Wednesday, May 27, 2009

பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்!

இப்போ நாம் முதலில் பிள்ளையாரைப் பத்தித் தெரிஞ்சுக்கலாமா? நாம எழுதறப்போ கூட பிள்ளையார் சுழின்னு போட்டுத் தான் எழுதுவோம், இல்லையா? பிள்ளையார் சுழி எப்படிப் போடணும்னு தெரியும் இல்லையா? 2 மாதிரிப் போட்டுக் கீழே 2 கோடு போடணும். இது "ஓம்" என்னும் எழுத்தின் சுருக்கம்னு சொல்லுவாங்க. நாம எந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பிச்சாலும் முதலில் பிள்ளையாரை வணங்கிட்டுத் தான் ஆரம்பிக்கணும். அப்படித்தான் ஆரம்பிப்போம். பிள்ளையாரைக் கும்பிட்டு ஆரம்பிக்கிற வேலையில் தடங்கல் வராமல் இருக்கும்னு ஒரு நம்பிக்கை. அதனால் தான். நாம செய்யற காரியத்தில் தடங்கல் ஏற்படுவது நம்மளோட துரதிருஷ்டம்னு நினைப்போம் இல்லையா? அதனாலே தான் முதலில் பிள்ளையாரை நினைச்சுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அது எப்படி வேணாலும் இருக்கலாம்.

"விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் -- விநாயகனேவிண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணிற் படுமின் பணிந்து.!"

என்று ஒரு தமிழ்ப் பாடல் இருக்கிறது. இதன் அர்த்தம் என்னன்னா, நம்மளோட வினை எல்லாத்தையும், அதாவது நாம் செய்யற, செய்யப் போற பாவங்கள் எல்லாத்தையும் வேரோடு அறுத்து விடுவான் விநாயகன் என்று முதல் வரிக்கு அர்த்தம். 2வது வரிக்கு விநாயகன் நம்முடைய வேட்கை தணிவிப்பான் என்றால் நம்முடைய நியாயமான வேண்டுகோள்களை நிறைவேற்றி வைப்பான் என்று பொருள் கொள்ள வேண்டும். அடுத்து என்ன சொல்றாங்கன்னா, "விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்" இந்த உலகமே அவருடைய தொந்திக்குள் அடங்கி இருக்கிறதுன்னு அர்த்தம். அதான் விநாயகர் தொந்தி பெரிசா இருக்கு பார்த்தீங்களா? இந்த மாதிரியான பெரிய தொந்திக்குள் உலகே அடக்கி இருக்கும். இந்த விநாயகர் தான் இந்த மண்ணால் ஆகிய பூமிக்கும், சுடர் விட்டுப் பிரகாசிக்கும் விண்ணான ஆகாயத்துக்கும், சகலத்துக்கும் நாயகன், அதாவது தலைவன் ஆகிறான். அடுத்து என்ன சொல்றாங்க? ஆகையால் அந்த விநாயகனை வணங்கிக் கும்பிடு, உன்னோட எல்லா வேலையும் நல்லா நடக்கும். அதான் "தன்மையிலே கண்ணிற்படுமின் கனிந்து!"ன்னு சொல்றாங்க. "கனிந்து"ங்கிற வார்த்தையோட முழு அர்த்தம் விநாயகனின் சக்தியை நாம் நல்லாத் தெரிந்து கொண்டு, மனம் கனிந்துன்னு இந்த இடத்திலே அர்த்தம் பண்ணிக்கணும்.

அடுத்து இன்னொரு முறையிலே ஸ்லோகம் சொல்லிக் கூட விநாயகரை வழிபடலாம்.

"சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உப சாந்தயே!"

மஹாவிஷ்ணுவிற்கு நிகரானவரும், வெள்ளை உடை அணிந்தவரும், ரொம்பவே மகிழ்ச்சியான முகத்தைக் கொண்டவருமான அந்த விநாயகரைக் கும்பிடுகிறேன். என்னுடைய காரியங்களில் உள்ள விக்னங்களை நிவர்த்தி செய்து வேலைகளை முடித்துக் கொடுக்கட்டும்." என்று வேண்டிக் கொண்டு தான் பெரியவங்க எல்லாம் அவங்க ஜபம், தபம், பூஜை, புனஸ்காரம் எல்லாம் செய்வாங்க இல்லையா? அதான் மேற்படி ஸ்லோகத்தின் கருத்து.

பிள்ளையார் தோற்றம்

பிள்ளையார் எப்படித் தோன்றினார்ன்னு இப்போப் பார்ப்போமா? ரொம்ப நாளைக்கு முன்னே, அதாவது ரிஷிகள், முனிவர்கள்னு எல்லாருமா நிறைய இருந்தப்போ மரகத முனிவர்னு ஒரு முனிவர் இருந்தாராம். அவர் தவம் செய்வதற்குப் போன இடத்தில் விபுதைன்னு ஒரு அசுரப் பெண்மணி அவரைக் கல்யாணம் செய்துக்க ஆசைப் பட, முனிவர் மறுத்தும், பிடிவாதமாய்க் கல்யாணம் செய்து கொள்கிறாள். அவங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது, என்னதான் முனிவரோட புத்திரனா இருந்தாலும், அவங்க அம்மாவோட வளர்ப்பினாலே அவன் ஒரு அசுரனாத் தான் வளர்ந்து வந்தான். அவன் பேர் கஜமுகாசுரன். இந்த அசுரன் தேவர்களுக்குப் பலவகையில் தொந்திரவு கொடுத்து வந்தான்.
(பொதுவாகவே நமக்குள்ளேயே ஒரு மனசு நல்லது நினைக்கும். ஒரு மனசு பொல்லாத விஷயத்தை யோசிக்கும். இப்போப் பக்கத்துப் பையனோ, பொண்ணோ தப்பு செய்தால் உடனே நாம டீச்சர் கிட்டே சொன்னா அது நல்ல மனசு. அப்படி இல்லாமல் நாமளே அவனை அடிச்சோ, கடிச்சோ தண்டிச்சோம்னா அது கெட்ட மனசு, இல்லையா? டீச்சர்னு ஒருத்தங்க பெரியவங்களா இருக்கும்போது, எதுவா இருந்தாலும் அவங்க கிட்டேத் தான் சொல்லணும், சொல்லுவோம். இந்த அசுரங்க அப்படி இல்லை, எதுவா இருந்தாலும் அவங்களே முடிவு எடுப்பாங்க. கடவுள்களையும் வேண்டிக்கிட மாட்டாங்க, அவங்க குருவும் சரியானபடி வழிகாட்ட மாட்டார். அப்படி அமைந்து போச்சு. இதுகூட ஏன் ஏற்பட்டதுன்னு கேட்டா, எல்லாருக்குமே வாழ்வோ, தாழ்வோ எல்லாமே ஏற்படும். கஷ்டமோ, சுகமோ எது வேணாலும் கிடைக்கும். எல்லாத்தையும் சமாளிச்சு வரணும்னு நமக்கு எல்லாம் மறைமுகமாத் தெரிவிக்கிறதுக்காக நடக்குது.)

அப்படித்தான் இந்த கஜமுகாசுரனும் இருந்தான். அவனாலே தேவர்களுக்கு ரொம்பவே தொல்லை ஏற்பட்டது. அவன் ஈஸ்வரனை நோக்கிக் கடும் தவம் செய்து பலவிதமான வரங்களை வாங்கி வந்தான். அதிலே ஒண்ணுதான் தன்னைக் கொல்பவன் மனிதனாயும் இருக்கக் கூடாது, மிருகமாயும் இருக்கக் கூடாது, ஒருவர் உருவாக்கிய ஆயுதத்தில் தோன்றக் கூடாது, ஒருவர் உருவாக்கின ஆயுதத்தில் என்னைக் கொல்லக் கூடாது என்று ஏகப்பட்ட வரங்கள். சாமிதான் நமக்கு வரம் கொடுத்து விட்டதே, இனிமேல் நம்ம பாடு ஜாலிதான்னு அவன் நினைச்சான். சாமி வரம் கொடுத்தாலும் அதை நாம ஒழுங்கா வச்சிருக்கோமான்னு அவர் பார்க்க மாட்டாரா என்ன? அதை அந்த அசுரன் மறந்தே போனான். அவன் பாட்டுக்கு இஷ்டத்துக்குத் தேவர்களை அடிக்கிறதும், கொல்றதுமா இருக்கான். தேவர்கள் எல்லாம் என்ன செய்யறதுன்னு ரொம்பவே யோசிச்சாங்க. தேவர்கள் நல்லா வாழ்ந்தாத் தான் மழை பொழியும், தண்ணீர், காற்று, உணவு உற்பத்தி எல்லாம் ஏற்படும். அவங்களோட வேலைக்கு இடையூறு வந்தால் யாருமே நிம்மதியா வாழ முடியாது. ஆகையால் தேவர்கள் எல்லாரும் மஹாவிஷ்ணுவிடமும், பிரம்மாவிடமும் போய் முறையிட்டாங்க. பிரம்மாவும், விஷ்ணுவும் எல்லாத் தேவர்கள் கூடவும் திருக்கைலை போய்ப் பரமசிவனைத் தரிசனம் செய்தார்கள். பரமசிவனிடம் தங்களோட கோரிக்கையைத் தெரிவித்தார்கள். தேவர்கள் செய்யும் காரியங்கள் எந்த விதமான தடங்கலும் இல்லாமல் நடக்கறதுக்காக வேண்டி ஒரு கடவுளை எங்களுக்கு உருவாக்கித் தரவும்னு கேட்டாங்க. விக்கினங்களைப் போக்க வல்ல விக்கின ராஜன் வேண்டும்னு தேவர்கள் விடுத்த கோரிக்கைக்கு சிவன் செவி சாய்த்தார்.

திருக்கைலாயமலையில் ஏழு கோடி மந்திரங்கள் அடங்கிய ஒரு சித்திர மண்டபம் இருந்தது. அதில் பார்வதியும், பரமேஸ்வரனும் போய் அங்கே எழுந்தருளினார்கள். "பள பள" வென்று ஜொலித்துக் கொண்டிருக்கும் இரண்டு ஒளிவடிவங்கள் அந்த ஏழு கோடி மந்திரங்களுக்கு நடுவில் பிரகாசமிட்டுத் தெரிந்தன. அவை இரண்டும் "சமஷ்டிப் பிரணவம்", "வியஷ்டிப் பிரணவம்" என்ற பெயர்களில் உள்ள இரண்டு பிரணவங்கள். அந்த இரண்டு பிரணவங்களையும் பரமசிவனும், பார்வதியும் கருணையுடன் நோக்க, அவை இரண்டும் இணைந்து, அந்தப் பிரணவங்களில் இருந்து பிரணவ சொரூபமான பிள்ளையார் யானை முகத்துடன் தோன்றினார்.

பிற கதைகள்

விநாயகர் பற்றி இன்னும் சில கதைகள் இருக்கின்றன. முதலில் நாம் பார்த்தது ஒரு புராணத்தில் உள்ளது என்றால் "பார்கவ புராணத்தில்" வேறு விதமாய்ச் சொல்கிறார்கள். ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு மாதிரியாக விநாயகர் பற்றிக் கூறப் படுகிறது. பார்கவ புராணம் என்னும் விநாயக புராணத்தின் படி விநாயகரே முழு முதல் கடவுள். இந்த உலகை மட்டுமல்லாது மும்மூர்த்திகளையும் படைத்து அவர்களுக்குப் படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற தொழில்களைச் செய்யுமாறு கட்டளை இட்டவரும் விநாயகரே ஆவார். ஒவ்வொரு கல்பத்திலும் இவ்வுலகம் அழிந்து மறுமுறை சிருஷ்டி ஆரம்பிக்கும் முன் அண்ட சராசரங்களிலும் உள்ள எல்லா ஜீவன்களும் விநாயகருக்குள்ளேயே ஒடுங்கும் என்று பார்கவ புராணம் சொல்லுகிறது. பிரளயத்துக்குப் பின் விநாயகர் வக்ரதுண்ட விநாயகராக அவதரித்து மும்மூர்த்திகளையும் படைத்தார். பின் அவர்களைத் தம் தொழில்களைச் செய்யுமாறு கூறி மறைந்தார். இந்த பார்கவ புராணத்தின்படி ஒரு முறை என்ன நடந்தது என்றால்:
பிரம்மா ஒரு சமயம் கொட்டாவி விடவே, அதிலிருந்து ஓர் அரக்கன் தோன்றினான். அவன் பெயர் சிந்தூரானனன் ஆகும். ஏனெனில் அவன் சிந்தூர வண்ணத்தில் இருந்தான். அவனுடைய செக்கச் சிவந்த நிறத்தால் பயந்துபோன பிரம்மா அவன் கேட்காமலேயே அவனுக்குச் சில வரங்களைத் தந்தார். சும்மாவே அரக்கன். அவனுக்கு வரம் வேறே இலவசமாய் வந்தால் கேட்க வேணுமா? மூவுலகையும் ஆட்டிப் படைத்தான். யாவரும் செய்வதறியாமல் திகைக்க, மும்மூர்த்திகளும் கணபதியைப் பணிந்தனர். விநாயகர் உடனே தோன்றி, "கவலை வேண்டாம். நான் உமா தேவியாரின் திரு வயிற்றில் அவதரிப்பேன்." எனக் கூறி மறைந்தார். அது போலவே கருவுற்ற சமயம், உமாதேவியாரின் திருவயிற்றில் காற்று வடிவில் நுழைந்த சிந்தூரானன் குழந்தையின் தலையைத் திருகி எடுத்துக் கொண்டு போய் விட்டான். குழந்தை பிறந்தது தலையே இல்லாமல். அதுகண்டு அனைவரும் பதறவே, கலங்காதீர்கள் என்று சொன்ன சிவபெருமான் முன்பொரு சமயம் கஜமுகாசுரன் கேட்டுக் கொண்டபடி அவனுடைய தலையைத் தன் குழந்தையின் தலை இருக்கும் இடத்தில் பொருத்தினார். அன்று முதல் அந்தத் தெய்வக் குழந்தை "கஜானனன்" என்ற பெயர் பெற்றான்.

உமா தேவியாரிடம் வளர்ந்து வந்த கஜானனன் உரிய காலம் வந்ததும் சிந்தூரனனை அழிக்கப் புறப்பட்டார். சிந்தூரானனைத் தூக்கி எடுத்துத் தன் துதிக்கையால் ஓங்கி அடித்து அவன் ரத்தத்தைத் தன் உடம்பில் பூசிக் கொண்டார். செந்நிறமான விநாயகர் அன்று முதல் "சிந்தூர விநாயகர்" என்ற பெயரும் பெற்றார்.

விநாயகர் உருவ ரஹஸ்யம்

சரி, விநாயகர் பிறந்தாச்சு, அவர் எப்படி இருந்தார்னு பார்ப்போமா? யானை முகம், ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், ஆறு எழுத்துக்கள் உள்ளவர். விநாயகர் என்பது ஆறு எழுத்து இல்லையா? இவரை வழிபடுவோர் ஏழு பிறவிகளில் இருந்தும் விடுபட்டு, எட்டுத் திசைகளும் புகழ, ஒன்பது மணிகளும் பெற்று சம்"பத்து"க்களுடன் வாழ்வார்கள். இவருடைய திருமேனி மூன்று வகையில் ஆனது. இடைக்குக் கீழே பூத உடம்பு, இடைக்கு மேல் கழுத்து வரை தேவ உடம்பு, தலை மிருகத் தலை, ஒரு கொம்பு ஆண் தன்மை, கொம்பில்லாத பகுதி பெண் தன்மை, யானைத் தலை அஃறிணை, தெய்வ சரீரம் உயர்திணை. இந்த மாதிரித் தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர் திணையாய், அஃறிணையாய் எல்லாமுமாய் விளங்குபவர் விநாயகர். "தத்துவ மசி" என்ற ஆறு எழுத்தின் வடிவமே விநாயகர்.
பிரணவ வடிவினரான விநாயகரின் காது, அகன்ற யானைத் தலை, வளைந்த துதிக்கை ஆகியவை "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தின் வடிவத்தைக் குறிக்கும். இவரது திருவடிகள் ஞான சக்தியும், க்ரியா சக்தியும் ஆகும். இவருடைய பேழை வயிற்றில் உலகெல்லாம் அடங்கும். ஐந்து கரங்களும் ஐந்து தொழிலகளைச் செய்யும். எழுத்தாணி பிடித்த கரம் படைப்பையும், அங்குசம் கொண்ட கை அழித்தலையும், பாசம் வைத்திருக்கும் கை மறைத்தலையும், அமுத கலசம் ஏந்திய துதிக்கை அருளையும் குறிக்கும். மூன்று கண்களோ என்றால் முறையே சூரிய, சந்திர, அக்னியாகும். இவரின் உருவ அமைப்பில் எல்லா உருவங்களும் இருப்பதாய்க் கூறுகிறது "பார்கவ புராணம்" என்னும் விநாயக புராணம். இவருடைய நாடி பிரம்மா, முகம் வி்ஷ்ணு, கண் சிவன், இடப்பாகம் சக்தி, வலப்பாகம் சூரியன் என்று அமைந்திருப்பதாய்க் கூறுகிறார்கள்.

சிவ பெருமானுனம், உமை அம்மையும் விநாயகரை ஆசீர்வதித்தனர். "யாராக இருந்தாலும் ஒரு செயலைத் துவங்குமுன் முதலின் உன்னை வணங்கி விட்டு ஆரம்பிக்க வேண்டும். அப்போது தான் அந்தக் காரியம் பூர்த்தி ஆகும். அவ்வாறன்றி உன்னை வணங்காமல் ஆரம்பிக்கும் செயல் முற்றுப் பெறாது." என்று அருளினார்கள். தீச் செயல்கள் புரிபவர்கள் யாரும் விநாயகரை வணங்கி விட்டு ஆரம்பிக்க மாட்டார்கள். அப்படியே ஆரம்பித்தாலும் ஏதேனும் இடையூறு வரும். இந்த வரம் கடவுளருக்கும் பொருந்தும் என்று அருளியதால் சிவபெருமான் ஒருமுறை திரிபுர அசுரர்களை வெல்லப் புறப்பட்ட சமயம் விநாயகரை வழிபடாமல் கிளம்பிச் சென்றதால் அவர் தேரின் அச்சு முறிந்தது என்று புராணம் கூறுகிறது. இதே போல் அகந்தையால் பிரம்மா விநாயகரை வழிபடாமல் சிரு்ஷ்டி செய்ய அவர் படைத்த மனிதர்கல், மிருகங்கள், பறவைகள் எல்லாம் பேய், பிசாசுகளாய் மாறிவிட்டன. பின்னர் கணபதியை ஆராதனை செய்து வழிபட்டபின் சரியான கோணத்தில் சிருஷ்டி ஆரம்பித்தது.
இப்போ மாம்பழக் கதையாகச் செவிவழியாக நாம் கூறுவது உண்மையில் அமிர்தத்தால் ஆன மோதகம் என்றும், அதை உலகைச் சுற்றிப் புண்ணியம் சேர்த்துக் கொண்டு வருபவருக்குத் தருவதாயும் சிவன் சொல்ல, விநாயகர் தாய், தந்தையை விடச் சிறந்த உலகம் இல்லை எனச் சொல்லி அவர்களைப் பணிந்து நிற்க, மோதகம் அவருக்குக் கிடைத்தது. அன்றில் இருந்து மோதகம் விநாயகருக்குப் படைக்கப் படும் பொருள் ஆனது என்கிறது புராணம். ஆனானப் பட்ட விநாயகரே தாய், தந்தையருக்கு மரியாதை கொடுக்கும்போது நாம் எப்படி நடக்க வேண்டும்? குழந்தைகளே! தெரிந்து கொள்ளுங்கள். விநாயகர் என்ற பெருக்கு அர்த்தம் என்ன தெரிய்மா? "வி" என்றால் தன்னிகரற்ற என்று பொருள் படும். நாயகர் என்றால் தலைவர். தன்னிகரற்ற தலைவரான இந்த விநாயகருக்குக் குரு யார் தெரியுமா? சூரியன் தான் விநாயகரின் குரு. அது போல் இன்னொருவருக்கும் சூரியன் தான் குரு. அவர் யார் தெரியுமா? நம் வாயு புத்திரன், வானர வீரன், அஞ்சனை புத்திரன் அனுமந்தனுக்கும் சூரியன் தான் குரு. இருவரும் சூரியனிடம் தான் வேத சாஸ்திரங்களைப் பயின்றார்கள். அதுவும் எப்படி? நம்ம வகுப்பில் உட்கார்ந்து கேட்பதைப் போல் எல்லாம் இல்லை.

சூரியனோ தாங்க முடியாத சூடு உள்ளவன். அவனிடம் பாடம் கேட்பது என்றால் லேசா? நம்மால் முடியத் தான் முடியுமா? விநாயகரையும், அனுமனையும் போல் சக்தி வாய்ந்தவர்களால் தான் முடியும். தினம் தினம் உலகை வலம் வருகிறான் சூரியன். ஒரு நிமி்ஷம் கூடச் சும்மா இருப்பதில்லை. இதிலே அவன் செய்யும் வழிபாடு வேறு. அப்போ என்ன செய்யலாம்? சூரியன் தினமும் ஸ்ரீமன்நாராயணனை வழிபடும் நேரம் அவனை வலம் வந்து பாடம் கேட்டு சாஸ்திரங்களைப் பயின்றவர் விநாயகர். எவ்வளவு கஷ்டம் இது? இப்படி எல்லாம் க்ஷ்டப்பட்டுப் பாடம் பயின்றார் விநாயகர். அனுமன் எப்படிப் பாடம் பயின்றார் தெரியுமா? வாயுவேகத்தில் சுழன்று கொண்டிருக்கும் சூரியனின் ரத்ததிற்கு முன்னால் கை கூப்பி நின்று ரதம் எந்த வேகத்தில் போகிறதோ அதே வேகத்தில் பின்புறமாய் நடந்து பாடம் கேட்டானாம் அனுமன். இரண்டு பேரும் ஒரே குருவின் மாணாக்கர்கள் என்பதால் தான் நாம் எந்தக் காரியத்தையும் பிள்ளையாரில் தொடங்கி அனுமனில் முடிக்கிறோம். இன்றைய நாளில் "பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது" என்று சொல்கிறார்கள். அது எவ்வளவு தப்பு தெரியுமா?

நாம் பூஜையோ பஜனையோ செய்யும் போது எப்போதும் பிள்ளையார் பூஜையில் ஆரம்பித்து, அனுமன் பூஜையில் முடிக்க வேண்டும். அது தான் முறை. இதைத் தான் யாரோ பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது எனச் சொல்லி வைக்க, சம்பிரதாயமான பூஜை முறைகளின் அர்த்தமே மாறி விட்டது. இப்போ நாம் செய்யும் தெய்வ வழிபாடு எல்லாமே ஆவணி மாதம் சுக்கிலச் சதுர்த்தியில் வரும் பிள்ளையார் சதுர்த்தியில் ஆரம்பிக்கும். அதுக்கு அப்புறம் ஸ்ரீராமநவமிக்குப் பின் வரும் அனுமத் ஜெயந்தியில் முடியும் நம்முடைய பூஜை புனஸ்காரங்கள். ஆனால் இன்றோ மாறிச் செய்து வருகிறோம். அனுமத் ஜெயந்திக்கு அப்புறம் சில மாதங்களுக்கு ஒன்றுமே இருக்காது. திரும்ப அடுத்த வருஷம் பிள்ளையார் சதுர்த்தியில் ஆரம்பிக்க வேண்டும்.

Tuesday, May 26, 2009

"ஸ்பாம்” எனும் சாபக்கேடு - பகுதி 5

இதுவரை “ஸ்பாம்” (SPAM) என்றால் என்ன என்பதனைப் பற்றி விளக்கமாகப் பார்த்தோம். இனி அதனைக் கட்டுப்படுத்தும் வழிகளப் பார்ப்போம். அதிகமான தொழில் நுணுக்கப் பகுதிகளை எளிமை குறித்து விலக்கியுள்ளோம். அவற்றைக் குறித்துப் பிறகு தனியே பார்ப்போம்.

மின்னஞ்சலே “ஸ்பாம்” (SPAM) பரவ வகை செய்யும் ஒரு முதன்மையான சாதனமாக இருக்கிறது. எளிமையாக, எல்லோராலும் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம், மிகவும் குறைந்த செலவில் (பெரும்பாலும் அடுத்தவர் செலவில்) எண்ணிலடங்கா நபர்களுக்கு, அவர்கள் விரும்பாத பொழுதும், விளம்பரங்களை எடுத்துச் செல்ல வழி வகை செய்யும் சாதனம்.

இது பாலினக் கவர்ச்சித் தளங்களை அறிமுகப்படுத்துகிறது. எதிர்பாராத வகையில் உடனடியாகக் கோடீஸ்வரர் ஆகலாம் என்று ஆசை காட்டும் விளம்பரங்களை அளிக்கிறது. உங்களை எந்த வகையிலும் மயக்கி, “வைரஸ்” செயல் நிரைகளை உங்கள் கணிணியில் இறக்குமதி செய்து உங்கள் கணிணியினை “ஜோம்பீஸ்” (ZOMBIES) எனப்படும் அடிமைக் கணிணியாகப் பயன்படுத்தி, அதன் மூலம் உங்களையும் “ஸ்பாம்” (SPAM) எனும் குற்றத்திற்கு உடந்தை ஆக்குகிறது. இதெற்கெல்லாம் மேலாக, தங்கள் கணிணி பிறரால் ஆளப்படுகிறது என்பதும், “ஸ்பாம்” (SPAM) என்ற குற்றத்திற்குத் தாமும் துணை போகிறோம் என்று கூட அறியாத, விவரமறியாதவர்கள் இயக்கும் எல்லைக் கட்டுப்பாடற்ற ஒரே தொடர்பு சாதனம் என்பதனாலேயே, குறும்பர்களால் (HACKERS) பெரிதும் விரும்பப்படும் ஒன்று.

கீழ்க்கண்ட 8 வகைகளில் “ஸ்பாம்” (SPAM) அனுப்புபவர்கள் தங்கள் செயலைச் செய்ய முடிகிறது.

1. இணைய தளத்தைப் பயன்படுத்துவோர் தங்கள் மின் முகவரியினை, முன்பின் அறிமுகமில்லாத சந்தேகத்துக்குறிய தளத்தில் பதிவதன் மூலம் அவர்கள் மின் முகவரியினைத் திருடுவது எளிதாகிறது.

2. பயன்படுத்துவோர் குழுமத்திலிருந்து (USENET Forum) திருடுவது.

3. பயன்படுத்துவோர் உரையாடும் பகுதியிலிருந்து (CHAT SESSION) திருடுவது.

4. “SPAMBOT' என்ற செயல் நிரை+கணிணி கூட்டணியின் மூலம் @ என்ற சங்கேதக் குறி இருக்கும் வார்த்தைகளை மின் முகவரி என்ற வகையில் சிறைபிடித்து, பரிட்சார்த்த முறையில் முயற்சி செய்து “ஸ்பாம்” பரப்புவது.

5. பணம் கொடுத்து வாங்கும் மின்முகவரிகளைப் பயன்படுத்துவது. (இதற்காகவே சிலர் பணி செய்கிறார்கள்; பலன் அடைகிறார்கள்; அமெரிக்காவில் மின் முகவரியுள்ள ஒரு குறுந்தகடு 100 டாலர்!!). இங்கும் கூட, சில நிறுவனங்கள் இத்தகு விவரங்களைத் தருகின்றன என்பது, கைபேசியில் தாங்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில், முன்பின் அறிமுகமில்லாத நபரிடமிருந்து விளம்பரம் பெறுவோர் அறிந்த ஒன்று.

6. பயன்படுத்துவோருக்குக் கவர்ச்சிகரமான தொடர் மின்னஞ்சல் அனுப்பி அதன் மூலமும், அவர்களாகவே பதிவு செய்யத் தூண்டும் சில ஏமாற்றும் வழிகளிலும் மின் முகவரியினைப் பெற்று, “ஸ்பாம்” பரப்புவது.

7. உங்களின் DOMAIN பெயரில், சில கூட்டமைப்பபி்ல் மின் முகவரியினை உண்டாக்குவது (உ-ம் @yahoo.com என்றிருந்ததால், அதனுடன் kumar என்று சேர்த்து, kumar@yahoo.com என ஒரு மின் முகவரியினை உண்டாக்குவது.
8. உங்கள் அலுவலக SERVER பதிவு செய்திருக்கும் மின் முகவரியினைத் திருடிப் பயன்படுத்துவது.

இந்த “திருடுவது” என்ற காரணத்திற்காகத்தான் உங்கள் கணிணியின் பாதுகாப்பு வசதிகளை உடைக்க “வைரஸ்” செயல் நிரை எழுதுவோர் மற்றும் குறும்பர்களின் துணை நாடப்படுகிறது.

எனவே “ஸ்பாம்” (SPAM) பரவாமல் தடுக்க, மின்னஞ்சலைப் பயன்படுத்தும் பொழுதும் இணைய தளங்களுக்கு வருகை தரும் பொழுதும் சற்றே கவனமாக இருங்கள்.

“ ஸ்பாம்” (SPAM) அறவே வராமல் தடுக்க விரும்பினால், இணைய தளத்திற்குத் தொடர்பே கொடுக்காதீர்கள்!!!! தனிக் கணிணியாகப் பயன்படுத்துங்கள்!! பிரச்சினையே இல்லை!!

இது முடியாது என்றால்,

• எந்நேரமும் உங்கள் கணிணி இணைய தளத்துடன் தொடர்பு கொள்ளத்தான் வேண்டுமா எனத் தீர்மானியுங்கள். வேண்டாமெனில், செய்திப் பறிமாற்றங்கள் முடிந்தவுடன், இணையதளத் தொடர்பினைத் துண்டித்துவிடுங்கள்.

• இணையதளம் மற்றும் மின்னஞ்சலைப் பயன்படுத்துமுன், முதலில் உங்கள் கணிணியில் ஒரு நல்ல “ஸ்பாம்” (SPAM) மற்றும் “வைரஸ்” (VIRUS) கட்டுப்பாடு ஏற்பாட்டைச் செய்யுங்கள்.
• YAHOO, GOOGLE, HOTMAIL போன்ற பெரிய அமைப்புக்களின் மின்னஞ்சல் சேவையினப் பயன்படுத்துகள். அவர்களுக்குப் பணம் ஒரு பொருட்டல்ல. எனவே VIRUS CONTROL, SPAM BLOCKER போன்ற சிறப்பான கருவிகளைப் பயன்படுத்தி, வைரஸ், ஸ்பாம் இவற்றைக் கட்டுப்படுத்த முடிவதால், உங்களுக்குத் தொல்லையும், செலவும் குறையும்.

• ஒவ்வொரு முறையும் இணைய தளத்திற்குச் சென்று, உங்கள் செயல் முடிந்து கணிணியின் தொடர்பறுக்குமுன் அல்லது வேறு செயலினை ஆரம்பிக்கு முன், உங்கள் கணிணியில், “குக்கீஸ்” (COOKIES), நீங்கள் சென்று வந்த தள விவரங்கள் (HISTORY) மற்றும் அதன் மூலம் உருவான கோப்புகளை (FILES) முழுமையாக அழித்து விடுங்கள். பிறகே கணிணியின் செயல்பாட்டை நிறுத்த வேண்டும்.

• முதலில், எந்த ஒரு பொருளும் இலவசமாகக் கிடைக்கும் என்ற நினைப்பை ஒதுக்குங்கள். இலவசமாகத் தருவதாக ஆசை காட்டித்தான், தங்கள் தளத்திற்கு வருகை தரப் பலர் உங்களை ஊக்குவிக்கிறார்கள். இந்த வகை இலவசம் என்ற “மாய வலையில்” விழுந்த பலர் “ஸ்பாம்” (SPAM) வந்தபின் தான் அதனை உணருகிறார்கள்.
• உங்களுக்கு முன் பின் அறிமுகமில்லாத நபர் அல்லது நிறுவனம் இவர்களிடமிருந்து ஏதேனும் மின்னஞ்சல் வந்தால், உடனடியாகத் திறந்து பார்க்காதீர்கள். “PREVIEW” என்ற மின்னஞ்சலில் இருக்கும் அமைப்பைப் பயன்படுத்தினாலும் கூட, “ ஸ்பாம்” உருவாக்கும் நபர்கள் உங்கள் மின்முகவரியினைப் பிடிக்க ஒரு நூதன தொழில் நுணுக்கத்தை அமைத்து, உங்கள் முகவரியினைப் பதிவு செய்து விடுவார்கள். வழக்கமாக மின்னஞ்சலைப் பயன்படுத்துபவர்களுக்கு, யார் தங்களைத் தொடர்பு கொள்ள முயலுவார்கள் என்பது தெரிந்திருக்கும்.

• மின்னஞ்சல் மூலம் வரும் விளம்பரத்தை நம்பி, எந்தப் பொருட்களையும் (On Line Trading) வாங்க முயற்சிக்காதீர்கள். இத்தகு எண்ணத்தையே ஊக்குவிக்காதீர்கள்.

* இத்தகு மின்னஞ்சலுக்கு எந்த விதமான பதிலும் அளிக்காதீர்கள்; ஒரு முறை நீங்கள் அளிக்கும் பதில், உங்கள் மின் முகவரி உண்மை என்பதனை அவர்களுக்கு உறுதி செய்வதால், மென்மேலும் அவர்களிடமிருந்து உங்களுக்கு மின்னஞ்சல் வருவது உறுதி.

• தொடர் மின்னஞ்சல் குறித்த எந்த ஒரு வேண்டுகோளுக்கும் செவிசாய்க்காதீர்கள். இது ஒரு “முகவரிச் சுழற்சி”. ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இம்மின்னஞ்சலை அனுப்ப, மேலும் புது முகவரிகள் சேரும். அவர்கள் எல்லோருக்கும் “ஸ்பாம் (SPAM) மின்னஞ்சல் தொடரும். மற்றவர்களுக்கும் “ஸ்பாம் (SPAM) தொல்லை பரவ நீங்கள் காரணமாக இருக்காதீர்கள்.

* ஏதேனும் ஒரு காரணத்தால் அச்செய்திகள் பயனுடையவை என்று நீங்கள் உறுதியாக நம்பினால், அந்தச் செய்தியினை ஒரு புது மின்னஞ்சலாக, உங்களிடமிருந்து செல்வதாக அனுப்புவதன் மூலம் சங்கிலித் தொடரினைத் துண்டித்து விடுங்கள். உங்கள் கணிணியில் இருக்கும் மின்னஞ்சலையும் உடனடியாக அழித்துவிடுங்கள். அதோடு, உடன் வந்த இணைப்புக்களையும் அழித்துவிடுங்கள். இதற்கேற்றவாறு, உங்கள் மின்னஞ்சலின் அமைப்புக்களை வடிவமையுங்கள்.

• பெரும்பாலும் வைரஸ் செயல் நிரைகள் (VIRUS APPLICATIONS) மின்னஞ்சலில் வரும் இணைப்புகளாக, ஒரு செயலாக்கக் கோப்புகள் (EXECUTABLE FILE) மூலம் தான் வரும். அத்தகு கோப்புகளைத் திறக்காது உடனே அழித்துவிடுங்கள்.

• WINZIP கோப்புக்களாக வரும் செய்திகளையும், உங்களுக்குத் தெரிந்தவரிடமிருந்து வரும் நம்பகமான செய்தி என்றால் திறந்து படியுங்கள். இல்லையென்றால், அழித்துவிடுங்கள். சில சமயம் உங்கள் நண்பரின் கணிணி “ஸ்பாம்” (SPAM) தாக்குதலுக்கு ஆளாகியிருந்தால், அவரிடமிருந்து, (அவர்களுக்கே தெரியாமல் கூட) உங்களுக்கு “ஸ்பாம்” (SPAM) தாக்குதல் உண்டாகலாம். கவனமாக இருங்கள்.

• இணைய தளத்திற்குச் சென்றால், கீழ்க்கண்ட காரணங்களால், நீங்கள் “ஸ்பாம்” (SPAM) தாக்குதலுக்கு ஆளாவீர்கள். இதனைக் குறித்து கவனமாக இருங்கள்.

* முன்பின் அறிமுகமில்லாத, நம்பத் தகுதியில்லாத செய்திக் குழுவிற்கு (NEWS GROUP) எந்த செய்தியினையும் அளிக்காதீர்கள்.

* எந்தக் காரணம் கொண்டும், உங்கள் முகவரியினைக் கேட்கும், இணையதளச் சேவையினுக்கு அது நம்பகத் தன்மை இல்லாத ஒன்றாக இருக்குமானால், உங்கள் முகவரியினைத் தராதீர்கள்.

* ஆனால் சில தளங்கள் மின் முகவரி தரவில்லையென்றால், உங்களுக்கு அத்தளத்துள்ளே நுழைய அனுமதி மறுக்கலாம். இது அவர்கள் தளத்தினை, “ஸ்பாம்” (SPAM) தாக்குதலுக்கு உட்படாது தவிர்க்க அவர்கள் எடுத்துக் கொள்ளும் எச்சரிக்கை முயற்சி. அப்படித் தர வேண்டுமானால், பொது முகவரி அல்லது “ஒரு முறைப் பயன்பாட்டு முகவரிகளைப் ” பயன்படுத்துங்கள். YAHOO, HOTMAIL, GOOGLE போன்ற நல்லதொரு “ஸ்பாம்” (SPAM) மற்றும் “வைரஸ்” (VIRUS) கட்டுப்பாடுகள் சிறப்பாக உள்ள சேவைகளில் நீங்கள் உருவாக்கிய ஒரு முறைப் பயன்பாட்டு மின் முகவரியினைக் கொடுங்கள்.

•நீங்கள் ஏதேனும் வலைத்தளம் வைத்திருந்தால், உங்கள் மின் முகவரியினை அதில் குறிப்பிடாதீர்கள். “SPAMBOTS” எனப்படும் மின் முகவரியினைத் தேடி எடுக்கும் அமைப்பு “ஸ்பாம்” உருவாக்கும் நபர்களுக்காக, உங்கள் முகவரியினைப் பதிவு செய்து கொள்ளும்.

• எனது மின் முகவரியினை எடுத்து விடுங்கள்” (Remove My Email ID) என்று குறிப்பிடும் வசதியினை எப்பொழுதுமே நம்பாதீர்கள். பொதுவாக அத்தகு வசதிகள் உங்கள் முகவரி உண்மையானதுதானா, செயலில் இருக்கிறதா என அறிவதற்காக, “ஸ்பாம்” உருவாக்கும் நபர்கள் வைத்திருக்கும் “வலை”(TRAP).

• YAHOO, HOTMAIL, WEBMAIL, EUDORA போன்ற எல்லோரும் எல்லோராலும் அறியப்பட்ட மின்னஞ்சல் சேவைகள் சிறப்பான “ஸ்பாம்” (SPAM), மற்றும் “வைரஸ்” (VIRUS) கட்டுப்பாட்டு அமைப்புகளுடையவை. அவை செயலில் இருக்கிறதா என்பதனை அடிக்கடி உறுதி செய்து கொள்ளுங்கள். SPAM அல்லது JUNK MAIL என அதன் உதவிப் பகுதியில் (HELP FILES) உள்ள பக்கங்களைப் பார்க்கவும்.

* உதாரணத்திற்கு HOTMAIL.COM அமைப்பில் உள்ள சிறைப்படுத்தும் வசதி (QUARANTINE FOLDER) ஸ்பாமென நம்பும் மின்னஞ்சல்களை நீங்கள் அமைத்திருக்கும் விதிகளின்படி, தனிமைப் படுத்திவிடும் அல்லது அழித்துவிடும்.

* MICROSOFT நிறுவனத்தின் OUTLOOK /OUTLOOK EXPRESS இவற்றில் உள்ள வடிகட்டும் அமைப்பு (FILTERS) “ஸ்பாம்” (SPAM) என சந்தேகப்படும் மின்னஞ்சல்களை, அவற்றிற்கான விதிகளின்படி, பிரித்து, தனிமைப் படுத்தும் அல்லது அழித்துவிடும்.

* EUDORA அமைப்பில் உள்ள விதிகளின்படி, நீங்கள் ஸ்பாம் மின்னஞ்சல்களை இறக்குமுன்னரே, அழித்துவிடும் வசதி உள்ளது.

* இவற்றைத் தவிர ஸ்பாம் மற்றும் வைரஸ் இவற்றைக் கட்டுப்படுத்த தனிப்பட்ட சில சிறப்பான செயல் நிரைகள் உள்ளன.

* அவை உங்களின் மின்னஞ்சல் வரும் வழியில் உள்ள பிரதான SERVER பகுதியிலோ அல்லது இறங்கும் உங்கள் கணிணிப் பகுதியிலோ, அத்தகு ஸ்பாம்/வைரஸ் மின்னஞ்சலைக் கண்டுபிடித்து, அழித்துவிடும்.

* SERVER பகுதியில் அழிக்கும் வசதி நீங்கள் இறக்குமதி செய்யும் (DOWN LOAD) செலவினையும் குறைக்கும்.

இவை அனைத்திலுமே “FILTERS” எனப்படும் “வடிகட்டிகள்” பயன்படுத்தப்படுகின்றன. அவை “தடை செய்யப்பட்ட மின் முகவரிகள்” (BLACK LIST) “அனுமதிக்கப்பட்ட மின் முகவரிகள்” (WHITE LIST) என்றதன் பேரில் மின்னஞ்சலைப் பிரித்து, “அனுமதிக்கப்பட்ட மின் முகவரிகள்” (WHITE LIST) உள்ள மின்னஞ்சலை மட்டும் அளிக்கிறது. இந்த வடிகட்டிகளை உருவாக்க விதிகள் அடிப்படையிலான அணுகுமுறைகள் (LOGICS) பல உண்டு. அவற்றைப் பற்றி பிறிதொரு முறை பார்ப்போம்.

சில செயல் நிரைகள் மின்னஞ்சலில் உள்ளே இருக்கும் செய்திகளைப்படித்து, அவற்றில் உள்ள தடை செய்யப்பட்ட எழுத்துக்கள், சொற்கள், கோப்புகளின் இறுதி விரிவுகள் (FILE EXTENSION) இவற்றுக்கான ஏற்கனவே அமைக்கப்பட்ட விதிகளின்படி, பிரிக்கின்றன.

இவை அனைத்திலுமே “உண்மையான மின்னஞ்சல்” என்பது நம்மால் மட்டுமே கண்டுபிடிக்கக் கூடியது என்பதே உண்மை. எனவே JUNK MAIL அல்லது தனித்திருக்கும் கோப்புகளிலிருந்து பார்த்து அவை உண்மையானதா இல்லையா என நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும். இப்படிக் கண்டுபிடித்தவற்றுள் “ஸ்பாம்” என நாம் நினைப்பவற்றை “JUNK MAIL BOX” செல்ல மாற்றிவிடுங்கள். இதன் தர்க்க ரீதியான அமைப்பைப் படித்து, அதில் உள்ள மின் முகவரியிலிருந்து எதிர்காலத்தில் வரும் எந்த ஒரு மின்னஞ்சலையும் “JUNK BOX” ல் இறக்கிவிடும் அல்லது அழித்துவிடும்.

இது எல்லாவற்றையும் விட “பாட்னெட்ஸ்” (BOTNETS) எனப்படும் பல்லாயிரக்கணக்கான அகலக்கற்றை இணைப்புடைய (Broadband Connectivity) வீட்டுக் கணிணிகளின் ஒருங்கிணைந்த வலைக்கட்டு (NETWORK) மூலம் உண்டாக்கப்படும் தொல்லை சொல்லி மாளாது. இத்தகு கணிணிகள் “MALWARE அல்லது ADWARE எனப்படும் விளம்பரம் எளிதாகச் செய்ய வழிவகுக்கும் செயல் நிரைகளை உள்ளடக்கியதாய், மூன்றாம் மனிதர்களால் கட்டுப்படுத்த ஏதுவாக உள்ளது. ஸ்பாம் உருவாக்குபவர்கள் இத்தகு கணிணியினைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அதன் மூலம் பல்லாயிரக்கணக்கில் தானியிங்கி மின்னஞ்சல்களை உருவாக்கி பெரிய நிறுவனங்களின் NETWORK மற்றும் SERVER செயல்பாட்டினை அழிக்கிறார்கள். இது பலவகைகளில் ஸ்பாம் அனுப்புபவர்களுக்கு உதவுகிறது.

1. பல்லாயிரக்கணக்கான கணிணிகள் முதலீடு செய்யாமல் கிடைக்கிறது.
2. இவற்றின் மூலம் அனுப்பப்படும் மின்னஞ்சலுக்குக் கட்டணம் கணிணியின் உரிமையாளர்தான் கொடுக்கப் போகிறார்கள் என்பதால், ஸ்பாம் அனுப்புபவ்ர்களுக்கு இலவசம்.
3. எண்ணிக்கை காரணமாகவும், இவை உலகின் பல இடங்களில் இருப்பதாலும், இவற்றைக் கண்டுபிடிப்பது “ஸ்பாம்” கண்காணிப்பவர்களுக்கு ஒரு சவால்; அப்படியே கண்டுபிடித்தாலும் கட்டுப்படுத்துவது உடனடியாக நடக்க வாய்ப்பில்லை; அப்படியே கண்டுபிடித்தாலும், யாரோ அதற்காகத் தண்டிக்கப்படப் போகிறார்கள்.
4. ஒரே நேரத்தில் பல்லாயிரக் கணக்கான மின்னஞ்சல் அனுப்பும் வசதி செலவே இல்லாமல் எளிதாகக் கிடைக்கிறது.
5. நம்முடைய கவனக் குறைவாலும், விவரமறியாது கணிணியினைப் பயன்படுத்துவோர் அதிகம் என்பதாலும், “ஸ்பாம் அனுப்புபவர்களுக்கு, மென்மேலும் அதிகமான கணிணிகள் ஒவ்வொரு நாளும் கிடைக்கிற வாய்ப்பிருக்கிறது.

மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்புவதும், CHAT எனப்படும் உரையாடலும் பெருகி வரும் இக்காலத்தில், இந்த ஸ்பாம் தடுக்கப்பட, பயன்படுத்துவோர் கணிணி பயன்பாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய மின்னஞ்சல், இணையதளம் மற்றும் CHAT எனப்படும் உரையாடல் குறித்த அனைத்திலும் அறிவுடையராக இருப்பதும், கவனமாக இருப்பதும் பெரிதும் அவசியமாகிறது என்று அறிவுரையுடன், இக்கட்டுரை இதனுடன் இனிதே முடிகிறது.

கணிணிப் பயன்பாடு, இணையதளத் தொடர்பு, மின்னஞ்சல் மூலம் தொடர்பு எனப் பல தேவைகள், தவிர்க்கப்பட முடியாத ஒன்றாகிவிட்ட காரணத்தால், முடிவாக ஒரு செய்தி.

“ஸ்பாம்” (SPAM) தாக்குதலைத் தவிர்க்க ஒவ்வொருவரும், எடுக்கும் முயற்சிகள் அதற்காகச் செய்யும் செலவுகள், இவையெல்லாம் பார்க்கையில், அதனைப் பற்றி அதிகம் கவலைப்பாடாமல், மேலே குறிப்பிட்டபடி விழிப்புணர்வுடன் செயல்பட்டு, அதோடு இணைந்து வாழக் கற்றுக்கொள்வதும், வந்தால், சரிசெய்து கொண்டு மேலே செல்ல வேண்டுவதும், பெரிதும் அவசியமாகிறது.

முற்றும்.

"ஸ்பாம்” எனும் சாபக்கேடு - பகுதி 4


ஸ்பாம் (SPAM) குறித்த தற்போதைய நிலை
இது வரை நீங்கள் படித்ததிலிருந்து உங்களுக்கு ஒன்று நன்கு புரிந்திருக்க வேண்டும். அதாவது “ஸ்பாம் (SPAM)” எனப்படும் இந்தத் தொல்லை அறவே தவிர்க்க முடியாத ஒன்று என்பதும், இதனை ஏற்றுக் கொண்டு இதனுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதுமாம். இதனுடன் வாழ, இதனைக் கட்டுப்படுத்தும் வழியினை அறிந்து கொள்வது ஒன்றே அறிவுடமையாகும். இதனைக் கட்டுப்படுத்த இதனைப் பற்றி இன்னும் விளக்கமாக அறிய வேண்டியது அவசியமாகிறது. இந்த வகையில் “வைரஸ்” செயல் நிரை (VIRUS APPLICATION) பற்றியும் மற்றும் “ஹேக்கர்ஸ்” (HACKERS) எனப்படும் குறும்பர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மின்னஞ்சல் மற்றும் இணைய தளம் சார்ந்த பணிகள் அதிகமாகிவிட்ட இந்த நாளில், “ஸ்பாம் (SPAM)” எனப்படும் இத்தொல்லை விலக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. இதனை வேறு கோணத்திலிருந்தும் பார்க்கலாம்.

“ஸ்பாம்” (SPAM) என்பதற்குக் கீழ்க்கண்டவாறு பொருள் கொண்டால், நமது பார்க்கும் கோணம் வேறுபடும். “Simple & Plain Advertisement through Mail” = (SPAM).

“Small Product Advertisement through Mail” = (SPAM)

“Services & Products Advertisement through Mail” = (SPAM)

எனவே இவையனைத்திலும், மின்னஞ்சல் மூலம் விளம்பரம் என்பதுதான் அடிப்படை செய்தி என்பதும் அவற்றுக்கான செலவு நம்மிடம் பெறப்படுகிறது; சில சமயங்களில், நாம் வேண்டாத செய்தி நமக்கு வரும் பொழுது அது நமக்கு எரிச்சலூட்டுகிறது என்பதுதான் பிரச்சினை என்பதும் தெளிவு.

நாம் “ஸ்பாம் (SPAM) - வேண்டாதது; நான் விரும்பிக் கேட்காத ஒரு செய்தி என எண்ணும் பொழுது, அதே செய்தி வேறு யாரேனும் ஒருவருக்கு அவராகக் கேட்காத பொழுதும், அவரது கணிணியில், மின்னஞ்சல் மூலம் வந்திருந்து, அதனால் அவரே எதிர்பார்க்காத நண்மை உண்டானால், அவருக்கு அது “ஸ்பாம்” இல்லை!! உடல் ஊனமுற்றோருக்கு, முதியோர் இல்லத்தில் அனாதையாக இருப்பவர்களுக்குத் தங்களைத் தேடி வரும் இத்தகைய செய்திகள் வரவேற்கத் தக்கதே. எனவே எது “ஸ்பாம்” (SPAM) என்பதே மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது.

நமது தொலைபேசி எண், கைபேசி எண் மற்றும் முகவரியினை இனவாரியாகப் பிரித்தெடுத்து, அதனை விலைக்கு விற்கும் முறை கூட ஒரு வகை “ஸ்பாம்” (SPAM) ஆகும். முகவர் மூலம் பெற்று நம்மைத் தொடர்பு கொண்டு “விசா மற்றும் மாஸ்டர் கார்டு” தர அணுகும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இதனால் பலன் பெறுகின்றன. இந்தியாவிலேயே 6 இடங்கள்தான் இத்தகைய “DATA BASE” வைத்திருப்பதாகவும், பல பன்னாட்டு நிறுவனங்கள் அவற்றின் சேவையைப் பயன்படுத்துவதாகவும், இது ஒரு சுய தொழில் வாய்ப்பு எனவும் கூறுபவருக்கிடையே, இதனைத் தவறு என்று சொல்பவருக்கு என்ன மதிப்பு இருக்கும்?

உங்கள் கைபேசியில் யாரேனும் முன்பின் தெரியாதவரிடமிருந்து அழைப்பு வந்தால், எதேனும் ஒரு பொருள் அல்லது சேவைக்கு அதன் மூலம் விளம்பரம் செய்யப்பட்டால், அது உங்களுக்குத் தொல்லை என நீங்கள் நினைத்தால் மட்டுமே அது “ஸ்பாம்”.

ஆயுத உற்பத்தி ஒரு தொழில் என்றான பிறகு, அதனை விற்பதும், பயன்படுத்துவதும் தவறல்ல என்றும் ஆன பின், அதனால் உண்டாகும் அழிவிற்கு யாரைக் குறை கூறுவது? “ஸ்பாம்” (SPAM) செயல்பாடுகளும் அது போலத்தான். விளம்பரம் செய்வது ஒரு தொழில் என்றான பிறகு, மிகக் குறைவான செலவில் மிக அதிகமான நபர்களுக்குப் பொருட்களையும், சேவைகளையும் பற்றி விளம்பரப்படுத்த மின்னஞ்சல் ஒன்றுதான் வழியென்றான பிறகு, அம்மின்னஞ்சலைப் பயன்படுத்த முயற்சிப்பது பற்றி என்ன சொல்ல முடியும்!! நமது தொலைக்காட்சிப் பெட்டியும், நமது கைபேசியும் (CELL PHONE) அந்தந்த முகவர்களால் பிறர் பொருட்களையும், சேவைகளையும் விளம்பரம் செய்யப் பயன்படுத்தப் படலாம் என்றால் நமது கணிணியும் ஏன் பயன்படுத்தப் படக்கூடாது? “ஸ்பாம்” (SPAM) என்பதனைக் கட்டுப்படுத்துவது ஏன் சிரமமான ஒன்று என்பது இப்பொழுது புரிந்திருக்கும்.

இதில் தவறு என்று சொல்ல ஒரே ஒரு காரணம் அதனால் உண்டாகும் கால விரையம், பணச்செலவு இவை நம்மை பாதிக்கிறது என்பதே. தொலைக்காட்சியிலாவது பொழுது போக்காகச் சில கலை நிகழ்ச்சிகளை, சில திரைப்படப் பாடல்களை அல்லது சில திரைப்படங்களை வெளியிட்டு அதனிடையே சில விளம்பரமும் செய்கிறார்கள். இல்லாவிடில், இந்தப் பொழுது போக்கு அம்சத்திற்காக நாம் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், கைபேசியிலும், கணிணியிலும் அது போல நமக்கு எந்த விதமான ஆதாயமும் இல்லை. அது தவிர, நமக்குக் கணிசமான இழப்பு உண்டாகிறது. சில சமயங்களில், சட்ட ரீதியான சிக்கல் உண்டாகிறது என்பதே பிரச்சினை. தொலைக்காட்சி ஒரு பொழுது போக்கு சாதனம் என்பதால் அந்த விளம்பர இடையீடுகளைப் பார்க்க வேண்டாமென்றால், தொலைக்காட்சியினை இயக்காமலிருக்கலாம். அதனால் இழப்பு அதிகம் இல்லை. ஆனால் கணிணியும் மின்னஞ்சலும், நம்து தொழிலுக்கும் பயன்படுவதால், இதனை இயக்காமலிருக்க முடியாது.

இது நாள் வரை “ஸ்பாம் (SPAM) எனப்படும் மின்னஞ்சல் மூலம் விளம்பரம் செய்ய முனைவோர், “வைரஸ்” எனப்படும் கணிணியின் செயல்பாட்டைக் குறைக்கும் அல்லது அறவே செயலிழக்கச் செய்யும் செயல்நிரை எழுதுவோர் மற்றும் அத்து மீறிப் புகுதல் என்ற வகையில் நமது கணிணியினைத் தங்கள் வசப்படுத்தும் “ஹேக்கர்ஸ்” (Hackers) எனப்படும் குறும்பர்கள் ஆகியோர் தனித்தனியே இருந்து பணியாற்றிய நிலை மாறி, “பணம்” பண்ணுவது ஒன்றே குறி என்ற வகையில் மூவரும் ஒன்று சேர்ந்து, கூட்டாக நமது கணிணியினை முறைகேடான செயல்களுக்குப் பயன்படுத்தும் நிலை உருவாகியிருக்கிறது. இதுவரை வெறும் விளையாட்டாக, தங்களின் செயல் நிரை எழுதும் திறமையினைக் காட்ட, ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது நிறுவனத்தின் பேரில் தங்களுக்கு இருக்கும் வெறுப்பினைக் காட்ட அவர்களது கணிணியினை செயலிழக்கச்செய்வது, அவர்களது அந்தரங்கங்களைப் பிறர் அறியச் செய்வது என்ற நிலை மாறி, இது ஒரு நல்ல ஆதாயம் தரும் தொழில் என்றாகிவிட்டது.

“ஸ்பாம்” (SPAM) என்பது ஆரம்பத்தில் மின்னஞ்சலை விளம்பரத்திற்காகப் பயன்படுத்தும் உத்தியாக செயல்பட்டது. மிகக் குறைந்த செலவில் மிக அதிகமான நபர்களுக்குப் பொருட்களையும் சேவைகளையும் அறிமுகம் செய்யும் வகையில்தான் நல்ல வருவாய் பெறும் வசதி உள்ளது. எனவே “ஸ்பாம்” (SPAM) உருவாக்குவோர், தாங்கள் உருவாக்கும் “ஸ்பாம்” (SPAM) இன்னும் சிறப்பாகச் செயல்படத் தேவையான தனித்திறமை வாய்ந்த செயல் நிரைகளையும், கருவிகளையும், சேவைகளையும் தரும் பல்வேறு முறைதவறிய சேவை வழங்குபவர்களை நாடுவது வழக்கமாகிவிட்டது.

அவர்களிடையே நிலவும் உறவு முறை விவரங்கள் பின் வருமாறு;

வைரஸ் செயல் நிரை எழுதுவோரும் நமது கணிணியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடைத்து, அத்து மீறிப் பிரவேசிக்கும் ஹேக்கர்ஸ் எனும் குறும்பர்களுமாகச் சேர்ந்து, “ஸ்பாம்” (SPAM) பரப்பும் செயல்பாட்டிற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கிறார்கள். நமது கணிணியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடைத்து, நமது கணிணி அவர்கள் வசம் வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது இவர்களின் பொறுப்பு.

“ஸ்பாம்” (SPAM) சேவை அளிப்போர், தனித் திறமை (SPECIALISTS) வாய்ந்த செயல் நிரை எழுதுவோரையும் மற்றும் வசதிகளையும் உருவாக்கிக் கொடுக்கிறார்கள்

“ஸ்பாம்”(SPAM) மென்பொருள் ஒருங்கிணைப்பாளர்கள் சேவை, நிர்வாகம் மற்றும் பிரசார அமைப்பினைப் பார்த்துக் கொள்கிறது.

தங்களது தனித் திறமைகளைக் காட்ட, தங்களுக்கு உரிய மரியாதை தரத் தவறிய சமுதாயத்தின் மீது வஞ்சம் தீர்த்துக் கொள்ளச் செயல் நிரை எழுதுவது என்றெல்லாம் இருந்த நிலை மாறி, அவர்களின் திறமைகள், ஒன்றுமறியாத, சற்றே கவனக் குறைவாக இருக்கும் கணிணி பயன்படுத்துவோரை ஏமாற்றவும் அதன் மூலம் பணம் பண்ணவும் பயன்படுகிறது என்பது ஒரு வருத்தமளிக்கும் செய்தியாகும்.

சில சமயங்களில், கணிணி செயல்பாட்டிற்கு உதவுவதாகக் கூறிக்கொள்ளும் “வைரஸ்” கட்டுப்பாட்டுச் செயல்நிரை உருவாக்கும் பெரிய நிறுவனங்கள் கூட இத்தகு அமைப்பினைத் தங்களின் வியாபாரம் பெருக (மறைமுகமாக, கணிணி பயன்படுத்துவோருக்குப் பாதகமான சூழலை உருவாக்கி, அவர்களது கணிணியினை “வைரஸ்”, “ஸ்பாம்” மற்றும் அத்துமீறல் செயல்களுக்கு ஆளாகுமாறு செய்த பின்னர் பிறகு அதனை நீக்கத்) தங்களின் “வைரஸ்”, ஸ்பாம் கட்டுப்பாட்டுச் செயல் நிரைகளைப் பயன்படுத்துமாறு பரிந்துரை செய்வதாக ஒரு செய்தியும் கூட உண்டு. பெரும்பாலான “இலவச” மென்பொருட்களும், “ADWARE, SPYWARE செயல் நிரைகளும் இதில் அடங்கும்.

இந்த முறைதவறிய கூட்டணிக்கும், முறையாகச் செயலாற்றி இவர்களின் முயற்சியினை முறியடிக்கும் “ஸ்பாம்” (SPAM) எதிர்ப்பாளர்களுக்கும் நடக்கும் போட்டி ஒரு தொடர் கதை. இருவரும் தங்கள் அறிவினை நாளுக்கு நாள் வளர்த்துக் கொண்டு, யார் அறிவுடையவர் என்றறிய நடத்தும் போட்டியில், இந்த “ஸ்பாம் (SPAM) எனும் பிரச்சினையை மென்மேலும் பெரியதாக வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது இந்த “ஸ்பாம்” (SPAM) பிரச்சினை நமது இல்லத்தில் உள்ள கணிணியினை பாதிக்காது எப்படிக் காத்துக் கொள்வது எனப் பார்ப்போம்.

முதலாவதாக வீட்டில் உள்ள கணிணியினை “ஸ்பாம்” (SPAM) தாக்குதலில் இருந்து எப்படிக் காப்பது எனப் பார்க்கலாம். கொஞ்சம் உங்கள் பொது அறிவினைப் பயன்படுத்தினாலே இந்த “ஸ்பாம்” (SPAM) எனும் தொல்லையினைக் கட்டுப்படுத்த உங்களால் முடியும். இதன் அடுத்த பகுதியில் விவரங்களைப் பார்க்கலாம்.

"ஸ்பாம்” எனும் சாபக்கேடு - பாகம் 3

இது எப்படி சாத்தியமாகிறது?

“ஸ்பாம் “(SPAM) என்பது ஒரு வகையில் AIDS எனப்படும் ஆட்கொல்லி நோய் போன்றது. ஒழுக்கக் குறைவான உறவுகளால் AIDS ஏற்படுவது போல, சில தேவையில்லாத, நமக்கு முன்பின் தெரியாத தளங்களுக்குச் சென்று வருவதால் “ஸ்பாம்” (SPAM) தாக்குதலுக்கு நாம் ஆளாகக் கூடும். இதனைத் தவிர்க்க முடிந்தால், “ஸ்பாம்” (SPAM) தாக்குதலுக்கு நாம் ஆளாகும் நெருக்கடி குறையும்.

சில நேரங்களில், நாம் ஒழுக்கத்துடன் இருந்தாலும், ஒரு நெருக்கடி நிலையில் உடலுக்கு மாற்று ரத்தம் செலுத்துவது போன்ற அவசியம் ஏற்படும் பொழுது, HIV+ க்குச் சோதித்தறியாத நபரின் ரத்தம் நம்முடலுக்குள் செலுத்தப்பட்டால், நமக்கும் AIDS வரும் அபாயம் இருக்கிறது. அது போல, நாம் தேவையற்ற தளங்களுக்குச் செல்லாமலிருந்தாலும், அங்கு சென்ற வேறொருவரது கணிணி, “ஸ்பாம்” (SPAM) தாக்குதலுக்கு ஆளாகி, அவர்களிடமிருந்து நமக்கு வரும் மின்னஞ்சல் மூலம் நமது கணிணியும் “ஸ்பாம்” (SPAM) தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்புண்டு.

இவையெல்லாவற்றையும் விட, இன்று “ஸ்பாம்” (SPAM) தாக்குதல் என்பது ஒரு தொழிலாகவே ஆகி விட்டது. அதெற்கென ஒரு தனி அமைப்பே பணி செய்கிறது. இச்செயல் அத்து மீறி உங்கள் வீட்டினுள் நுழைந்து உங்களுடைய அனுமதி இல்லாது உங்கள் உடமைகளை எடுத்துச் செல்வது போன்றது.

மேலும் “வைரஸ்” (VIRUS) எனப்படும் கிருமிகள், நமது உடலுக்குள்ளே இருந்து உடலுக்கு நோய் உண்டாக்குவது போல, சில கணிணிக் கட்டளைகள் நமது கணிணியின் உள்ளே இருந்து கொண்டே நமது கணிணியின் செயல்பாடுகளை குறைக்கிறது அல்லது செயலிழக்கச் செய்கிறது. அண்மைக்காலத்தில் இந்த “ஸ்பாம்” (SPAM)” மற்றும் “வைரஸ்” கூட்டுறவு தங்களுடைய அழிவு வேலையினை மேலும் சிறப்பாகச் செய்ய உதவுகிறது.

கீழ்கண்டவற்றில் எந்த ஒரு செயலும் நமது கணிணி “ஸ்பாம்” (SPAM) தாக்குதலுக்கு உட்படக் காரணமாகலாம்.

1. இணைய தளத்தில், சில தேவையில்லாத தளங்களுக்குச் சென்று “BROWSE” செய்து வருவது.

2. பாலின செய்திகள் அல்லது அது குறித்த படங்களைப் பார்க்க, ஏதேனும் தளத்தில் நமது மின் முகவரியினைக் கொடுத்து விடுவது.

3. முன்பின் அறியாத இணையதளத்தில் அல்லது நபர்களிடம் நமது மின் முகவரியினைத் தருவது.

4. VIRUS பரவியதால் செயற்குறைபாடுடைய கணிணியிலிருந்து “Floppy Disk”, குறுந்தகடுகள் (Compact Disk) அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையில் செய்திகள், படங்கள் மற்றும் புள்ளி விவரங்களை பிரதி (Copy) எடுத்து நமது கணிணிக்கு மாற்றுவது.

5. கடவுள் பற்றிய நமது பக்தி அல்லது பயம், இவற்றைத் தவறாகப் பயன்படுத்தும் வகையில், இவற்றின் படங்களை மின்னஞ்சல் மூலம் நமக்கு அனுப்பி பலருக்கும் இத்தனை நாட்களுக்குள் அனுப்பாவிடில், பெரிய தீமை உண்டாகும் என்று பயமுறுத்தும் அல்லது அனுப்பினால் நண்மை உண்டாகுமென்று உக்குவிக்கும் “தொடர் மின்னஞ்சலில்” தொக்கி நிற்கும் VIRUS PROGRAM அல்லது “COOKIES மூலமும் இது சாத்தியமாகலாம். இந்த வகையில் நம்மையறியாமலே “ஸ்பாம்” (SPAM) எனும் தொல்லை தொடர, நாமும் ஒரு காரணமாகிறோம்.

6. வறுமை, பசி, நோய் முதலியவைகளால் அவதிப்படும் உயிர்களிடத்து நமக்கிருக்கும் இரக்க உணர்வுகள், தாஜ்மஹால், ஐஸ்வர்யாராய், அழகான மலர்கள், குழந்தைகளின் படங்கள் இவற்றினைப் பாராட்டும் நமது கலையுள்ளம் போன்ற நல்ல மனித நேய உணர்வுகளைத் தவறாகப் பயன்படுத்தும் வகையில் இவற்றின் படங்களை நமக்கனுப்பி, அதனை நாம் நமக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் நாமே விரும்பி அனுப்பச் செய்யும் தந்திரங்களால், நம்மையறியாமலே “ஸ்பாம்” (SPAM) எனும் தொல்லை தொடர, நாமும் ஒரு காரணமாகிறோம்.

7. சில இணைய தளங்களில், நமக்குப் பயன்படும் நல்ல செய்திகளை (உதாரணத்திற்கு: ஸிமென்டெக் நிறுவன வெளியீடான “கணிணி சார்ந்த பாதுகாப்பு ஆலோசனைகள்” என்ற புத்தகத்தின் “PDF” பதிப்பினை) “இலவசமாகத் தருவதாக ஆசை காட்டி” நமது மின்னஞ்சல் முகவரியினைப் பெற்றுக் கொள்வதும், பிறகு அதன் மூலம் “ஸ்பாம்” (SPAM) தொல்லைகளுக்கு நம்மை ஆளாக்குவதும் வழக்கமாகிவிட்டது.

8. சில நேரங்களில், நாமே தேவையான ஒரே செய்தியினைப் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்புகையில், “ஸ்பாம்” (SPAM) விளக்கப்படி அவையும் “ஸ்பாம் (SPAM) எனக் குறிப்பிடப்படும் அபாயம் உள்ளது. a. சில ஸ்பாம் (SPAM) கட்டுப்பாட்டு அமைப்புக்களில், ஒரு குறிப்பிட்ட மின்முகவரியிலிருந்து ஒரே செய்தியினை, 20க்கும் மேற்பட்ட மின் முகவரிகளுக்கு ஒரே நேரத்தில் அனுப்பப்பட்டால், அதனை “ஸ்பாம்” என இனம் காணுமாறு செயல் நிரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

இது குறித்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்?

முதலாவதாக, நாம் இந்த சமுதாயத்தின் ஒரு பொறுப்பான நபர். ஒரு நல்ல குடிமகனும் கூட. நம்மால் எவருக்கும் எந்தவிதமான தீங்கும் வராமல் பார்த்துக் கொள்வது நமது கடமையாகும். எனவே நமது கணிணியுடன் தொடர்பு கொள்ளும் எவரும் “ஸ்பாம் (SPAM) தொல்லைக்காளாகக் கூடாது.

அடுத்தபடியாக, நம்மில் பெரும்பாலோர் கணிணியைப் பயன்படுத்தி, அயல் நாட்டில் இருக்கும் நமது உறவினர்களுடன் நேருக்கு நேர் (CHAT) உரையாடுகிறோம்; மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்கிறோம். இவை மூலம் பல அந்தரங்கமான (Personal Information) செய்திகலைப் பறிமாறிக் கொள்கிறோம். அவை பாதுகாக்கப்பட வேண்டும்.

நம்மில் பலர் கணிணியைப் பயன்படுத்தி, இணைய தளம் மூலம் தொலை பேசிக் கட்டணம், மின்சாரக் கட்டணம், வங்கிக் கணக்கு மற்றும் பணப்பட்டுவாடா செய்ய வேண்டிய தேவை உடையவர்களாக இருக்கிறோம். அவை அடுத்தவர்களுக்குத் தெரியாது, பாதுகாப்பானதாக இருப்பது அவசியம்.

தற்பொழுது பல சேவைகள் “On Line Transaction” என்ற வகையில், பயணச் சீட்டுப் பதிவு, மருத்துவ ஆலோசனைகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளைக் கணிணி மூலம் நிறைவேற்றிக் கொள்கிறோம். வயதானவர்கள், உடற் குறைபாடுடையவர்கள் முதாலானோருக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

ஆனால் நம்மில் பெரும்பாலோர் ஒரு சில சுய நலமிகளாலும், விவரம் அறியாதவர்களின் செயல்களாலும் “ஸ்பாம்” (SPAM) எனும் இந்தத் தொல்லைக்காளாகி, கணிணியின் முழுப் பயனையும் பெற முடிவதில்லை.

இன்றைய காலகட்டத்தில், நமது அலுவலகப் பணிகள் அனைத்தும் கணிணிமயமாக்கப்பட்ட நிலையில், நாம் இந்த “ஸ்பாம்” (SPAM) குறித்த விழிப்புணர்வு உடையவர்களாக இருக்க வேண்டுவது காலத்தின் கட்டாயம்.

இந்த “ஸ்பாம்” (SPAM) எனும் தொல்லையினைக் கட்டுப்படுத்துவதும் ஒரு தொழில்; பணம் செய்யும் வாய்ப்பு என்ற வகையில், அதெற்கெனவே பல தனி அமைப்புக்கள் துவங்கப்பட்டு, விசேஷக் கண்காணிப்பும் நடக்கிறது. இவர்களைப் பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்காக நியமித்திருக்கின்றன.

அறிந்தோ அறியாமலோ, “AIDS” நோய் வந்தவர்களை இந்த உலகம் ஒதுக்கி வைப்பது போல, பன்னாட்டுத் தகவல் தொடர்பு அணுகுமுறையில், விரும்பத்தாகாத விளைவுகளை சமுதாயத்திற்கு ஏற்படுத்தும் “ஸ்பாம்” (SPAM) உண்டாக நமது கணிணி காரணமாக இருப்பதாகத் தெரிய வந்தால், மேற்படி கண்காணிப்பு நிறுவனங்கள் நமது கணிணியினை இணைய தளம் மூலம் தொடர்பு கொள்ள விடாமல் தடுக்கவும் கூடும். இதன் பின் விளைவுகளை ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள். நமது உரிமைகள் மறுக்கப்படக் காரணமான இந்த “ஸ்பாம்” (SPAM) என்பது எவ்வளவு கொடுமையானது என்று புரியும்.

1. இதனை எப்படிக் கண்டறிவது/கட்டுப்படுத்துவது எப்படி?

2. இதற்கு சட்ட ரீதியான தீர்வு உண்டா?

இவற்றைப் பற்றி வரும் தொடரில் விளக்கமாகப் பார்ப்போம்.

Monday, May 25, 2009

"ஸ்பாம்” எனும் சாபக்கேடு - பாகம் 2

முதற்பகுதியில் “ஸ்பாம் “ (SPAM) பற்றிய ஒரு அறிமுகம் பார்த்தோம். ஸ்பாம் (SPAM) என்பது எப்பொழுது வேண்டாத ஒரு பிரச்சினையாகிறது நடக்கும் சாத்தியக் கூறுகள் என்ன என்பதனை இக்கட்டுரையில் பார்ப்போம்.

“ஸ்பாம்” (SPAM) என்பது எப்பொழுது ஒரு பிரச்சினையாகிறது?

1. நாம் விரும்பாத ஒரு செய்தியினை, நாம் கேட்காத பொழுதும், நம் மீது திணிக்கப்படும் பொழுதும்,

2. நாம் விரும்பாத அந்த செய்திகள் திரும்பத் திரும்ப அதிக அலவில் (in multiples) நம்மை வந்து தாக்கும் பொழுதும்,

3. நமது கணிப்பொறியின் ஞாபக சக்தி (Memmory Power), செய்திகளை சேமித்து வைக்கும் வசதி (Hard disc space) செயலாக்கத்திறன் (Performance, Speed of Processing) முதலியன் இதனால் குறையும் பொழுதும்

4. இதைத் தவிர்க்க, நாம் ஒவ்வொரு முறையும் இம்மின்னஞ்சல்களை அழிக்கும் வேலையினைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும் பொழுதும்

5. நாம் பயன்படுத்தாத போதும் இறக்கும் நேரம் (Down Loading Time), தொலைத் தொடர்புக் கட்டணம் முதலியனவற்றிற்காக அதிகக் கட்டணம் கட்ட வேண்டிய நிலை வரும் பொழுதும்,

6. நமக்குத் தெரியாமலே, நமது மின்னஞ்சல் முகவரியில், நம் பெயரில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாகத் தெரிய வரும் பொழுதும்,

7. நமக்குத் தெரியாமலே, நமது கணிணி, நம்க்கு முன்பின் அறிமுகமில்லாத யாரோ ஒருவரால் இயக்கபடுகிறது எனவும் இது ஒரு அத்து மீறிய செயல் (உரிமை மீறல்) அறிய வரும் பொழுதும்,

8. அத்தகு செயல்களால், வழக்கு விவகாரங்கள் உண்டாகும் பொழுதும்,

9. இது போன்ற நிகழ்ச்சிகளால் சட்ட ரீதியான பிரச்சினை ஏற்பட்டு, நமது கணிணி “ஸ்பாம் கட்டுப்பாட்டுச் சேவையினரால் தடை செய்யப்பட்ட ஒன்றாக, இணைய தளத் தொடர்பு துண்டிக்கப்படும் வாய்ப்பும் அண்மைக் காலத்தே இருக்கின்ற காரணத்தால், நாம் கணிணி சமுதாயத்தால் ஒதுக்கப்படுவோம் என்ற நிலை வரும் பொழுதும்

இது போல பற்பல வகையிலும் நாம் தொல்லைக்காளாகும் பொழுது, இந்த “ஸ்பாம்” ஒரு பெரிய பூதமாக உருவெடுத்து நம்மைப் பயமுறுத்துகிறது. இது எல்லாமே நமக்க்த் தெரியாமலேயே நடந்து இறுதியாக பாதிக்கப்பட்ட பின்னரே நமக்குத் தெரிய வருவதுதான் மிகக் கொடுமை.

இப்படியெல்லாம் கூட நடக்குமா?

இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்ற கேள்விக்கு, நடந்திருக்கிறது என்று கீழ்க் கண்ட அனுபவங்களை அடைந்தவர்கள் அளிக்கும் பதில், உறுதி செய்யும்.

உங்களுக்கும் இவ்வித அனுபவங்கள் ஏற்பட்டால், நீங்கள் ஸ்பாமினால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

1. எனக்குத் தொடர்பேயில்லாத மின் முகவரியிலிருந்து பல மின்னஞ்சல்கள் எனக்கு வருகிறது. இவர்கள் எனக்கு முன்பின் அறிமுகமில்லாதவர்கள்; அனுப்பப்படும் செய்திகளும் நான் விரும்பிக் கேட்டதில்லை.

2. நான் கேட்காமலேயே பல் பொருட்கள் மற்றும் சேவை பற்றிய விளம்பரங்கள் எனக்கு மின்னஞ்சலில் வருகிறது. இதில் குறிப்பிட்டபடி “REMOVE ME” கோரிக்கையினை “கிளிக்” செய்தும் கூட இது தொடர்கிறது சில சமயங்களில் அதிகமாகவும் ஆகிறது. இது எரிச்சலூட்டுவதாக இருக்கிறது.

3. நான் அனுப்பாத பொதும், என் பெயரில் மின்னஞ்சல் வருவதாக, சில சமயம் பிறரிடமிருந்து, எனக்குத் தெரிய வருகிறது. பன்னாட்டு அரங்கில், இது ஒரு வகையில் குற்றமென அறிய வரும் பொழுது அது எனக்குக் கலக்த்தைத் தருகிறது. நான் செய்யாத குற்றத்திற்கு தண்டனை கிடைக்குமோ என்ற அச்சம் என்னை வாட்டுகிறது.

4. எனது தனிப்பட்ட தகவல்கல் (வருமான வரி குறித்த PAN, வங்கிக் கணக்கு எண்கள் மற்றும் இன்ன பிற செய்திகள்) எனக்குத் தெரியாமலேயே வெளியாகியிருக்கிறது என்பதும், எனது வங்கிக் கணக்கிலிருந்து பணம் பட்டுவாடா ஆகியிருக்கிறது என்பதும் எனக்கு அதிர்ச்சியூட்டும் செய்திகளாம்.

5. நான் அனுப்பியதாக எனது மேலதிகாரிக்கும், அவர் அனுப்பியதாக எனக்கும் வரும் மின்னஞ்சல்களை அப்படியே ஏற்றுக் கொள்ளவும் முடிவதில்லை; ஒதுக்கித் தள்ளவும் முடிவதில்லை. ஏற்றுக் கொண்டு அவரை அணுகினால், அவர் இத்தகு செய்திகலைத் தான் அனுப்புவதில்லை எனக் கூறுவதோடு இத்தகைய இடையூறுகளால் தனது கவனம் சிதறுவதாகக் குற்ரம் சாட்டுகிறார். இதனால் எங்கல் அலுவலப் பணி சார்ந்த உறவு முறைகள் பாதிக்கபடக் கூடும் என நான் அஞ்சுகிறேன். இது எனது பதவி உயர்வு மற்றும் இதர முன்னேற்றங்களையும் கூட பாதிக்கலாம்.

6. எனது மின்னஞ்சல் IN BOX வேண்டாத இத்தகு செய்திகளால், நிரம்பி வழிகிறது. இதனை அழிப்பது எனக்கு ஒரு கூடுதல் வேலையாகிறது. இதனைச் செய்யாவிடில், புதிய மின்னஞ்சல்களைப் பெற இடம் இருப்பதில்லை; பெற முடிவதில்லை.

7. எனக்கு அறிமுகமில்லாதவரிடமிருந்து, பாலின உறவு குறித்த அருவருப்பான செய்திகள், படங்கள் மின்னஞ்சலில் வருகிறது. இதனால், குடும்பத்தில் நல்லுறவு கெடும் நிலையிருக்கிறது. எனது வயது வந்த மகன் மற்றும் மகள் இவர்கள் முன்னிலையில், கணிணியைப் பயன் படுத்தி மின்னஞ்சல்களைப் பார்க்க முடிவதில்லை. அவர்கள் “பார்வையில்” எனது “IMAGE” பாதிக்கப்படுகிறது.

8. அவர்களைக் கணிணியினைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாத அவல நிலை ஏற்படுகிறது.

9. கடந்த சில மாதங்களாக, எனது தொலை பேசிக் கட்டணம் அதிகரித்து வருகிறது. ஆனால் அந்த அளவு நானோ அல்லது எனது குடும்பத்தாரோ கணிணியையோ, தொலை பேசியினையோ பயன்படுத்துவதில்லை.

10. “MUSIC INDIA ON LINE” போன்ற இணையயதளத்திலிருந்து ஒரு நல்ல பாடல்களைக் கூட சரிவரக் கேட்க முடியாதபடி வேண்டாத விளம்பரங்கள் இடையிடையே வந்து எரிச்சலூட்டுகிறது.

11. இதையெல்லாம் தடுக்க நான் பல புதிய மென்பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. இதற்காக, எனது கணிணியின் சேமிப்பு வசதி, நினைவாற்றல் மற்றும் செயல் திறனை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. எனது கணிணியின் பராமரிப்புச் செலவு அதிகரிக்கிறது.

மின்னஞ்சல் அல்லது இணைய தளத்தினைப் பயன்படுத்துவோர் இத்தகைய தொல்லையினை அனுபவிக்காதிருந்தால், அவர்கள் மிகவும் “அதிர்ஷ்டசாலிகள்”; தடுக்க முடிந்தால் புத்திசாலிகள்.

இது எப்படி சாத்தியமாகிறது ? இது குறித்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்?

இந்தக் கேள்விகள் நியாமே. இருப்பினும், வேகமாக மாறிவரும் விஞ்ஞான யுகத்தில், இணைய தளம், மின்னஞ்சல் போன்ற பொது இடங்களில் அன்றாடம் பயணிக்கும் நாம் கவலைப்பட்டுக் கட்டுபடியாகாது என்றாலும், கவனமாக இருக்க வேண்டுவது அவசியமாகிறது. வருமுன் காத்தல் சிறப்பு.

இவற்றைப் பற்றி வரும் தொடரில் விளக்கமாகப் பார்ப்போம்.

தொடரும்......

"ஸ்பாம்” எனும் சாபக்கேடு - பாகம் 1


இது ஒரு “முடா - விரையம்” (MUDA – WASTE) – ஒரு விளக்கம்

கணிப்பொறி, இணையதளம், மின்னஞ்சல், வலைத்தளம் இவையெல்லாம் இன்றைய கவர்ச்சிகள். விஞ்ஞானமும், மின்னணுத் துறையும், தொழிற்துறை வளர்ச்சியையும் ஒன்றிணைத்து மனிதனால், மனித குலம் பயன்பட உண்டாக்கப்பட்ட அற்புதங்கள். நல்லதும் தீயதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல. வசதிகள் பெருகும் அதே நேரத்தில், அதனை தவறாகப் பயன்படுத்தும் போக்கும் அதிகரித்து வருவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இன்றைய கணிப்பொறி உலகினை, அதிலும் குறிப்பாக “ஈமெயில்” எனப்படும் மின்னஞ்சலைப் பயன்படுத்துவோரிடையே பெரிதும் கலக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பெரும் பிரச்சினையாக இருப்பது “ஸ்பாம்” என்றால் மிகையாகாது. எனவே இது குறித்து ஒரு விழிப்புணர்வு இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமாகிறது. அதுவே இக்கட்டுரையின் நோக்கம்.

ஜப்பானிய மொழியில் “MUDA” என்றால், தமிழில் “விரையம்” (Waste) அல்லது “வீணாவது” என்று பொருள். நேரம் பொன் போன்றது என்பது நாமெல்லாம் அறிந்த ஒன்றே. பொன் போன்ற நேரத்தை வீணடிக்கும் “ஸ்பாம்” (SPAM) என்ற இந்தத் தொல்லையினை “நேர விரையம்” என்று குறிப்பிடுவது சரிதானே! இதற்கு “ஸ்பாம்” (SPAM) எனும் இப்பெயர் எப்படி வந்தது என்பதற்குப் பல செய்திகள் உண்டு. இதனை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது நமது முதன்மையான நோக்கம் என்றிருப்பதால், பெயர்க் காரணங்கள் குறித்து இங்கே விவரிக்கவில்லை. இதனைக் கட்டுப்படுத்துவது எப்படி சாத்தியமாகிறது என இனி பார்ப்போம்.

“ஸ்பாம் (SPAM) என்றால் என்ன?

ஆரம்பத்தில் “நாம் வேண்டாத ஒரு செய்தியினை, நம் மீது வலுக்கட்டாயமாகத் திணிப்பது” என்பது ”ஸ்பாம்” (SPAM) என்றிருந்த நிலை மாறி, காலப்போக்கில் பல அபாயகரமான பரிமாணங்களை இந்த “ஸ்பாம்” (SPAM) அடைந்துவிட்டது. இது நமக்கு வேண்டாதது எனக் கண்டுபிடிக்க, கண்டுபிடித்தபின் அதனை அழிக்க ஆகும் நேர விரையம், கணிசமானது. இதனால் ஒருவரின் நேரம் வீணாவது மட்டுமின்றி, பண விரையமும், உண்டாக ஏதுவாகிறது. சில சமயங்களில், இதனைத் திணிப்பவர் யாரென்பதே தெரியாததோடு, நமக்கே தெரியாமல், நமது கணிணி (Computer) யாரோ ஒரு மூன்றாம் நபரின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் வாய்ப்பிருப்பதால், நமக்கே தெரியாமல் நமது “அந்தரங்கம்” (Privacy/Confidential) அம்பலமாகும் அபாயமிருப்பது மற்றொரு அதிர்ச்சி தரும் செய்தியாகும். தற்பொழுது நமது கணிணிதனை நாமறியாமலே மூன்றாம் நபர் ஒருவர், சட்ட முறைகேடாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பும் அதிகரித்து விட்டது. இதனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளும் வரும் வாய்ப்பு இருப்பதும், இதற்காக ஒரு பெரும் கூட்டமே முழு நேரப் பணி புரிகிறது என்பதும் மன உளைச்சலுக்குக் காரணமாகிறது.

சாதாரணமாகப் பார்ப்போமேயானால், ஆரம்பத்தில், இது ஒரு வகையில், மின்னஞ்சல் மூலம் குறைந்த விலையில் விளம்பரம் செய்யும் ஒரு விளம்பர உத்தியாக இருந்தது. அனுப்புவருக்கு, மிகக் குறைந்த செலவில், பல்லாயிரக் கணக்கான நபர்களுக்கு விளம்பரம் சென்றடையும் ஒரு எளிய வழி.

இணைய தளத்திற்கான இணைப்புகள் தொலை பேசி இணைப்பின் மூலமாகத்தான் செயல்படுகிறது என்பதும், அதற்காக, தொலைத் தொடர்பு வசதிக்கு நாம் கட்டணம் கட்ட வேண்டும் என்பதும் நாமறிவோம்!

ஆனால் இத்தகு மின்னஞ்சலைப் பெறுபவர், பெரும்பாலும், மின்னஞ்சலைத் திறந்து பார்த்த பின்னரே, அது தனக்கு வேண்டாத ஒன்று என அறியும் வாய்ப்புள்ளதால், அந்த மின்னஞ்சலை இறக்கம் செய்தல், திறந்து பார்த்தல், வேண்டாமெனில், அழித்தல் இவற்றுக்கெல்லாம், ஆகும் நேரம் வீண்!. அது தவிர, தான் பெறும் மின்னஞ்சலின் அளவினைப் பொறுத்து மின்னஞ்சல் இணைப்பிற்குக் கட்டணம் கட்டும் சேவையில் இருப்பாரேயானால், அவரது இணைய தள இறக்கக் (Down Loading) கட்டணமும் மற்றும் தொலை பேசிக் கட்டணமும் அதிகரிக்கும். இது மிக முக்கியமான பிரச்சினை. எண்ணிக்கையில் அதிகமான பொழுது, மின்னஞ்சல் இறக்கும் நேரம் அதிகரிக்கும், அதிகப்படியான DISC SPACE தேவைப்படும். எனவே சிறப்பான சேவை வேண்டுமாயின், நமது கணிணியின் HARAD DISC, RAM மற்றும் PROCESSOR இவற்றின் தரம் மற்றும் அளவினை அதிகரிக்க நாம் செலவழிக்க வேண்டியிருக்கும்.

இந்த வகை விளம்பரங்களை உள்ளடக்கிய மின்னஞ்சலை சேமித்து வைக்கும் இணைய தளம் நடத்தும் HOTMAIL, YAHOO, GOOGLE, SIFI போன்ற சேவையாளர்களும் தங்களது வசதிகளைப் பெருக்க வேண்டியிருக்கும். அதற்காகும் செலவினை அவர்கள் அந்த சேவையினைப் பயன்படுத்துவோரிடமிருந்துதான் பெற வேண்டியுள்ளதால், அவர்களின் சேவைக் கட்டணங்கள் அதிகமாகும். இப்படியாக இந்த “ஸ்பாம்” (SPAM) எல்லோருக்கும் செலவினை அதிகரிக்கிறது.

அந்த வகையில் “மொபைல்/செல் போனில்” (Mobile Phone/Cell Phone) வரும் SMS எனப்படும் குறும்செய்திகள் கூட ஒருவகை “ஸ்பாம்” தான். தொலைக் காட்சியில் நாம் மிக ஆர்வமாக ஒரு நிகழ்ச்சியினைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, இடையிடையே வரும் விளம்பரங்கள் கூட ஒருவகையில் “ஸ்பாம்” தான். அவர்களுக்கு, இதன் மூலம் வருமானம் கிடைக்கிறது என்பதற்காக, நாம் விரும்பாவிட்டாலும் அந்த விளம்பரங்களை நாம் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சில சமயங்களில் அளவுக்கு மீறின வகையில், வெறுப்பாகவும், பிரச்சினையாகவும் கூட இருக்கிறது. அவை பொழுது போக்கு என்ற வகையில், நமக்கு வேண்டாத பொழுது தொலைக் காட்சியினை நிறுத்தி வைக்க முடியும். அதனால் இழப்பு ஒன்றுமில்லை. ஆனால் கணிணியில் வரும் மின்னஞ்சலை அது போல, நிறுத்த முடியாதல்லவா? அதற்காகத் தடை செய்யும் வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

1. இது எப்பொழுது சிக்கலான பிரச்சினையாகிறது?
2. இதன் அனுபவம் எப்படியிருக்கும்? இது குறித்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?
3. இதனை எப்படிக் கண்டறிவது/கட்டுப்படுத்துவது எப்படி?

இவற்றைப் பற்றி வரும் தொடரில் விளக்கமாகப் பார்ப்போம்.

தொடரும்.....

சின் பெங் நாடு திரும்ப அனுமதியுங்கள்

தற்பொழுது 85 வயது ஆகும் சின் பெங் தன்னுடைய இறுதிக் காலத்தை சொந்த நாட்டிலேயே கழிக்கும் பொருட்டு அவரை நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று அனைத்துலக சிட்டிஸன் (சிஐ) என்ற அமைப்பின் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் அப்துல் ரசாக் மற்றும் அவரது அமைச்சரவைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நம்முடைய மோசமான எதிரிக்குக் கூட நாம் கருணை காட்ட வேண்டும் என்று நபிகள் நாயகம் கூறியதை பின்பற்றியே இந்த வேண்டுகோளை முன் வைப்பதாக இத்ரிஸ் கூறினார்.

முகம்மது அவர்கள் ஒரு சொட்டு இரத்தம் கூட சிந்த விடாமல் கருணையோடும் தயாள சிந்தையோடும் மெக்கா புகுந்ததை நாம் ஓர் உதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

சின் பெங் தன்னுடைய 15வது வயதிலிருந்தே பிரிட்டிஷ் அராஜகத்தை எதிர்த்து வந்திருக்கிறார். பிரிட்டிஷ் ஆளுமையிலிருந்து, ஆக்கிரமிப்பிலிருந்து, கொடுமையிலிருந்து தன்னுடைய நாட்டை விடுவிக்க நிறைய அர்ப்பணிப்புக்களைச் செய்துள்ளார் என்றார் இத்ரிஸ்.

மறைந்த துன் அப்துல் ரசாக் போன்றே, சின் பெங்கும் இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியர்கள் மலேசியாவில் ஆதிக்கம் செலுத்தியதை எதிர்த்தார். அவருடைய இடையறா போராட்டத்தின் மூலம் நம்முடைய நாட்டு மக்களின் மானத்தைத் காத்தார்.

மலாயா சுதந்திரம் பெற்றதற்கு சின் பெங், ரஷிட் மைடின், அப்துல்லா சிடி, சம்சியா •பாக்கே போன்றவர்களின் விடுதலைப் போராட்டமும் முக்கிய காரணம் என்பது வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது என்பதனையும் இத்ரிஸ் நினைவுப்படுத்தினார்.

நாடு விடுதலை பெற்ற பின்னரும் சின் பெங் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதை பலரும் ஏற்கவில்லை. ஆனால் இதைக் காரணமாக வைத்து நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு காலணித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதில் சின் பெங் பங்காற்றியிருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அம்னோஇ மசிசா, மஇகா போன்ற கட்சிகளைத் தவிர்த்து இடது சாரி கட்சிகளும் கூட மலேசியாவில் சுதந்திரத்திற்கு பாடுபட்டனர் என்று துன் இஸ்மாயில் தன்னுடைய உரையில் கூட குறிப்பிட்டிருந்தார்.

நம்முடைய அண்டை நாடுகளான தாய்லாந்தும், இந்தோனேசியாவும் கூட கம்பூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் தலைவர்களை எதிரிகளாகக் கருதாமல் அவர்களை அரவணைத்துக்கொண்டுள்ளது.

தாய்லாந்து கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கெரிலா போராளியான புரொம்மின் லெட்சுரிடெஜ்தான் தாய் ராக் தாய் கட்சியைத் தோற்றுவித்தார். தக்சின் அரசாங்கத்தின் பொருதாளாரப் பிரிவின் துணை பிரதமராகவும் பதவி வகித்தார்.

இந்தோனேசியாவில் அரசியலமைப்பு நீதிமன்றம், முன்னாள் இந்தோனேசியா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடும் உரிமையை மீட்டுக்கொடுத்துள்ளது.

நம் அரசாங்கம் 12.12.1989ல் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியோடு ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்தில் மலேசிய கம்யூனிஸ்ட் கட்சியைக் கலைக்கும் பட்சத்திலும் ஆயுதங்களைக் கைவிடும் பட்சத்திலும் கட்சியின் உறுப்பினர்கள் மலேசியாவுக்குத் திரும்ப வரலாம் என்று குறிப்பிட்டுள்ளதை அரசாங்கம் பின்பற்ற வேண்டும்.

மலேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் அப்துல்லா சிடி, சம்சியா •பாக்கேஇ,மூசா அமாட் போன்றவர்கள் மலேசியா திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறே சின் பெங்கும் அனுமதிக்கப்பட வேண்டும். சின் பெங் மலேசிய அரசாங்கத்திற்கு ஆற்றிய பங்கினையும் நினைவு கூர்ந்து அவர் நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும்.

மலேசிய அரசாங்கம் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி கருணையையும் தயவையும் காட்டி சின் பெங் நாடு திரும்ப வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அனைத்துலக சிட்டிஸன் அமைப்பின் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

Friday, May 22, 2009

தமிழகமும் தெய்வத் தத்துவமும்-தமிழும் தமிழகமும் ஐந்தின் தத்துவம்.(4)

தமிழகமும் தெய்வ தத்துவமும்.

சுவாமி சரவணானந்தா.

தமிழும் தமிழகமும்

ஐந்தின் தத்துவம்.
“தமிழ் மண்டலம் ஐந்தும் தத்துவமாமே” எனத் திருமூலர் ஓதியுள்ளார். மேலும் அவர்

‘ஐந்தின் பெருமையே அகலிடமாவதும்
ஐந்தின் பெருமையே ஆலயமாவதும்
ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெய்யப் பாலனு மாமே”

என்கின்றார்.

இத் தமிழ் என்ற சொல் த்+அ, ம்+இ, ழ் என வல்லின, மெல்லின இடையின மெய்யெழுத்து மூன்றும், மூலாங்கப் பிரணவமாகிய அகரம், அருட் பிரணவமாகிய இகரம் ஆகிய உயிரெழுத்து இரண்டும் சேர்ந்து ஐந்தெழுத்தாகி, கடவுள் தத்துவத்தை யுணர்த்துவதாம்.

நம் பிரபஞ்சத்தில் நிலமும் நீரும் கீழே தங்கியிருப்ப, தீயும் காற்றும் வானும் மேலோங்கியுள்ளன. இவ்வுண்மை ஐங்கோணத்தால் குறிக்கப்படது.

“நிலமைந்து நீர் நான்கு நீடங்கி மூன்றே
உவமையிரண்டு ஒன்று விண்” (ஒளவை குறள்)

என்றதனால் தெளியலாகும்.

மேலும் இத் தமிழகம் பாண்டிய மண்டலம், சோழமண்டலம், சேர மண்டலம், கொங்கு மண்டலம், தொண்ட மண்டலம் என ஐந்தாகப் பிரித்துக் கூறப்படும். பழம் பதியாகிய பாண்டிய மண்டலத்தில் அடங்குவது ஈழ மண்டலம். இவற்றில் நம் தமிழும் தமிழ்த் தெய்வமும் தழைத்து ஓங்கியுள்ளன.

உள்ளத்தறிவில் ஒளிவிடும் கடவுளை அகப்பொருள் இலக்கணத்தால், புனைந்து புனைந்து கூறி புறத்தேயும் இலக்கியக் கோயில்களையும் சிற்ப ஆலயங்களையும் ஆக்கியுள்ளனர் நம்மனோர். அன்பின் ஐந்திணையாக உரைக்கப்படுவது அகப்பொருள்.

ஐந்திணையாவன: குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ப. ஆன்ம விசாரத்தில் கடவுள் அணுவடிவே நமது ஆன்மாவாய் உள்ள உண்மை குறிஞ்சி நிலத்தின் கருப்பொருளாய்க் குறிப்பர். அவ்வக நிலையை மறந்து மாயா பிரபஞ்சத்தில் அல்லல் பட்டலைதல், தலைவன் பிரிவால் ஏற்படும் பாலை நில அனுபவமாம். பக்குவ காலம் வரும் வரை பிறந்து பிறந்து உழன்றுகொண்டிருத்தல் முல்லைப் பொருளாகவும், பந்தங்களால் ஏற்பட்ட தொல்லையால், உலகோடு ஊடி, உலகைத் துறந்து செல்லல் மருதநிலப் பொருளாயும், அப்புறத் துறவாலும் பயனில்லாது வருந்தி ஆண்டவன் அருளை அடைய இரங்குதல், அன்பு மயமாகுதல் நெய்தல் திணையின் கருவாகவும் கொண்டார்கள்.

இப்படியுள்ள அகப் பொருள் உண்மையால், கடவுளோடு இரண்டறக் கலந்த அனுபவத்தை வழங்கவே தமிழ்த் தெய்வ வழிபாடு தோன்றியது. உண்மையை உள்ளபடி அறிந்து கொள்ளாததினால், இலக்கண இலக்கியங்களும், தெய்வ ஆலயங்களும், கொள்கை கோட்பாடுகளும், விழா வைபவங்களும் பலவாகப் பெருகியும், குறிக்கோளை வழங்கத் தவறின.

தமிழகமும் தெய்வ தத்துவமும். (3)

மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் வெளியிடப் பெற்றது.
(4.1.1981).
சுவாமி சரவணானந்தா.
கந்தழி நிலை கற்பனை நிலையாய் மாறியது.

ஆதித் தமிழகத்தில் தோன்றிய மக்கட் கூட்டம் பெருகிப் பல்கி நெடுந்தூரம் பிரிந்து சென்று வாழலானார்கள். இப்பொழுதுள்ள ஆஸ்திரேலியா முதல் மேற்கே தென் அமெரிக்காவரை நிலப்பகுதியாயிருந்ததால், அது வரை சென்று வாழ்ந்து வந்தார்கள். பின்னர் பழந் தமிழகமும் அதைச் சேர்ந்த பல பகுதிகளும் மறைந்து விட்டதாலும், வேறு பல புதிய நிலப்பகுதிகள் தோன்றியதாலும் அங்கங்கு தங்கி வந்த அவர்களின் பிற் சந்ததியார்க்கு, சீதோஷ்ணத்தாலும், மற்ற சூழ்நிலையாலும் தேக கருவிகரண வேறுபாடும், பழக்க வழக்க வேறுபாடும் ஏற்பட்டன. நெற்றிக்கண் தோற்றமே மறைந்து விட்டது. அதனால் அக உண்மை உள்ளவாறு காண முடியாது, சிரநடு ஆன்ம பீடத்தை மன ஒருமையிற் கண்டு பலப்பலவாக தெய்வ நிலையைக் கற்பனை செய்யலாயினர். அந்தக் கற்பனையில் கண்டது, முதலாவது லிங்க வடிவம்.இது நம் ஆன்ம அணு விளங்கும் தலை நடு இடத் தோற்றமாம். இந்த லிங்க நிலை அகத்தில் கண்டு புறத்தில் ஞாயிறு வழிபாடு செய்யப்பட்டது. இதனால் ஒரு காலம் லிங்க வழிபாடும், ஞாயிறு வழிபாடும் உலகெல்லாம் பரவியிருந்தன, அவற்றின் சின்னம் இன்றும் உலகில் பல்வேறிடத்தில் காணப்படுகின்றன.

பின்னர், பொறிபுலன் விரிவால் புற வாழ்வு பெருகப்பெருக, புற வழிபாடு, கலை நோக்கோடு பற்பல சின்னங்களாகவும், சித்திர, சிற்ப விக்கிரகங்களாகவும், தத்துவ கற்பனா ஆலயங்களாகவும் வளர்ந்தன.

இப்பொழுதுள்ள நம் தமிழகத்தில் வந்து தங்கியிருந்த பழந்தமிழரின் கூட்டம் மலைகளிலிருந்து அக ஜோதியை வேலாகக் கொண்டு வேலன் வழிபாடாக முருகன் வழிபாடாகச் செய்து வந்தனர். லிங்க வழிபாடு சிவ வழிபாடாய்விரிந்திட, தமிழ் மொழியொடு வளர்க்கப்பட்டது தலை, இடை, கடையாய தமிழ்ச் சங்கங்களில், இப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிய மேல் நாட்டவர்களின் கப்பல் வாணிப உறவாலும், வட நாட்டவர்களின் தலையீட்டாலும் நம் தமிழின் சிறப்பும் தத்துவமும் எங்கும் பரவின. திரைகடல் வழியாய் வந்து புகுந்தவர்கள் தமிழர்களுடன் கலந்து ஒன்று பட்டு தமிழையும், கடவுள் தத்துவத்தையும் வளர்க்கலாயினர். தமிழ்ப் பெருஞ் சித்தர்களின் சேர்ப்பினால், தென்னாடு முற்றும் தமிழ் நாடாக விளங்கியது. “தென்னாடுடைய சிவனே பொற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று துதிக்கலாயினர். இச் சமயம் வடவர்கள் வந்து நுழைந்து, தமிழரொடு கலவாது, தம் மொழி, கருத்து, வாழ்க்கை முறை முதலியவற்றை தமிழினத்தில் புகுத்த பலவாறாக முயன்றனர். அதன் பயனாக தமிழகத்தின் வட எல்லையிலும், மேற்கெல்லையிலும் வாழ்ந்தவர்களின் மொழி, பழக்க வழக்கம் முதலியன மாற்றமடைந்தன. இப்படியாக வடக்கில் தெலுங்கும், மேற்கில், மலையாளம், கன்னடம், துளுவமும் தோன்றின. எஞ்சிய தமிழகப் பகுதியில் வடமொழி எட்டி முட்டிப் பார்த்தும், மூர்த்தி, தல, தீர்த்தங்களோடும் பிறப் பிறப்புச் சடங்கோடும், பூஜை, அருச்சனை கிரியைகளோடும் நின்று விட்டன. இப்பொழுது தமிழகம் மறுமலர்ச்சி பெற்று ஓங்கத் தொடங்கியுள்ளதால் தடையானவை யாவும் ஒழிந்து தமிழனது உண்மைக் கடவுள் வழிபாடு எங்கும் விளங்கும். இனி திரை கடல் வழி வந்து தமிழர் ஆனவர்கள், யாவரும், திராவிடர்கள் என வழங்கப்படுகின்றனர். ஆதலின் இத் தென்னாட்டினர் திராவிட நாட்டினரே என்றும், இந் நாடு திராவிட நாடு என்றும் கொள்ள வேண்டும். நம் தென்னாட்டுக் கோயில்கள் யாவும் திராவிட சிற்ப தத்துவத்தைக் கொண்டுள்ளனவாம்.

ஜோதி ஞாயிற்றின் தத்துவ சின்னங்கள் சிவலிங்கம் முதலாக வந்தன. அக அனுபவத்தில் நிற்கும்போது ஆத்மலிங்க நிலையை சூழ்ந்து தோற்றிய ஜோதி நிலையே அதன் பீடமாக ஆவிடையாகவுள்ளது. அந்த ஆவிடையே, ஆ = பசு, விடை = நந்தி. இதுவே சிவன் ஏறும் இடபமாகக் கூறப்படுகிறது, ஆவினிடத்து பெறும் பஞ்சகவ்யம் (பால், தயிர், நெய், கோசலம், கோமயம்) சிவபெருமானின் அபிஷேகப் பொருளாம். இவை ஐந்தும் நன் ஆன்மாவைச் சூழ்ந்த ஐம்பூத தேகத்தை விளக்கப் படுத்துபவை. ஆதலில், இவ் ஆவிடை சிவனது அருட் சக்தியாகவும், அவர் தம் வடிவு, பஞ்ச லிங்கமாகவும் ஐந்தெழுத்தே பெயராகவும், ஆக்கலாதி ஐந்தொழிலே செயலாகவும் கூறப்படும். ஐந்தொழில் நடனம் விளக்க நடராஜ வடிவத்தை ஆக்கினர். இது போல சில சில கருத்தை விளக்கவே, விநாயகர், சுப்பிரமணியர், திருமாலின் பல்வேறு வடிவங்கள், பல் வேறு சக்திகளின் உருவங்கள் ஆக்கி, சாதாரண மனித சக்திக்கு அப்பாற்பட்ட யோக ஞான தபோ சக்தியால், இயற்கைச் சூழ்நிலை, கால தேசத்திற்கும் பொருந்த வழிபாடு செய்யவும், அதனால் பல பல நன்மைகள் பெறவும் ஏற்படுத்தியுள்ளனர். மனித வர்க்கம் விழிப்புற்ற இக்காலம் மேற்படி தெய்வத்துவ உண்மையை உள்ளவாறு அறிந்து அன்பும், அறிவும் ஓங்கி, அருள் வண்ண வழிபாடு எங்குஞ் செய்து பெரு நன்மை அடைய வேண்டியதாகும்.

அகஜோதி லிங்கத்தையும் அதன் பீடமாகிய ஆவிடையையும் புறவானில் திகழும் ஜோதி ஞாயிறும் அதனைச் சூழ்ந்து கறங்கும் கோள்களின் விருத்தமாகவும் கண்டனர். கடவுள் ஒளி ஐந்தின் தத்துவமாகப் பொருந்துயுள்ளதால் நம் ஐம்பூத தேகமும் இதன் கை, கால்களில் ஐந்தைந்து விரல்கள் இருப்பதும், மலர்களில் பல சாதாரணமாக ஐந்திகழ் கொண்டு மலர்வதும் அகவுண்மையைத் தெரிவிப்பனவே. நடராஜ வடிவில் ஆக்கலாதி ஐந் தொழிலும், நான்கு கரங்களாலும் தூக்கிய திருவடி ஒன்றாலும் சுட்டப்படுகின்றன. இதுபோல் விநாயக வடிவில் ஐங்கரமும், விஷ்ணுவடிவில் பஞ்சாயுதமும் விளங்குவன.

வான ஜோதியைச் சூழ்ந்து ஐம்பூதக் கோட்கள், குஜாதி (செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய) பஞ்ச கிரகங்கள் சுழன்று கொண்டுள்ளன. இத் தத்துவத்தைக் கொண்டு ஞாயிறு சின்னத்தை சுவஸ்திகம் என்று உருவாக்கினர். இதன் நாற்கரமும் சுழற்சி வேகத்தைக் குறிப்பன. இச் சின்னத்தைக் கொண்டோர் பஞ்ச சீலத்தை மேற்கொண்டவராயினர். இச் சுவஸ்திகத்தின் சுழற்சி நிலையைக் கொள்ளாது நிற்கும் நிலையைச் சிலுவையுருவாகக் கொண்டவர்கள், அதில் அன்புருவத் தேக ஒளியை ஐந்தாணிகளால் அறையப் பட்ட ஏசு கிருஸ்துவாகக் கொண்டார்கள். நமது ஞாயிறு போன்றனவே ஒவ்வொரு நட்சத்திரமும், ஆதலின் இவற்றைக் குறிக்க ஐந்திதழ் கோணவடிவம் கொடுக்கப் படுகின்றன. எனவே, ஆன்ம பீடமும் ஒளியும், பிறையும் இதன் மேல் ஒரு ஐந்திதழ் நட்சத்திரமும் மகமதியச் சின்னமாயின. பிரம்மம்என்றால் ஜோதியே. இது ஆன்ம அக ஜோதியே. உலக வாழ்க்கைக்குப் பிரபஞ்ச விளக்கம் தருவதற்கு பஞ்ச பிரம்ம வடிவாக, மனு, மயன், துவஷ்டா, சிற்பி, விஸ்வஞ்ஞன் என்ற பெயரோடு ஐந்தொழிலாளர் குறிக்கப்படுகின்றனர்.

தமிழகமும் தெய்வத் தத்துவமும் - கந்தழி வழிபாடு. (2)

சுவாமி சரவணானந்தா

தெய்வ தத்துவத்தை அடிநிலையாகக் கொண்டு வாழ்க்கை முறை வகுத்து வழங்கப்பட்டது, ஆதித் தமிழகத்தில். அத் தமிழகம் இப்போது காண்டற்கில்லை. அது நம் நாட்டின் தென்பெருங் கடலில், முன்பு, பல்லாயிரம் மைல் தூரம் பரவிக் கிடந்தது, நீரில் மூழ்கி மறைந்து விட்டது. அப்பகுதிதான். உயிர்களின் தோற்றத்திற்கு முதலிடமாகவும், ஆதி மனித இனத்திற்கு பிறப்பிடமாகவும் கூறப்படும். அவ் ஆதிமக்கள், கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த பழங்குடிகளாக மொழியப்படுகின்றனர்.

அவர்களுக்கு ஒரு அதிசயமான உறுப்பு நெற்றி நடுவில் பாதம் பருப்பளவு புடைத்து நின்றது. அதில் தோன்றிய உணர்ச்சி கொண்டு அறிதற்கும், காண்டற்கும் அரிய காட்சிகளைக் கண்டு வெளியிட்டனர். அதுவே ஞானக் கண்ணாக வழங்கப்பட்டது. இந்தக் கண்ணால் தான் ஆதிமனிதன் - கடவுள் ஞானத்தை, தெய்வ உண்மையை உள்ளவாறு கண்டறிந்தான்.

கந்தழி வழிபாடு.

ஆதித் தமிழன். கடவுள் ஞானத்தை அறிய தன் நெற்றிக் கண்ணால், புற நாட்டத்தை விட்டு, அக நோக்கினான். சிரநடு ஆன்ம அணுவில் ஒன்றி நின்றான். உலகை மறந்து உடலை மறந்து உயிரை மறந்து நிலைத்து நின்றபோது, அணுத்துவமாகயிருந்த ஆன்மா, விளக்கெனத் தோன்றி, சுடரெனப் பெருகி, அகண்ட ஜோதியாய் நிறைந்தது கண்டான். இவ், அகண்ட ஜோதி நிலையே கடவுள் நிலயாகக் கொண்டான். இந்த அடி தோற்றா அழலொளியே கந்தழியாகக் கூறிக் கொண்டான். அகத்தே ஆன்ம அணுவில் இக் கந்தழிக் கடவுட் ஜோதி ஒடுங்கி நிற்பது போல், புறத்தே ஜோதி வெளியினின்று உருவாகியுள்ளது ஞாயிறு என்னும் சூரியன். இந்த ஞாயிற்றைக் கொடிநிலை என்றும், இதன் ஆற்றல் கொண்டு, ஜீவதேக தோற்ற ஒடுக்க காரணமாய் விளங்கும் திங்களை, வள்ளி, என்றும் கொண்டு வணங்கினான். எனவே, இந்தக் கந்தழி வழிபாட்டில்,. கொடிநிலை என்னும் ஞாயிறு வணக்கத்தால், அண்ட தத்துவ விளக்கமும். வள்ளி என்னும் திங்கள் வணக்கத்தால் பிண்ட தத்துவ விளக்கமும் பெற்று, நிரம்பிய வாழ்வு நடத்தினான் தமிழன்.

தொடரும்...

தமிழகமும் தெய்வ தத்துவமும் - முன்னுரை (1)

மதுரையில் நடைபெற்ற 5-வது உலகத் தமிழ் மாநாட்டில் வெளியிடப் பெற்றது.

தயா நேயன் சரவணானந்தா

சத்திய ஞானக் கோட்டம், திண்டுக்கல்.

வெளியிடுவோர்.
தயவு ஆலய அன்பர்கள், சின்மயபுரம் (சின்னாளப்பட்டி).

நாள் 4.1.1981.


தயவு
முன்னுரை

காண்பரிய மெய்ப்பொருளைக் காணத் தமிழ்மொழியே
மாண்புடையார் வாய்மலர்ந்த வாக்கு.

கற்பனையின் வெற்றி கடவுள் தயவுகாண்
தற்போதம் நீக்கும் தமிழ். .. .. .. (தயவுக் குறள்)

எல்லாம் வல்ல ஒன்றாகிய நித்திய பரம்பொருள்தானே, ஐஞ்சக்திச் செயலால் இந்த மாபிரபஞ்சத்து அனைத்துமாய் விளங்குகின்றார். இந்தப் பேருண்மையை மனித வடிவில் வெளிப்படுத்தி, மக்கள் சமுதாயத்தை நித்தியானந்த வாழ்வில் தழைக்கச் செய்ய வேண்டியே, திருவருளின் பெருஞ்செயலால் நம் தமிழ் அரும்பி மலர்ந்து விரிந்து அருள் மணம் பரப்பிக் கொண்டுள்ளதாம்.

உலகெலாம் அருள் தமிழ்மணம் நுகர்ந்து ஆனந்தமுற இந்த ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு (மதுரையில் 1981ஆம் ஆண்டில் நடைபெற்றது) திருவுளப்படி இத் தருணம் நேர்ந்துள்ளது. இங்கு வெளியிடப்பெறுகின்ற. இத் “தமிழகமும் தெய்வ தத்துவமும்” என்ற கட்டுரை மிகப் பொருத்தமாக விளங்கக் காண்கின்றோம். பதினைந்து எழுத்துக்கள் கொண்ட இத் தலைப்புடைச் சிற்றுரை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன். 1956-ஆல் எழுதப் பெற்றது. இதுவரை இது உலகிடை வெளிவரவில்லை. ஐயைந்து ஆண்டுகள் கழித்து இது சமயம் வெளியுறுகின்றது. ஏன் ? திருவருட் சம்மதம் போலும்.

தமிழ்: ஈர் உயிரும் மும்மெய்யும் ஆக ஐந்து எழுத்து கொண்டு, இறை இயலை வெளிப்படுத்த, இந்த ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் ஒளி பெறுகின்றது. ஆண்டவர் அருட்சோதி வடிவம், இருபத்தைந்து (தமிழ் எண்ணில் “உரு”) ஆகி, இருபத்தைந்து அசை (Syllables) கொண்ட மகாமந்திர உருவாய் வள்ளலாரால் வெளியிடப் பெற்றுள்ளது .. ? இவ்வுண்மை கண்டு வாழ்வில் எல்லோரும் நற்பயன் அடைய, அருட்பெருஞ்சோதிக் கடவுளே, நம்மில் தயவு வண்ணமாய், அறிவு, உயிர், உடலில் நிரம்பி உயர் இன்ப வாழ்வு பெற உதவுகின்றார்.

உலகில் இத் தயவுப் பெருநெறி மூலம் பெரு நன்மை விளைய இருக்கின்றது. இதற்காகவே இந்த மதுரை மாவட்டத்து, காந்திக் கிராமம் அடுத்து சின்மயபுரத்தில் (சின்னாளப்பட்டியில்) ஒரு தயவு ஆலயம் தோற்றுவிக்கப் பட்டு, நன்முறையில் வழிபாடு ஆற்றப் பெற்று வருகின்றது. இப் பகுதி பிற் சேர்க்கையாகும். இவை யாவும் இச் சிறு நூலில் கண்டு யாவரும் இன்பெய்துவார்களாக.

தொடரும்...

Monday, May 18, 2009

கொழும்பில் பெரும் வெற்றிவிழாவிற்கான ஆயத்தங்கள் - தமிழர்களுக்கு எச்சரிக்கை


விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பிரதேசங்களை முழுமையாக மீட்டெடுத்ததை பெரும் விழாவாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது சிறிலங்கா அரசு. இந்த வெற்றி விழாவை கொழும்பு உட்பட இலங்கை முழுவதும் வாழும் தமிழ் மக்கள் பெரும் வெற்றி விழாவாகக் கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் சிங்களக் காடையர்கள் வெடி கொழுத்துவதற்கு பணம் தரவேண்டும் என வலியுறுத்தி பணத்தினை வாங்கிச் செல்வதுடன், விடுதலைப் புலிகள் அழிந்துவிட்டனர் என கேலியும், கிண்டலும் செய்கின்றனர். அத்துடன், சிறிலங்காவின் தேசிய கொடியை நாளை வர்த்தக நிலையங்களில் பறக்கவிட்டு வெற்றியைக் கொண்டாட வேண்டும் எனவும் எச்சரித்துவிட்டு சென்றுள்ளனர்.

இதேவேளை, யாழ்குடாவில் சிறிலங்கா துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பியினரும், கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் துணை இராணுவக் குழுவினரும் இந்த வெற்றி விழாவினை தமிழ் மக்கள் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி வருவதுடன், கொண்டாடதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

இதுஇவ்வாறிருக்க, விடுதலைப் புலிகளை முற்றாக தோற்கடித்துவிட்டதாக கூறியுள்ள சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் இருந்து விடுதலைபெற்ற ஒரு நாட்டுக்கு தான் நாளை திரும்பவுள்ளதாக ஜோர்தானில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு இன்று தெரிவித்துள்ளார்.

எனினும், படையினர் எஞ்சியிருக்கும் பகுதிகளை முழுமையாக நாளை கைப்பற்றாது போனால் தனது பயணத்தை ஓரிரு தினங்களுக்கு ஒத்தி வைத்துவிட்டு படையினர் குறிப்பிட்ட பகுதிகளை கைப்பற்றியதாக அறிவித்ததன் பின்னர் நாடு திரும்புவதற்கு மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

சிறிலங்காவின் நிலைமை இவ்வாறிருக்க, பொதுமக்களுக்கான தேவைகளைக் கவனிப்பதற்கு மனிதாபிமான அமைப்புக்களை கொழும்பு அனுமதிக்கவில்லை என்றால் அதற்கான விளைவுகளை சிறிலங்கா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண் சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாக எச்சரித்திருக்கின்றார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தமது ஆயுதங்களைக் கீழே வைப்பதுடன், அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேறுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கும் பிரித்தானியப் பிரதமர், இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தான் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த மோசமான போரின் இடையில் அகப்பட்டுள்ள மக்களுக்கான தேவைகளைக் கவனிப்பதற்காக மனிதாபிமான அமைப்புக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் கோர்டன் பிறவுண், இந்தப் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பதற்கு ஐ.நா. மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தான் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.

“சிறிலங்கா அரசாங்கம் தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” எனவும் பிரித்தானியப் பிரதமர் கடுமையாக எச்சரித்தார்.

Sunday, May 17, 2009

வெற்றி பெற வேண்டுமா? - சுவாமி விவேகானந்தர்


வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல¨ என்று வேதனைப் படுவார்கள்.


அப்படி தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று அவர்கள் நினைப்பதுதான் முதல் தவறு. காந்தியடிகளும், திருவள்ளுவரும், விவேகானந்தரும், புத்தரும் என பலரும் தங்களது ஆலோசனைகளை நமக்கு அள்ளித் தந்துள்ளனர்.

அவரவர்க்கு ஏற்ற வழிகளையும், தலைவர்களையும் நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.


webdunia photo WD
வெற்றி வேண்டுமா உங்களுக்கு? அப்படியானால் இப்படி செய்யுங்கள் என்று விவேகானந்தர் இங்கு நமக்கு கூறியுள்ள ஆலோசனைகளைப் பார்ப்போமா...

அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம்.

அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக மிகக் குறைவாகவும் தூங்க வேண்டாம்.

பொறாமை குணம் இருந்தால் விரட்டி விடுங்கள்.

சந்தேகமும், சஞ்சலபமும்தான் உங்கள் முதல் எதிரிகள். அவற்றை துரத்தியடியுங்கள்.

சோம்பல் உங்களிடம் இருந்தால் முதலில் அதை ஒழித்துக் கட்டுங்கள்.

எந்த சூழ்நிலையிலும் பேராசை கொள்ளாதீர்கள்.

உடல் தூய்மை முக்கியமானது. அதனால் தினமும் குளியுங்கள்.

எப்போதும் நல்லதை மட்டுமே மனதால் நினையுங்கள். அப்போது நல்லவை மாத்திரமே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடமே இருக்கிறது.

எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். தைரியமாகவும் இருக்க பழகிடுங்கள்.

பொறுமையும், விடா முயற்சியும் நமது நல்ல நண்பர்கள். எப்போதும் இவற்றுடனேயே இணைந்திருக்கப் பழகுங்கள்.

இதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

Monday, May 11, 2009

நவீன உணவு முறைகளும் - பாரம்பரிய உணவு பழக்கங்களும்


உரை : கல்வி அதிகாரிகள், பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
ஆதரவு : பினாங்கு அமிர்தேஸ்வரி சமூக மையம்

Tuesday, May 5, 2009

இஞ்சி

இஞ்சி உணவில் வாசனைக்காகவும் காரத்திற்காகவும் பயன்படுகிறது. விஷ முறிவுக்கு இதைப் பயன்படுத்தலாம். பசியைத் தூண்டும் ஆற்றல் இதற்கு உள்ளது. மேலும் இது உமிழ்நீரைப் பெருக்கும்.

இதனை உணவுடன் உட்கொள்ளுவதால் உடலுக்கு உஷ்ணத்தை அளித்து அகட்டிலுள்ள (அகடு-வயிறு) வாயுவை நீக்கி பசியையும் நல்ல செரிப்பையும் உண்டாக்கும்

இஞ்சியை உபயோகித்தால் காசம், கபம், வெள்ளோக்காளம், பித்ததோடம், சந்நிபாதசுரம், வாதாதிசுரம், வாதசூலை, வாதகோபம் ஆகிய பிணிகள் நீங்கும். பசி உண்டாகும்.

இஞ்சியை வாயில் மென்று உமிழ்நீரைத் துப்பினால் தொண்டைப்புண், குரல் கம்மல் ஆகியவை குணமாகும். இஞ்சிச் சாறும் வெங்காயச்சாறும் வகைக்கு ஒரு கிராம் வீதம் எடுத்துக் கலந்துகொடுத்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்திற்கு இஞ்சிச் சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம். இஞ்சிச் சாற்றில் கற்கண்டு போட்டுக் குடித்தால் நீரிழிவு நோய் குணமாகும்.

இஞ்சியை வெல்லப்பாகு அல்லது பழச்சாற்றில் ஊற வைத்து உண்பது உடலுக்கு நலம் பயக்கும். இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்து உண்பதால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கி நன்கு வெயிலில் உலர்த்தியதே சுக்கு எனப்படுகிறது. இஞ்சியின் எல்லா குணங்களும் இதற்கும் உண்டு.