Monday, June 20, 2011

பள்ளிக்கூடங்களில் சாதூரியமாக ஊடுருவுகின்றன மதுக் கம்பெனிகள் மாணவர்களை மதுவின் பாதிப்பிலிருந்து காப்பாற்றுங்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

கல்வி ஊக்குவிப்பு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நடவடிக்கைள் என்ற பெயரில் மது பான நிறுவனங்கள் மிகவும் சாதுரியமாக பள்ளிக்கூடங்களில் நுழைவது தடுக்கப்பட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்..

கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதற்கு உதவுவதாகக் கூறி நுழையும் மதுபான நிறுவனங்கள் மாணவர்களின் மனதில் தங்கள் மதுபான உற்பத்தியை மிகவும் இலகுவான முறையில் பதிய வைத்து விடுகின்றன என்றார் இத்ரிஸ்.

பள்ளிக்கூடங்களில் மிகவும் சாதூரியமான முறையில் நுழைந்து சிறார்களின் சிந்தனையை ஆக்கிரமிக்கும் யுக்திகளை கார்ஸ்பெக் மற்றும் கின்னஸ் மதுபான நிறுவனங்கள் நன்றாகவே கற்று வைத்திருக்கின்றன.

கார்ல்ஸ்பெர்க் மலேசியாவின் அகப்பக்கத்தை இணையத்தில் மேற்பார்வையிட்டபொழுது அதில் சிறார்கள் பச்சை வர்ண கார்ல்பெர்க் பையைப் பிடித்துக்கொண்டு புன்னகை பூத்த முகத்துடன் நின்றுகொண்டிருந்தார்கள். சென்ற வருட டிசம்பர் மாதத்தில் கார்ஸ்பெர்க் நிறுவனத்தின் ஏற்பாட்டில் தமிழ்ப்பள்ளிக்கூட மாணவர்கள் மேற்கொண்ட சுற்றுலாவில் பிடிக்கப்பட்ட படமே இது. இந்த மாதிரியான நிகழ்வுகளின் மூலம் மது அருந்துவது ஏற்புடையது என்ற எண்ணம் மாணவர்களின் மனதில் அவர்களை அறியாமலேயே பதிந்துவிடுகிறது என்றார் இத்ரிஸ்.

வடக்கில் உள்ள தமிழ்ப்பள்ளிக்கூடம் ஒன்றுக்கு தினந்தோறும் 40 பத்திரிகைகளை இலவசமாகவே வழங்குவதற்கு கார்ஸ்பெர்க் மலேசியா ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாக பத்திரிகைச் செய்தி ஒன்று கூறுகிறது. இந்தப் பள்ளிக்கூடத்தில் மாணவர்களின் ஆங்கிலத் தரத்தை உயர்த்துவதற்காகவே இந்த நடவடிக்கையாம்.

மலேசிய இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக மதுபானக் கம்பெனிகள் கோரிக்கொள்வது கேலிக்குரியது. உண்மையில் பல குடும்பத் தலைவர்களை குடிகாரர்களாக்கி குடும்பங்கள் சின்னாப்பின்னமாவதற்குக் காரணம் இந்த மதுபானக் கம்பெனிகள் தயாரிக்கும் மதுதான்.

கல்வி கற்க உதவுவதாகக் கூறி தமிழ்ப்பள்ளிக்கூடங்களோடு கை கோர்த்து தங்களுடைய மது பிரண்டை இளையோர்களிடையே பிரபலப்படுத்தும் இன்னொரு மதுபான நிறுவனம் கின்னஸ் எங்கர் ஆகும்.

மலேசிய இந்தியர்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுவதாகக் கூறி கின்னஸ் எங்கர் நிறுவனம் பள்ளிக்கூடங்களில் இலவச ஆங்கில வகுப்புக்களையும் நடத்தி வருகிறது.

எதிர்காலக் குடிகாரர்களை உருவாக்குவதற்கு இப்போதைய சிறார்களை நோக்கிக் குறி வைத்தால்தான் முடியும் என்பதை மதுபானக் கம்பெனிகள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளன. மது விளம்பரத்திற்கும் மது அருந்துபவர்களின் அதிகமான எண்ணிக்கைக்கும் இருக்கின்ற தொடர்பை மதுக்கம்பெனிகள் மறுத்தாலும் கூட உண்மை அதுதான். மது விளம்பரம் செய்யும்பொழுது ஒருவர் ஒரு மது பிரண்டிலிருந்து இன்னொரு மது பிரண்டிற்கு மாறுவாரே தவிர புதிதாக யாரையும் குடிக்கத் தூண்டுவதில்லை என்று இந்த மதுக் கம்பெனிகள் வலியுறுத்தி வருகின்றன என்றார் இத்ரிஸ்.

மது உற்பத்தியாளர்கள் குறிப்பிட்ட ஒரு இனத்தின் இளைய சமுதாயத்தைக் குறி வைத்து விளம்பரம் செய்கிறார்கள். 20களில் இருக்கும் இளைஞர்கள்தான் விரைவில் மதுவுக்கு அடிமையாகிறார்கள்.

ஆகையால் மதுக் கம்பெனிகள் தங்களுடைய வியாபாரத்தைப் பெருக்குவதற்காக பள்ளிக்கூடங்களில் தொடர்ந்து ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்கும் பொருட்டு கல்வி அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும். மதுக் கம்பெனிகளை கல்வியாளர்களும், பள்ளிக்கூடங்களும், கல்வி அமைச்சும் ஏற்றுக்கொண்டு அங்கீகாரம் வழங்கும் ஒரு நிலையில் மது ஒன்றும் அவ்வளவு ஆபத்தானது அல்ல என்ற சிந்தனையும் மனப்போக்கும் கல்வி கற்கும் மாணவர்களிடையே அவர்களை அறியாமலேயே உருவாகிவிடும். பிறகு இதுவே மதுக் கம்பெனிகள் தங்களுடைய விற்பனையை அதிகரிக்கும் ஒரு உத்தியாகிவிடும் என்றார் இத்ரிஸ்.

சமுதாயத்தில் உள்ள எல்லா சிறார்களும் பதின்மர்களும் மதுவின் பாதிப்பிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு உரிமை இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனக் கோட்பாடு கூறுகிறது. பள்ளிக்கூட நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் மதுபான நிறுவனங்கள் இந்தக் கோட்பாடுகளை மீறுகின்றனவா என்று அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும் என்று இத்ரிஸ் கூறினார்.

மது கொண்டு வரும் பாதிப்புக்கள் எண்ணிலடங்கா. உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் 2 மில்லியன் பேர் மது ஏற்படுத்தும் நோய்களால் மரணமடைகின்றனர். நாட்டில் ஏற்படும் 30% சாலை விபத்துக்களுக்கு மது அருந்திவிட்டு காரோட்டுவதே காரணம் என்று சாலை பாதுகாப்புக் கழகம் கூறுகிறது. மது அருந்துவது ஒருவரை நிதானமிழக்கச் செய்து வன்முறைப் போக்கை உருவாக்குகிறது. இது வீட்டுக் கொடுமை, சிறார் சித்ரவதை மற்றும் பல விதமான குற்றச் செயல்களுக்கு வித்திட்டுவிடுகிறது. மது அருந்துபவர்களின் தொழில் திறனும், உற்பத்தித் திறனும் குறைந்துவிடுகிறது என்றார் இத்ரிஸ்.

மதுக் கம்பெனிகள் பள்ளிக்கூடங்களில் எந்த ஒரு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து நடத்துவதற்கு அரசாங்கம் தடை விதிக்க வேண்டும். மது உற்பத்திகளுக்காக விதிக்கப்படும் வரிக்கட்டணத்தையும் உயர்த்த வேண்டும். மதுக் கம்பெனிகள் சட்டத்தை மீறும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதங்கள் விதித்து பிறகு அந்த அபராதத் தொகையை கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நிகழ்வுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

மின்சார சைக்கிள்களுக்கு கூடுதலான பாதுகாப்பு அம்சங்கள் தேவை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டால் மட்டுமே, குறிப்பிட்ட சில வகையான மின்சார சைக்கிள்கள் நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

மின்சார சைக்கிள்களுக்கு வெவ்வேறு நாடுகள், அந்தந்த நாட்டுக்கு ஏற்புடைய வகையில் சட்டங்களை வகுத்திருக்கின்றன. மணிக்கு 60 கிலோமீட்டர் வேகஅளவைக் கொண்ட மின்சார சைகக்கிள்கள் இருக்கின்றன. இவ்வளவு வேகத்தில் மின்சைக்கிளோட்டிகள் அமைதியாக பயணம் செய்யும் போது மற்ற மோட்டாரோட்டிகளால் அவர்கள் கவனிக்கப்படாமல் போய்விட நேரிடும். மேலும் நம்முடைய சாலைகளின் தன்மைக்கு அவை ஆபத்தானதாகவும் அமையக்கூடும் என இத்ரிஸ் கூறினார்.

ஐரோப்பிய யூனியன் விதிகளுக்கு ஒப்ப மின்சக்தி வழி இயங்கும் சைக்கிளின் பெடல்கள், நம் நாட்டு சூழ்நிலைக்கு மிகவும் ஏதுவாக அமைந்திருப்பதால் அதன் பாதுகாப்பு அம்சங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

40 கிலோ எடை கொண்டிருக்கும் ஒவ்வொரு மின்சைக்கிளும் 400 வாட் மின்சார மோட்டோரை கொண்டிருக்கிறது. ஓடும்போது அதன் வேகம் மணிக்கு 25 கிலோமீட்டர் வரை குறைய கூடியதாக இருக்கிறது. இப்படிபட்ட சைக்கிள்களுக்கு பதிவு, காப்புறுதி அல்லது ஓட்டநருக்கான லைசன்சும் தேவையில்லை என்றார் இத்ரிஸ்.

மின்சைக்கிள்களுக்கு பின்வரும் பாதுகாப்புகள் மிகவும் முக்கியமாகிறது.:
அ) வீடமைப்பு பகுதிகள் மற்றும் கெம்பஸ்களில் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்
ஆ) பிரத்தியேக வழிகளைக் கொண்டிருந்தால் மட்டுமே பொது சாலைகளில் அவை அனுமதிக்கப்பட வேண்டும்
இ) சாக்கிள் ஓட்டனர் தலைக்கவசம், பளபளக்கும் பாதுகாப்பு மேலாடை அணிந்திருக்க வேண்டும்
ஈ) மின் சைக்கிள்களின் பிரேக் சரியாக இயங்கும் வகையிலும், பாதுகாப்பு தரத்தைக் கொண்டிருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்தப் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் பின்பற்றப்பட்டு வந்தால், குறுகிய தூர ஓட்டத்திற்கு இது மிகவும் வசதியான மலிவான வாகனமாக அமையும். மேலும் வண்டியை நிறுத்துவதற்கு குறைந்த இடமே தேவை. சுலபமாகவும் பார்க் செய்து விடலாம். பாதுகாப்பான மின் சைக்கிள் உபயோகிதத்துக்கு, சட்டத்தைத் திருத்தி தேவையான பாதுகாப்பு அம்சங்கள் புகுத்துவது மிகவும் அவசியம். அதோடு இதர பிரிவுகளைச் சேர்ந்த சைக்கிள்கள் நமது சாலைகளில் அனுமதிக்கக்கூடாது என பி.ப.சங்க தலைவர் இத்ரிஸ் கூறினார்.

சட்ட விரோத கருத்தடை மாத்திரை விற்பனையும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களும் பெண்கள் ஆரோக்கியமான வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

கருத்தடை மாத்திரைகள் தொடர்பாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வில் அது மருந்துக்கடைகளில் மிகவும் எளிதாக கிடைக்கப்பெறுவது அம்பலமாகியுள்ளது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

இந்த கருத்தடை மாத்திரை விற்பனைகள் விஷ சட்டம் 1952ன் கீழ் வருகின்றன. கருத்தடை மாத்திரையை விற்பனை செய்பவர், வாங்குபவரின் விபரத்தை விஷ புத்தகம் என்ற பெயரிடப்பட்ட புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆனால் இப்படி பதிவு செய்யப்படாமலேயே இந்த கருத்தடை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சி தரும் விஷயமாகும். பினாங்கில் உள்ள மருந்துக்கடைகளிலும் கூலிம், கெடாவில் உள்ள மளிகைக்கடைகளிலும் இம்மாதிரியான சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. கோலாலம்பூரில் உள்ள சௌகிட் பகுதியிலும் கிராமப்புறங்களில் உள்ள மளிகைக் கடைகளிலும் கருத்தடை மாத்திரைகள் சட்டத்திற்கு விரோதமான முறையில் விற்கப்பட்டு வருவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

கருத்தடை மாத்திரைகள் விளைவிக்கும் பாதிப்புக்களை உணராத ஆயிரக்கணக்கான மலேசியப் பெண்கள் அதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

கருத்தடை மாத்திரைகளை விற்பனை செய்யும் 15 கடைகளில் சோதனையிட்ட பொழுது அவற்றில் 14 கடைகளில் விஷ புத்தகத்தில் வாங்குபவரின் பெயர் பதிவு செய்யப்படாமலேயேதான் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரே ஒரு மருந்துக்கடையில் மட்டும்தான் கருத்தடை மாத்திரையை வாங்குபவரின் பெயரைப் பதிவு செய்தார்கள். அதுவும் கூட அவர் கொடுத்த விபரங்கள் உண்மையா என்பது பரிசோதிக்கப்படவில்லை. அப்படியானால் விஷ புத்தகத்தில் தவறான தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கலாம். 14 மருந்துக் கடைகளில் 5 மருந்துக்கடைகள் மட்டுமே வாங்குபவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டு இறுதியில் மாத்திரையை விற்றன. ஓர் ஆணும் எந்த வித சிரமமும் இல்லாமல் மருந்தை வாங்க முடிந்தது என்றார் இத்ரிஸ்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மருந்துக்கடைகள் பினாங்கில் உள்ளவையாகும். அவை பள்ளிக்கூடத்திற்கு, பல்கலைக்கழகத்திற்கு, கடைகள் மற்றும் மக்கள் குடியிருக்கும் இடங்களுக்கு அருகில் இருந்தன. சில கருத்தடை மாத்திரைகளை உதிரியாகவும் விற்பனை செய்கின்றனர். அதில் மாத்திரை தொடர்பான விபரங்கள், பக்க விளைவுகள் தொடர்பான எந்த விபரங்களும் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

சில கடைகளில் மட்டுமே கருத்தடை மாத்திரையின் விலையை எழுதி வைத்திருந்தார்கள். ஒரே பிரண்டைக் கருத்தடை மாத்திரைகள் மவெ.4.80லிருந்து மவெ. 6.50 வரை விற்கப்படுகின்றன. வெவ்வேறு பிரண்டு கருத்தடை மாத்திரைகளுக்கான விலைகள் மவெ. 4.80லிருந்து மவெ.23.00 வரைக்கும் உள்ளன. சிலர் விலையைக் குறைத்து வாங்குகின்றனர்.

இந்த கருத்தடை மாத்திரைகள் எளிதில் கிடைக்கின்ற காரணத்தால் அதனை மலேசியப் பெண்கள் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன. கருத்தடை மாத்திரைகள் விளைவிக்கும் ஆபத்துக்கள் மற்றும் நீண்ட கால பாதிப்புக்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இவை மருத்துவரின் கண்காணிப்பின் கீழேயே விநியோகிக்கப்பட வேண்டும் என்றார் இத்ரிஸ்.

இந்த கருத்தடை மாத்திரைகளை அதனுடைய உண்மையான நோக்கத்தைத் தவிர்த்து பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயைத் தள்ளிப்போடுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. பரீட்சைக் காலங்களில் தங்களுடைய மாதவிடாயைத் தள்ளிப்போடுவதற்கும், சமய சம்பிரதாய நிகழ்வுகளில் தடையின்றி கலந்துகொள்வதற்காகவும் மாதவிடாயைத் தள்ளிப்போட இணையம் மூலம் ஆலோசனைக் கேட்டு வருவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. பெண்கள் இந்த மாத்திரைகளை ரமலான் மாதத்திலும் ஹாஜ் செலுத்தும் சமயத்திலும் பயன்படுத்தி வருகிறார்கள்.

கருத்தரித்த காலத்தில், இருதயக் கோளாறுகள், இரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன், இரத்த சோகை, புற்றுநோய், மூளை, குருதிக்குழாய் கோளாறுகள் போன்ற நிலையில் உள்ளவர்கள் இந்த மாத்திரையைப் பயன்படுத்தக்கூடாது.

கருத்தடை மாத்திரைகளின் மூலம் போலி ஹோர்மோன்களை உடலுக்குள் செலுத்தி சினை முட்டை வெளிப்படுவதைத் தடுப்பது உடலின் இயல்பான இயக்கத்திற்கு ஊறு விளைவிப்பதாகும். இது பெண்களுக்கு சௌகரியம், வலி, மன நிலையில் மாற்றம், மன அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்திவிடும். அதே நேரத்தில் எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் பெண்களுக்குப் பிரச்னைகளையும் ஏற்படுத்திவிடும் என்றார் இத்ரிஸ்.

கருத்தடை மாத்திரைகள் மன அழுத்தம், மார்பகக்கட்டி, மாதவிடாய் நேரத்தில் அதிக உதிரப்போக்கு, உயர் இரத்த அழுத்தம், உடலில் கொலெஸ்ட்ரோலின் அளவை அதிகரித்தல், காலில் இரத்தக் கட்டு, நெஞ்சு வலி, ஈரல் பாதிப்பு மற்றும் பக்கவாதத்திற்கான அறிகுறிகளை ஏற்படுத்திவிடும். கருத்தடை மாத்திரைகளில் உள்ள எஸ்ட்ரோஜனின் அளவே இவ்வளவு பாதிப்புக்களையும் ஏற்படுத்திவிடும்.

பெண்களுக்கான மாதவிடாய் சுற்று 27லிருந்து 29 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இதில் மாதவிடாய் அதிகபட்சமாக 7 நாட்கள் வரைக்கும் வரும். 8லிருந்து 10 நாட்களுக்கு சினை முட்டைகள் வெளிப்படும். 10லிருந்து 11 நாட்கள் மாதவிடாய் வருவதற்கான அறிகுறிகளுக்கான உடல் பாதிப்புக்கள் இருக்கும். இதையெல்லாம் கணக்கு வைத்துப் பார்க்கும்பொழுது பெண்களுக்கு வெறும் 5 நாட்கள் எந்த வலியும் வேதனையும் இல்லாத நாட்களாக இருக்கின்றன. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உடல் வலியும் மனஅழுத்தமும் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் இப்படி மாத்திரைகளை உட்கொள்வது மாதவிடாயின்போது ஏற்படும் பாதிப்புக்களை அதிகமாக்கிவிடுகின்றன.

மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பதாக வரும் உடல் நலப் பாதிப்புக்கள்

மார்பகத்தில் வலி, குமட்டல், வாந்தி, மன அழுத்தம், ஒலி மற்றும் வாசனைகளால் அதிகம் எரிச்சலுக்கு உள்ளாகுதல். இவை எல்லாம் மாதவிடாய் வருவதற்கு 5லிருந்து 11 நாட்களுக்கு முன்பதாகவே ஏற்பட்டுவிடுகின்றன. மாதவிடாய் ஆரம்பித்தவுடன் இந்த அறிகுறிகள் எல்லாம் போய்விடுகின்றன.

சினை முட்டை வெளிப்படும் சமயத்தில் ஏற்படும் வலிகள்
மாதவிடாய் ஆரம்பித்த 11லிருந்து 17வது நாளில் இந்த வலி ஏற்படுகிறது. வெள்ளைப்படுதல் மற்றும் இடுப்பு மற்றும் தொடையில் வலி ஏற்படுவதே இதற்கான அறிகுறி.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, குமட்டல், வாந்தி மற்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. அடி வயிறு, முதுகு வலி மற்றும் தொடைக்கும் வலி பரவுகிறது. கால்களில் விறைப்பு ஏற்படுகிறது. சிலருக்கு வயிற்று வலி அதிகமாகவும் உதிரப் போக்கு கட்டியாகவும் வெளிப்படும்.

விஷ சட்டம் 1952 பெண்களுக்கு எந்த விதமான பாதுகாப்பையும் வழங்கவில்லை. கருத்தடை மாத்திரைகளை எந்த பதிவும் எல்லாமல் பெண்கள் எளிதாக வாங்குவது தடை செய்யப்பட்ட மருத்துவரின் கண்காணிப்பின் கீழேயே கருத்தடை மருந்துகள் விநியோகிக்கப்பட வேண்டும். தற்போதுள்ள சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

கருத்தடை மாத்திரைகள் கொண்டு வரும் பாதிப்புக்களை எடுத்து விளக்கும் பொருட்டு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு மாற்றாக வேறு பாதுகாப்பான குறைவான உடல் நலப் பாதிப்புக்களை ஏற்படுத்தும் வழிகளைப் பரிந்துரைக்க வேண்டும்.

பெண்களில் உடல் நலனில் அக்கறை காட்டும் பொருட்டு ஆண்களும் தங்களுடைய பங்கை ஆற்ற வேண்டும். ஆணுறை, விந்து புகுதலை தவிர்க்கும் முறை (coitus interruptus) மற்றும் ஆண் குடும்பக் கட்டுப்பாடு (vasectomies) போன்ற முறைகளைப் பயன்படுத்தலாம். தாய்லாந்தில் ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வது பரவலாக வரவேற்கப்படுகிறது. 1984ல் அங்கு 164,511 ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டுள்ளனர். ஆகையால் குடும்பக் கட்டுப்பாடு என்பது பெண்களால் மட்டும் செய்துகொள்ளப்பட வேண்டியது ஒன்று அல்ல.

பெண்களுக்கான உடல் நலனும் வாழ்க்கைத் தரமும் மேம்பட ஆரோக்கியமான வழிகளை கடைபிடிக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கேட்டுக்கொண்டார்.

கால்நடை வளர்ப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் பாரம்பரிய நடைமுறைகளை அமல்படுத்தி ஏற்றம் காணுவதை மலேசிய அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும்

மலேசியாவில் உட்கொள்ளப்படும் இறைச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்ட காரணத்தால் கால்நடைகளுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. 1985ல் ஒருவர் சராசரி வருடத்திற்கு 2.4 கிலோகிராம் மாட்டிறைச்சி மட்டுமே உட்கொண்டு வந்தார். 2010ல் ஒருவர் உட்கொள்ளும் மாட்டிறைச்சி 8.4 கிலோகிராமாக உயர்ந்துள்ளது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

மலேசியாவில் உற்பத்தி செய்யப்படும் பன்றியிறைச்சி உள்நாட்டுத் தேவைக்குப் போதுமானதாக உள்ளது. அதிகமான இறைச்சித் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு மலேசியாவில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கால்நடைகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அதே வேளையில் அவற்றை உட்கொள்ளும் பயனீட்டாளர்களுக்கும் பல விதமான ஆரோக்கியக் கேடுகளை உண்டாக்குகிறது என்றார் இத்ரிஸ்.




கால்நடை வளர்ப்பில் பாரம்பரிய நடைமுறைகளும் வளங்களும் சிறிதுசிறிதாக அழிக்கப்பட்டு வருகின்றன. கால்நடைகள் சுதந்திரமாக மேய்வதற்கு இடமில்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம், சோயா ஆகியவை அதிகமாக சுத்திகரிக்கப்பட்டு கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கப்படுகின்றன. இவை கால்நடைகளுக்குப் பல விதமான நோய்களை ஏற்படுத்துகின்றன. தீவனங்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இவற்றுக்குக் கொடுக்கப்படும் அளவுக்கு அதிகமான என்டிபையோட்டிக்குகள் நோய் எதிர்ப்புச் சக்தியையும் குறைத்துவிடுகின்றன. இவ்வாறான பாதிப்புக்களுக்கு உள்ளான கால்நடைகள் சினை ஆவது குறைந்து போகிறது. இவற்றுக்கும் எளிதில் கருச்சிதைவும் ஆகின்றன. வெளிநாட்டிலிருந்து இன்னும் குறைவான விலைக்கு இறைச்சிகள் கிடைக்கின்ற காரணத்தால் உள்நாட்டு கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களுடைய கால்நடைகளுக்கு நியாயமான விலை கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள் என்றார் இத்ரிஸ்.

இந்தியா, ஆந்திராவில் உள்ள இரு கால்நடை நிபுணர்கள் மலேசியாவில் உள்ள பலதரப்பட்ட கால்நடைப் பண்ணைகளுக்கு வருகை அளித்து, அந்தப் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைக் களைவதற்கான வழிமுறைகளையும் கால்நடைகளுக்கான மாற்று மருத்துவத்தையும் பரிந்துரைத்து வருகிறார்கள்.

ஆந்திரா என்ற அமைப்பைச் சேர்ந்த டாக்டர் சகாரி ராமதாஸ் கால்நடை மருத்துவர் ஆவார். ஆந்திரா அமைப்பின் இயக்குநராக இவர் இருக்கிறார். திரு சன்யாசி ராவ் மூலிகை ஆராய்ச்சியாளர். ஆந்திரா அமைப்பின் இயற்கை வள ஆய்வு வேலைகளில் இவர் இருக்கிறார். ஒதுக்கப்பட்டவர்கள், நிலமில்லாதவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள், குறிப்பாக இதில் உள்ள பெண்களோடு இணைந்து வேலை செய்து நிலைத்த நீடித்த விவசாயத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது இந்த அமைப்பு.

கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய், சீரணக் கோளாறுகள், சுவாசக்குழாய், இன உற்பத்தி, சிறுநீர் சார்ந்த இயக்கம், சரும நோய்கள் போன்ற பலதரப்பட்ட கால்நடைகளுக்கு ஏற்படும் ஆரோக்கியக் கோளாறுகளுக்கு பாரம்பரிய முறையில் நிவாரணம் அளித்து நூறு விழுக்காடு வெற்றியினைக் கண்டிருக்கும் இவர்களுடைய பாரம்பரிய கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடை மருத்துவ வழிமுறைகளை இங்குள்ள கால்நடை வளர்ப்பாளர்களோடு பகிர்ந்துகொள்ள வந்திருக்கிறார்கள். எந்த வித இரசாயனக் கலப்பு இல்லாத மூலிகை சார்ந்த இவர்களுடைய அணுகுமுறைகள் ஆரோக்கியமான கால்நடை வளர்ப்புக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலைப் பேணி, நீடித்த நிலையான விவசாயத்திற்கும் உதவுகிறது.

மலேசியாவில் உள்ள விவசாயிகளும் கால்நடை வளர்ப்பாளர்களும் ஆந்திரா அமைப்பின் தகவல்களைப் பெற்றுக்கொண்டு இரசாயனம் அல்லாத, நீடித்த விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு முறையைக் கற்றுக்கொண்டு பயன் பெற வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

ஆஸ்ட்ரவின் ஆதிக்கத்தினால் தொலைகாட்சி ரசிகர்களுக்கு இழப்பு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் சாடல்

அரசாங்கம் ஆஸ்ட்ரோவுக்கு கொடுத்துள்ள அதிசலுகைகளினால், மலேசியர்கள் நெடுங்காலமாகவே அதிகமாக செலவு செய்து வந்திருக்கின்றனர். இதனால் மலேசிய தொலைகாட்சி ரசிகர்கள் ஏமாற்றப்பட்டிருப்பதோடு மற்ற நிறுவனங்களின் சேவைகளும் தடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு தொலைகாட்சி நிறுவனத்துக்கு மட்டும் 20 வருட சிறப்பு லைசன்ஸ் வழங்கியிருப்பது மலேசியாவில் மட்டுமே காணப்படும் நிலையாகும் என பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கூறினார்.

மற்ற நாடுகளில் தொலைகாட்சி ரசிகர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தொலைகாட்சி அலைவரிசைகள் கிடைக்கின்றன. அத்தகைய நாடுகளில்:
* இந்தியாவில் கட்டணம் செலுத்தப்படும் ஐ6 தொலைகாட்சி நடத்துநர்கள் இருக்கின்றார்கள்
* இந்தோனிசியாவில் 6
* ஆஸ்திரேலியாவில் 3;
* விலையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றோரு விஷயமாகும். இந்தியாவில் மெவ19.17க்கு 155 தொலைகாட்சி அலைவரிசைகள் கிடைக்கின்றன.

இதுவே ஆஸ்ட்ரோவுடன் ஒப்பிடும் போது மவெ64.61க்கு குடும்ப பேக்கஜ் அல்லது 3 மினி பேக்கஜ் என்று மொத்தம் 50 அலைவரிசைகளைக் கொண்டிருக்கிறது. குடும்ப பேக்கஜில் 33 அலைவரிசைகள் மட்டுமே இருக்கின்றன, அவற்றில் டிவி1லிருந்து டிவி 9 வரை இலவசமாக கொடுக்கப்படும் 6 அலைவரிசைகளும் அடக்கம்.

குடும்ப பேக்கஜில் இருக்கும் அலைவரிசைகள் குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்கள் விரும்பி பார்க்கக்கூடியவையாக இருக்கின்றது. ஆகையால் தங்களுக்கு பிடிக்காத அலைவரிசைகளுக்கு சந்தாதாரர்கள் காசு கட்டிக் கொண்டு இருக்கின்றார்கள என்று இத்ரிஸ் கூறினார்.

ஆஸ்ட்ரோ டிகாடர் வழி வரும் இந்த அலைவரிசைகள் மழை பெய்யும் போது ரசிகர்களால் பார்க்க இயலுவதில்லை. மழை பெய்யும் போது தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாமல் போகிறது என்பது ரசிகர்களின் பெரிய புகாராகும். 2008ல் மியாசாட் 2 மற்றும் மியாசாட் 3 துணைக்கோளங்கள் பாய்ச்சப்பட்ட பிறகு இந்த பிரச்னை 30விழுக்காட்டுக்கு குறைந்து விடும் என்று ஆஸ்ட்ரோ கூறியிருந்தது. ஆனால் அப்படி எதுவும் பெரிய மாற்றங்கள் இருந்ததாக தெரியவில்லை.

ஆஸ்ட்ரோ இப்பொழுது HD B என்ற புதிய டிக்கோடரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. உண்மையில் இந்த புதிய டிக்கோடருக்கு ரசிகர்கள் மாதாமாதம் கூடுதல் மவெ20 செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த புதிய டிஷ் மழைபிரச்னையைக் குறைப்பதற்கான நோக்கத்திற்கே தயாரிக்கப்பட்டது. ஆயினும் மழை காலங்களில் இன்னுமும் தெளிவான சேவையை பெற இயலாத நிலையிலே ரசிகர்கள் இருப்பதால் ஆஸ்ட்ரோ இந்த புதிய டிஷை அனைத்து சந்தாதாரர்களுக்கும் இலவசமாகவே பொறுத்தியிருக்க வேண்டும்.



தெளிவான காட்சி குறிப்பிட்ட சில அலைவரிசைகளுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் அதிகமான அலவரிசைகளுக்கு இதை அறிமுகப்படுத்தும் போது ஆஸ்ட்ரோ தனது கட்டணத்தை இன்னும் அதிகரிக்கூடும் என்று இத்ரிஸ் கூறினார்.

மேலும், தொலைகாட்சிக்கான உபகருவிகளின் சந்தையையும் ஆஸ்ட்ரோவே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இத்தகைய கருவிகள் சீரிம் மற்றும் எம்சிஎம்சி அனுமதியோடு விற்கப்பட்டால் ரசிகர்கள் அவற்றை எங்கு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். இந்தக் கருவிகளின் விற்பனையில் கூட ஆஸ்ட்ரோ ஏன் தனது ஆதிக்கத்தைச் செலுத்த வேண்டும் என்று இத்ரிஸ் கேள்வி எழுப்பினார்.

ஆஸ்ட்ரோ சந்தாதாரர்கள் அதன் சேவை பொறுத்தப்பட்ட காலத்திலிருந்து எல்லாவற்றிற்கும் பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. இதில் தாமதமான கட்டணம், மீண்டும் பொறுத்தும் கட்டணம், சேவை கட்டணம் வேறு இருக்கிறது. இது போதாது என்று ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை புதிய பேக்கஜ் என்று ரசிகர்கள் தலையில் மேலும் மேலும் பணச்சுமையை ஏற்படுத்துகிறார்கள். ஜூலை 11 2011 முதல் மீண்டும் மாற்றம் காணப்பட்ட கட்டணம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வளவு கட்டணங்களுக்குப் பிறகும் நிகழ்ச்சிகளுக்கு நடுவில் ஏகத்துக்கும் விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. இது மிகவும் எரிச்சலை ஏற்படுத்துவதாகவும் ரசிகர்களை ஏமாற்றுவதாகவும் இருக்கிறது என்று இத்ரிஸ் கூறினார்.

2017 வரை ஆஸ்ட்ரோவுக்கு 20 வருட சிறப்பு லைசன்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது. அமைச்சு வலியுறுத்தியும் கூட இந்நிறுவனம் தொடர்புத்துறை பல்நோக்கு ஊடக சட்டம் 1998க்கு மாற மறுக்கிறது.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது:

* மலேசிய தொடர்புத்துறை பல்நோக்கு ஊடக கமிஷன், ஆஸ்டரோ போன்ற வாணிக சமூகத்தினருக்கு உதவுகிறதே தவிர ஏழை மக்களுக்கு அல்ல. அவர்கள் பொதுமக்களுக்கு சாதகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

* விலையை ஏற்றுவதற்கு பதில் ஆஸ்ட்ரோ குடும்ப பேக்கஜில் உள்ள அலைவரிசைகளை மலிவான சிறு சிறு பேக்கஜுகளாக மாற்ற வேண்டும். இது பணச்சுமையைக் குறைக்கும். ஆஸ்ட்ரோ சந்தாதார்கள் எண்ணிக்கை 3 மில்லின் குடும்பங்களை எட்டியிருப்பதால், ஆஸ்ட்ரோவுக்கு இந்த விலைக்குறைப்பு பெரிய சிக்கல்களை எதுவும் ஏற்படுத்தாது.

* அரசாங்கம் புதிய தொலைகாட்சி நடத்துநர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும், அதோடு மற்ற நாடுகளைப் போன்று தொலைகாட்சி உபகருவிகளைச் சந்தையில் வாங்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

* சுலபமான போக்குவரத்துக்கு உதவும் வகையில் டிஷ் கனமில்லா பொருளிலிருந்து தயாரிக்கப்பட வேண்டும்.


எஸ்.எம். முகம்மது இத்ரிஸ்
தலைவர்