Thursday, January 29, 2026

தாகம் தீர்க்கும் ஒரு தனிமனிதப் பயணம்

 

காலநிலை மாற்றம் மற்றும் வறட்சி பற்றிய செய்திகள் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில், ஈராக் குர்திஸ்தானிலிருந்து ஒரு நெகிழ்ச்சியான செய்தி!

யார் இந்த மனிதர்? ஈராக் குர்திஸ்தானின் கலார் பகுதியைச் சேர்ந்த 69 வயது முதியவர் இஹ்சான் முஹ்சின். சுட்டெரிக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், தினமும் காலையிலும் மாலையிலும் கைகளில் தண்ணீர் பாட்டில்களைச் சுமந்து கொண்டு வறண்ட சமவெளிகளுக்குப் புறப்படுகிறார்.

அவர் செய்வது என்ன? காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளுக்காக அவர் அமைத்துள்ள 17 குடிநீர் நிலையங்களுக்கு நடைப்பயணமாகச் சென்று தண்ணீர் ஊற்றுகிறார். கடந்த 2 ஆண்டுகளாக, ஆறுகளும் கிணறுகளும் வற்றத் தொடங்கும் கோடை காலத்தில் இந்தச் சேவையைத் தடையின்றி செய்து வருகிறார். இவருக்காகப் புறாக்களும், முயல்களும், சிட்டுக்குருவிகளும் அந்த நீர் நிலைகளில் தாகத்தோடு காத்திருக்கின்றன.

இதற்குப் பின்னால் எந்தத் தொண்டு நிறுவனமும் இல்லை, விளம்பரமும் இல்லை. "உடல் சோர்வாக இருந்தாலும், வெயில் அதிகமாக இருந்தாலும் என் பயணத்தை நான் நிறுத்துவதில்லை" என்கிறார் இந்த நிஜ நாயகன்.

கருணை என்பது பெரிய சொற்களில் இல்லை; இது போன்ற எளிய செயல்களில்தான் வாழ்கிறது!

Wednesday, January 28, 2026

இயற்கையின் முன்னறிவிப்புகள்: ஒரு பார்வை

 ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்என்று உருகிய வள்ளலார், இன்று உயிரோடு இருந்து டிசம்பர் 13-ம் தேதியன்று சென்னை மாநகரத் தெருக்களில் நடந்திருந்தால், பெரும் துயரத்திற்கு உள்ளாகியிருப்பார். ஏனெனில், சென்னைச் சாலைகள் முழுவதும் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடந்தன. வர்தாபுயல் சென்னை மாநகரையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் நிலைகுலையச் செய்தது. இப்புயலில் விழுந்த மரங்களில் பெரும்பாலானவை குல்மொஹர், தூங்காவாகை போன்ற அயல்நாட்டு மரங்களாகும். எஞ்சியவை முறையாகப் பராமரிக்கப்படாத மரங்கள். சென்னை மக்களுக்குப் புயல் குறித்த எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் மூன்று நாட்களுக்கு முன்பே தொடர்ச்சியாக அறிவித்தது. அதன் காரணமாக, மக்கள் வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருந்தனர்.

ஆனால், முறிந்த மரங்களில் கூடு கட்டி வாழ்ந்த பறவைகளுக்கு இத்தகவலை வழங்கியது யார்? புயலுக்குப் பிறகு சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களை நான் தேடிப் பார்த்தபோது, ஓரிடத்தில் கூட இறந்த பறவைகளைக் காணவில்லை. மனிதர்களுக்கு நவீன செயற்கைக்கோள்கள் மூலம் எச்சரிக்கை கிடைத்தது. ஆனால், பறவைகள் தங்களின் நுண்ணுணர்வின் மூலமாகவே புயல் வரப்போவதை முன்கூட்டியே உணர்ந்துள்ளன. அதனால்தான், அவை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டன.

காட்டுப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இன்றும் பறவைகளும் விலங்குகளுமே புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்களுக்கான முன்னறிவிப்பாளர்களாகத் திகழ்கின்றன. கடல் பயணங்களில் திசையறியப் பறவைகளும், கடல் நீரோட்டங்களை அறிய ஆமைகளும் நம் முன்னோர்களுக்குப் பெரிதும் உதவியுள்ளன. திரைகடல் ஓடியும் திரவியம் தேடுஎன்ற பழமொழிக்கு ஏற்ப, வெளிநாட்டினர் திசைகாட்டி’ (Compass) கண்டுபிடிப்பதற்கு முன்னரே, நம் முன்னோர்கள் கடல் மார்க்கமாக ஜாவா, சுமத்ரா போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளனர். இது போன்ற பயணங்கள் விலங்குகளின் துணையின்றிச் சாத்தியமாகியிருக்காது.

இயற்கையைத் தெய்வமாக வணங்கும் மக்களுக்கு இயற்கை எப்போதும் கைக்கொடுக்கும். தேவாங்குஎன்பது பெரிய கண்களையும் சிறிய உடலையும் கொண்ட ஒரு விலங்கு. இன்றும் யாரையாவது ஏளனம் செய்யவே இப்பெயர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கடல் மாலுமிகள் இத்தேவாங்குகளைத் திசையறியப் பயன்படுத்தியுள்ளனர். இவை எப்போதும் மேற்கு திசையை நோக்கியே அமரும் தன்மை கொண்டவை. மாலுமிகள் தேவாங்கு அமர்ந்திருக்கும் கூண்டின் நிலையை வைத்தே தங்களின் பயணத் திசையை உறுதி செய்துள்ளனர்.

தொழில்நுட்பத்தில் முன்னேறிய ஐரோப்பிய நாடுகளும் ஒரு காலத்தில் பறவைகளைச் சார்ந்து இருந்துள்ளன. பூமிக்கடியில் சுரங்கம் தோண்டும்போது கேன்ரி’ (Canary) என்ற பறவையை உடன் எடுத்துச் செல்வார்கள். நில அதிர்வு ஏற்படப் போகிறது என்றால், இப்பறவை கூண்டுக்குள் படபடப்புடன் சிறகுகளை அடித்துக் கொள்ளும். இந்த அறிகுறியைக் கண்டவுடன் பணியாளர்கள் விரைவாகச் சுரங்கத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள்.

2004-ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அந்தமான் பகுதியில் மோக்கன்என்ற பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர். கடல் நாடோடிகளான இவர்கள் பெரும்பாலும் கடலிலேயே தங்கியிருப்பார்கள். சுனாமியில் இந்த இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாக இந்திய அரசு கருதியது; ஊடகங்களும் அவ்வாறே செய்திகளை வெளியிட்டன. ஆனால், சுனாமி வந்த மூன்றாம் நாள் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை இந்தியக் கடற்படை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அவர்கள் எவ்வாறு தப்பினர் என்று கேட்டபோது, அந்த இனத்தலைவர் இவ்வாறு கூறினார்: கடலில் ஏற்பட்ட மாற்றமும், பறவைகளின் அசாதாரண நடவடிக்கைகளும் ஏதோ ஆபத்து வரப்போவதை எங்களுக்கு உணர்த்தின. உடனே நாங்கள் அனைவரும் அருகில் இருந்த குன்றின் மீது ஏறிவிட்டோம். இயற்கை காட்டிய அந்த முன்னெச்சரிக்கை உண்மையானது என்பதை, பனைமர உயரத்திற்கு எழுந்த அலைகளைக் கண்டபோது உறுதி செய்துகொண்டோம்.

இயற்கை என்பது எக்காலத்திற்கும் நிலையானது. இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களுக்குப் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. அவ்வாறு ஏற்பட்டாலும் அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும். இயற்கையை விட மனிதன் பெரியவன் என்று நினைப்பவர்களுக்கு தீதும் நன்றும் பிறர் தர வாராஎன்பதுதான் நிதர்சனம்.

நன்றி : பசுமை விகடன் 2017

தைப்பூசக் கொண்டாட்டம் 2026: ஆடம்பரத்தைத் தவிர்த்து ஆன்மீகத்தையும் அறத்தையும் காப்போம்!

 

தைப்பூசம் என்பது வெறும் திருவிழா மட்டுமல்ல; அது ஒரு ஆன்மீகப் பயணம். 2026-ஆம் ஆண்டு தைப்பூசத்தை முன்னிட்டு, பினாங்கு பயனீட்டாளர் சங்கமும் (CAP), மலேசிய இந்து சங்க பினாங்கு பேரவையும் இணைந்து விடுத்துள்ள வேண்டுகோள், இன்றைய காலக்கட்டத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.


தற்போது நிலவும் சூழலில், பேராக்கின் பாகன் டத்தோ போன்ற முக்கிய பகுதிகளில் நிலவும் கடுமையான காலநிலை மாற்றத்தினால் தேங்காய் விளைச்சல் பெருமளவு குறைந்துள்ளது. இதன் காரணமாகச் சந்தையில் தேங்காய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், தைப்பூசத்தின் போது பல்லாயிரக்கணக்கான தேங்காய்களைச் சாலையில் வீசி உடைப்பது சந்தை விலையை மேலும் உயர்த்தி, ஏழை எளிய மக்களின் அன்றாடச் சமையலுக்கான தேவையைப் பாதிக்கும் நிலையை உருவாக்குகிறது. குறிப்பாக பி40 பிரிவைச் சேர்ந்த குடும்பங்கள் இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளாகக்கூடும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆன்மீக ரீதியாகப் பார்த்தால், தேங்காய் உடைப்பது என்பது ஒருவரின் அகங்காரத்தை இறைவனின் திருவடிகளில் அர்ப்பணிப்பதைக் குறிக்கும் ஒரு புனிதச் சடங்காகும். இந்தச் சடங்கிற்கு ஒரு தேங்காயே போதுமானது. ஆனால், அதிக அளவில் தேங்காய்களை உடைப்பதன் மூலம் அதிக அதிர்ஷ்டம் கிடைக்கும் என்ற தவறான நம்பிக்கை பலரிடையே பரவியுள்ளது.

குறிப்பாகச் சீன சமூகத்தைச் சேர்ந்த பலரும் இத்தகைய புரிதல் இன்றி ஆயிரக்கணக்கில் தேங்காய்களை உடைக்கின்றனர். இவ்வாறு உடைக்கப்படும் தேங்காய்கள் பெரும்பாலும் முறையாகச் சேகரிக்கப்படாமல் குப்பை மேடுகளுக்குச் சென்று அழுகிப் போகின்றன அல்லது எரிக்கப்பட்டுச் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. உணவை இறைவனுக்குப் படைக்கப்படும் பிரசாதமாகக் கருதும் நமது கலாச்சாரத்தில், அதை வீணாக்குவது ஆன்மீக நெறிமுறைக்கு முரணான செயலாகும்.

எனவே, இந்த ஆண்டு தைப்பூசக் கொண்டாட்டத்தின் போது தேங்காய்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டு, அந்த மிச்சப்படும் தொகையைத் தேவையுள்ள ஏழை எளிய குடும்பங்களுக்கோ அல்லது ஆதரவற்றோர் இல்லங்களுக்கோ தானமாக வழங்க வேண்டும் என்று என்.வி. சுப்பாராவ் மற்றும் விவேக ரத்னா தர்மன் ஆனந்தன் ஆகியோர் கூட்டாக வலியுறுத்துகின்றனர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற தத்துவத்தின் அடிப்படையில், ஆடம்பரத்தைக் குறைத்து அறச்செயல்களில் ஈடுபடுவதே இந்தத் திருவிழாவின் உண்மையான நோக்கமாக இருக்க வேண்டும்.

இந்த மாற்றமானது தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஒரு தீர்வாக அமைவதுடன், வளர்ந்து வரும் இளைய தலைமுறைக்குச் சரியான ஆன்மீகப் பாதையையும், சமூகப் பொறுப்பையும் போதிப்பதாக அமையும். பக்தி என்பது மற்றவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்போதுதான் அது முழுமை பெறுகிறது என்பதை உணர்ந்து, இந்தத் தைப்பூசத்தில் ஒரு நல்ல முன்மாதிரியை உருவாக்க வேண்டியது ஒவ்வொரு பக்தரின் கடமையாகும்.


தமிழ் மருதம்

 

Thursday, January 22, 2026

கானமயில் கண்டதுண்டா?

"கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானுமதுவாகப் பாவித்து தானுந்தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே கல்லாதான் கற்ற கல்வி"

- மூதுரை 14

என்றொரு செய்யுள் உள்ளது. புகழ்பெற்ற இந்தச் செய்யுளில் கூறப்படும் கானமயில் (The Great Indian Bastard), பறக்கும் பறவைகளிலேயே அதிக எடை கொண்ட பறவையாகும். வறண்ட புல்வெளி பகுதிகளில் வாழும் கானமயில் பொதுவாக ஒரே ஒரு முட்டை மட்டுமே இடும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் காணப்பட்ட இந்த கானமயில் இப்போது மிக மிக அருகிவிட்டது. அதிக வேட்டையாடப்பட்டதன் விளைவு இந்தப் பறவைகள் தற்பொழுது எண்ணிக்கையில் வெறும் 250 மட்டுமே மிஞ்சியுள்ளன. மேலும் வருடத்திற்கு ஒரு முட்டை மட்டுமே இடுவதால் இவற்றைக் காப்பாற்றுவது கடினமாக இருக்கலாம்.

-தமிழ் மருதம்

Friday, January 16, 2026

தினம் ஒரு கதை : கெடுத்தது எது?

 ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்.

அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார். தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார். எமன் வந்தார். பார்த்தார், திகைத்துப் போனார். மூன்றும் சிலைகளா? இல்லை
இரண்டுதான் என்பதை யூகித்துவிட்டார்.

ஆனால் எவை சிலைகள், எது சிற்பி என்பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தி. தவறாக சிலையின் மீது கயிற்றை வீசிவிடக்கூடாதே! நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

யோசித்தார். ஒரு யோசனை வந்தது.

சத்தமாக வாய்விட்டுச் சொன்னார், ‘அட என்ன தத்ரூபமாக இருக்கிறது! இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது. என்னாலேயே எது சிலை எது ஆள் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே!இப்படி சொல்லிவிட்டு மூன்று சிலைகளையும் உன்னிப்பாக கவனித்தார். அவர் எதிர்பார்த்தது நடந்தது. நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான முறுவல் தெரிந்தது. தற்பெருமைதான், வேறென்ன!. சடாரென வீசினார் கயிற்றை.

கெடுத்தது எது? தான் என்கிற ஈகோ ஆக பலருடைய பிரச்சனைகளுக்கு, மனவருத்தங்கள்,மற்றும் சோர்வுகளுக்கு காரணம், நான் தான் தனது நான் தான் பெரியவன் என்கின்ற எண்ணங்களை ஒழித்தோம் என்றால் நாம் மிகப்பெரிய வெற்றியாளர்கள்.


படித்ததில் பிடித்தது


Monday, November 24, 2025

இதழில் பதிந்த ஓர் நாள் : ஜெயராமனுக்கு "ஜே"

 

இப்படத்தில் உள்ளவர் மலேசிய தோட்டப் புற மக்களிடையே நன்கு அறிமுகமானவர். ரப்பர் தோட்டத்திலே பிறந்து, வளர்ந்து ஒரு துடிப்புமிக்க தொழிற்சங்கவாதியாக உயர்ந்தவர். பல முக்கிய பொறுப்புக்களை தேசிய தோட்ட தொழிற்சங்கத்தில் வகித்தவர்.

கெப்பேலா ஆரம்பிக்கப்பட்டதற்கு இவர், முக்கிய பங்காற்றியுள்ளார். தோட்ட தொழிலாளியாக இருந்துக் கொண்டே தொழிற் சங்கத்தில் துடிப்போடு பங்காற்றினார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையினால் கடுமையான தாக்குதலுக்கும் இலக்காகியுள்ளார். தே.தோ.தொ. சங்கம் இப்பொழுது இவரை பழிவாங்குகின்றது.

கெப்பேலாவை நல்ல நிலைக்கு உயர்த்திய இவர், அதே கெப்பேலா பிரச்னையை எதிர்நோக்க ஆரம்பித்தவுடன், தனது தோட்டத் தொழிலை ராஜிநாமா செய்துவிட்டு இப்பொழுது கெப்பேலாவை காப்பாற்றுவதற்காக படாதபாடுபட்டு வருகின்றார்.

எல்லாச் சுமைகளையும் தன் தலையில் அமர்த்திக் கொண்டு, வருகின்றவர்களுக்கு சமாதானம் கூறி, பிரச்னையை தீர்ப்பதற்கு வழிகளையும் வழங்கி வருகின்றார் இவர். 

கெப்பேலா மறுவாழ்வு பெறுவதற்கு அயராது பாடுபட்டவர், இவர் மட்டும் தான். “வேறு யாருமல்ல”? 

பயனீட்டாளர் குரல் : மார்ச் 1991

Monday, October 27, 2025

மதராஸ் பஞ்சத்தின் ஒரு தருணம்

 நிமிர்ந்து நிற்பதற்குக்கூட வலுவில்லாத ஒரு மனிதர், தனது பசியால் வாடும் குடும்பத்தை, அவநம்பிக்கையின் கொடூரங்களில் இருந்தும், அந்தப் பஞ்சம் சூழ்ந்த நேரத்தில் தலைவிரித்தாடிய நரமாமிசம் உண்ணும் அச்சுறுத்தலில் இருந்தும் காத்து நின்றார்.

1876 முதல் 1878 வரையிலான காலகட்டத்தில், வறட்சியும், காலனித்துவ நிர்வாகத்தின் கவனக்குறைவான கொள்கைகளும் வரலாற்றில் மிக அதிக உயிர்சேதத்தை விளைவித்த பஞ்சங்களில் ஒன்றைத் தோற்றுவித்தன. ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாயின அவர்கள் பசியின் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல; மனித குலத்தின் உயிர்வாழும் உரிமையைவிட ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளித்த அமைப்பின் தியாகிகளும் ஆவர்.

குறிப்பு: இந்தப் புகைப்படமானது ஆங்கிலேயக் காலனித்துவ ஆட்சியின்
கீழ் 1877-ஆம் ஆண்டில் மதராஸ் மாகாணத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின்
ஒரு தருணத்தை ஆவணப்படுத்துகிறது.


அந்த ஆழமான வெற்றுக் கண்கள் வேதனையைத் தாண்டி ஒரு கதையைப் பேசுகின்றன: ஒரு தந்தையின் இறுதிப் பாதுகாப்புக் கடமை, இரக்கமற்ற உலகில் அன்பின் மற்றும் எதிர்ப்பின் ஒரு சிறு தீப்பொறி.

பஞ்சம் என்பது வெறும் உணவுப் பற்றாக்குறை மட்டுமல்லஅது மனிதநேயத்தின் வீழ்ச்சியாகும்.

நன்றி : செய்தி இணையத்தளம்