‘வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று
உருகிய வள்ளலார், இன்று உயிரோடு
இருந்து டிசம்பர் 13-ம் தேதியன்று
சென்னை மாநகரத் தெருக்களில் நடந்திருந்தால், பெரும் துயரத்திற்கு உள்ளாகியிருப்பார். ஏனெனில்,
சென்னைச் சாலைகள் முழுவதும் மரங்கள்
வேரோடு சாய்ந்து கிடந்தன. ‘வர்தா’
புயல் சென்னை மாநகரையும் அதனைச்
சுற்றியுள்ள பகுதிகளையும் நிலைகுலையச் செய்தது. இப்புயலில் விழுந்த மரங்களில்
பெரும்பாலானவை குல்மொஹர், தூங்காவாகை
போன்ற அயல்நாட்டு மரங்களாகும். எஞ்சியவை முறையாகப் பராமரிக்கப்படாத மரங்கள்.
சென்னை மக்களுக்குப் புயல் குறித்த எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் மூன்று
நாட்களுக்கு முன்பே தொடர்ச்சியாக அறிவித்தது. அதன் காரணமாக, மக்கள் வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருந்தனர்.
ஆனால், முறிந்த மரங்களில் கூடு கட்டி வாழ்ந்த
பறவைகளுக்கு இத்தகவலை வழங்கியது யார்? புயலுக்குப் பிறகு சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களை நான் தேடிப்
பார்த்தபோது, ஓரிடத்தில் கூட
இறந்த பறவைகளைக் காணவில்லை. மனிதர்களுக்கு நவீன செயற்கைக்கோள்கள் மூலம் எச்சரிக்கை
கிடைத்தது. ஆனால், பறவைகள்
தங்களின் நுண்ணுணர்வின் மூலமாகவே புயல் வரப்போவதை முன்கூட்டியே உணர்ந்துள்ளன.
அதனால்தான், அவை பாதுகாப்பான
இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டன.
காட்டுப் பகுதிகளில்
வாழும் மக்களுக்கு இன்றும் பறவைகளும் விலங்குகளுமே புயல்,
நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்களுக்கான
முன்னறிவிப்பாளர்களாகத் திகழ்கின்றன. கடல் பயணங்களில் திசையறியப் பறவைகளும்,
கடல் நீரோட்டங்களை அறிய ஆமைகளும் நம்
முன்னோர்களுக்குப் பெரிதும் உதவியுள்ளன. ‘
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’
என்ற பழமொழிக்கு ஏற்ப,
வெளிநாட்டினர்
‘
திசைகாட்டி’ (Compass)
கண்டுபிடிப்பதற்கு முன்னரே,
நம் முன்னோர்கள் கடல் மார்க்கமாக ஜாவா,
சுமத்ரா போன்ற நாடுகளுக்குப் பயணம்
செய்துள்ளனர். இது போன்ற பயணங்கள் விலங்குகளின் துணையின்றிச்
சாத்தியமாகியிருக்காது.
இயற்கையைத் தெய்வமாக
வணங்கும் மக்களுக்கு இயற்கை எப்போதும் கைக்கொடுக்கும். ‘தேவாங்கு’ என்பது பெரிய கண்களையும் சிறிய உடலையும் கொண்ட ஒரு விலங்கு. இன்றும்
யாரையாவது ஏளனம் செய்யவே இப்பெயர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கடல் மாலுமிகள் இத்தேவாங்குகளைத் திசையறியப்
பயன்படுத்தியுள்ளனர். இவை எப்போதும் மேற்கு திசையை நோக்கியே அமரும் தன்மை கொண்டவை.
மாலுமிகள் தேவாங்கு அமர்ந்திருக்கும் கூண்டின் நிலையை வைத்தே தங்களின் பயணத்
திசையை உறுதி செய்துள்ளனர்.
தொழில்நுட்பத்தில்
முன்னேறிய ஐரோப்பிய நாடுகளும் ஒரு காலத்தில் பறவைகளைச் சார்ந்து இருந்துள்ளன.
பூமிக்கடியில் சுரங்கம் தோண்டும்போது ‘கேன்ரி’ (Canary) என்ற
பறவையை உடன் எடுத்துச் செல்வார்கள். நில அதிர்வு ஏற்படப் போகிறது என்றால், இப்பறவை கூண்டுக்குள் படபடப்புடன் சிறகுகளை
அடித்துக் கொள்ளும். இந்த அறிகுறியைக் கண்டவுடன் பணியாளர்கள் விரைவாகச் சுரங்கத்தை
விட்டு வெளியேறிவிடுவார்கள்.
2004-ம் ஆண்டு சுனாமி
ஏற்பட்டபோது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அந்தமான் பகுதியில் ‘மோக்கன்’ என்ற பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர். கடல் நாடோடிகளான இவர்கள்
பெரும்பாலும் கடலிலேயே தங்கியிருப்பார்கள். சுனாமியில் இந்த இனம் முற்றிலும்
அழிந்துவிட்டதாக இந்திய அரசு கருதியது; ஊடகங்களும் அவ்வாறே செய்திகளை வெளியிட்டன. ஆனால், சுனாமி வந்த மூன்றாம் நாள் அவர்கள் அனைவரும்
பாதுகாப்பாக இருப்பதை இந்தியக் கடற்படை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
அவர்கள் எவ்வாறு
தப்பினர் என்று கேட்டபோது, அந்த
இனத்தலைவர் இவ்வாறு கூறினார்: “கடலில்
ஏற்பட்ட மாற்றமும், பறவைகளின்
அசாதாரண நடவடிக்கைகளும் ஏதோ ஆபத்து வரப்போவதை எங்களுக்கு உணர்த்தின. உடனே நாங்கள்
அனைவரும் அருகில் இருந்த குன்றின் மீது ஏறிவிட்டோம். இயற்கை காட்டிய அந்த
முன்னெச்சரிக்கை உண்மையானது என்பதை, பனைமர உயரத்திற்கு எழுந்த அலைகளைக் கண்டபோது உறுதி செய்துகொண்டோம்.”
இயற்கை என்பது
எக்காலத்திற்கும் நிலையானது. இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களுக்குப் பாதிப்புகள்
ஏற்படுவதில்லை. அவ்வாறு ஏற்பட்டாலும் அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும். இயற்கையை
விட மனிதன் பெரியவன் என்று நினைப்பவர்களுக்கு ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதுதான் நிதர்சனம்.
நன்றி : பசுமை விகடன் 2017