுப்பாராவ்.

அதே நேரத்தில், அதிக அளவு உணவு விரயத்தை நிறுத்தும்படியும் சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார். பெரும்பாலான தண்ணீர் பந்தல் பொறுப்பாளர்கள், ஒரே மாதிரியான உணவுகளை சமைப்பதால் பலர் அதனை பெற்றுக்கொண்டு தூக்கி எறிந்துவிடுகின்றனர் அல்லது பெற்றுகொள்ள மறுத்துவிடுகின்றனர். இது மிகப் பெரிய உணவு விரயத்தை ஏற்படுத்தி விடுகிறது என்றார் சுப்பாராவ்.

சமயம், உணவை மதிக்கச் சொல்கிறது. தூக்கி எறியச் சொல்லவோ அல்லது மிச்சப்படுத்தவோ சொல்லித்தரவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.

தைப்பூசம் உன்னதமான ஒரு சமய விழாவாக இருக்கின்ற காரணத்தால், பக்தர்கள் அன்றைய நாளில் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருப்பதே உகந்தது. ஆகையால் தைப்பூசத் திருநாளன்று நுரைப்பம் உபயோகிப்பதை நிறுத்திவிட்டு ஆரோக்கியமான பாத்திரங்களிவ் உணவுகளையும் பானங்களையும் வழங்குவதற்கான மாற்று வழிகளை அனைத்து தரப்பினரும் கலந்தாலோசிக்க வேண்டும். பக்தர்கள் தங்கள் சொந்த பாத்திரங்களைக் கொண்டு வருவது கூட நன்மை பயக்கும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.

என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

Friday, January 15, 2010

கைத்தொலைபேசிகளால் மூளைப்புற்று ஏற்படும் அபாயம்

கைப்பேசிகள் புற்றுநோய் ஏற்படும் ஆபத்துக்களை அதிகரிப்பதால், கைப்பேசிகளில் அது தொடர்பான அபாய எச்சரிக்கைகள் பொறிக்கப்பட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கேட்டுக்கொண்டார்.

தொலைபேசியிலிருந்து வெளிப்படும் மின்காந்த கதிர் வீச்சுக்களால் மூளைப் புற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதால் கைப்பேசி உற்பத்தியாளர்கள் லேபலில் இந்தத் தகவலைக் குறிப்பிட வேண்டும். குழந்தைகளுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் கைபேசியிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு இன்னும் அதிகமான ஆபத்துக்களைக் கொண்டு வரும் என்பதையும் இந்த அபாய அறிவிப்பில் குறிப்பிட வேண்டும் என்றார் இத்ரிஸ்.

கடந்த சில தசாப்தங்களில் மின்கம்பி இல்லாத தொலைத்தொடர்பு முறை பெருத்த முன்னேற்றம் கண்டுள்ளது. கைப்பேசியிலிருந்து வரும் மின்காந்தக் கதிர் மூளைக்குப் பக்கத்திலேயே தொடர்ச்சியாக வெளியாக்கப்படுவதால்தான் இந்த மூளைப்புற்று அபாயம் ஏற்படுகின்றது.

கைப்பேசியை தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேற்பட்டு உபயோகித்து வருபவர்களுக்கு மூளைப்புற்று வரும் ஆபத்துக்கள் பன்மடங்கு பெருகுவதாக சுவீடனில் உள்ள ஓரேபோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் லென்னார்ட் ஹார்டல் கூறுகிறார். கைப்பேசி உபயோகிப்பட்ட ஒவ்வொரு 100 மணி நேரத்திற்கும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 5 விழுக்காடு அதிகரிக்கிறது என்கிறார் இவர்.

தொடர்ச்சியாக நீண்ட நேரத்திற்குக் கைப்பேசி உபயோகிப்பவர்களுக்கும், அளவுக்கு அதிகமான வருடங்களுக்கு உபயோகிப்பவர்களுக்கும்,அதிகமான மின்காந்த கதிர்களை வெளிப்படுத்தும் கைப்பேசிகளை உபயோகப்படுத்துபவர்களுக்கும், ஒரு பக்க காதிலேயே பேசுபவர்களுக்கும், வயது குறைந்தவர்களுக்கும் கைப்பேசிகளால் மூளைப் புற்று வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது என்றார் இத்ரிஸ்.

குழந்தைகளின் மூளையும் நரம்பு மண்டலமும் வளரும் பருவத்தில் இருக்கின்ற காரணத்தால் கைப்பேசி, வீ-பி போன்ற சாதனங்கள் அவர்களுக்கு இன்னும் அதிகமான அபாயங்களை அள்ளித்தரக்கூடியவை. குழந்தைகளுடைய தலை சிறியது. மண்டை ஓடும் இன்னும் உறுதி பெறாத நிலையிலிருக்கும். ஆகையால் மின்காந்தக் கதிர்கள் மிகவும் எளிதாக குழந்தைகளின் மண்டையைத் துளைத்துப் பாயும்.


கைப்பேசி,மரபணுக்களுக்கு (DNA) நிரந்த சேதத்தைக் கொண்டு வருவதாகவும் சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். புற்றுநோய் ஏற்படுவதற்கு இதுவும் முக்கியமான காரணமாகும். செல்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தில் இடையூறுகள் ஏற்பட்டு செல்கள் அபரிமிதமாகப் பெருகத் தொடங்குகின்றன. இதே நிலை மூளையிலும் ஏற்படுகிறது. மூளையில் நஞ்சு சேர விடாமல் தடுப்பதற்கு உடம்பில் நோய் எதிர்ப்பு செயல்முறை இருக்கும். ஆனால் கைப்பேசி கதிர்வீச்சுக்கள் இதனைத் உடைத்தெறிகின்றன என்றார் இத்ரிஸ்.

புற்றுநோயைத் தவிர்த்து வேறு சில ஆரோக்கியக் கோளாறுகளையும் கைப்பேசி ஏற்படுத்துகிறது. விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல், நினைவாற்றல் பாதிப்பு, எலும்பு பலவீனம், ஆட்டிஸம், மின்காந்தக் கதிர்களால் ஏற்படும் அயர்வுஇ மன அழுத்தம், தவைவலி, மனக்கவலை, கவனச் சிதறல் மற்றும் தூக்கமின்மை எல்லாம் கைப்பேசியால் ஏற்படும்.

கைப்பேசிகளின் இந்த ஆபத்துக்களை பயனீட்டாளர்கள் இன்னும் முழுமையாக உணராமலேயே இருக்கின்றனர். ஆகையால் அராசங்கம் பயனீட்டாளர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பொருட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கைப்பேசி புற்றுநோயை வரவழைக்கும் என்ற விபரத்தை கைப்பேசியில் பொறிக்க வேண்டும். 12 வயதிற்குக் கீழ்ப்பட்ட குழந்தைகளை கைப்பேசி உபயோகிக்க அனுமதிக்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். கைப்பேசியிலிருந்து வெளிப்படும் மின்காந்தக் கதிர்களால் ஏற்படும் ஆபத்துக்க¨ளை மக்களுக்கு அறிவிக்க பிரச்சாரங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

பயனீட்டாளர்கள் முடிந்த வரையில் கைப்பேசி உபயோகிக்காமல் இருப்பதே நல்லது. இதனை ஆபத்து அவசரங்களுக்கு பயன்படுத்தும் கருவியாகவே பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கைப்பேசி பயன்படுத்துபவர்கள் ஸ்பீக்கர் முறையை உபயோகித்து கைப்பேசி காதிலிருந்து 20 செமி தூரத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். முடிந்த வரையில் வீட்டுத் தொலைபேசிகளைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

நான் தமிழனா??? இந்தியனா???

எது தேச பக்தி...?


“ஏன் ஒதுங்கியே நிற்கிறீர்கள்...? கொண்டாட மாட்டீர்களா...?” என்றது தொலைபேசிக்குரல்.

அதுவும் ஒரு பத்திரிகையாளருடையது.

எதற்காகக் கொண்டாட வேண்டும்...? என்றேன்.

“இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்ததை...” என்றார்.

ஜெயித்தால் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுவதுமில்லை. தோற்றால் செருப்பாலடித்து இழிவு படுத்துவதுமில்லை.

இரண்டுமே எனது வேலையில்லை...” என்றேன்

“இந்திய ராணுவத் தளபதி என்.சி.விஜ் கூட ‘இது இந்தியாவுக்கே கெளரவத்தை தேடித் தந்திருக்கிறது...’ என்று வாழ்த்தி இருக்கிறாரே...?”

அப்படியானால்... ஆஸ்திரேலியாவிடம் தோற்றதற்கு ‘இது இந்தியாவுக்கே அவமானம்’ என்று கண்டனம் தெரிவிக்கவில்லையே ஏன்...? என்றேன்.

“என்ன இருந்தாலும் பாகிஸ்தானை ஜெயித்திருக்கிறோம்... இனி உலகக் கோப்பையே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை...”என்று

தனது அறியாமையை அள்ளிக் கொட்டினார் அந்தப் பத்திரிகையாளர்.

இதற்கு எங்கள் ஊரில் வேறு பழமொழி இருக்கிறது என்றேன்.

“என்ன பழமொழி...?”

“மகன் செத்தாலும் சரி... மருமக தாலி அறுக்கணும்...”

“ச்சே... தேசபக்தியே கிடையாதா...?” எரிச்சலின் உச்சத்தில் இருந்தது குரல்.

நிச்சயமாகக் கிடையாது. ஆனால்... தேசங்களில் உள்ள மக்களின் மீது மாளாக் காதல் உண்டு.

எம்மைப் போலவே பசியிலும்... பட்டினியிலும் உயிரை விடுகிற...

தள்ளாத வயதிலும் ஊதுபத்திகளையும்... தீப்பெட்டிகளையும்

வீடு வீடாகச் சுமந்துசென்று விற்று வயிறு வளர்க்கிற...

நிலங்களை இழந்து...

வாழ்க்கையை இழந்து...

விமானங்கள்வீசும் உணவுப் பொட்டலங்களுக்காக

வானத்தை அண்ணாந்து பார்த்துக் காத்திருக்கிற...

சோமாலியா மக்கள்மீது காதல் உண்டு...

பாகிஸ்தான் மக்கள்மீது காதல் உண்டு...

இலங்கை மக்கள் மீது காதல் உண்டு...

நிகரகுவா மக்கள்மீது காதல் உண்டு...

இவர்களைப் போன்றே இன்னமும் ஒடுக்கப்படுகின்ற

ஒவ்வோரு மூன்றாம் உலக நாடுகள்மீதும் எமக்கு காதல் உண்டு.

ஆனால் உங்களைப் போல கேவலம் ஒரு கிரிக்கெட்டிற்காக ஆர்ப்பரிக்கும் போலி தேசபக்தி மட்டும் நிச்சயம் இல்லை எமக்கு.

விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல், இந்தியாதான் ஜெயிக்கணும்... பாகிஸ்தான் தோற்கணும்... என்கிற ரசிகர் மன்ற மனோபாவத்தோடுதான் பார்க்கவேண்டும் என்றால்... மன்னித்து விடுங்கள் என்னை. நானிந்த ‘விளையாட்டிற்கு’ வரவில்லை.

அப்படி பார்த்தால் ஜாக்கிசான், அர்னால்டு படங்களைக்கூட பார்க்கக்கூடாது நீங்கள்...என்றேன்.

போனை வைத்து விட்டார் நண்பர்.

இந்த நவீன நீரோக்களை நினைத்தால் எரிச்சலைக் காட்டிலும் பரிதாபமே மேலிடுகிறது. அண்டை நாட்டிடம் தேற்றால் கேவலம்

வெள்ளைத் தோலர்களிடம் தோற்றால் கெளரவம் என்று கருதுகிற அடிமை மனோபாவம் எப்போது தொலையும் இந்த இரு நாட்டுக்கும்...?

இந்துஸ்தானோ...

பாகிஸ்தானோ...

இறுதியில் மண்டியிட்டுக் கிடப்பது அமெரிக்காஸ்தானிடம்தான்.

அதில் மட்டும் சுயமரியாதையைத் தொலைத்துவிட்டுத் திரிவார்கள் இவர்கள்.

கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடுவது மாதிரிதான் கிரிக்கெட்டும்.

மாலைக்கு மாலை போட்டிருக்கும் துப்புரவுத் தொழிலாளியோ...

விவசாயக் கூலியோ...

மலை ஏறி முடிக்கிற வரைக்கும் ராஜ மரியாதைதான்.

வரப்பில் நிற்கும் பண்ணையார்...’சாமி! மலைக்கு போயிட்டு எப்பத் திரும்புவீங்க...?’ என்பான்.

கடன் கொடுத்த மீட்டர் வட்டிக்காரன்....”சாமிக்கு இது எத்தனாவது வருசம்...?” என்பான்.

எங்கு திரும்பினாலும் ஏக மரியாதைதான்.

ஆனால் ‘சாமி’ மலை இறங்கியது தெரிந்த மறு நிமிடத்திலிருந்து ‘முதல் மரியாதை’தான்.

அப்படிதான் கிரிக்கெட்டும்.

மேட்ச் முடிகிறவரைக்கும் எம்.டி.யிடம் பியூன் ஸ்கோர் கேட்கலாம்.

“கும்ப்ளே அந்த கேட்ச்சை விட்டிருக்கக் கூடாதுங்க...” என்று

கடை முதலாளியிடம் சரக்கு சுமக்கிற பையன் அளவளாவலாம்.

ஆனால் மேட்ச் முடிந்த மறு நொடியே... “...யோளி... அங்க என்ன பராக்கு பார்த்திட்டு இருக்கே...?” என்று குரல் வரும், ‘மாலை’யைக் கழட்டிய மாதிரி....

அதுவரை டீக்கடை தொடங்கி பெரும் தொழில் நிறுவனங்கள் வரைக்கும் கிரிக்கெட்டை அக்குவேறு ஆணிவேறாக அலசுவதென்ன...?

அரிய பல ஆலோசனைகளை அள்ளி வீசுவதென்ன...?

சூப்பர்தான் போங்கள்.

ஆனால் பந்தயம் முடிந்த மறு கணத்திலேயே இவர்களுக்குள் பதுங்கிக் கிடக்கும் வக்கிரங்கள் விழித்துக் கொள்ளும்.

அதுவரையில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ கண்டவர்கள் பிறகு ஒற்றுமையில் வேற்றுமையைத் தேடிக் கிளம்புவார்கள்.

அது உட்சாதிச் சண்டையாக...

சாதிச் சண்டையாக ...

மதச் சண்டையாக...

மாநிலச் சண்டையாக...

உருவெடுத்து தற்காலிகமாக

இவர்களது தேசபக்தி மூட்டை கட்டி பரணில் போடப்படும்.

அப்புறமென்ன... வழக்கமான தலைப்புச் செய்திகளுக்குள் மூழ்கிப் போகும் தேசம்.

இவர்களது தேசபக்தியை வெளிச்சம் போட்டுக் காட்ட பிறகொரு சந்தர்ப்பம் வராமலா போகும்...? அதுவும் வரும்.

ஒரு விளம்பர இடைவேளைக்குப் பிறகு.

இன்னொரு கிரிக்கெட் பந்தய ரூபத்தில்

நாட்டை அடகு வைக்கிற உலக வர்த்தக நிறுவனம் குறித்துக் கூட்டமாகக் கூடி குரல் எழுப்பமாட்டார்கள் இவர்கள்...

பட்டினிச் சாவுகள் குறித்து கூட்டமாகக் கூடி விவாதிக்க மாட்டார்கள் இவர்கள்...

உலகில் யுத்த மேகங்கள் சூழ்ந்தால் நமது நிலை என்ன என்பதற்கு கூட்டமாகக் கூடி குரல் கொடுக்க மாட்டார்கள் இவர்கள்...

ஆனால் தெருக்களிலும்... தேநீர்க் கடைகளிலும்... திரையரங்குகளிலும் கூடுகிற கூட்டம் கிரிக்கெட் மேட்சிற்காம்.

என்னே தேசபக்தி...?

பாவம்...

இவர்கள் விளையாட்டை

போராகப் பார்க்கிறார்கள்

போரையோ விளையாட்டாகப் பார்க்கிறார்கள்.

இவர்கள் மத்தியில் வாழ்வதைவிடவும்

தண்டனை நம்மைப் போன்ற

‘தேசத்துரோகி’களுக்கு அப்புறம் வேறென்ன இருக்கிறது...?

"நாட்டுப்பற்று என்பதும் தேசத்தின் மீதான காதல் என்பதும் இன்னொரு மனிதக் குழுவை வெறுக்கிற அல்லது காழ்ப்புணர்வு கொள்கிற ஒரு உணர்வு"

என்று ஒரு வாதத்தை சமூக நெறிகள் பற்றிய ஆய்வாளர் “பால் கோம்பெர்க்” வைக்கிறார். அது ஓரளவுக்கு உண்மையாகத் தான் இருக்க வேண்டும், இந்திய தேசிய வடிவமும் அதன் ஆளுமை மையங்களும் இடைவிடாது ஒரு அண்டை நாட்டின் மீது வளர்க்கும் காழ்ப்புணர்வு இதற்குச் சான்றாகத் தோன்றுகிறது, அரசியல் நிலையிலான பல்வேறு முரண்பாடுகளைக் கடந்து நம்மைப் போலவே அன்றாடம் வாழ்க்கையை நோக்கிப் போராடுகிற எண்ணற்ற மக்களைக் கொண்ட இன்னொரு தேசத்தை வெறுக்கவும் அதன் மீதான நமது காழ்ப்புணர்வைக் கொட்டித் தீர்க்கவும் நமக்கான காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் தொடர்ந்து ஈடுபடுகின்றன. நாமும் அதனைப் பின்பற்றி முகம் தெரியாத மக்களை, அந்த மக்களின் அழகிய குழந்தைகளை, அவர்களின் வழிபாட்டு முறைகளை, அவர்களின் வாழ்வியல் நடைமுறைகளை வெறுக்கத் துவங்கி இருக்கிறோம்.

பல்வேறு இனக்குழுக்களின் நசுக்கப்பட்ட அடையாளங்கள் அடக்குமுறைகளின் உடைபாடுகளில் சிக்கி முனகிக் கொண்டிருப்பதை இந்திய ராணுவத்திற்கு எதிராக அஸ்ஸாம் பெண்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம் துவங்கி ராஜதானி விரைவு ரயிலின் கடத்தல் வரையிலான பல்வேறு செயல்பாடுகள் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. இவற்றின் உச்சமாக உலகமே இன அழிப்பு என்று எதிர்க்குரல் கொடுக்கிற இனப்படுகொலையை, சிங்களப் பேரினவாதத்தை நியாயம் செய்து ஒரு பக்கம் நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் ஆயுதங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிற தேசிய வடிவம் தங்கள் நாரயணங்களை அனுப்பி தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற அமெரிக்கா வரை பறந்து பறந்து தனது தேசிய வடிவத்தை வார்ப்பில் வடிக்கிறது.

இந்த நிலைகளில் “நான் தமிழனா? இல்லை, இந்தியனா?” என்றொரு கேள்வி விடுதலை பெற்ற இந்தியாவில் வாழும் தமிழ் இளைஞர்களை அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு மிகுந்த வீச்சுடன் எதிர்கொள்கிறது. இந்தக் கேள்வி எழுந்ததன் காரணிகளை நான் உங்களுக்கு அறிமுகம் செய்யத் தேவை இல்லை என்றாலும், எனது மொழியையும், எனது பண்பாட்டையும் கொண்டு வாழ்ந்து வருகிற எனது உறவுகள் என்று நான் கருதுகிற தமிழினத்தின் மீதான ஒரு பேரினவாதப் போரை ஆதரித்து அதன் அழிவிற்குத் துணை நிற்கிற தேசியத்தின் வடிவம் எனக்கானதா? என்ற அடிப்படைக் கேள்வியில் இருந்துதான் மேலே தலைப்பில் சொல்லப்பட்டிருக்கும் கேள்வியின் மூலம் ஒளிந்து கிடக்கிறது.

என் பள்ளி நாட்களில் தேசியகீதம் இசைக்கப்பட்ட போது அதனை அவமதிக்கும் வண்ணம் நடந்து கொண்ட எனது சக மாணவனைப் பள்ளியின் வழிபாட்டுக் கூடத்தில் அடித்து என்னை ஒரு தேசப் பற்றாளனாக அடையாளம் கண்டிருக்கிறேன், இந்தியா என்கிற கோட்பாட்டை, தேசிய வடிவத்தை எனக்குள் ஊற்றி வளர்த்த எனது பள்ளிகளின் வகுப்பறைகளும், கல்லூரியின் விளையாட்டு அரங்குகளும், என்னை விட்டு விலகி நீண்ட தூரத்தில் இருப்பதைப் போலவே, தேசத்தின் மீது நான் கொண்ட நம்பிக்கையும் சிதைந்து, சிதிலம் அடைந்து இருக்கிறது, இந்தச் சூழலில் தேசியம் என்கிற கருத்தாக்கத்தின் வேர்களைத் தேடி பயணம் செய்ய வேண்டிய நெருக்கடி உருவாகிறது.

1993 ஆம் ஆண்டு மகாராட்டிர மாநிலத்தின் “லாத்தூர்” மற்றும் “உஸ்மானாபாத்” மாவட்டங்களில் நிகழ்ந்த மிகப்பெரும் கொடிய நிலநடுக்கத்தின் போது, புவி அமைப்பியல் மாணவர்களின் சார்பில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு, நினைவேந்தல் சுவரொட்டிகள் ஒட்டி எனது தீவிரமான தேசியச் சிந்தனைகளை வலிமைப்படுத்தி வைத்திருந்தேன். எனக்குள் மிக ஆழமாக ஊடுருவியிருந்த அந்த தேசப்பற்றின் சுவடுகள் இந்தக் கட்டுரை எழுதும் நேரத்தில் எனக்குள் முற்றிலும் இல்லை, நீர்த்துப் போன எனது தேசியம் பற்றிய சிந்தனைகளோடு தேசியம் பற்றிய எனது பார்வை மாறுபாட்டினை அடைந்து வேறு திசையில் பயணிக்கத் துவங்கி இருந்ததை என்னால் உணர முடிந்தது, இந்த மாற்றம் எனக்குள் எவ்வாறு விளைந்தது? இந்த மாற்றத்தின் அடிப்படைக் காரணிகள் என்ன என்பதைப் பற்றி அடிக்கடி நான் சிந்திக்கத் துவங்கி இருந்தேன், அப்படிச் சிந்திக்கும் போது தேசியம் பற்றிய எனது தேடல் துவங்கியது என்று சொல்லலாம்.

வெவ்வேறு முரண்பாடுகள், அரசியல் மற்றும் சமூகத் தாக்கங்களைக் கடந்து தேசியம் என்கிற கருத்துருவாக்கம் ஒரு மாயத் தோற்றமா? அல்லது கற்பிதமா? உலக இயங்கியலின் இன்னொரு பிரிவா? என்கிற பல்வேறு கேள்விகள் எனக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது……

எந்த ஒரு கருத்தாக்கமும் மனித மனங்களில் ஒரே மாதிரியான விளைவுகளை உருவாக்குவதில்லை, ஒரு தனி மனிதனின் அல்லது சமூகத்தின் உள்வாங்குதலைப் பொருத்தும், அதற்குப் பின்புலமாக இருக்கிற புறக்காரணிகளின் அடிப்படையிலுமே கருத்துருவாக்கங்கள் மாற்றம் பெறுகின்றன, பின்னர் வெளிப்படுத்தப்படுகின்றன. ஆதி காலம் தொட்டு மனிதர்களுக்குள் நிலவும் பல்வேறு முரண்பாடுகள், வேறுபாடுகளாக மருவிப் போராகவும், ஆட்சி மாற்றமாகவும், ஆதிக்கமாகவும் வரலாற்றின் பக்கங்களில் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்லாவிதமான கருத்தாக்கங்களையும் போலவே தேசியம் என்பதும் தனி மனிதனின் அல்லது ஒரே சிந்தனையுள்ள மனிதக் குழுக்களின் தன்னியல்பான வாழ்க்கை முறைகளில் இருந்தே கட்டமைக்கப்படுகிறது.

வாழிட ஆதாரங்களை, மொழியை, பழக்கவழக்கங்களை, வழிபாடுகளை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு குறிப்பிட்ட மரபுசார் மனிதக் குழு, நீண்ட காலமாகத் தொடர்ந்து செயல்படுகிற போது தேசியம் என்கிற கருத்தாக்கம் தோற்ற மடைகிறது, அதன் கூறுகளின் வலிமையைப் பொறுத்து வடிவம் பெறுகிறது அல்லது வெற்றி பெறுகிறது என்று நம்மால் தேசியத்தைப் புரிந்து கொள்ள இயலும்.

தேசியம் என்கிற கருப்பொருள் ஐரோப்பிய நிலப்பரப்பில் இருந்தே துவங்கியது என்று வாதம் செய்கிற சில மேலைநாட்டு அறிஞர்களை நம்மால் கண்டறிய முடிகிறது, எடுத்துக்காட்டாக "ஜோகன் காட்ப்ரைட்" என்ற ஜெர்மானிய அறிஞரைப் பற்றிக் குறிப்பிடலாம், இவரை தேசியம் என்கிற கோட்பாட்டின் வடிவமைப்பாளராக சித்தரிக்கிறார்கள், ஆனால் இவரது வாதத்தின் நம்பகத்தன்மை ஏனைய கருத்துக்களில் நிகழும் ஒரு ஐரோப்பிய ஆளுமை மனப்போக்கைப் போலவே காணப்படுகிறது, பதினேழாம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் எழுதப்பட்ட சில வரலாற்றுக் குறிப்புகள் உலக வரலாற்றில் எஞ்சிய நிலப்பரப்புகளில் காணக்கிடைத்த உண்மைகளை மறுதலித்து தங்கள் வாழிடங்களின் புறச் சூழலைத் தழுவியே இறுதி செய்யப்படுகிறது என்பதுதான் அதற்கான காரணம்.

ஏறக்குறைய மூன்றாம் நூற்றாண்டின் முன்னதாகவே தொடங்கிச் செழித்திருந்த நமது இலக்கியங்களும், வாழ்வியல் கட்டமைப்புகளும் இத்தகைய ஆய்வுகளில் கணக்கில் கொள்ளப்படவில்லை. ஆகவே தேசியம் பற்றிய நமது கருத்தாக்கம் முன்னரே அறிந்து கொள்ளப்பட்ட ஒன்று என்கிற முடிவுக்கு நம்மால் எளிதில் வர இயலும். தேசியம் என்கிற ஒரு கருத்து வடிவத்தின் இன்றியமையாத பகுதிகளாகப் பண்பாட்டையும், மொழியையும் நம்மால் இனம் காண முடியும், ஒரே மாதிரியான பண்பாட்டையும், மொழியையும் கொண்ட மனிதக் குழுக்களே தேசியம் என்கிற கருத்து வடிவத்தை முழுமை பெறச் செய்யும் காரணிகளாக இருக்க முடியும்.

இதற்கிடையில், தேசியம், தொழில் மயமாதலின் விளைபொருளாகவும், முதலாளித்துவத்தின், ஊடகங்களின் துணைப் பொருளாகவும் சித்தரிக்கப்படுவதும் நிகழ்கிறது, தொழில் மயமாதலின் விளைபொருளாகத் தேசியம் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது, வேண்டுமானால், மேற்கத்திய நாடுகளில் இத்தகைய நிகழ்வுகள் உருவாகி இருக்கலாம், ஆனால், ஒட்டு மொத்த உலகிற்கும் தேசியம் என்கிற ஒரு வடிவம் தொழிற்புரட்சிக்கு முன்னதாகவே தோன்றி வளர்ந்திருந்தது என்பது தான் உண்மை. நதிக்கரை நாகரிக காலங்களில் தொழில் மயமாதலின் அடிப்படை ஆழமாகப் பரவி இருக்கவில்லை என்பதும், விவசாயம் அல்லது நிலப்பரப்பு சார்ந்த தொழில்கள் மேம்பட்டிருந்த காலங்களில் கூடத் தேசியம் என்ற கருத்தாக்கத்தின் படிமங்கள் இருந்ததற்கான சான்றுகளை நம்மால் காண இயலும்.

எடுத்துக்காட்டாக “திராவிட நாகரீகம்” தோன்றி வளர்ந்த சிந்து நதியின் சமவெளி சார்ந்த பண்பாட்டுக் காலத்தை (கி.மு 2600 – 1900) தேசியக் கருத்தாக்கங்களை அதன் மூல வேர்களை உருவாக்கிய காலம் என்று சான்றுகளுடன் நம்மால் உறுதி செய்ய முடியும், கலை, கலாசார, மொழிக் கருவிகளோடு செழித்திருந்த சிந்துச் சமவெளி நாகரீகம் தேசியக் கோட்பாட்டின் வெளிப்பாடாகிய தலைமைப் பண்புகளை வரையறுக்கும் வரையில் கிளைத்திருந்தது என்பதை தேசியம் பற்றிய வெவ்வேறு ஆய்வுகளில் “சார்லஸ்” “மேசன்”, “பியூம்ஸ்”, “கன்னிங்காம்” மற்றும் “தேம்ஸ்” போன்ற அறிஞர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.

அதேவேளையில் தேசியம் பற்றிய ஆய்வுகளில் மேற்கண்ட அறிஞர்களின் ஆய்வையும் அதன் முடிவுகளையும் “மிக்கேல் ஜெ ஹெக்கேன்பெர்கர்” மற்றும் “அன்டோனி டி ஸ்மித்” போன்றவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதும் இவர்களது தேசியம் பற்றிய வரையறைகளையும் அதன் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது. தேசியம் பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்ட அல்லது முரண்பாடுகளை உள்ளடக்கிய ஒரு கோட்பாடாகவே இன்றளவும் காணப்படுகிறது, தேசியத்தின் நன்கு அறியப்பட்ட பிரிவுகளாக கீழ்க்கண்டவற்றை நம்மால் பட்டியலிட முடியும்.

1) மரபு வழியான தேசியம்.

2) அரசியல் வழியான தேசியம்.

3) கொள்கை வழியான தேசியம்.

4) பண்பாட்டு வழியான தேசியம் .

5) காலனி ஆதிக்கத்திற்குப் பிந்தைய தேசியம்.

6) உரிமைகள் வழியான தேசியம்.

7) இடதுசாரி விடுதலை வழியான தேசியம்.

மத வழியான தேசியம்.

9) தனிமனித வழிகாட்டுதல் வழியான கொடுங்கோன்மை தேசியம்.

10) இலக்கு வழியான தேசியம்.

இந்தப் பிரிவுகள் தவிர்த்து இன்னும் சில தனி வரையறைகளைக் கொண்ட தேசிய வகைகளும் இருப்பினும், நன்கு அறியப்பட்ட தேசிய வகைகளாக மேற்காணும் பிரிவுகளை அடையாளம் காண இயலும்.

1) மரபு வழியான தேசியம். (Ethnic Nationalism)

ஒரே மொழியை, பழக்க வழக்கங்களைக். குடும்ப அமைப்புகளைக் கொண்டு நீண்ட காலமாக வாழிட ஆதாரங்களை மையமாகக் கொண்டு செயல்படும் தேசிய வடிவத்தை மரபு வழியிலான தேசியம் என்று பொருள் கொள்ளலாம்.

2) அரசியல் வழியான தேசியம். (Civic Nationalism)

வெவ்வேறு மொழிகளையும், பழக்க வழக்கங்களையும் கொண்டிருந்தாலும், ஒரே மாதிரியான அரசியல் வடிவங்களைப் பெற்று ஆட்சி முறைகளில் ஒருங்கிணையும், நில எல்லைகளை மாற்றி அமைக்கும் நெகிழ்வு கொண்ட ஒரு தேசிய வடிவமாக இதனைப் பொருள் கொள்ளலாம்.

3) கொள்கை வழியான தேசியம்.(Expansionist Nationalism)

அரசியல், மொழி மற்றும் கலாசார மதிப்பீடுகளை விடுத்துக் கொள்கைகள் அடிப்படையில் இணைகிற அல்லது உருப்பெருகிற தேசியமாக இதனை நாம் பொருள் கொள்ள இயலும்.

4) பண்பாட்டு வழியான தேசியம். (Cultural Nationalism)

மரபு வழி தேசிய வடிவிற்கும், பண்பாட்டு வழியான தேசிய வடிவிற்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை என்றாலும், மொழி மற்றும் நிலப்பரப்பு எல்லைகளில் நெகிழ்வுத் தன்மை கொண்ட ஒத்த பண்பாட்டில் ஒருங்கிணையும் ஒரு தேசிய வடிவமாக இதனை நாம் பொருள் கொள்ள இயலும்.

5) காலனி ஆதிக்கத்திற்குப் பிந்தைய தேசியம். (Post Colonial Nationalism)

பல்வேறு பண்பாட்டு, மொழி மற்றும் அரசியல், குடும்ப அமைப்பு, வழிபாட்டு முறைகள், கலை வேறுபாடுகளைக் கொண்ட வெவ்வேறு தேசியமாகச் செயல்பட்டு வந்த குழுக்கள், மற்றொரு குழுவின் ஆளுமைக்குப் பிறகு வலிந்து ஒரே மாதிரியான அரசியல் அளவீடுகளில், தனது நிலப்பரப்பை வரையறுத்துக் கொள்கிற தேசிய வடிவமாகவும், ஏற்கனவே உருவாகித் தழைத்திருந்த மரபு வழி மற்றும் அரசியல் வழியிலான தேசிய அடையாளங்களை விழுங்கி ஒரு புதிய தோற்றம் தரக்கூடிய தேசியமாக இதனை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

6) உரிமைகள் வழியான தேசியம். (Liberation Nationalism)

ஒரு குறிப்பிட்ட தேசிய வடிவில் இருந்து இழந்த தங்கள் உரிமைகளை மீட்டு மீண்டும் நிறுவுவதற்குப் போராடித் தங்கள் தேசிய வடிவத்தை உள்ளிருந்து மாற்றி அமைக்கிற தேசிய வடிவமாக இதனைப் பொருள் கொள்ள முடியும்.

7) இடதுசாரி விடுதலை வழியான தேசியம். (Left – Wing Nationalism)

குறிப்பிட்ட தேசிய வடிவினால் ஒடுக்குமுறைக்கு உட்பட்ட அல்லது உரிமைகளை இழந்த மனிதக் குழுக்கள் ஒருங்கிணைந்து போராடிப் பொது மக்களுக்கு நன்மை தருகிற அரசியல் வழியிலான தேசிய வடிவத்திற்கு மாற்றம் பெறுகிற தேசிய வடிவம் என்று இதனைப் பொருள் கொள்ளலாம்.

மத வழியான தேசியம்.(Religious Nationalism)

ஒரே வழிபாட்டு முறைகளைக் கொண்ட, மத நம்பிக்கைகளின் அடிப்படையில் ஒருங்கிணைந்து உருவாக்கம் பெறுகிற தேசிய வடிவமாக இதனைப் பொருள் கொள்ள இயலும்.

9) தனி மனித வழிகாட்டுதல் வழியான கொடுங்கோன்மை தேசியம். (Fascist Nationalism)

ஒரு தனி மனிதனின் சிந்தனைகளின் அடிப்படையிலும், மாற்றுச் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காத மக்களுக்கு எதிரான கொடுங்கோன்மை வழியாக உருப்பெருகிற தேசியமாக இதனைப் பொருள் கொள்ள இயலும்.

10) இலக்கு வழியிலான தேசியம். (Diaspora Nationalism)

வெவ்வேறு நிலப்பரப்புகளில் வாழினும் தங்கள் இலக்கு நோக்கிய செயல்பாடுகள் மூலமாக ஒரு தேசிய வடிவைக் கட்டமைக்கிற அல்லது செயல்படுகிற தேசியக் கருத்தாக்கமாக இதனைப் பொருள் கொள்ள முடியும்.

நீண்ட தேடலுக்குப் பிறகு, என்னால் உள்வாங்கப்பட்ட தேசியம் என்கிற கருத்துரு உண்மையில் எனக்கானது அல்ல என்பதை அரசியல் சார்ந்த, இனம் சார்ந்த அல்லது மொழி சார்ந்த சில அண்மைய நிகழ்வுகள் உறுதி செய்தது மட்டுமன்றி என்னைப் போன்று எண்ணற்ற இளம் தலைமுறைத் தமிழர்களை இந்திய தேசியம் என்கிற கோட்பாட்டில் இருந்து திசை திருப்பி இருக்கிறது. இதன் தாக்கம் வரும் காலங்களில் இந்திய தேசிய அரசியலையும், தமிழ் மக்களின் அரசியல் பற்றிய சிந்தனைகளையும் மாற்றி அமைக்கும்.

நான் மரபு வழியிலான ஒரு தேசத்தில், உயர்ந்த பண்பாட்டு மொழிக் கோவைகளை உள்ளடக்கிய ஒரு தேசிய வடிவத்தில் அல்லது அதற்கும் மேலான " யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்ற தேசியங்களைக் கடந்த ஒரு வடிவத்தில் எனது வாழ்வியலைச் செம்மைப்படுத்தி வாழ்ந்த போது, பொருளாதார நோக்கிலும், வல்லரசுக் கனவுகளிலும், முதலாளித்துவச் சிந்தனைகளால் வளர்க்கப்பட்டு வரும் ஒரு குறுகிய இருநூறு ஆண்டுகால நாகரீகத்துடன் இணைத்துக் கொண்டு எனக்கான தேசிய வடிவமாக அதனை ஒப்புக் கொள்வது ஒரு வகையில் அறிவீனமானது என்றே தோன்றுகிறது.

மரபு வழியிலான, மொழி வழியிலான, இன வழியிலான கலைப் பண்பாட்டு வழியிலான எனது உறவுகள் என்று நான் கருதுகிற, மக்களின் வாழ்வியலைக் கேள்விக்குள்ளாக்கும் அல்லது பேரினவாதக் கொள்கைகளுக்கு முட்டுக் கொடுக்கும் ஒரு மண்டல வல்லரசுக் கனவின் வழியாகச் செலுத்தப்படும் தேசியத்திலும், அதன் அரசியல் நிலைப்பாடுகளிலும் எனக்கு முற்றிலும் நம்பிக்கை இழப்பு உருவாகி இருக்கிறது. என்னைப் போலவே எண்ணற்ற தமிழ் இளைஞர்களுக்கும் உருவாகி இருக்கிறது என்பதும் உண்மை.

எனது உறவுகள் என்று நான் கருதுகிற மக்களைப் பாதுகாக்கிற வலிமை இருந்தும், அந்த வலிமையை எம்மிடம் இருந்தே பெற்றிருந்தும் கூட எமது உணர்வுகளைக் கொஞ்சமும் மதிப்புடன் நடத்தாத, எனது நிலப்பரப்பின் வழியாகவே இன அழிப்பிற்கான ஆயுதங்களைக் கொண்டு செல்லத் துணிந்த ஒரு தேசிய வடிவத்தில் நாம் இணைந்து செயல்படுவதும், அதனைக் கொண்டாடி மகிழ்வதும் எனது வழிவழியான மனிதநேயச் சிந்தனைகளுக்கு எதிரானதாகவும், முற்றிலும் முரண்பட்ட ஒரு தேசிய வடிவமாகவும் இருப்பதால் என்னை இந்திய தேசியத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதில் இருந்து மாற்றி இருக்கிறது.

இவை அனைத்திற்கும் மேலாக, எனது மரபு வழியிலான தொழில்களை முற்றிலும் அழித்துப் பொருளாதார மயமாக்கல் என்கிற ஒரு முதலாளித்துவ ஏமாற்று வழியை உள்ளிருத்தி அறம்சார்ந்த எனது வாழ்வியலைப் பொருள்சார்ந்த வாழ்வியலாகத் திரிக்க முனைகிற, எனக்கான இன, மொழி அடையாளங்களை சிதைவுறச் செய்து ஒரு மதச்சார்பு வழியில் இயங்கத் துடிக்கிற குழுக்களின் ஆளுமையை தேசியவடிவம் என்று ஏற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகிறது. இவற்றின் ஆளுமையில் இருந்து விடுபட்டு நிலைத்த மேன்மையான எனது "தமிழன்" என்கிற அடையாளத்துடனேயே நான் வாழவும், அடையாளப்படுத்தப்படவும் விரும்புகிறேன்.

என்னுடைய தேசிய வடிவம் மரபு வழியான முதல் பிரிவில் உலகெங்கும் அறியப்படுகிறது, மனித நேயம் நிறைந்த, சாதி வேறுபாடுகளும், மதக் குழப்பங்களும் அற்ற இயற்கையை வணங்கிப், பெண்களின் தலைமைப் பண்புகளை ஒட்டிக், கலை மற்றும் பண்பாட்டு வெளிகளில் நிறைந்து வாழ்கிற நீண்ட காலத் தேசிய வடிவம் என்னுடையது. அதன் அடையாளங்களை எந்த தேசிய கீதத்தின் இசைப்பிலும் நான் இழப்பதை விரும்பவில்லை. என்னை இந்தியன் என்று யாரும் அழைப்பதை இப்போது நான் வெறுக்கிறேன், குடியுரிமைகள் கொண்ட ஒரு இந்தியனாக நான் இருக்கிற போதிலும், கொள்கை வழியாக நான் இந்திய தேசியத்தில் இருந்து நீண்ட தொலைவில் இருக்கிறேன், அல்லது எனக்குக் குடியுரிமைகள் வழங்கிய ஒரு தேசம் என்னை தனது செயல்பாடுகள் மூலமாக விலக்கி வைத்திருக்கிறது.

நான் இந்தியனாக இருந்தால் தமிழனாக இருக்க முடியாது, உண்மையான தமிழனாக இருந்தால் இந்தியனாக இனி ஒருக்காலும் இருக்க முடியாது, இதனைப் படிக்கும் உங்களில் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்!!!!


நான் தமிழனா??? இந்தியனா???

- RS SIVA

Thursday, January 7, 2010

சீனிக்கான உதவித் தொகையை மீட்டுக்கொள்ளுங்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

சீனிக்குக் கொடுக்கும் உதவித் தொகையை அரசாங்கம் மீட்டுக்கொள்ள வேண்டும். சீனி என்ற பெயர் கொண்ட மெதுவாகக் கொல்லும் நஞ்சை மக்கள் மலிவான விலையில் வாங்கி உண்பதற்கு ஏதுவாக இந்த உதவித் தொகை கொடுக்கப்படுகிறது. நாட்டு மக்களை நோயாளிகளாக்கும் இப்படிப்பட்ட ஓர் உதவித் தொகை அவர்களின் நலன் கருதி நிறுத்தப்பட வேண்டிய ஒன்றாகும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

இப்போதையை சீனியின் விலையில் மேலும் 20 காசு என ஏற்றம் காணும் பட்சத்தில், அரசாங்கம் 2010 வருடத்தில் மவெ. 1 பில்லியன் உதவித் தொகை வழங்க வேண்டியிருக்கிறது. இது ஒரு கிலோகிராம் சீனிக்கு 80 காசு கழிவு என்பதை அடிப்படையாகக் கொண்டது.

மலேசியர்கள் ஒரு நாளைக்கு 26 தேக்கரண்டி சீனி உட்கொள்கிறார்கள். இப்படி அளவுக்கு அதிகமான சீனியை உட்கொள்ளும் பழக்கம் 1.2 மில்லியன் மலேசியர்களை நீரிழிவு நோயாளிகளாக ஆக்கியுள்ளது. இவர்களில் 98 விழுக்காட்டினருக்கு அளவு அதிகமாக சீனி உட்கொள்ளுதலோடு தொடர்புடைய இரண்டாம் வகை நீரிழிவு கண்டுள்ளது.

சீனியை சந்தை விலைக்கே விற்க வேண்டியதே சரியானதாகும். வெள்ளை சீனி உணவின் அடிப்படை தேவையே கிடையாது. அதனுடைய உட்கொள்ளும் பட்சத்தில் அளவுக்கு அதிகமான ஆரோக்கியக் கேடுகள் தேடி வரும் என்றார் இத்ரிஸ்.

சீனிக்குக் கொடுக்கப்படும் உதவித் தொகையை மீட்டுக்கொள்ளும் பட்சத்தில், சீனியின் விலை 80 காசு அதிகரிக்கும். ஆனால் சீனி சேர்க்கப்படும் உணவு மற்றும் பானங்களின் விலையில் பெருத்த மாற்றத்தை விளைவிக்காது. பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வின்படி தேநீர் மற்றும் மைலோவுக்கு ஆகும் உண்மையான செலவு 45 காசு மட்டுமே. ஆனால் அவை இப்பொழுது முறையே மவெ.1.00க்கும் மவெ. 1.20க்கும் விற்கப்படுகின்றன.

சீனிக்கு கொடுக்கப்படும் உதவித் தொகை குளிர்பான மற்றும் சீனி சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கே இலாபத்தை அள்ளிக்கொடுக்கிறது. பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாட்டு மக்கள் மலேசிய மக்களை விட குறைவான வருமானம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சீனியை இன்னும் அதிகமான விலைக்குதான் வாங்குகிறார்கள்.

சீனிக்கு வழங்கப்படும் உதவித் தொகை மவெ. 1 பில்லியனை மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் ஏழ்மை நிலையைப் போக்குவதற்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் இத்ரிஸ்.

ஆரோக்கியத்திற்கு சொல்லொணா கேடுகளை விளைவிக்கும் சீனிக்கு உதவித் தொகை வழங்குவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. இந்தத் தொகையை இதர ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு பயன்படுத்திக்கொள்வதே நன்மை பயக்கும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

ஆந்திரப் பிரதேசமா.. ஆத்திரப் பிரதேசமா?

ஆந்திர ஐக்கியவாதி: நாம் ஒரு தாய் மக்கள்.. ஒரே பாஷை.. நாம் ஒன்றாகவே இருக்கவேண்டும் தம்பி, நமக்குள் பிரிவினை வேண்டாம்.. நானும் நீயும் அண்ணன் தம்பி.. தெலுகு தல்லி Bபிட்டலு மனமு! சொல்வதைக் கேள்!.

தெலுங்கானா: ஏற்கனவே உருது இருந்தாலும் தெலுங்கு அதிகம் பேசப்படுவதால் நாம் ஒரே மொழி என்று வேண்டுமானால் ஒருவகையில் பொருந்தும்.. ஆனால் ஒரு தாய் மக்கள் என்று சொல்லாதே.. 1956 க்கு முன் உன் தாய் வேறு.. என் தாய் வேறு.. ஏதோ விதி வசத்தால், முட்டாள்தனமாக ஒன்றானோம்.. இப்போது பிரித்துக் கொள்கிறோம். போ.. போ.. இங்கிருந்து போய்விடு.. எம் நாட்டை எமக்குக் கொடு.. நீ உன் நாட்டில் போய் சௌக்கியமாக இருந்துகொள்.. யார் வேண்டாமென்பது..

ஐக்கிய ஆந்திரா: ஐயோ, கொடுமை.. இதை யாரேனும் கேட்பது கிடையாதா.. நாங்கள் எல்லாம் ஒன்றாக இருக்கலாமென்றுதானே அன்று மொழிவாரியாக இணைந்தோம். இந்த ஐதராபாத்தை இவ்வளவு பெரிய புகழ்பெற்ற நகரமாக ஆக்கியிருக்கிறோம்.. கிளிண்டன் வந்தது யாரால்.. ஷம்சாபாத் ஏர்போர்ட் வந்தது யாரால்.. ஹைதராபாத் நகரத்தையே ஒரு பெரிய கம்ப்யூடர் மென்பொருள் சிடி என்று உலகமெல்லாம் புகழவைத்தோமே, யாரால்.. இந்தியாவின் ‘மருந்து மாத்திரைகளின் தலைநகரம் ஹைதராபாத்’ என்று பேசவைத்தோமே.. எல்லாம் ஆந்திரப் பெருமக்களாலல்லவோ.. இப்போது திடீரென தெலுங்கானா கேட்டால் எப்படி கொடுப்பது.. முடியாது.. முடியாது.. தனித் தெலுங்கானா இல்லை.. இல்லை.. அதெல்லாம் கொடுக்கவும் முடியாது.. நான் அண்ணன், நீ தம்பி, நான் மூத்தவன் சொல்வதைக் கேள் தம்பி, பிரிவினை பேசாதே..

தெலுங்கானா: நீயெல்லாம் ஒரு அண்ணனா? இதையெல்லாம் உங்களை செய்யச் சொல்லி யார் கேட்டது.. இதோ பார்! இந்தியாவில் எந்த ஒரு பெரு நகரமும் இந்த அறுபது ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சி கண்டுள்ளது இயற்கையான முறையால்தான். அங்கே சென்னையைப் பார்.. நீங்கள் வந்ததிலிருந்து இன்னமும் பெரிய நகரமாக மாறிவிட்டது.. பெங்களூரைப் பார்.. எப்படிப்பட்ட வளர்ச்சி.. அதைப் போலத்தான் ‘எங்கள்’ ஹைதராபாத் நகரமும்! நாங்கள் கடந்த ஐம்பது வருடங்களாக தெலுங்கானா தனியாக வேண்டும் எனப் போராடிக் கொண்டிருக்கிறோம்.. சென்னா ரெட்டியிலிருந்து கே சி ஆர் வரை தெலுங்கானா வுக்காக போராடிய தலைவர்கள் பட்டியல் இருக்கிறது. ஐம்பது வருட போராட்டம் என்று தெரிந்தும், இந்த ஹைதராபத்தில் தொடர்ந்து உங்கள் ஆந்திரர்கள் முதலீடு செய்கிறீர்கள் என்றால், பணம் சம்பாதிக்கத்தானே.. இது வரை எத்தனை கோடி லாபம் பார்த்துவிட்டீர்களோ.. இனியும் எங்கள் தெலுங்கானா தல்லி (தாய்) பொறுக்கமாட்டாள். நாட்டைக் கொடுத்துவிட்டு உன் ஊர்ப்பக்கம் ஓடு..

ஐக்கிய ஆந்திரா: ஹா! இது அடுக்குமா.. அநியாயமாக அன்று மெட்ராசில் சண்டை போட்டு பிரிவினை வாங்கி ஒன்றாக வாழலாமே என்று வந்தோமே.. இந்த வார்த்தைகளை உன்னிடமிருந்து கேட்கத்தானா.. தம்பி, நான் சொல்வதைக் கேள்.. எங்களை விலக்காதே.. நானும் நீயும் ஒரே ரத்தம்.. இரண்டு பேருக்கும் பொதுவானது ஹைதராபாத். நாம் ஒன்றாகவே இருப்போம்..

தெலுங்கானா: நீ எப்படி வேஷம் போட்டாலும் சரி! நீங்கள் எல்லோருமே சினிமாக் கும்பல்தானே.. உங்கள் நடிகர்கள் படத்தைப் பார்க்க கண்ணில் ரத்தம் வடிய எங்கள் தெலுங்கானா மக்கள் எவ்வளவு அழுதிருக்கிறோம்.. எங்கள் செல்வத்தையெல்லாம் இழந்தோமே.. இனியும் உங்கள் சகாப்தம் வேண்டாம்..

ஐக்கிய ஆந்திரா: ஐய்யோ.. இப்போது அடிமடியில் கை வைத்துவிட்டாயே தம்பி!.. சினிமாக்காரர்கள் அதிகம் ஹைதராபத்தில் வசிக்கிறார்கள்.. அவர்களெல்லாம் துரத்தி அடித்தால் எங்கே என்று போவார்கள்..

சினிமாக்காரர்கள் (அழுதுகொண்டே) : வேறெங்கு போவதாம்? மறுபடியும் மெட்ராசே கதி.. எங்களை இன்னும் அங்கே அரவணைப்போர் அதிகம்.. எங்களை வேண்டாமென்றால் நாங்கள் அங்கேயே போய்விடுகிறோம்.. ரொம்ப நல்லவங்க அவங்க..

ஐக்கிய ஆந்திரா: பார்த்தாயா.. எப்படி அரண்டுபோய்விட்டார்கள் இவர்கள்.. இந்த முகத்தைப் பார்த்தாலாவது உன் முடிவை மாற்றிக் கொள் தம்பி!

தெலுங்கானா: ஐய்யோ தெலுங்கானா தல்லி! இவர்கள் நாடகத்தை சற்று நிறுத்தச் சொல்லேன்.. இவர்கள் அழுதாலும் சரி, கெஞ்சினாலும் சரி.. நாங்கள் தெலுங்கானா அடைந்தே தீருவோம்.. ஹைதராபாத் எங்கள் தலைநகரம்.. ஜெய் தெலுங்கானா..

மேலே கண்டவை எல்லாமே மிக மிக வாஸ்தவமாக தற்சமயம் ஆந்திர தேசத்தில் அடித்துக் கொண்டு பேசிக்கொள்ளப்படுபவை.. ஆந்திரப்பிரதேசம் ஆத்திரப் பிரதேசமாக மாறி ஏகமாக கூச்சல் போட்டுக் கொள்கிறார்கள். ஏறத்தாழ பத்து தெலுங்கு செய்தித் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு இப்போதெல்லாம் வயிறு முட்ட முட்ட சாப்பாடு.. பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா.. எம் எல் ஏ வெல்லாம் கூண்டோடு ராஜினாமா.. அமைச்சர்கள் கூட வேலை செய்யமாட்டோம், என்று கோஷம்.. மாணவ மணிகளோ ஏகத்துக்கு உண்ணாவிரதம் இருந்து சாகும் கொடுமைகள் ஆங்காங்கே.. ஒரு போலிஸ் பெரிய பெண் அதிகாரி தெலுங்கானாவுக்கு ஜே என்று ராஜினாமா செய்து களத்தில் குதித்து விட்டார். இன்று ஆந்திரத்தின் எந்த மூலையில் போனாலும், இந்த தெலுங்கானா பிரிவினைதான் பேசப்படுகின்றது என்ற அளவுக்கு இது மக்கள் பிரச்சினையாக எல்லோரும் சேர்ந்து ஆக்கிவிட்டார்கள். இன்றைக்கு நடைமுறையில் பார்த்தோமானால் ஹைதராபாதிலேயே, தெலுங்கானா-ஆந்திரா என்று அரசாங்க அலுவலகத்திலும் பிரிவினை வந்துவிட்டது. ஆட்சியும் சரியாக நடத்த விடவில்லை.. தொழில் முடங்கிக் கிடக்கிறது. கல்விக் கூடங்கள் போராட்டக்களமாக மாறிப் போய்விட்டன..

சரி!.. இவர்கள் சண்டையைப் பற்றி மேலும் தொடங்கலாமா.. ஒருவேளை தெலுங்கானா வந்தால் ஆந்திரர்கள் என்ன செய்வார்கள். ஏன் ஹைதராபாத்தை அவ்வளவு விடாப்பிடியாக பிடித்துக் கொள்கிறார்கள். அதெல்லாம் சரி, தெலுங்கானா என்பது இவர்கள் சொல்வது போல ஒருதாயின் மக்கள் இல்லையா.. ஏன் தெலுங்கானா கேட்கிறார்கள். இதையெல்லாம் சற்று ஆராயலாமா..

திவாகர்