Monday, October 3, 2011

நில்லு நில்லு சொந்த காலில் நில்லு



ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான முனி -2 காஞ்சனா. திரைப்படத்திலிருந்து தன்முனைப்பு பாடல்.

Friday, September 23, 2011

மரம் எழுதும் மடல்!


"ஏதோ ஒரு நதிக்கரையி்ல், எப்போதோ ஓர் ஏகாந்த நாளில், உயிர்ப்பு நிறைந்த ஒரு விநாடியில் விதையாய் நான் விழுந்தேன்.

முளைத்தேன்; வளர்ந்தேன்; செடியானேன்: மலர்கள் தவழும் மடியானேன். எனது வேர்கள் நிலத்தை உழுதன. கிளைகள் வானத்தில் எழுந்தன.

என்னில் தவழ்ந்து, என்னை உறிஞ்சி, என்னால் வளர்ந்து, என்றும் என்னைச் சார்ந்து வாழும் ஒட்டுண்ணி மனிதன் இன்று என்னை வெட்டுவதற்கு வந்தான். அவனது உடலின் உரமும், மனத்தின் வெறியும் இதோ - என்னைத் துண்டாடிக் கொண்டிருக்கின்றன. மனித ஊனங்களுக்கெல்லாம் கைகொடுத்து உதவிய நான், இப்போது ஊனப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
தவணை முறையில் எனது உயிர் சிறிது சிறிதாகப் போய் கொண்டிருக்கிறது.

இந்த வேளையில், "எனது இரத்தத்தைப் பாருங்கள். இன்னுமா உங்களுக்கு இரக்கம் வரவில்லை?" என்று நான் இறைஞ்சமாட்டேன். எனக்குத் தெரியும் எனது இரத்தத்தில் இரப்பர் செய்ய ஏதேனும் வழியிருக்கிறதா என்று பார்ப்பவர்கள் நீங்கள். உங்களுக்குத் தெரியுமா? எனது மரணப் போராட்டத்தில் வெளிவரும் இறுதி மூச்சுகள்கூட உங்கள் சுவாசத்துக்காகத்தான்!

- உங்களில் ஒருவரால் வெட்டப்படும்.....ஒரு மரம்.

இந்திய இளைஞர்களின் அராஜகத்திற்கு முடிவே இல்லையா? இவர்களது பெற்றோர்கள் என்ன செய்கின்றார்கள்?

இந்திய இளைஞர்களின் அராஜகத்திற்கு முடிவே இருக்காதா என்பது ஒரு மிகப் பெரிய வினாவாக இருக்கின்றது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறுகின்றது.

படுகொலை, கொலை, பாராங்கத்தியை காட்டி மிரட்டுவது, கொள்ளை என பலதரப்பட்ட இரத்த வெறி சம்பவங்கள் நமது இளைஞர்களுக்கு பாலும் பழமும் சாப்பிடுவது போல ஆகிவிட்டது என பி.ப.சங்க அல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.

ஒவ்வொரு பொழுதும் விடியும்போது கொலை கொள்ளை சம்பவங்களையும், மிரட்டிச் செல்கின்ற அச்சுறுத்தல்களையும் படிக்கும்போது அன்றைய தினம் ஒரு பயமான தினமாகவே இருக்கின்றது.

இந்திய இளைஞர்களின் இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காவிடில், இன்னும் பலதரப்பட்ட கோரச் சம்பவங்கள் நிகழக்கூடும்.


இதற்கு அண்மைய காலமாக நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்களே ஒரு உதாரணம் என்று சுப்பாராவ் கூறினார்.

கொலை, படுகொலை, கொள்ளை, பயமுறுத்துதல் என பலதரப்பட்ட சம்பவங்களில் ஈடுபடும் இந்திய இளைஞர்களின் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் உற்றார் உறவினர்கள் ஏன் இவர்களைக் கண்டிப்பது கிடையாது என்பதுதான் புரியாத புதிராக இருப்பதாக சுப்பாராவ் கூறினார்.

இளம் வயதிலேயே கொடூரமான செயல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இவர்களின் எதிர்காலம் சீரழிந்து போவதற்கு இவர்களது பெற்றோர்களே மூல காரணமாக திகழ்கின்றனர் என அவர் கூறினார்.

கொலை, படுகொலை, கொள்ளையடிப்பது என்பது இவர்களுக்கு சர்வசாதாரணமான செயலாகிவிட்டது. யாருக்கும் இவர்கள் பயப்படுவதும் கிடையாது. யாருடைய அறிவுரையையும் இவர்கள் ஏற்றுக்கொள்வதாகவும் இல்லை.

ஆகவே இவர்களை நல்வழிக்கு கொண்டு வருவதற்கு மிகப் பொருத்தமானவர்கள் இவர்களது பெற்றோர்கள்தான் என சுப்பாராவ் கூறினார்.

இவர்களது உற்றார் உறவினர்களும் இவர்கள் நல்ல திசையை நோக்கி செல்வதற்குரிய ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

“எனக்கென்ன! என் பிரச்னை இல்லை” என அனைவரும் சொல்ல ஆரம்பித்துவிட்டால் ஒரு தலைமுறையே சீரழிந்துவிடும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என என்.வி.சுப்பாராவ் கூறினார்.

தேவைக்கு மேற்பட்ட மருந்துகளை நோயாளிக்கு அள்ளிக்கொடுப்பதை நிறுத்துங்கள் - பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

உபயோகப்படுத்தாத அல்லது காலாவதியான மருந்துகளை அரசாங்க மருத்துவ மையங்கள் அல்லது மருத்துவமனைகளில் கொண்டு போய் கொடுத்துவிடுமாறு அமைச்சு கூறியுள்ளது சரியான அணுகுமுறை கிடையாது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

காலாவதியான மருந்துகளை ஒரு முறையில்லாமல் தூக்கி எறிவதைத் தவிர்க்கவும், மருந்துப் புட்டிகளின் மூடி கூட திறக்கப்படாமல் இருக்கின்ற மருந்துகளை, நல்ல நிலையில் உள்ள மருந்துகளை மறுபயனீடு செய்யவும் இந்த அணுகுமுறையை சென்ற வருடத்தில் அமைச்சு பரிந்துரை செய்தது.


முதல் அரை வருடத்தில் கோலாலம்பூர் மருந்துவமனையில் திருப்பிக் கொடுக்கப்பட்ட மருந்துகள் மவெ. 128,818 பெருமானமுள்ளவை. சென்ற வருடத்தில் மட்டும் செபிராங் ஜாயா மருத்துவமனையில் திருப்பிக் கொடுக்கப்பட்ட மருந்துகள் மவெ. 27,899 பெருமானமுள்ளவை. இருதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலெஸ்ட்ரோல் குறைப்பு மருந்துகளே பெரும்பாலும் திருப்பி கொடுக்கப்பட்ட மருந்துகளாகும் என்றார் இத்ரிஸ்.

நோயாளிகளுக்குத் தேவையில்லாத மருந்துகள் மற்றும் குறிப்பிட்ட நோய்க்கு தேவைப்பட்டதைவிட அதிகமான மருந்துகள் அளிக்கப்படுகின்றன. மலேசியாவில் உள்ள அரசாங்க மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இப்படிக் கொடுப்பது வழக்கமாகிவிட்டது என்றார் இத்ரிஸ்.

ஒவ்வொரு முறையும் தேவைக்கு மேற்பட்ட மருந்துகளைக் கொடுத்து நோயாளியின் மருத்துவக் கட்டணத்தை ஏகத்துக்கு உயர்த்துவதும் வழக்கமாகிவிட்டது என்று பத்திரிகைகள் அம்பலப்படுத்தியுள்ளன. மருத்துவக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட நோயாளி பணி புரியும் கம்பெனி செலுத்தும் பட்சத்தில் இப்படி அதிகமாக விதிக்கப்படும் மருத்துவக் கட்டணம் நோயாளிக்கு பிரச்னையாக இருப்பதில்லை. மருந்துகளை வீட்டுக்கு எடுத்துச் சென்று, தேவையானதை பயன்படுத்திவிட்டு மிச்சத்தை குப்பையில் போடுகிறார்கள் என்றார் இத்ரிஸ்.

இல்லாத நோய்க்கான மருந்துகளை பரிந்துரைக்கும் மருத்துவமனைகளும் இருக்கின்றன. இருமல் இல்லாமலேயே இருமல் மருந்தும், காய்ச்சல் இல்லாமலேயே பாரசெட்டமோலும், தேவையில்லாத லோஷன் மற்றும் கிரீம்களையும் கொடுத்துவிடுகிறார்கள்.

இதற்கு நோயாளியின் அறியாமை, நோயை விரைவில் குணப்படுத்தும் மருந்து வேண்டும் என்று வலியுறுத்துவது, அல்லது கம்பெனிதான் கட்டணம் செலுத்துகிறது என்ற காரணத்திற்காக அதிக மருந்துகளை பெற்றுக்கொள்வது என்று நோயாளியே இந்நிலைக்குப் பெரும்பாலும் குற்றம் சாட்டப்படுகிறார்.

ஆனால் இதற்கு உண்மையான காரணம் நோயாளி கிடையாது. மருந்துகளை விநியோகிக்கும் மருத்துவமனைகளுக்கும் மருந்துக் கம்பெனிகளுக்கும் உள்ள வியாபாரத் தொடர்பே இதற்குக் காரணமாகும் என்றார் இத்ரிஸ்.

சென்ற வருடத்தில் மட்டும் சுகாதார அமைச்சு மவெ. 1.6 பில்லியனை நாட்டில் உள்ள 135 மருத்துவமனைகளின் மருந்துத் தேவைக்காக செலவிட்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டைவிட 15% அதிகமாகும்.

ஒவ்வொரு முறையும் பினாங்கு பொது மருத்துவமனைக்குச் செல்லும்பொழுது புதிய மருந்துகளை கொடுப்பதாகவும் அவருக்குப் பை நிறைய மருந்துகள் குவிந்து கிடப்பதாகவும் ஒருவர் புகார் அளித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள தனியார் மருத்துவமனையின் மீது ஒருவர் புகார் கொடுத்திருந்தார். இருமல் மற்றும் தொண்டை வலிக்கு மருந்து வாங்கச் சென்றபொழுது அளவுக்கு அதிகமான பாரசெட்டமோல், மிகவும் வீரியமான இருமல் மருந்து மற்றும் என்டிபையோட்டிக்கை கொடுத்து அவருடைய மருத்துவக் கட்டணத்தை அளவுக்கு அதிகமான உயர்த்தியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

நோயாளியின் தேவைக்கு அதிகமான மருந்துகளைக் கொடுப்பதைப் பெரும்பாலான மருத்துவமனைகள் செய்து வருகின்றன. இவ்வாறு செய்து நோயாளிகளுக்கு கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்று இத்ரிஸ் கூறினார்.

இதற்கு முதலில் நோயாளியின் நோய் முழுமையாக சரியாகக் கண்டறியப்பட வேண்டும். சில சமயங்களில் மருந்தைவிட நோயாளிக்கு ஓய்வு, உடற்பயிற்சி, போதிய தூக்கம், உணவுப் பழக்கத்தில் சில மாறுதல்கள் போன்றவையே நோயைக் குணப்படுத்த போதுமானவையாக இருக்கும்.

மருந்துக் கம்பெனிகளின் ஆதிக்கத்தால் மருத்துமவனைகள் இலாபம் பார்க்கும் பொருட்டு நிறைய மருந்துகளையும் புதிய புதிய மருந்துகளையும் வாங்கி பின்பு அவற்றைத் தேவைக்கு மேற்பட்டு நோயாளிகளுக்குப் பரிந்துரைத்து இலாபம் சம்பாதிக்க முயல்கின்றன. இப்படி மருந்துக் கம்பெனிகளின் அளவுக்கு மீறிய மூக்கை நுழைக்கும் போக்குக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார் இத்ரிஸ்.

எந்தெந்த மருந்துகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவை என்பதை அரசாங்கம் மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். தேவைப்படாத மருந்துகளை நோயாளிகள் உட்கொள்ளும்பொழுது அவர்கள் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக நேரிடலாம். சில சமயங்களில் இறப்பு கூட நிகழலாம்.

ஆகையால் நாட்டு மக்களின் சுகாதாரத்தைப் பேணும் பொருட்டு அளவுக்கு அதிகமான மருந்துகளை பரிந்துரை செய்வது நிறுத்தப்பட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

Wednesday, September 21, 2011

பிபியின் நாச வேலை

கடந்த ஆண்டு (2010) ஏப்ரல் மாதம் 20ம் தேதி மெக்ஸிகோ வளைகுடாவில் பிபி எரிசக்தி நிறுவனத்தின் ஆழ்கடல் துளை இயந்திரம், எண்ணெய் கிணறு ஏதாவது கிடைக்கிறதா என்பதற்காகத் துளையிடும்பொழுது, கடலுக்கு அடியில் உள்ள எண்ணெய்க் கிணறு ஒன்று வெடித்துச் சிதறியது. உள்ளே இருந்த கச்சா எண்ணெய் பீய்ச்சி அடிக்கத் தொடங்கிவிட்டது. ஆழ்கடலில் நடந்த இந்த விபரீதத்தால் கடலெல்லாம் பிசுபிசுவென்று கச்சா எண்ணெய்.


நாளொன்றுக்கு 10 லட்சம் கேலன்கள் கச்சா எண்ணெய் அந்தக் கிணற்றிலிருந்து கடலில் கலந்துகொண்டிருக்கிறது. கடல் மட்டத்திற்கு 1500 மீட்டர் கீழே வெடித்துச் சிதறியிருக்கும் அந்த எண்ணெய்க் கிணற்றிலிருந்து கலந்து கொண்டிருக்கின்றது. கச்சா எண்ணெய் கடல் மீது படர்ந்து, கரை நோக்கி நகர்ந்து, ஒரு கச்சா எண்ணெய்க் கம்பளமே விரிந்துவிட்டிருக்கிறது.


இவ்வளவு சம்பவத்திற்கும் காரணமாக இருக்கும் உலகத்தின் 4வது பெரிய நிறுவனமான பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் (BP) கொடூர நடவடிக்கைகள் அம்பலத்திற்கு வந்துள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்பது பிபி நிறுவனத்திற்கு ஒன்றும் தெரியாத விஷயமல்ல. எண்ணெய் தோண்டுவதற்கு மட்டுமே தன்னுடைய பணத்தைச் செலவு செய்யும் பிபி, எண்ணெய் கசிவைத் தடுப்பதற்கோ, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கோ பணத்தை இது வரைக்கும் செலவு செய்ததில்லை. ஒவ்வொரு நாளும் கடல் நீரை மாசுபடுத்திக் கொண்டிருக்கும்.

எண்ணெய்க் கசிவை நிறுத்துவதற்கு வழி கோளாமல், தன்னுடைய நல்ல பெயரை தற்காத்துக்
கொள்வதற்காக மட்டும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடங்களில் செத்துக்கிடக்கும் உயிரினங்களைப் படம் பிடிக்கச் செல்லும் பத்திரிகையாளர்களை அமெரிக்க தேசிய காவலர்கள் தடுத்து நிறுத்துகிறார்கள்.

கச்சா எண்ணெய் கடலில் கலந்து வரும் வேகம் உண்மையிலேயே கவலை அளிக்கக்கூடியது. இந்தக் கழிவு ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்லும் அபாயமிருக்கிறது. எண்ணெய் நீருடன் கலக்கும்பொழுது அது வேதிய மாற்றத்திற்கு உட்பட்டு பிசுபிசுப்பான நிலையை அடைந்துவிடுகிறது. கடலில் கலந்துவிடும் எண்ணெயினால் மீன் வளங்களும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் பெருமளவிற்குப் பாதிக்கப்படுகின்றன.



எண்ணெய் கசிவு தொடங்கி 40 நாட்களில், வனவிலங்குத் துறை அதிகாரிகள் அமெரிக்க வளைகுடா கடற்பகுதிகளிலிருந்து பறவைகள், ஆமைகள் மற்றும் பல்வேறு பாலூட்டிகளின் சடலங்களைக் கைப்பற்றியுள்ளனர். பிபி அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய்க் கம்பெனியாகும். இரு சாராரும் ஒருவரை ஒருவர் எதிர்பார்த்து இருப்பதால் பிபிக்கு எதிர்காலம் பிரகாசமானதாகவே இருக்கிறது, பிபி மிகப்பெரிய சுற்றுச்சூழல் தூய்மைக்கேட்டுக்கு வித்திட்டு இருந்தாலும் கூட அமெரிக்க அரசாங்கம் பிபி நிறுவனத்தை தற்காத்தே தீரும்.

இவையெல்லாவற்றிற்கும் மேலாக, கச்சா எண்ணெய் உற்பத்தித் துறையே சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஒன்றாகும். தற்போது நிகழ்ந்து வரும் மிகவும் மோசமான சீதோஷ்ண நிலை மாறுதல்களுக்கும் எண்ணெய் நிறுவனங்களும் முக்கிய காரணமாகும்.

எத்தனை உறிஞ்சினாலும் தீராத நம் எண்ணெய் தாகம்தான் இத்தனை அவலங்களுக்கும் அடிப்படை. இயற்கையை நாங்கள் நன்றாக அறிந்துகொண்டுவிட்டோம் என்ற ஆணவம். இனி அதை இஷ்டத்திற்கு உபயோகித்துக்கொள்ள வேண்டியதுதான் என்ற பேராசை. ஆனால் இயற்கையோ நம்முடைய அறிவைப் புரட்டிப்போட்டு சிரித்துக்
கொண்டிருக்கிறது.

Tuesday, August 16, 2011

உருகும் பனிப்பாறைகள் அபாயத்தில் மனித இனம்

மிகப் பெரிய காரியத்தை சாதித்து முடித்தவுடன் இமாலய வெற்றி என்றெல்லாம் கொண்டாடுவோம். அந்தளவுக்கு இமலாயத்தின் பிரமாண்டம் நமக்குத் தெரியும். ஆனால் இப்பொழுது அந்த இமய மலையும் மனிதர்களின் அடாவடித்தனத்தால் கரைய ஆரம்பித்துள்ளது. இமய மலையில் முன்பைப் போன்று அல்லாது வெகு வேகமாக கரைய ஆரம்பிக்கும் இமாலய பனிக்கட்டிகள் ஆசியாவில் உள்ள மிகப் பெரிய 10 நதிகளின் மூலம் வழிந்தோடுகின்றன. உலக உஷ்ணத்தால் 2030லிருந்து 2050க்குள் 35% பனிக்கட்டிகள் உருகிவிடும். இமாயலத்திலிருந்து உருகி ஆறாய்ப் பெருக்கெடுக்கும் நீரை நம்பியே 1.3 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள். சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா நதிகளுக்கு இமயத்தில் உள்ள சுமார் 16,000 பனிக்கட்டிகள்தான் காரணம்.


இமய மலையில் அடிக்கடி ஏறி இறங்கி வரும் ஷெர்பா ஒருவர் 8000 அடிக்கு மேல் கூட
பனிக்கட்டி உருகி நீராகி இருப்பதைப் பார்த்து அதிர்ந்திருக்கிறார். இது நாள் வரைக்கும்
பனியையும் பனிக்கட்டிகளையும் பார்த்து வந்த அவருக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இப்படி அளவுக்கு அதிகமாக பனிக்கட்டிகள் உருகிக்கொண்டே இருந்தால் ஒரு காலத்தின் இமயத்திலிருந்து உருகியோடும் நீரின் அளவு கணிசமான அளவில் குறைந்துவிடும். இந்நிலை
ஏற்படுமானால் அதிகம் பாதிக்கப்படப்போவது விவசாயத்தை நம்பியிருக்கும் ஏழை வர்க்கம்தான்.

வாழ்க்கை மன்னிக்க மறுத்துவிடும்

அவ்வப்போது தொலைக்காட்சி மூலம் மற்றவர்கள் வாழ்க்கையில் நான் நுழைந்து கொண்டு இருக்கிறேன். என் வாழ்க்கையில் தொலைக்காட்சி நுழைந்ததா என்று யோசித்துப் பார்க்கிறேன்.
இல்லை. சிறு வயதிலிருந்தே வாழ்க்கை என்னைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது.

அதனால், தொலைக்காட்சி நம் தேசத்தில் அறிமுகமான ஆரம்ப வருடங்களில்கூட என்னைப் பெரிதாக வசீகரித்ததில்லை. வாழ்க்கையில் எதுவும் உருப்படியாக நடக்காதவர்கள்தாம்
தொலைக்காட்சியே கதி என்று கிடப்பார்கள். அதில் காணும் வேறு யார் மூலமோ தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொள்ள முற்படுவார்கள். பசுமையான மலையையோ, அழகான நீரோடையையோ பார்த்து ரசித்துவிட்டு வந்தபிறகும், அந்த அதிர்வுகள் வெகு நேரம் உங்கள்
மனதில் தங்கியிருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா?


தொலைகாட்சியின் அதிர்வுகளும் அப்படித்தான் உள்ளே இறங்கும். பார்த்த ஒவ்வொரு பிம்பத்தையும், ஒலியையும் மனம் அசைபோடும்.குடிக்காரர்கள்,கொலைகாரர்கள், போதை மருந்துக்கு அடிமையானவர்கள், மற்றவர் வாழ்க்கையைக் கெடுக்க சூழ்ச்சி செய்பவர்கள், இன்னும் யார் யார் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டுவிடக்கூடாது என்று கவனமாக இருக்க ஆசைப்படுவீர்களோ , யார் யாருடன் எந்த வித சகவாசமும் வைத்துக்கொள்ளவே கூடாது என்று தீர்மானமாக நினைக்கிறீர்களோ, அவர்களைத் தொலைக்காட்சி மூலம் உங்கள் வீட்டுக்குள் சுதந்திரமாக நுழைய அனுமதிக்கிறீர்கள்.

அவர்களால், உங்கள் வீட்டுக் குழந்தைகளின் புத்திசாலித்தனம் பெரிதளவு சிதைக்கப்படுகிறது. அவர்களின் மூளை வளர்ச்சி பெரும் அளவு தடை செய்யப்படுகிறது. தொலைக்காட்சி என்ற கண்டுபிடிப்பு அபாரமானது. ஆனால், அளவுக்கு அதிகமாக அதற்கு இடம் கொடுத்ததால், அது புத்தகங்கள் படிக்கும் வழக்கம், விளையாட்டில் ஈடுபடும் ஆர்வம் இவற்றைக் குழந்தைகளிடமிருந்து பறித்துவிட்டது. கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளை ஒரு நிலையாக உட்காரச் சொன்னால், வெகு இயல்பாக செய்கிறார்கள்.


சத்குரு ஜக்கி வாசுதேவ்

அதே நேரம், நகரத்து மாணவர்கள் உடைந்த பம்பரங்கள் போல் ஒரு புறமாகச் சாய்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுடைய உடல்நலம், விளையாட்டை மறந்து, அலட்சியப்படுத்தப்பட்டு இருக்கிறது. தொலைக்காட்சி முன் உட்கார்ந்து, யாரோ மலையேறுவதைப் பார்த்து, நீங்களே மலையேறிவிட்ட திருப்தி கொள்கிறீர்கள். யாரோ நடக்கிறார்கள். யாரோ μடுகிறார்கள்.

யாரோ நீந்துகிறார்கள். யாரோ காதலிக்கிறார்கள். உங்கள் வாழ்க்கையையே அந்த நபரின் மூலம் வாழப் பார்க்கிறீர்கள். வாழ்க்கையின் நேரடி அனுபவங்களைச் சந்திக்காமல், யாருடைய பிம்பம் மூலமாகவோ பொய்யாக வாழ்வது புத்திசாலித்தனமா? நாளைக்குத் தொலைக் காட்சித் திரையைப் பொருத்திவிட்டால், கல்லறையில் கூட உட்கார்ந்திருக்க நீங்கள் தயார். அப்படித்தானே? மக்களுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லி, அவர்களை மேம்படுத்தி சமூகக் கட்டுக்கோப்பையே மாற்றி அமைக்கக்கூடிய மிகச் சக்தி வாய்ந்த μர் ஊடகம், பயனற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே தயாரித்து வழங்கிக்கொண்டு இருப்பது எவ்வளவு அபத்தமான விஷயம். பணம் பண்ணுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நிகழ்ச்சிகளைத் தயாரிப்பவர்கள் பற்றித்தான் கவலையாக இருக்கிறது. அவர்கள் முதலில் தங்கள் ரசனையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

நிஜ வெள்ளத்தை மறந்து தொலைக்காட்சி வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினர் பொழுது போக்கு அம்சங்களே இருக்கக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், அவை மனதை அமைதிப்படுத்தி, புத்துணர்ச்சி ஊட்டுவதாக இருக்க வேண்டும். ஆனால், இன்று பெரும்பாலான தொடர்களின் உள்ளடக்கமும், தரமும் பார்ப்பவரின் புத்திசாலித்தனத்தின் மீது தொடுக்கப்படும் போராகவே இருக்கிறது. தொழில்நுட்பங்களில் மற்ற எந்தத் தலைமுறையை விடவும் நாம் முன்னணியில் இருக்கக்கூடும். ஆனால், உடல்ரீதியாக, மனரீதியாக மக்கள் தொகையில் பெரும் பகுதி மிகப் பலவீனமாகவே விளங்குகிறது.

உருப்படியாகச் செய்வதற்கு எவ்வளவோ இருக்க, பகல் நேரங்களில்கூட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டு ஜனத் தொகையில் ஒரு பெரும்பகுதி உட்கார்ந்திருந்தால், அந்த நாடு அழுகிக்கொண்டு இருக்கிறது என்று அர்த்தம். தொலைக்காட்சியோ, கைபேசியோ புதிதாக எது கிடைத்தாலும், சரியான பக்குவம் இன்றி, தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்துவிடுகின்றோம். பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல், வாழ்க்கையையே அவற்றின் மீது எழுப்ப முயற்சிக்கின்றோம்.

தவறான திசையில் வெகு தொலைவுக்குப் போய்விட்டால், விருப்பப்பட்டால்கூட நம்மால் சரி செய்ய முடியாத அளவுக்கு எல்லாம் சிடுக்காகி இருக்கும். வாழ்க்கை எல்லா சமயங்களிலும் நம்மைப் பொறுத்துக்கொள்ளாது. அது மன்னிக்க மறுத்துவிடும் நேரங்களும் உண்டு என்பதை மறக்காதீர்கள்.

நன்றி : ஆனந்த விகடன்

Sunday, August 14, 2011

பாட்டில் நீரும் பாழாகும் ஆரோக்கியமும்

கடந்த 20 ஆண்டுகளில் எல்லா விதமான நிகழ்வுகளிலும் வைபவங்களிலும் பாட்டில் நீரின் உபயோகம் நீக்கமற நிறைந்திருக்கிறது. இதற்கு முன்பு எல்லா வித நிகழ்வுகளிலும் கூஜாவில் தண்ணீர் வைக்கப்பட்டு குவளையில் பரிமாறப்பட்டது. அது ஒரு காலம்.

குழாயைத் திறந்தால் எளிதில் கொட்டும் நீரை உதாசீனம் செய்துவிட்டு மலேசியர்கள் வெறும் தண்ணீருக்காகப் பெரிய தொகையைக் கொடுக்க முன் வருவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. மலேசியர்கள் ஒவ்வொரு வருடமும் 100 மில்லியன் பாட்டில் நீர் அருந்துகிறார்கள்.

பேரங்காடிகளில் பெரிய எண்ணிக்கையில் வாங்கும் பொழுது 40 சென்னாகவும் அதே
நீரை விடுதிகளில் வாங்கிக் குடிக்கும்பொழுது மவெ. 5.00 வரைக்கும் ஒரு பாட்டில் நீரின் விலை வேறுபடுகிறது. பாட்டிலின் மூடி வர்ணத்தில் இருந்தால் அது இயற்கையான நீர் என்றும், வெள்ளை மூடி என்றால் அது கிருமி நாசினி செய்யப்பட்ட நீர் என்பதும் பெரும்பாலான பயனீட்டாளர்களுக்குத் தெரியாது.கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உடலுக்குத் தேவையான மெக்னீஸியம், பொட்டேஸியம், துத்தநாகம் போன்றவை பாட்டில் நீரில் மிக மிக சொற்ப அளவில்தான் இருக்கின்றன. இவை உணவில் பன்மடங்கு அதிகமாக இருப்பதால் உணவின் மூலமே இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். பாட்டில் பானத்தை வாங்கும்பொழுது அந்த நீருக்காக நீங்கள் கொடுக்கும் தொகை மொத்த
விலையில் 10% மட்டுமே. எஞ்சிய 90% பிளாஸ்டிக் பாட்டிலுக்காக நீங்கள் கொடுக்கும் தொகையாகும். ப ¡ ட் டி ல் நீர் தயாரிப்பு சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய கேட்டைக் கொண்டு வருவதாக இருக்கிறது. பெரும்பாலான பாட்டில்கள் இறுதியில் குப்பை கொட்டும் இடங்களில் தஞ்சமடைகின்றன.

உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் 1.5 மில்லியன் கொள்கலன் கச்சா எண்ணெய், பிளாஸ்டிக் பாட்டில்களின் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. இவற்றை வெவ்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் பெரிய தொகையில் நிறைய பணம் செலவழிக்கப்படுகிறது.

கண்ணாடிப் பொருட்கள் தயாரிப்பை விட பிளாஸ்டிக் தயாரிப்புக்கள் 100 மடங்கு அதிகமான நச்சு வாயுக்களை வெளியேற்றுகின்றன.

உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் 2.7 மில்லியன் டன் பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் பாட்டில் தயாரிப்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. பாட்டில் நீரை வாங்கிக் குடித்த பிறகு
பாட்டில்களைத் தூக்கி எறிகிறோம். இவை குப்பை மேடுகளை நிறைக்கின்றன.



இவற்றை எரிக்கும்பொழுது மிகவும் மோசமான நச்சு வாயுக்கள் வெளிப்படுகின்றன. இவை மனித மற்றும் பிராணிகள் இனத்தின் ஆரோக்கியத்திற்கு பெரிய அச்சுறுத்தலாகும். இதே பாட்டில்கள் மண்ணில் புதையுறும் பட்சத்தில் மக்கிப்போவதற்கு குறைந்தது பாட்டில் நீரும் பாழாகும் ஆரோக்கியமும் 500 வருடங்களாவது பிடிக்கும். பெரும்பாலான நீர் பாட்டில்கள் எண் 1, PET, PETE ரகத்தைச் சேர்ந்தவையாகும். இந்த குறியீடுகள் பாட்டிலின் அடிப்பாகத்தில் அச்சிடப்பட்டிருக்கும்.

பாட்டில் சூடாகும்பொழுது இந்த இரசாயனங்கள் நீருக்குள் கரைகின்றன. நம் நாட்டில் இந்த நீர் பாட்டில்கள் லாரிகளின் மூலம்தான் விநியோகிக்கப்படுகின்றன. சில சமயங்களில் இப்படி ஏற்றிச் செல்லப்படும் பாட்டில்கள் 30OC சூட்டுக்கு உள்ளாகின்றன. பிறகு கிடங்குகளில் வைக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகுதான் விற்பனைக்காகக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

வெப்ப நாடுகளில் நீர் பாட்டில்களை கார்களில் விட்டுச் செல்லும்பொழுது அவை சூடாகிப் பாட்டிலின் பிளாஸ்டிக்கில் உள்ள இரசாயனம் நீரில் கரைகிறது என்று அமெரிக்க இரசாயனக் கழகப் பிரிவின் டாக்டர் கென் ஸ்மித் கூறுகிறார்.

குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் நீரிலும் இந்த இரசாயனங்கள் கரையத்தான் செய்யும். PET ரக பாட்டிலில் உள்ள நச்சு இரசாயனங்களும் தண்ணீரில் உடனடியாகக் கரையக்கூடியவை என்று 2006ல் ஜெர்மனி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

பாட்டில்நீர் எவ்வளவு காலத்திற்கு கிடத்தி வைக்கப்படுகிறதோ அவ்வளவு நாட்களுக்கு அது நச்சுத் தன்மை உடையதாக ஆகிறது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை எவ்வளவு காலத்திற்கு உபயோகிக்கிறோமோ அந்த அளவுக்கு நீரில் கலக்கும் நச்சு இரசாயனங்களின் அளவும் அதிகமாகும். பாட்டில் நீர் பயனீட்டாளர்களுக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்கப் போவதில்லை.

மாறாக ஆரோக்கியக் கோளாறுகளையும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் உண்டாக்கும். பாட்டில் நீர் அருந்துவதை படிப்படியாகக் குறைத்துக்கொள்வது ஒன்றும் கஷ்டமான காரியமல்ல.

அது கடந்த 20 வருடங்களாகத்தான் நம்முடைய வாழ்க்கையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் பாட்டில் நீர் தடை செய்யப்பட வேண்டும். மாறாக எல்லா நிகழ்வுகளிலும் குவளைகளில் தண்ணீர் பரிமாறப்பட வேண்டும். சாதாரண குடிநீரில் சில துளி எலுமிச்சையைக் கலந்து அருந்தினாலே புத்துணர்ச்சி கிட்டும்.

Thursday, August 11, 2011

பூர்வீகக் குடிகளின் மருத்துவ மகிமைகள்

பூர்வீகக் குடிகளின் நில உரிமையைத் தற்காக்கும் பொறுப்பிலிருந்து நாம் நழுவும் பட்சத்தில், அவர்களிடையே பொதிந்திருக்கும் மருத்துவ மூலிகைகள் தொடர்பான தகவல் பொக்கிஷங்கள் நம்மை விட்டு மறைந்துபோகும். எந்த ஒரு இனமாக இருக்கட்டும். பாரம்பரியமாக அவர்கள் உடல் நலத்தைப் பேண நம்பி இருந்தது மூலிகைகளைத்தான்.

உலகத்தில் உள்ள மக்கள் தொகையில் 80% தங்களுடைய ஆரோக்கிய மேம்பாட்டுக்கு தாவரங்களையும் மூலிகைகளையும் நம்பியுள்ளனர். உலகத்தில் உள்ள சுமார் 150 மில்லியன் பூர்வீகக் குடிகளுக்கு இயற்கைதான் மருந்துக்கடை. மூலிகை தொடர்பான அவர்களுடைய அறிவும் அபாரமானவை. இயற்கையோடு இணைந்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்ததால் அனுபவ அறிவால் வழிவழியாக வந்த அருமைச் சொத்து அவர்களுடையது.


உதாரணத்திற்கு அமேசோனைச் சேர்ந்த யனோமாமி என்ற பூர்வீகக் குடிகள் woody cat's claw vine என்ற மூலிகையை பேதியைக் குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள். பைனி மரத்தின் copal tree) பட்டையை கண் தொற்று வியாதிகளைக் குணப்படுத்தப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இக்குவாடோர் மற்றும் பெருவைச் சேர்ந்த சுவார் பூர்வீகக் குடிகள் வயிற்றுப் பிரச்சனைகளுக்காக நூற்றுக்கும் குறையாத மூலிகைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

மட்சிகென்கா என்ற இன்னொரு பூர்வீகக் குடியினர் தங்களுடைய குழந்தைகளைப் பாதுகாப்பதற்காகத் தண்ணீர் குடத்தில் மூலிகைகளைப் போட்டு
வைக்கிறார்கள்.

பூமியின் ஆசனத்திலிருந்து வெளிப்படும் துர்வாடையும் நீராவியுமே பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் என்று அவர்கள் நம்புகிறார்கள். பூர்விகக் குடியினர்களிடையே ஷாமன் (shamans) என்னும் ஒருவரே மருத்துவராக செயல்படுவார்.

உலக உயிர்களுக்கும் அமானுஷ்ய சக்திகளுக்கும் இடையே தூதுவராக செயல்படுவார். மூலிகைகளின் குணப்படுத்தும் தன்மைகளை தன்வசமாக்கி வைத்தியத்திற்கு உபயோகிப்பர். அமானுஷ்ய சக்திகளின் உதவிகளோடு சிகிச்சை பெற வந்திருப்பவர்களுக்கு நோயின் மூலத்தைக் கண்டுபிடித்து அதற்கான ஆலோசனைகளையும் கேட்டறிந்து வைத்தியம்
செய்வர். மூலிகைகளின் மூலக்கூறுகளைப் பயன்படுத்தி நோயாளிகளின் நோயைக் கண்டுபிடிப்பர். "ஒய் கனாஹி" மரத்தின் துகள்களை நுகரும்பொழுது, சாபிரிப் என்ற வன தேவதைகள் உங்களைச் சூழ்ந்துகொள்ளும். படிப்படியாக அவை தங்களை உங்களுக்கு வெளிக்காட்டும்" என்கிறார் பிரேசிலைச் சேர்ந்த டாவி கோப்பேனாவா என்ற ஷாமன்.

சில மூலிகைகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவை. அவை கிராமத்தில் உள்ள எலிகளையும் பேய்களையும் விரட்டும் ஆற்றல் வாய்ந்தவை. மழை வருவதையும், வேட்டைக்குச் செல்பவர்கள் வெற்றியோடு திரும்புவதையும் அவை உறுதிப்படுத்துகின்றன என்று
லண்டனில் உள்ள மூலிகை ஆராய்ச்சியாளர் வில்லியன் மில்லிகேன் கூறுகிறார்.

சில ஷாமன்கள் மூலிகைகளின் பெயரை வேகமாகக் கூறுவதில்லை. காதில் மட்டும் கிசுகிசுக்கிறார்கள். அவை மிகவும் சக்தி வாய்ந்த மூலிகைகளாம். வழிவழியாகக் கொண்டு வரப்படும் ஷாமன் பாரம்பரியங்கள் இவை.

பூர்வீகக் குடியினர்களின் மொழியும் இயற்கை வளம், பூகோளம், மருந்து, சீதோஷ்ண நிலை போன்றவை சார்ந்தே இருக்கின்றன. பொலிவியாவில் உள்ள கல்லவாயா என்ற மேட்டுநில விவசாயிகளின் மூலிகை அறிவு அபாரமானது. மூலிகை மற்றும் மருத்துவ குணங்கள் தொடர்பான இரகசிய மச்சாச் ஜூயாய் என்ற மொழி வைத்துள்ளனர். இது இன்கா அரசர்களின் மொழி என்று சிலர் நம்புகின்றனர். உலகில் 7,000 மொழிகளுக்கும் மேலாக இருந்தன.

இவற்றில் 4,000 மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. "ஒவ்வொரு மொழியும் கலாச்சாரமும் ஒரு சமுதாயத்தின் கலாச்சாரத்தை வளர்ச்சியை பெருமைகளை கோடிட்டுக் காட்டுபவை ஆகும். ஆகையால் ஒரு மொழி அழியும்பொழுது, வாழ்க்கை முறை, பிரச்னைகளுக்கான தீர்வுகள் எல்லோமே சேர்த்து அழிகின்றன என்கிறார் மொழி ஆய்வாளர் டேனியல் எவரட்.

பூர்வீகக் குடிகளின் புண்ணியத்தால் நமக்கு நிறைய மூலிகைகளின் மருத்துவ குணங்கள் தெரிய வந்த பயன்பாட்டில் உள்ளன. தெற்கு அமெரிக்க இந்தியர்களால் நஞ்சாக பயன்படுத்தப்பட்ட சில மூலிகை வகைகள் இப்பொழுது மேலை நாட்டு மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உதாரணத்திற்கு, குராரே (curare) என்ற மூலிகைச் செடி. இந்த மூலிகைகளை அம்புகளின் நுணியில் பொருத்தி மிருகங்களின் மீது பாய்ச்சி அவற்றைச் செயலிழக்கச் செய்வர்.

அதே மூலிகையை, நவீன மருத்துவத்தில் தசைகளை இலகுவாக்கும் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் திறந்த இருதய அறுவைச் சிகிச்சை சாத்தியமாகிறது. பூர்வீகக் குடியினரின் மருத்துவ அணுகுமுறையும் வியக்க வைக்கிறது. நோயற்ற வாழ்க்கை மட்டும் ஆரோக்கியம் என்று அவர்கள் நினைத்துவிடவில்லை.

மனோ நலத்தையும் ஆன்மீக நலத்தையும் இணைத்து ஒருவரின் ஒட்டுமொத்த நலத்தைக் கணிக்கிறார்கள். மனிதன் ஒரு தனித்தீவு கிடையாது.

ஆரோக்கியமான மனித உறவுகள் மற்றும் இயற்கையோடு சுமூகமான தொடர்பும் முக்கியம். நவீன மருத்துவம் இந்த அணுகுமுறையைப் பின்பற்றுவதில்லை. ஒவ்வொருவரையும் ஒரு தனி அமைப்பாகவே அது பார்க்கிறது. இப்பொழுது இந்த உண்மையை நாம் உணர ஆரம்பித்துவிட்டோம்.

பித்தப்பை அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்களின் படுக்கைக்கு வெளியே இயற்கைக் காட்சிகள் இருக்குமாறு அமைப்பு இருந்தபொழுது அவர்களுக்கு மிகவும் குறைவான அளவு வலி நிவாரண மருந்துகளே தேவைப்பட்டன என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

போர்னியோ காடுகளில் உள்ள பின்தாங்கோர் மரம் ஒரு விஷேசமான இரசாயனத்தை உற்பத்தி செய்கிறது. எச்.ஐ.வி. வைரஸ் பெருகுவதை இந்த இரசாயனம் கட்டுப்படுத்தும் என்பதால்
இப்பொழுது இந்த மரங்களுக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பவளப்பாறைகளும் மருந்து மூலங்களாக இருக்கின்றன. புற்றுநோய், மூட்டு வலி, இருதய நோய் போன்றவற்றுக்கு இதிலிருந்து மருந்து தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

மேலை நாடுகள் காடுகளின் மருத்துவ மகத்துவத்தைக் கண்டுபிடிக்க ஆரம்பித்தவுடன், காடுகளையும் பவளப்பாறைகளையும் சிறிது சிறிதாக சுரண்ட ஆரம்பித்துவிட்டன. இதனால் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகளும் அருக ஆரம்பித்துவிட்டன. மூலிகைகளை அளவுக்கு அதிகமாக அறுவடை செய்வதால் 50,000க்கும் மேற்பட்ட மருத்துவ மூலிகைகள் அழியும் விளிம்பில் இருப்பதாக அனைத்துலக மூலிகை பாதுகாப்புக் கழகம் கூறுகிறது.

இப்படி அழியும் மூலிகைகளைப் பாதுகாக்க வேண்டுமானால் முதலில் பூர்வீகக் குடியினரின் நில உரிமையைப் பாதுகாக்க வேண்டும். குழந்தைப் பருவத்தில் எனக்குக் கட்டை விரலில் மரு உண்டாகும். ஒரு பிரபலமான கண் மருத்துவரான என் தாத்தா இதற்கு எப்படி மருத்துவம் பார்ப்பார் தெரியுமா? ஒரு ஆப்பிளை இரண்டாக வெட்டுவார்.

பாதி ஆப்பிளைக் கொண்டு மருவைத் தடவுவார். இன்னொரு பாதியை எங்கள் வீட்டுத் தோட்டத்தில் சூரிய ஒளி படும் இடத்தில் புதைத்து வைப்பார். மரு μரிரு தினங்களிலேயே மறைந்து போகும். இயற்கையோடு இணைந்து எதற்கும் தீர்வு காண முயலும்பொழுது அது நமக்கு வேண்டிய தீர்வை அளிக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மோர்பைனைவிட 200 மடங்கு அதிகமான சக்தி வாய்ந்த வலி நிவாரணியை இக்குவாடோர் தவளைகளிலிருந்து பெற முடியும் என்றால், நம்முடைய மலைக்காடுகளில் நமக்கு இதுவரை தெரியாத இன்னும் நிறைய அதிசயங்கள் பொதிந்து கிடக்கத்தான் செய்யும். பூர்வீகக் குடியினரின் மொழிகளில் எல்லாம் இந்தத் தகவல்கள் எல்லாம் பொதிந்து கிடக்கின்றன என்பதே உண்மை.

உங்களைக் கொல்ல கால் தேக்கரண்டி பூச்சிக்கொல்லியே போதுமானது - கார்போபியூரானை தடை செய்யுங்கள்!

விவசாய அமைச்சு உடனடியாக கார்போபியூரான் என்ற பூச்சிக்கொல்லியைத் தடை செய்ய வேண்டும். இந்த வருட ஆரம்பத்தில், கெடா, பெண்டாங்கைச் சேர்ந்த 5 விவசாயிகளின் 18 மாடுகள் கார்போபியூரான் நச்சுத்தன்மைக்கு உள்ளாகி செத்துப்போன காரணத்தால் அவர்கள் மவெ. 30,000.00 இழப்பை எதிர்நோக்கியுள்ளனர். கார்போபியூரான் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட புல்லை மேய்ந்ததால் இந்த மாடுகள் செத்துப்போயின.

சோளம் வளர்க்கும் விவசாயிகள் அவற்றை பூச்சிகள் தாக்குவதைத் தடுக்கும் பொருட்டு சோளச்செடியின் முளைகளில் கார்போபியூரான் சிற்றுருண்டைகளை வைக்கின்றனர்.

இதேப்போன்று குமட்டி வளர்ப்பவர்களும் அவற்றைப் பூச்சிகள் தாக்காமல் இருக்கும் பொருட்டு மண்ணில் கார்போபியூரானைப் இடுகின்றனர். கார்போபியூரான் அதிக அளவு நச்சுத்தன்மை வாய்ந்த காரணத்தால் அதை கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் 2008ல் தடை செய்தது.

ஆகக் கடைசியாக அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிர்வாகமும் கார்போபியூரான் உபயோகத்தைத் தடை செய்துள்ளது. கார்போபியூரானை பியூராடான் (Furadan) என்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள். உணவு சட்டம் 1985ன்படி கார்போபியூரான் அரிசி, சோளம், மிளகு (கருப்பு, வெள்ளை), மாங்காய், வாழைப்பழம், கரும்பு மற்றும் கத்திரிக்காய் பயிர் வளர்ப்பில் பயன்படுத்துவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. பயிர்களுக்குப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளில் கார்போபியூரான்தான் அதிக அளவு நச்சுத்தன்மை கொண்டது. ஒருவரைக் கொல்வதற்கு வெறும் கால் தேக்கரண்டி கார்போபியூரான் போதுமானது.

இந்த நச்சு நரம்பு மண்டலத்தைத் தூண்டி, குமட்டல், தலை சுற்றல், குழப்பம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. அளவு அதிகமானால் சுவாசக் குழாய் செயலிழப்பை ஏற்படுத்தி இறப்புக்கும் இட்டுச் செல்லும். நரம்பு மண்டலம் மற்றும் இன உற்பத்தி உறுப்பில் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும். கார்போபியூரான் எச்சங்கள், சாப்பிடும் உணவிலும் குடிக்கும் நீரிலும் கலக்கும்பொழுது இந்தப் பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகின்றன.

கார்போபியூரான் சுற்றுச்சூழல் பாதிப்புக்களையும் ஏற்படுத்தும். 1967ல் கார்போபியூரான் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இலட்சக்கணக்கான பறவைகள்
மற்றும் வனவிலங்குகள் கொல்லப்பட்டுள்ளன. இந்த கார்போபியூரான் சிற்றுருண்டைகளைக் குருவிகள் தீனி என்று நினைத்து அவற்றைத் தின்று மடிகின்றன. செத்துப்போன
பறவைகளை இதர மிருகங்கள் தின்னும்பொழுது அவையும் சாகின்றன. இந்த கார்போபியூரான் மீன் இனத்தையும் நச்சுக்குள்ளாக்கி வருகிறது.

அமெரிக்காவில் வஞ்சன மீன் இனம் குறைந்து போனதற்கு இந்த கார்போபியூரான்தான் காரணம். கென்யாவில் உள்ள ஆப்பிரிக்க சிங்கங்களைக் கொல்வதற்கு கார்போபியூரானைப் பயன்படுத்துவதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. கார்போபியூரானின் நச்சுத்தன்மை காரணமாக மலேசியாவில் இந்த நச்சு பூச்சிக்கொல்லி தடை செய்யப்பட வேண்டும். கார்போபியூரானால் விவசாயிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புக்களை இதன் மூலம் பெரும் அளவில் குறைக்க முடியும்.

உருகும் பனிப்பாறைகள் அபாயத்தில் மனித இனம்

மிகப் பெரிய காரியத்தை சாதித்து முடித்தவுடன் இமாலய வெற்றி
என்றெல்லாம் கொண்டாடுவோம். அந்தளவுக்கு இமலாயத்தின் பிரமாண்டம்
நமக்குத் தெரியும். ஆனால் இப்பொழுது அந்த இமய மலையும் மனிதர்களின் அடாவடித்தனத்தால் கரைய ஆரம்பித்துள்ளது. இமய மலையில் முன்பைப் போன்று அல்லாது
வெகு வேகமாக கரைய ஆரம்பிக்கும் இமாலய பனிக்கட்டிகள் ஆசியாவில் உள்ள மிகப் பெரிய
10 நதிகளின் மூலம் வழிந்தோடுகின்றன.

உலக உஷ்ணத்தால் 2030லிருந்து 2050க்குள் 35% பனிக்கட்டிகள் உருகிவிடும். இமாயலத்திலிருந்து உருகி ஆறாய்ப்
பெருக்கெடுக்கும் நீரை நம்பியே 1.3 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள்.

சிந்து, கங்கை,பிரம்மபுத்ரா நதிகளுக்கு இமயத்தில் உள்ள சுமார் 16,000 பனிக்கட்டிகள்தான் காரணம்.

இமய மலையில் அடிக்கடி ஏறி இறங்கி வரும் ஷெர்பா ஒருவர் 8000 அடிக்கு மேல் கூட
பனிக்கட்டி உருகி நீராகி இருப்பதைப் பார்த்து அதிர்ந்திருக்கிறார். இது நாள் வரைக்கும்
பனியையும் பனிக்கட்டிகளையும் பார்த்து வந்த அவருக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

இப்படி அளவுக்கு அதிகமாக பனிக்கட்டிகள் உருகிக்கொண்டே இருந்தால் ஒரு காலத்தின் இமயத்திலிருந்து உருகியோடும் நீரின் அளவு கணிசமான அளவில் குறைந்துவிடும். இந்நிலை
ஏற்படுமானால் அதிகம் பாதிக்கப்படப்போவது விவசாயத்தை
நம்பியிருக்கும் ஏழை வர்க்கம்தான்.

Wednesday, July 27, 2011

நச்சு இரசாயனங்கள் அற்ற இயற்கை விவசாயத்தை நோக்கிச் செல்வோம் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

நவீன விவசாய முறையில் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளும் நோய்களும் பெருகிவிட்ட காரணத்தால் அதனைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காகவும் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டும், நிறைய இரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நவீன விவசாய முறையில் பயிர்களுக்கு ஏற்படும் நோய்களும் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளும் குறைந்துபோவதற்கு எந்த வித சாத்தியக்கூறுகளும் தென்படாத நிலையில், இந்தப் பிரச்னையிலிருந்து நம்மை விடுவிக்கும் ஒரு நீடித்த நிலையான விவசாய முறையை நாம் நாட வேண்டிய அவசியம் உண்டாகிவிட்டது. அதற்கான மாற்று நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில், நம்முடைய இயற்றை வளங்கள் அழிந்து சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு மட்டுமல்லாமல் மனித ஆரோக்கியத்துக்கே கேடாக இது முடியும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

பூச்சிக்கொல்லி என்பது ஒரு நஞ்சாகும். அது சுற்றுச்சூலுக்கு மட்டுமல்லாமல் மனித ஆரோக்கியத்திற்குப் பல விதமான கேடுகளை உண்டாக்குகிறது. பயிர்களுக்குத் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள், பயிர்களை உட்கொள்ளும் பட்சத்தில் நம்முடைய உடலுக்குள் சேமித்து வைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு வருடமும் 20,000லிருந்து 40,000 பேர் வரைக்கும் பூச்சிக்கொல்லி நச்சத்தன்மையால் இறந்து போவதாக ஐக்கிய நாட்டு சபையின் பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைக் குழு கூறுகிறது. பூச்சிக்கொல்லிகளில் உள்ள 426 சேர்வைகளில் 164 சேர்வைகள் புற்றுநோய், மரபணுக்கோளாறுகள், மலட்டுத்தன்மை மற்றும் பிறப்புக் கோளாறுகள் போன்ற இன விருத்தி பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.

நெற்பயிரை தாக்கும் நத்தைகளிலிருந்து வளத்தை பாதுகாப்பதற்கான பாரம்பரிய வழிமுறையை, இந்திய மருத்துவர் இராமு விளக்கமளிக்கிறார்.

பூச்சிக்கொல்லிகள், பயிர்களை நாசப்படுத்தும் பூச்சிகளைக் கொல்லுவதற்காகவே பயன்படுத்தப்பட்டாலும் இவை சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்தே கொன்றுவிடுகின்றன. பயிர்களுக்குத் தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகள் விவசாயிகளையும் சேர்த்தே கொன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் நிறைய நடந்துள்ளன. மலேசியாவில் உள்ள ஆறுகளில் பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் நிறைய இருப்பதாகவும், இவற்றில் சில தசாப்தங்களுக்கு முன்பே தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் உள்ள விளை நிலங்களில் 77% மேலான நிலங்கள் செம்பனை, ரப்பர், கொக்கொ, அன்னாசி, மிளகு போன்ற விளைச்சலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. எஞ்சியுள்ள நிலங்களில்தான் நெல், காய்கறிகள், பழங்கள் நடப்படுகின்றன.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வில், விவசாயிகள் தங்களுடைய பயிர்களில் ஒரே பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தாமல், வெவ்வேறு விதமான தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளை கலந்து அவற்றின் வீரியத்தை அதிகரித்துப் பயிர்களுக்குத் தெளிக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

பயனீட்டாளர்களுக்கு நஞ்சில்லாத காய்கறிகள் போய்ச் சேர வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பல காலமாகப் போராடி வருகிறது. அந்த வகையில் பூச்சிக்கொல்லிகளின் துணை அல்லாமல் இயற்கையான முறையில் பயிர்களை விளைவிக்கும் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருக்கும், இந்தியாவின் நீடித்த விவசாய மையத்தின் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜி.வி.ராமு அவர்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்கு வருகை புரிந்தார். இவர் குழுவினரின் உழைப்பால் ஆந்திராவில் உள்ள ஓரிரு கிராமங்கள் அறவே பூச்சிக்கொல்லி இல்லாமல் விவசாயம் செய்கின்றன. இயற்கை முறை செலவுகளைக் குறைத்த அதே வேளையில் உற்பத்தியையும் பெருக்கியுள்ளது என்கிறார் டாக்டர் ராமு. பூச்சிக்கொல்லியற்ற வளர்ப்பு முறையை இப்பொழுது ஆந்திராவில் 1.5 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பில் மேற்கொள்கிறார்கள். இப்பொழுது இந்த பூச்சிக்கொல்லியற்ற முறையை இந்தியா முழுக்க 159 மாவட்டங்களில் மேற்கொள்கிறார்கள்.

டாக்டர் ராமு மலேசியாவில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கள், விவசாய இலாக்காக்களின் அதிகாரிகளோடு கலந்துரையாடல்களை மேற்கொண்டு பூச்சிக்கொல்லியற்ற மாற்று வழிகளைப் பற்றி எடுத்துரைத்தார். மலேசியாவில் செம்பனை, ரப்பர் மற்றும் நெல் வளர்ப்பில் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பூச்சித் தொல்லையிலிருந்து விடுபட விவசாயிகள் பாதுகாப்பான மாற்று வழிகளைத் தெரிந்து வைத்திருக்கவில்லை.

பூச்சிக்கொல்லியற்ற இயற்கையான பயிர் பாதுகாப்பு முறைகளை மலேசிய விவசாயிகள் கற்றுக்கொள்ள வேண்டும். பூச்சிகளின் வாழ்க்கை வட்டம், பயிர் நோய்கள், பூச்சி தாக்கும் காலம் போன்றவற்றைப் பற்றிய ஒரு முழுமையான அறிவை விவசாயிகள் பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல், எப்படி உள்நாட்டிலேயே கிடைக்கும் தாவரங்களைக் கொண்டு பூச்சி விரட்டிகளைத் தயாரிப்பது என்பதைக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

செம்பனை, ரப்பர் பயிர்கள் நிறைய கழிவுகளை உற்பத்தி செய்கின்றன. நெல்வயலிலும் நிறைய வைக்கோல்கள் எரிக்கப்படுகின்றன. இப்படிச் செய்வதைத் தவிர்த்து இவற்றையெல்லாம் எருவாக மாற்றி இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்க முடியும்.

ஆக, மலேசியர்களின் நலன் காக்கும் பொருட்டு, பூச்சிக்கொல்லியற்ற இரசாயன உரங்கள் அற்ற இயற்கை விவசாய முறையினை விவசாயிகள் கற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மலேசிய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

Monday, June 20, 2011

பள்ளிக்கூடங்களில் சாதூரியமாக ஊடுருவுகின்றன மதுக் கம்பெனிகள் மாணவர்களை மதுவின் பாதிப்பிலிருந்து காப்பாற்றுங்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

கல்வி ஊக்குவிப்பு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நடவடிக்கைள் என்ற பெயரில் மது பான நிறுவனங்கள் மிகவும் சாதுரியமாக பள்ளிக்கூடங்களில் நுழைவது தடுக்கப்பட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்..

கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதற்கு உதவுவதாகக் கூறி நுழையும் மதுபான நிறுவனங்கள் மாணவர்களின் மனதில் தங்கள் மதுபான உற்பத்தியை மிகவும் இலகுவான முறையில் பதிய வைத்து விடுகின்றன என்றார் இத்ரிஸ்.

பள்ளிக்கூடங்களில் மிகவும் சாதூரியமான முறையில் நுழைந்து சிறார்களின் சிந்தனையை ஆக்கிரமிக்கும் யுக்திகளை கார்ஸ்பெக் மற்றும் கின்னஸ் மதுபான நிறுவனங்கள் நன்றாகவே கற்று வைத்திருக்கின்றன.

கார்ல்ஸ்பெர்க் மலேசியாவின் அகப்பக்கத்தை இணையத்தில் மேற்பார்வையிட்டபொழுது அதில் சிறார்கள் பச்சை வர்ண கார்ல்பெர்க் பையைப் பிடித்துக்கொண்டு புன்னகை பூத்த முகத்துடன் நின்றுகொண்டிருந்தார்கள். சென்ற வருட டிசம்பர் மாதத்தில் கார்ஸ்பெர்க் நிறுவனத்தின் ஏற்பாட்டில் தமிழ்ப்பள்ளிக்கூட மாணவர்கள் மேற்கொண்ட சுற்றுலாவில் பிடிக்கப்பட்ட படமே இது. இந்த மாதிரியான நிகழ்வுகளின் மூலம் மது அருந்துவது ஏற்புடையது என்ற எண்ணம் மாணவர்களின் மனதில் அவர்களை அறியாமலேயே பதிந்துவிடுகிறது என்றார் இத்ரிஸ்.

வடக்கில் உள்ள தமிழ்ப்பள்ளிக்கூடம் ஒன்றுக்கு தினந்தோறும் 40 பத்திரிகைகளை இலவசமாகவே வழங்குவதற்கு கார்ஸ்பெர்க் மலேசியா ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாக பத்திரிகைச் செய்தி ஒன்று கூறுகிறது. இந்தப் பள்ளிக்கூடத்தில் மாணவர்களின் ஆங்கிலத் தரத்தை உயர்த்துவதற்காகவே இந்த நடவடிக்கையாம்.

மலேசிய இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக மதுபானக் கம்பெனிகள் கோரிக்கொள்வது கேலிக்குரியது. உண்மையில் பல குடும்பத் தலைவர்களை குடிகாரர்களாக்கி குடும்பங்கள் சின்னாப்பின்னமாவதற்குக் காரணம் இந்த மதுபானக் கம்பெனிகள் தயாரிக்கும் மதுதான்.

கல்வி கற்க உதவுவதாகக் கூறி தமிழ்ப்பள்ளிக்கூடங்களோடு கை கோர்த்து தங்களுடைய மது பிரண்டை இளையோர்களிடையே பிரபலப்படுத்தும் இன்னொரு மதுபான நிறுவனம் கின்னஸ் எங்கர் ஆகும்.

மலேசிய இந்தியர்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுவதாகக் கூறி கின்னஸ் எங்கர் நிறுவனம் பள்ளிக்கூடங்களில் இலவச ஆங்கில வகுப்புக்களையும் நடத்தி வருகிறது.

எதிர்காலக் குடிகாரர்களை உருவாக்குவதற்கு இப்போதைய சிறார்களை நோக்கிக் குறி வைத்தால்தான் முடியும் என்பதை மதுபானக் கம்பெனிகள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளன. மது விளம்பரத்திற்கும் மது அருந்துபவர்களின் அதிகமான எண்ணிக்கைக்கும் இருக்கின்ற தொடர்பை மதுக்கம்பெனிகள் மறுத்தாலும் கூட உண்மை அதுதான். மது விளம்பரம் செய்யும்பொழுது ஒருவர் ஒரு மது பிரண்டிலிருந்து இன்னொரு மது பிரண்டிற்கு மாறுவாரே தவிர புதிதாக யாரையும் குடிக்கத் தூண்டுவதில்லை என்று இந்த மதுக் கம்பெனிகள் வலியுறுத்தி வருகின்றன என்றார் இத்ரிஸ்.

மது உற்பத்தியாளர்கள் குறிப்பிட்ட ஒரு இனத்தின் இளைய சமுதாயத்தைக் குறி வைத்து விளம்பரம் செய்கிறார்கள். 20களில் இருக்கும் இளைஞர்கள்தான் விரைவில் மதுவுக்கு அடிமையாகிறார்கள்.

ஆகையால் மதுக் கம்பெனிகள் தங்களுடைய வியாபாரத்தைப் பெருக்குவதற்காக பள்ளிக்கூடங்களில் தொடர்ந்து ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்கும் பொருட்டு கல்வி அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும். மதுக் கம்பெனிகளை கல்வியாளர்களும், பள்ளிக்கூடங்களும், கல்வி அமைச்சும் ஏற்றுக்கொண்டு அங்கீகாரம் வழங்கும் ஒரு நிலையில் மது ஒன்றும் அவ்வளவு ஆபத்தானது அல்ல என்ற சிந்தனையும் மனப்போக்கும் கல்வி கற்கும் மாணவர்களிடையே அவர்களை அறியாமலேயே உருவாகிவிடும். பிறகு இதுவே மதுக் கம்பெனிகள் தங்களுடைய விற்பனையை அதிகரிக்கும் ஒரு உத்தியாகிவிடும் என்றார் இத்ரிஸ்.

சமுதாயத்தில் உள்ள எல்லா சிறார்களும் பதின்மர்களும் மதுவின் பாதிப்பிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு உரிமை இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனக் கோட்பாடு கூறுகிறது. பள்ளிக்கூட நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் மதுபான நிறுவனங்கள் இந்தக் கோட்பாடுகளை மீறுகின்றனவா என்று அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும் என்று இத்ரிஸ் கூறினார்.

மது கொண்டு வரும் பாதிப்புக்கள் எண்ணிலடங்கா. உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் 2 மில்லியன் பேர் மது ஏற்படுத்தும் நோய்களால் மரணமடைகின்றனர். நாட்டில் ஏற்படும் 30% சாலை விபத்துக்களுக்கு மது அருந்திவிட்டு காரோட்டுவதே காரணம் என்று சாலை பாதுகாப்புக் கழகம் கூறுகிறது. மது அருந்துவது ஒருவரை நிதானமிழக்கச் செய்து வன்முறைப் போக்கை உருவாக்குகிறது. இது வீட்டுக் கொடுமை, சிறார் சித்ரவதை மற்றும் பல விதமான குற்றச் செயல்களுக்கு வித்திட்டுவிடுகிறது. மது அருந்துபவர்களின் தொழில் திறனும், உற்பத்தித் திறனும் குறைந்துவிடுகிறது என்றார் இத்ரிஸ்.

மதுக் கம்பெனிகள் பள்ளிக்கூடங்களில் எந்த ஒரு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து நடத்துவதற்கு அரசாங்கம் தடை விதிக்க வேண்டும். மது உற்பத்திகளுக்காக விதிக்கப்படும் வரிக்கட்டணத்தையும் உயர்த்த வேண்டும். மதுக் கம்பெனிகள் சட்டத்தை மீறும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதங்கள் விதித்து பிறகு அந்த அபராதத் தொகையை கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நிகழ்வுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

மின்சார சைக்கிள்களுக்கு கூடுதலான பாதுகாப்பு அம்சங்கள் தேவை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டால் மட்டுமே, குறிப்பிட்ட சில வகையான மின்சார சைக்கிள்கள் நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

மின்சார சைக்கிள்களுக்கு வெவ்வேறு நாடுகள், அந்தந்த நாட்டுக்கு ஏற்புடைய வகையில் சட்டங்களை வகுத்திருக்கின்றன. மணிக்கு 60 கிலோமீட்டர் வேகஅளவைக் கொண்ட மின்சார சைகக்கிள்கள் இருக்கின்றன. இவ்வளவு வேகத்தில் மின்சைக்கிளோட்டிகள் அமைதியாக பயணம் செய்யும் போது மற்ற மோட்டாரோட்டிகளால் அவர்கள் கவனிக்கப்படாமல் போய்விட நேரிடும். மேலும் நம்முடைய சாலைகளின் தன்மைக்கு அவை ஆபத்தானதாகவும் அமையக்கூடும் என இத்ரிஸ் கூறினார்.

ஐரோப்பிய யூனியன் விதிகளுக்கு ஒப்ப மின்சக்தி வழி இயங்கும் சைக்கிளின் பெடல்கள், நம் நாட்டு சூழ்நிலைக்கு மிகவும் ஏதுவாக அமைந்திருப்பதால் அதன் பாதுகாப்பு அம்சங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

40 கிலோ எடை கொண்டிருக்கும் ஒவ்வொரு மின்சைக்கிளும் 400 வாட் மின்சார மோட்டோரை கொண்டிருக்கிறது. ஓடும்போது அதன் வேகம் மணிக்கு 25 கிலோமீட்டர் வரை குறைய கூடியதாக இருக்கிறது. இப்படிபட்ட சைக்கிள்களுக்கு பதிவு, காப்புறுதி அல்லது ஓட்டநருக்கான லைசன்சும் தேவையில்லை என்றார் இத்ரிஸ்.

மின்சைக்கிள்களுக்கு பின்வரும் பாதுகாப்புகள் மிகவும் முக்கியமாகிறது.:
அ) வீடமைப்பு பகுதிகள் மற்றும் கெம்பஸ்களில் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்
ஆ) பிரத்தியேக வழிகளைக் கொண்டிருந்தால் மட்டுமே பொது சாலைகளில் அவை அனுமதிக்கப்பட வேண்டும்
இ) சாக்கிள் ஓட்டனர் தலைக்கவசம், பளபளக்கும் பாதுகாப்பு மேலாடை அணிந்திருக்க வேண்டும்
ஈ) மின் சைக்கிள்களின் பிரேக் சரியாக இயங்கும் வகையிலும், பாதுகாப்பு தரத்தைக் கொண்டிருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்தப் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் பின்பற்றப்பட்டு வந்தால், குறுகிய தூர ஓட்டத்திற்கு இது மிகவும் வசதியான மலிவான வாகனமாக அமையும். மேலும் வண்டியை நிறுத்துவதற்கு குறைந்த இடமே தேவை. சுலபமாகவும் பார்க் செய்து விடலாம். பாதுகாப்பான மின் சைக்கிள் உபயோகிதத்துக்கு, சட்டத்தைத் திருத்தி தேவையான பாதுகாப்பு அம்சங்கள் புகுத்துவது மிகவும் அவசியம். அதோடு இதர பிரிவுகளைச் சேர்ந்த சைக்கிள்கள் நமது சாலைகளில் அனுமதிக்கக்கூடாது என பி.ப.சங்க தலைவர் இத்ரிஸ் கூறினார்.

சட்ட விரோத கருத்தடை மாத்திரை விற்பனையும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களும் பெண்கள் ஆரோக்கியமான வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

கருத்தடை மாத்திரைகள் தொடர்பாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வில் அது மருந்துக்கடைகளில் மிகவும் எளிதாக கிடைக்கப்பெறுவது அம்பலமாகியுள்ளது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

இந்த கருத்தடை மாத்திரை விற்பனைகள் விஷ சட்டம் 1952ன் கீழ் வருகின்றன. கருத்தடை மாத்திரையை விற்பனை செய்பவர், வாங்குபவரின் விபரத்தை விஷ புத்தகம் என்ற பெயரிடப்பட்ட புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆனால் இப்படி பதிவு செய்யப்படாமலேயே இந்த கருத்தடை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சி தரும் விஷயமாகும். பினாங்கில் உள்ள மருந்துக்கடைகளிலும் கூலிம், கெடாவில் உள்ள மளிகைக்கடைகளிலும் இம்மாதிரியான சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. கோலாலம்பூரில் உள்ள சௌகிட் பகுதியிலும் கிராமப்புறங்களில் உள்ள மளிகைக் கடைகளிலும் கருத்தடை மாத்திரைகள் சட்டத்திற்கு விரோதமான முறையில் விற்கப்பட்டு வருவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

கருத்தடை மாத்திரைகள் விளைவிக்கும் பாதிப்புக்களை உணராத ஆயிரக்கணக்கான மலேசியப் பெண்கள் அதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

கருத்தடை மாத்திரைகளை விற்பனை செய்யும் 15 கடைகளில் சோதனையிட்ட பொழுது அவற்றில் 14 கடைகளில் விஷ புத்தகத்தில் வாங்குபவரின் பெயர் பதிவு செய்யப்படாமலேயேதான் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரே ஒரு மருந்துக்கடையில் மட்டும்தான் கருத்தடை மாத்திரையை வாங்குபவரின் பெயரைப் பதிவு செய்தார்கள். அதுவும் கூட அவர் கொடுத்த விபரங்கள் உண்மையா என்பது பரிசோதிக்கப்படவில்லை. அப்படியானால் விஷ புத்தகத்தில் தவறான தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கலாம். 14 மருந்துக் கடைகளில் 5 மருந்துக்கடைகள் மட்டுமே வாங்குபவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டு இறுதியில் மாத்திரையை விற்றன. ஓர் ஆணும் எந்த வித சிரமமும் இல்லாமல் மருந்தை வாங்க முடிந்தது என்றார் இத்ரிஸ்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மருந்துக்கடைகள் பினாங்கில் உள்ளவையாகும். அவை பள்ளிக்கூடத்திற்கு, பல்கலைக்கழகத்திற்கு, கடைகள் மற்றும் மக்கள் குடியிருக்கும் இடங்களுக்கு அருகில் இருந்தன. சில கருத்தடை மாத்திரைகளை உதிரியாகவும் விற்பனை செய்கின்றனர். அதில் மாத்திரை தொடர்பான விபரங்கள், பக்க விளைவுகள் தொடர்பான எந்த விபரங்களும் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

சில கடைகளில் மட்டுமே கருத்தடை மாத்திரையின் விலையை எழுதி வைத்திருந்தார்கள். ஒரே பிரண்டைக் கருத்தடை மாத்திரைகள் மவெ.4.80லிருந்து மவெ. 6.50 வரை விற்கப்படுகின்றன. வெவ்வேறு பிரண்டு கருத்தடை மாத்திரைகளுக்கான விலைகள் மவெ. 4.80லிருந்து மவெ.23.00 வரைக்கும் உள்ளன. சிலர் விலையைக் குறைத்து வாங்குகின்றனர்.

இந்த கருத்தடை மாத்திரைகள் எளிதில் கிடைக்கின்ற காரணத்தால் அதனை மலேசியப் பெண்கள் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன. கருத்தடை மாத்திரைகள் விளைவிக்கும் ஆபத்துக்கள் மற்றும் நீண்ட கால பாதிப்புக்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இவை மருத்துவரின் கண்காணிப்பின் கீழேயே விநியோகிக்கப்பட வேண்டும் என்றார் இத்ரிஸ்.

இந்த கருத்தடை மாத்திரைகளை அதனுடைய உண்மையான நோக்கத்தைத் தவிர்த்து பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயைத் தள்ளிப்போடுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. பரீட்சைக் காலங்களில் தங்களுடைய மாதவிடாயைத் தள்ளிப்போடுவதற்கும், சமய சம்பிரதாய நிகழ்வுகளில் தடையின்றி கலந்துகொள்வதற்காகவும் மாதவிடாயைத் தள்ளிப்போட இணையம் மூலம் ஆலோசனைக் கேட்டு வருவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. பெண்கள் இந்த மாத்திரைகளை ரமலான் மாதத்திலும் ஹாஜ் செலுத்தும் சமயத்திலும் பயன்படுத்தி வருகிறார்கள்.

கருத்தரித்த காலத்தில், இருதயக் கோளாறுகள், இரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன், இரத்த சோகை, புற்றுநோய், மூளை, குருதிக்குழாய் கோளாறுகள் போன்ற நிலையில் உள்ளவர்கள் இந்த மாத்திரையைப் பயன்படுத்தக்கூடாது.

கருத்தடை மாத்திரைகளின் மூலம் போலி ஹோர்மோன்களை உடலுக்குள் செலுத்தி சினை முட்டை வெளிப்படுவதைத் தடுப்பது உடலின் இயல்பான இயக்கத்திற்கு ஊறு விளைவிப்பதாகும். இது பெண்களுக்கு சௌகரியம், வலி, மன நிலையில் மாற்றம், மன அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்திவிடும். அதே நேரத்தில் எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் பெண்களுக்குப் பிரச்னைகளையும் ஏற்படுத்திவிடும் என்றார் இத்ரிஸ்.

கருத்தடை மாத்திரைகள் மன அழுத்தம், மார்பகக்கட்டி, மாதவிடாய் நேரத்தில் அதிக உதிரப்போக்கு, உயர் இரத்த அழுத்தம், உடலில் கொலெஸ்ட்ரோலின் அளவை அதிகரித்தல், காலில் இரத்தக் கட்டு, நெஞ்சு வலி, ஈரல் பாதிப்பு மற்றும் பக்கவாதத்திற்கான அறிகுறிகளை ஏற்படுத்திவிடும். கருத்தடை மாத்திரைகளில் உள்ள எஸ்ட்ரோஜனின் அளவே இவ்வளவு பாதிப்புக்களையும் ஏற்படுத்திவிடும்.

பெண்களுக்கான மாதவிடாய் சுற்று 27லிருந்து 29 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இதில் மாதவிடாய் அதிகபட்சமாக 7 நாட்கள் வரைக்கும் வரும். 8லிருந்து 10 நாட்களுக்கு சினை முட்டைகள் வெளிப்படும். 10லிருந்து 11 நாட்கள் மாதவிடாய் வருவதற்கான அறிகுறிகளுக்கான உடல் பாதிப்புக்கள் இருக்கும். இதையெல்லாம் கணக்கு வைத்துப் பார்க்கும்பொழுது பெண்களுக்கு வெறும் 5 நாட்கள் எந்த வலியும் வேதனையும் இல்லாத நாட்களாக இருக்கின்றன. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உடல் வலியும் மனஅழுத்தமும் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் இப்படி மாத்திரைகளை உட்கொள்வது மாதவிடாயின்போது ஏற்படும் பாதிப்புக்களை அதிகமாக்கிவிடுகின்றன.

மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பதாக வரும் உடல் நலப் பாதிப்புக்கள்

மார்பகத்தில் வலி, குமட்டல், வாந்தி, மன அழுத்தம், ஒலி மற்றும் வாசனைகளால் அதிகம் எரிச்சலுக்கு உள்ளாகுதல். இவை எல்லாம் மாதவிடாய் வருவதற்கு 5லிருந்து 11 நாட்களுக்கு முன்பதாகவே ஏற்பட்டுவிடுகின்றன. மாதவிடாய் ஆரம்பித்தவுடன் இந்த அறிகுறிகள் எல்லாம் போய்விடுகின்றன.

சினை முட்டை வெளிப்படும் சமயத்தில் ஏற்படும் வலிகள்
மாதவிடாய் ஆரம்பித்த 11லிருந்து 17வது நாளில் இந்த வலி ஏற்படுகிறது. வெள்ளைப்படுதல் மற்றும் இடுப்பு மற்றும் தொடையில் வலி ஏற்படுவதே இதற்கான அறிகுறி.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, குமட்டல், வாந்தி மற்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. அடி வயிறு, முதுகு வலி மற்றும் தொடைக்கும் வலி பரவுகிறது. கால்களில் விறைப்பு ஏற்படுகிறது. சிலருக்கு வயிற்று வலி அதிகமாகவும் உதிரப் போக்கு கட்டியாகவும் வெளிப்படும்.

விஷ சட்டம் 1952 பெண்களுக்கு எந்த விதமான பாதுகாப்பையும் வழங்கவில்லை. கருத்தடை மாத்திரைகளை எந்த பதிவும் எல்லாமல் பெண்கள் எளிதாக வாங்குவது தடை செய்யப்பட்ட மருத்துவரின் கண்காணிப்பின் கீழேயே கருத்தடை மருந்துகள் விநியோகிக்கப்பட வேண்டும். தற்போதுள்ள சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

கருத்தடை மாத்திரைகள் கொண்டு வரும் பாதிப்புக்களை எடுத்து விளக்கும் பொருட்டு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு மாற்றாக வேறு பாதுகாப்பான குறைவான உடல் நலப் பாதிப்புக்களை ஏற்படுத்தும் வழிகளைப் பரிந்துரைக்க வேண்டும்.

பெண்களில் உடல் நலனில் அக்கறை காட்டும் பொருட்டு ஆண்களும் தங்களுடைய பங்கை ஆற்ற வேண்டும். ஆணுறை, விந்து புகுதலை தவிர்க்கும் முறை (coitus interruptus) மற்றும் ஆண் குடும்பக் கட்டுப்பாடு (vasectomies) போன்ற முறைகளைப் பயன்படுத்தலாம். தாய்லாந்தில் ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வது பரவலாக வரவேற்கப்படுகிறது. 1984ல் அங்கு 164,511 ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டுள்ளனர். ஆகையால் குடும்பக் கட்டுப்பாடு என்பது பெண்களால் மட்டும் செய்துகொள்ளப்பட வேண்டியது ஒன்று அல்ல.

பெண்களுக்கான உடல் நலனும் வாழ்க்கைத் தரமும் மேம்பட ஆரோக்கியமான வழிகளை கடைபிடிக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கேட்டுக்கொண்டார்.

கால்நடை வளர்ப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் பாரம்பரிய நடைமுறைகளை அமல்படுத்தி ஏற்றம் காணுவதை மலேசிய அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும்

மலேசியாவில் உட்கொள்ளப்படும் இறைச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்ட காரணத்தால் கால்நடைகளுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. 1985ல் ஒருவர் சராசரி வருடத்திற்கு 2.4 கிலோகிராம் மாட்டிறைச்சி மட்டுமே உட்கொண்டு வந்தார். 2010ல் ஒருவர் உட்கொள்ளும் மாட்டிறைச்சி 8.4 கிலோகிராமாக உயர்ந்துள்ளது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

மலேசியாவில் உற்பத்தி செய்யப்படும் பன்றியிறைச்சி உள்நாட்டுத் தேவைக்குப் போதுமானதாக உள்ளது. அதிகமான இறைச்சித் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு மலேசியாவில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கால்நடைகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அதே வேளையில் அவற்றை உட்கொள்ளும் பயனீட்டாளர்களுக்கும் பல விதமான ஆரோக்கியக் கேடுகளை உண்டாக்குகிறது என்றார் இத்ரிஸ்.




கால்நடை வளர்ப்பில் பாரம்பரிய நடைமுறைகளும் வளங்களும் சிறிதுசிறிதாக அழிக்கப்பட்டு வருகின்றன. கால்நடைகள் சுதந்திரமாக மேய்வதற்கு இடமில்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம், சோயா ஆகியவை அதிகமாக சுத்திகரிக்கப்பட்டு கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கப்படுகின்றன. இவை கால்நடைகளுக்குப் பல விதமான நோய்களை ஏற்படுத்துகின்றன. தீவனங்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இவற்றுக்குக் கொடுக்கப்படும் அளவுக்கு அதிகமான என்டிபையோட்டிக்குகள் நோய் எதிர்ப்புச் சக்தியையும் குறைத்துவிடுகின்றன. இவ்வாறான பாதிப்புக்களுக்கு உள்ளான கால்நடைகள் சினை ஆவது குறைந்து போகிறது. இவற்றுக்கும் எளிதில் கருச்சிதைவும் ஆகின்றன. வெளிநாட்டிலிருந்து இன்னும் குறைவான விலைக்கு இறைச்சிகள் கிடைக்கின்ற காரணத்தால் உள்நாட்டு கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களுடைய கால்நடைகளுக்கு நியாயமான விலை கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள் என்றார் இத்ரிஸ்.

இந்தியா, ஆந்திராவில் உள்ள இரு கால்நடை நிபுணர்கள் மலேசியாவில் உள்ள பலதரப்பட்ட கால்நடைப் பண்ணைகளுக்கு வருகை அளித்து, அந்தப் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைக் களைவதற்கான வழிமுறைகளையும் கால்நடைகளுக்கான மாற்று மருத்துவத்தையும் பரிந்துரைத்து வருகிறார்கள்.

ஆந்திரா என்ற அமைப்பைச் சேர்ந்த டாக்டர் சகாரி ராமதாஸ் கால்நடை மருத்துவர் ஆவார். ஆந்திரா அமைப்பின் இயக்குநராக இவர் இருக்கிறார். திரு சன்யாசி ராவ் மூலிகை ஆராய்ச்சியாளர். ஆந்திரா அமைப்பின் இயற்கை வள ஆய்வு வேலைகளில் இவர் இருக்கிறார். ஒதுக்கப்பட்டவர்கள், நிலமில்லாதவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள், குறிப்பாக இதில் உள்ள பெண்களோடு இணைந்து வேலை செய்து நிலைத்த நீடித்த விவசாயத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது இந்த அமைப்பு.

கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய், சீரணக் கோளாறுகள், சுவாசக்குழாய், இன உற்பத்தி, சிறுநீர் சார்ந்த இயக்கம், சரும நோய்கள் போன்ற பலதரப்பட்ட கால்நடைகளுக்கு ஏற்படும் ஆரோக்கியக் கோளாறுகளுக்கு பாரம்பரிய முறையில் நிவாரணம் அளித்து நூறு விழுக்காடு வெற்றியினைக் கண்டிருக்கும் இவர்களுடைய பாரம்பரிய கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடை மருத்துவ வழிமுறைகளை இங்குள்ள கால்நடை வளர்ப்பாளர்களோடு பகிர்ந்துகொள்ள வந்திருக்கிறார்கள். எந்த வித இரசாயனக் கலப்பு இல்லாத மூலிகை சார்ந்த இவர்களுடைய அணுகுமுறைகள் ஆரோக்கியமான கால்நடை வளர்ப்புக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலைப் பேணி, நீடித்த நிலையான விவசாயத்திற்கும் உதவுகிறது.

மலேசியாவில் உள்ள விவசாயிகளும் கால்நடை வளர்ப்பாளர்களும் ஆந்திரா அமைப்பின் தகவல்களைப் பெற்றுக்கொண்டு இரசாயனம் அல்லாத, நீடித்த விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு முறையைக் கற்றுக்கொண்டு பயன் பெற வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

ஆஸ்ட்ரவின் ஆதிக்கத்தினால் தொலைகாட்சி ரசிகர்களுக்கு இழப்பு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் சாடல்

அரசாங்கம் ஆஸ்ட்ரோவுக்கு கொடுத்துள்ள அதிசலுகைகளினால், மலேசியர்கள் நெடுங்காலமாகவே அதிகமாக செலவு செய்து வந்திருக்கின்றனர். இதனால் மலேசிய தொலைகாட்சி ரசிகர்கள் ஏமாற்றப்பட்டிருப்பதோடு மற்ற நிறுவனங்களின் சேவைகளும் தடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு தொலைகாட்சி நிறுவனத்துக்கு மட்டும் 20 வருட சிறப்பு லைசன்ஸ் வழங்கியிருப்பது மலேசியாவில் மட்டுமே காணப்படும் நிலையாகும் என பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கூறினார்.

மற்ற நாடுகளில் தொலைகாட்சி ரசிகர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தொலைகாட்சி அலைவரிசைகள் கிடைக்கின்றன. அத்தகைய நாடுகளில்:
* இந்தியாவில் கட்டணம் செலுத்தப்படும் ஐ6 தொலைகாட்சி நடத்துநர்கள் இருக்கின்றார்கள்
* இந்தோனிசியாவில் 6
* ஆஸ்திரேலியாவில் 3;
* விலையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றோரு விஷயமாகும். இந்தியாவில் மெவ19.17க்கு 155 தொலைகாட்சி அலைவரிசைகள் கிடைக்கின்றன.

இதுவே ஆஸ்ட்ரோவுடன் ஒப்பிடும் போது மவெ64.61க்கு குடும்ப பேக்கஜ் அல்லது 3 மினி பேக்கஜ் என்று மொத்தம் 50 அலைவரிசைகளைக் கொண்டிருக்கிறது. குடும்ப பேக்கஜில் 33 அலைவரிசைகள் மட்டுமே இருக்கின்றன, அவற்றில் டிவி1லிருந்து டிவி 9 வரை இலவசமாக கொடுக்கப்படும் 6 அலைவரிசைகளும் அடக்கம்.

குடும்ப பேக்கஜில் இருக்கும் அலைவரிசைகள் குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்கள் விரும்பி பார்க்கக்கூடியவையாக இருக்கின்றது. ஆகையால் தங்களுக்கு பிடிக்காத அலைவரிசைகளுக்கு சந்தாதாரர்கள் காசு கட்டிக் கொண்டு இருக்கின்றார்கள என்று இத்ரிஸ் கூறினார்.

ஆஸ்ட்ரோ டிகாடர் வழி வரும் இந்த அலைவரிசைகள் மழை பெய்யும் போது ரசிகர்களால் பார்க்க இயலுவதில்லை. மழை பெய்யும் போது தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாமல் போகிறது என்பது ரசிகர்களின் பெரிய புகாராகும். 2008ல் மியாசாட் 2 மற்றும் மியாசாட் 3 துணைக்கோளங்கள் பாய்ச்சப்பட்ட பிறகு இந்த பிரச்னை 30விழுக்காட்டுக்கு குறைந்து விடும் என்று ஆஸ்ட்ரோ கூறியிருந்தது. ஆனால் அப்படி எதுவும் பெரிய மாற்றங்கள் இருந்ததாக தெரியவில்லை.

ஆஸ்ட்ரோ இப்பொழுது HD B என்ற புதிய டிக்கோடரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. உண்மையில் இந்த புதிய டிக்கோடருக்கு ரசிகர்கள் மாதாமாதம் கூடுதல் மவெ20 செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த புதிய டிஷ் மழைபிரச்னையைக் குறைப்பதற்கான நோக்கத்திற்கே தயாரிக்கப்பட்டது. ஆயினும் மழை காலங்களில் இன்னுமும் தெளிவான சேவையை பெற இயலாத நிலையிலே ரசிகர்கள் இருப்பதால் ஆஸ்ட்ரோ இந்த புதிய டிஷை அனைத்து சந்தாதாரர்களுக்கும் இலவசமாகவே பொறுத்தியிருக்க வேண்டும்.



தெளிவான காட்சி குறிப்பிட்ட சில அலைவரிசைகளுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் அதிகமான அலவரிசைகளுக்கு இதை அறிமுகப்படுத்தும் போது ஆஸ்ட்ரோ தனது கட்டணத்தை இன்னும் அதிகரிக்கூடும் என்று இத்ரிஸ் கூறினார்.

மேலும், தொலைகாட்சிக்கான உபகருவிகளின் சந்தையையும் ஆஸ்ட்ரோவே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இத்தகைய கருவிகள் சீரிம் மற்றும் எம்சிஎம்சி அனுமதியோடு விற்கப்பட்டால் ரசிகர்கள் அவற்றை எங்கு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். இந்தக் கருவிகளின் விற்பனையில் கூட ஆஸ்ட்ரோ ஏன் தனது ஆதிக்கத்தைச் செலுத்த வேண்டும் என்று இத்ரிஸ் கேள்வி எழுப்பினார்.

ஆஸ்ட்ரோ சந்தாதாரர்கள் அதன் சேவை பொறுத்தப்பட்ட காலத்திலிருந்து எல்லாவற்றிற்கும் பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. இதில் தாமதமான கட்டணம், மீண்டும் பொறுத்தும் கட்டணம், சேவை கட்டணம் வேறு இருக்கிறது. இது போதாது என்று ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை புதிய பேக்கஜ் என்று ரசிகர்கள் தலையில் மேலும் மேலும் பணச்சுமையை ஏற்படுத்துகிறார்கள். ஜூலை 11 2011 முதல் மீண்டும் மாற்றம் காணப்பட்ட கட்டணம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வளவு கட்டணங்களுக்குப் பிறகும் நிகழ்ச்சிகளுக்கு நடுவில் ஏகத்துக்கும் விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. இது மிகவும் எரிச்சலை ஏற்படுத்துவதாகவும் ரசிகர்களை ஏமாற்றுவதாகவும் இருக்கிறது என்று இத்ரிஸ் கூறினார்.

2017 வரை ஆஸ்ட்ரோவுக்கு 20 வருட சிறப்பு லைசன்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது. அமைச்சு வலியுறுத்தியும் கூட இந்நிறுவனம் தொடர்புத்துறை பல்நோக்கு ஊடக சட்டம் 1998க்கு மாற மறுக்கிறது.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது:

* மலேசிய தொடர்புத்துறை பல்நோக்கு ஊடக கமிஷன், ஆஸ்டரோ போன்ற வாணிக சமூகத்தினருக்கு உதவுகிறதே தவிர ஏழை மக்களுக்கு அல்ல. அவர்கள் பொதுமக்களுக்கு சாதகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

* விலையை ஏற்றுவதற்கு பதில் ஆஸ்ட்ரோ குடும்ப பேக்கஜில் உள்ள அலைவரிசைகளை மலிவான சிறு சிறு பேக்கஜுகளாக மாற்ற வேண்டும். இது பணச்சுமையைக் குறைக்கும். ஆஸ்ட்ரோ சந்தாதார்கள் எண்ணிக்கை 3 மில்லின் குடும்பங்களை எட்டியிருப்பதால், ஆஸ்ட்ரோவுக்கு இந்த விலைக்குறைப்பு பெரிய சிக்கல்களை எதுவும் ஏற்படுத்தாது.

* அரசாங்கம் புதிய தொலைகாட்சி நடத்துநர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும், அதோடு மற்ற நாடுகளைப் போன்று தொலைகாட்சி உபகருவிகளைச் சந்தையில் வாங்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

* சுலபமான போக்குவரத்துக்கு உதவும் வகையில் டிஷ் கனமில்லா பொருளிலிருந்து தயாரிக்கப்பட வேண்டும்.


எஸ்.எம். முகம்மது இத்ரிஸ்
தலைவர்