Thursday, February 12, 2009

புகைப்பதற்கு எதிரான விளம்பரங்கள்! பி.ப.சங்கம் வேண்டுகோள்!

மலேசியாவில் பிரசுரமாகும் அனைத்து மொழி தினசரி பத்திரிகைகளில், சுகாதார அமைச்சின் புகைப்பதால் ஏற்படும் நோய்களைப் பற்றிய விளம்பரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்பட வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் சுகாதார அமைச்சுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

புகைப்பதால் ஏற்படும் அபாயங்களை வர்ண புகைப்படம் வழி பொதுமக்களுக்கு அறிவுரைகளை கூறி வரும் இந்த விளம்பரங்கள் பாராட்டுக்குரியது என அதன் தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கூறினார்.
சிகரெட் புகைப்பதால், இரத்தக்கட்டு,புற்றுநோய், குறைப்பிரசவம், நுரையீரல் புற்றுநோய் மற்றும் கழுத்துப் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படும் என கூறியுள்ள சுகாதார அமைச்சு, அது தொடர்பான வர்ண படங்களை வெளியிட்டு கூடவே புகைப்பதினால் பயனேதுமில்லை, புகையிலை நிறுவனங்களினால் ஏமாந்து விடாதீர்கள் எனவும் அறிவுரை கூறியிருக்கின்றது. இந்த எச்சரிக்கை மிகவும் வரவேற்கக்கூடிய ஒன்று என இத்ரிஸ் கூறினார்.


ஆனால் புகையிலை நிறுவனங்களுக்கு இந்த விளம்பரங்கள் பெரும் தலைவலியைக் கொடுத்திருப்பதால், இந்த விளம்பரங்கள் தொடரப்படக்கூடாது என அவை எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புகைப்பது எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதையும், அதனை அரசாங்கம் எந்த அளவுக்கு கடுமையானதாக கருதுகிறது என்பதையும் இந்த விளம்பரங்கள் புலப்படுத்துவாத இருக்கிறது என இத்ரிஸ் கூறினார்.

தினசரி பத்திரிகைகளில் இந்த விளம்பரங்கள் தொடர்ந்து வெளிவருவதோடு தொலைக்காட்சியிலும் அவை காட்டப்படுவதற்கு அரசாங்கம் ஆவன வழங்க வேண்டும்.


சிகிச்சையளிக்க முடியாத நோய்களுக்கும், மரணங்களுக்கும் புகையிலையே மூல காரணமாக திகழ்கின்றது. புகைக்கப்படும் ஒரு சிகரெட்டில் 4000 இரசாயனங்கள்தான் ஒளிந்துள்ளன. இவை புற்றோநோயை ஏற்படுத்தக்கூடியவையாகும்.


புற்றுநோய் ஏற்படுவதற்கு புகைப்பதுதான் மூலக்காரணம் என உலக ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்க மருத்துவமனைகளின் புள்ளிவிவரப்படி, நுரையீரல் புற்றுநோய் ஆண்களிடையே அதிகமாக இருப்பது தெரிய வந்திருக்கின்றது. நுரையீரல் புற்றுநோய்க்கு மூல காரணமே புகையிலைதான் என்றார் இத்ரிஸ்.

நாட்டில் புகைக்கும் பழக்கம் அபாய கட்டத்தை நெறுங்கிவிட்டது என்றும் அவர் கூறினார். மலேசியாவில் உள்ள மொத்த இளம் வயது கொண்ட ஆண்களில் பாதிப்பேர் புகைப்பவர்களாக இருக்கின்றனர. 1999-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வென்றில் ஐந்து மலேசிய இளைஞர்களின் ஒருவர் புகைப்பவராக இருக்கின்றார். ஒவ்வொரு நாளும் 50 இளைஞர்கள் புகைக்கும் பழக்கத்தை ஆரம்பிக்கின்றனர்.


ஒவ்வொரு ஆண்டும், புகைபிடிக்கும் பழக்கத்தால் 10,000 மரணங்கள் மலேசியாவில் நிகழுகின்றன. புகையிலை தொடர்பான நோய்களை குணப்படுத்த செலவிடப்படும் தொகை பில்லியன் கணக்கிலான வெள்ளி என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஆகவே, அரசாங்கம் எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்த விளம்பர பிரசாரத்தலிருந்து பின்வாங்கி விடலாகாது. இந்த விளம்பரங்கள் புகைக்கும் பழக்கம் ஏற்படுத்தும் படுமோசமான நிலைகளை மிகத் தெளிவாக படம் பிடித்து காட்டுவதால், இந்த வர்ணப்படங்கள் தொடர்ந்து நமது பத்திரிகைகளில் பிரசுரம் செய்யப்பட வேண்டும் என பி.ப.சங்கம் கேட்டு கொள்வதாக எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கேட்டு கொண்டார்.

No comments:

Post a Comment