Sunday, November 30, 2008

மெல்ல கொல்லும் நோய்

மலேசிய மக்களை மெல்ல கொல்லும் நோய்கள் என்று ஒரு பெரிய பட்டியல் போடலாம். சுருக்கமாக இதோ!

1. பயனீட்டாளர் உரிமை பற்றிய அறியாமை

2. தகவல் சாதனங்களில் வரும் விளம்பரங்கள் யாவும் உண்மை, உண்மையைத் தவிர
வேறெதுவும் இல்லை என்று நம்பிவிடுவது.

3. படித்த அறிவாளிகள் உண்மை அறிந்தும் ஊமையாய்ப் பதவி உயர்வை மட்டும் குறி
வைத்து 55+2 வயது வரை வாழ்வது.

4. நமக்கு மழை வேண்டும், மழைக்கு மரம் வேண்டும் என்று அறிந்தும் அறியாதவர் போல்
இருப்பது.

5. உணவு விசயத்தில் நாக்கை மட்டும் திருப்தி செய்து விட்டுப் பின்பு மருத்துவமனையைக்
குடும்பத்தில் ஒரு பகுதியாக ஆக்கிக் கொள்வது.

6. தொழில்துறையில் ஓரளவு, மின்னுகின்ற இளைஞர்கள் மகிழ்ச்சி என்றால், அது
மதுபானம் என்றும் மாமிச உணவுகள் என்றும் மயங்கிக் கிடப்பது.

7. இந்து சமயத்தின் பெயரால் மூடநம்பிக்கைகளையும், மூடநம்பிக்கைகளை
வியாபாரமாகவும் வளர்வது.

இப்பட்டியலை வாசகர் தம் ஆராய்ச்சிக்கு ஏற்ப நீடித்துக் கொள்ளலாம்

Monday, November 24, 2008

இடப்பெயர்வில் அழியும் ஈழம்

ஈழத்தில் நடைபெறும் போர்ச் செய்திகள், தமிழக ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. மக்களின் வாழ்விடங்கள் மீது குண்டு வீச்சு; அதனால் சாவு என்பதே இச்செய்திகளின் மய்ய இழை. இதனைக் கடந்தும் மக்கள் எத்தகைய இன்னல்களை சந்திக்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் நமக்கு தெரிய வருவதில்லை. ஏனெனில் போரின் விளைவு சாவு மட்டுமல்ல; போரின் மிகப் பெரிய பாதிப்பு - உள்நாட்டு இடப்பெயர்வுகள். மக்களின் வாழ்விடங்கள் மீதான தொடர்ந்த விமான தாக்குதல்கள், எறிகணை வீச்சுகள், இவற்றின் காரணமாக கையில் பச்சிளம் குழந்தைகளுடன் வெயில், மழை பாராது உயிருக்கு அஞ்சி ஊர் விட்டு ஊர் ஓடும் கொடுமை அது. ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல, பல முறை தங்கள் இருப்பிடங்களை மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டிய கட்டாயம். இதனால் ஏற்படும் சமூக, பொருளாதார, உளவியல் சிக்கல்கள், பாதுகாப்பின்மை என, அம்மக்கள் அன்றாடம் படும் வேதனைகள் கற்பனைக்கு எட்டாதவை. என்றாவது ஒரு நாள் நமக்கு விடிவு வரும். நமது ஊர்களுக்குத் திரும்பி இயல்பாக வாழலாம் என்ற ஒற்றை நம்பிக்கையோடு, ஈழத்தமிழர்கள் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.

Eleam கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதே ஈழத்தின் வன்னிப் பெருநிலப் பகுதி. மன்னாரும் முல்லைத்தீவும் கடலோர மாவட்டங்கள். கடற்கரையோரப் பகுதிகள் தவிர, வன்னி நிலப் பகுதி முழுவதும் அடர் காடுகளால் நிறைந்தது. இடை இடையே ஊர்கள் பரந்திருக்கும். வயல்களில் அன்றாடம் கூலி வேலை செய்வது, மீன் பிடித் தொழில், அதை சார்ந்த வியாபாரங்கள் ஆகியவையே இம்மக்களுக்கான பொருளியல் ஆதாரம்.
ஈழத்தில் பெருமளவிலான உள்நாட்டு இடப்பெயர்வு என்பது, 1980களிலேயே தொடங்கிவிட்டது. 80களின் முற்பகுதியில் குண்டு வீச்சினால் சிதிலமடைந்த தங்கள் வீடுகளை விட்டு, தங்கள் ஊர்களிலேயே உள்ள பள்ளிகள், கோயில்கள் போன்றவற்றில் அடைக்கலம் புகுந்த மக்கள், ஊரைவிட்டு வெளியேறவில்லை.

என்றாவது தங்கள் வீடுகளை சீரமைத்து மீண்டும் அங்கே வாழ முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். பின்னர், 80களின் பிற்பகுதியில் இந்திய ராணுவம் அங்கு இருந்த காலத்தில் இடப்பெயர்வுகள் அதிகரித்தன. உள்ளூர் என்பதிலிருந்து அருகில் உள்ள நகரங்கள், பொதுப் பள்ளிகள், தேவாலயங்கள், கோயில்கள் எனப் பரவவும் தொடங்கின. 90களின் தொடக்கத்தில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்த போது, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி இழந்த வாழ்வை செப்பனிடத் தொடங்கினர். ஆனால் அது அதிக காலம் நீடிக்கவில்லை.

அதன் பின்னர் போரும் பேச்சு வார்த்தையும் மாறி மாறி நிகழத் தொடங்கின. பேச்சு வார்த்தை நடைபெறும் காலங்களில் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு திரும்பி நிலங்களில் பயிரிட்டு, கால் நடைகளைப் பராமரித்து, கடைகள் வைத்து என பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதும், மீண்டும் போர் தொடங்கியதும் சம்பாதித்த பணத்தை எல்லாம் செலவழித்து இடம் பெயர்ந்து வாழ்வதும் - கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையாகிப் போனது.

1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் வெளியேறச் சொன்னதால் நடைபெற்ற முஸ்லிம்களின் இடப்பெயர்வும், அதன் பின்னர் 1995 அக்டோபர் 30 அன்று சிங்கள ராணுவம் யாழைக் கைப்பற்றி மிகப் பெரிய இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட இருப்பதால், உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயருமாறு புலிகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 5 லட்சம் மக்கள் ஓர் இரவில் இடம் பெயர்ந்ததும் - இது வரை நடந்ததிலேயே பெரும் இடப்பெயர்வுகளாக இருக்கின்றன.

குறிப்பாக, மன்னார் மடு பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த சூன் மாத காலப்பகுதிக்குள் - ஆறு முறைக்கு மேல் தமது நிரந்தர இடங்களில் இருந்து இடம் பெயர்ந்ததன் பின்னர், தற்காலிக வாழ்விடங்களில் இருந்தும் மாற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். மடுவில் உலகப் புகழ் பெற்ற தேவாலயம் ஒன்று உள்ளது. கடந்த ஏப்ரல் 2008இல் மடு தேவாலயத்தை முற்றிலும் அழிக்கும் அளவிற்கு சிங்கள ராணுவம் அதன் மீது தாக்குதல் நடத்தியது. அந்தப் பகுதியைச் சேர்ந்த இடம் பெயர்ந்த மக்களுக்கு அது நாள் வரை உறைவிடம் அளித்த அந்த தேவாலயமே தாக்குதலுக்கு உள்ளானது, மக்களிடையே பெரும் அச்சத்தையும் நம்பிக்கையின்மையையும் எழுப்பியது. மடு மாதா தாக்கப்பட்டதற்குப் பிறகு, அப்பகுதி மக்கள் வேறு பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம் பெயரத் தொடங்கினர். ஏற்கனவே இடம் பெயர்ந்து தேவாலயத்தில் அடைக்கலம் புகுந்திருந்த மக்களும், மடுப் பகுதியில் நிரந்தரமாக வாழ்ந்து வந்த மக்களும் மொத்தமாக வெளியேறத் தொடங்கினர். அன்று தொடங்கிய இடப்பெயர்வு இன்று வரை தொடர்கிறது.

ஈழம் என்பது வடக்கில் யாழ்ப்பாணத்தையும், வன்னிப் பெருநிலப் பகுதியையும், கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை, திரிகோணமலை மாவட்டங்களையும் உள்ளடக்கியது. இதில் யாழ்ப்பாணமும், கிழக்கும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள். இப்பகுதிகளில் ஏறத்தாழ ஒரு திறந்த வெளிச்சிறைச்சாலை போன்ற வாழ்நிலை. ஏற்கனவே பல்வேறு காலகட்டங்களில் இடம் பெயர்ந்த மக்களே அங்கு வாழ்கின்றனர். யாழ்ப்பாண தீபகற்பத்தை பிற பகுதிகளுடன் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை மூடப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. அத்துடன் கூடிய பொருளாதாரத் தடை காரணமாக உணவு, மருந்து உட்பட எவ்விதப் பொருட்கள் அங்கு கொண்டு செல்லப்படுவதும் இயலாததாகி விட்டது. யாழிலிருந்து வெளியேற விரும்புபவர்களுக்கும் பெரும் கட்டுப்பாடுகள், சோதனைகள். தொண்டு நிறுவனங்களும் முற்று முழுதாக வெளியேற்றப்பட்டு விட்டன. எந்த ஊடகவியலாளரும் அங்கு செல்ல இயலாது. இதனால் யாழ் மக்களுக்கு என்ன நேர்கிறது என்பதே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக வெளி உலகத்தினர் அறியாத புதிராகவே இருக்கிறது.

கிழக்குப் பகுதியில் ஒரு புறம் ராணுவம், மற்றொரு புறம் ஒட்டுக் குழுக்கள். இவற்றிற்கு இடையில் சிக்கிக் கொண்டு எந்நேரம் என்ன நடக்குமோ என்ற அச்ச உணர்வுடனேயே மக்கள் வாழ்கின்றனர். அதோடு அங்கு அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் நடத்தப்படுகின்றன. இதனால் மக்கள் எதையும் வெளிப்படையாகப் பேசக் கூட இயலாதவர்களாக, நடமாட்டங்களை குறைத்து முடங்கி இருக்கின்றனர்.

தென்னிலங்கை முழுவதும் சிங்களப் பகுதி. இந்நிலையில் வன்னிப் பெருநிலப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் போர் பாதிப்புகளால் இடம் பெயரும் மக்கள், யாழ்ப்பாணத்திற்கோ, கிழக்கு இலங்கைக்கோ, தென்னிலங்கைக்கோ போக முடியாமல், அங்கு போய் சிக்கிக் கொள்ள விரும்பாமல், வன்னிப் பெருநிலப் பகுதியையே சுற்றிச் சுற்றி வரும் அவலம். மிகச் சிறிய தீவான இலங்கையின் ஒரு சிறிய பகுதியே வன்னிப் பெருநிலப் பகுதி. இதைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் அதற்குள் எவ்வளவுதான் செல்ல இயலும்? அதிலும் சிங்களப் பகுதிகளுக்கோ, ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கோ அருகிலுள்ள இடங்களைத் தவிர்த்து உட்புறம்தான் செல்ல வேண்டும். முன்னைப் போல் இந்தியாவிற்கு வருவதும் அத்தனை எளிதாக இருக்கவில்லை.

சற்று வசதி பெற்றவர்கள், குடும்பத்தில் ஒருவரையோ அல்லது ஒட்டுமொத்தாகவோ வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து விடுகின்றனர். அவர்கள் அனுப்பும் பணத்தில் தான் இங்குள்ளவர்கள் வாழ வேண்டும். ஆனால் அந்தப் பணமும் கைக்கு வந்து சேரும் என்ற உத்தரவாதமில்லை. பல வழிகளில் அந்தப் பணத்தை உரியவர் கையில் சேர்ப்பதுவுமே பெரும் பாடு. அப்படி வந்த பணத்தை வைத்து இடப் பெயர்வுக்கான செலவுகளை சமாளிப்பதே பெரும் சிரமம். இடப் பெயர்வுக்கான செலவு என்பதில் பெரும்பகுதி போக்குவரத்திற்கே போய்விடுகிறது. பெரும்பாலும் டிராக்டர்களை பயன்படுத்தியே மக்கள் இடம் பெயர்கின்றனர். 5 கி.மீ. தூரத்திற்கு ரூ.4000, 10 கி.மீ.க்கு 10,000 என வாடகை செலுத்த வேண்டியிருக்கிறது.

காரணம் எரிபொருட்களின் விலை. தற்போதைய சூழ்நிலையில் மண்ணெண்ணெய் 1 லிட்டர் 130 ரூபாய்க்கும், பெட்ரோல் 1 லிட்டர் 700 ரூபாய்க்கும் டீசல் 1 லிட்டர் 170 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. பெரும்பாலான குடும்பங்கள் குழுவாக இணைந்து வாகனங்களை வாடகைக்கு அமர்த்துவதால், அவர்கள் எடுத்துச் செல்கின்ற தத்தமது உடைமைகளை மட்டுப்படுத்துகின்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இவ்வாறு வண்டி அமர்த்தி செல்லும் வசதியற்ற, அன்றாடம் கூலி வேலை செய்து வந்த ஏழை மக்கள், குடும்பத்தில் அனைவரும் தங்களால் சுமக்கக் கூடியவற்றை தூக்கிக் கொண்டு, பாதுகாப்பான இடங்களைத் தேடி நடந்தே செல்லும் நிலை. இதற்கு குழந்தைகளும், முதியவர்களும் விதிவிலக்கல்லர்.

இதற்கு நடுவில் நினைத்துப் பார்க்கவும் இயலாத நிலையில் இருக்கும் உணவுப் பொருட்களின் விலை. மன்னார், இலங்கையின் நெற்களஞ்சியம் என்றே அழைக்கப்பட்டது. ஆனால் தற்போது நெல் உற்பத்தி என்பது அறவே அற்றுப் போனதாக இருக்கிறது. வயல்கள், மீன்பிடி நிலையிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதால், உணவு உற்பத்தி முற்றிலுமாக நின்று போனது. இதனால் ஒரு மீனின் விலை 225 ரூபாய். அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் கிடைப்பதே அரிது. ஏனெனில் அவை வெளியிலிருந்து வர வேண்டும். சிங்கள ராணுவம் வன்னிக்குச் செல்லும் பாதையை முற்றுகையிட்டு நிற்கிறது. இதனால் வியாபார ரீதியாக உணவுப் பொருட்களை கொண்டு வருவது இயலாத ஒன்று. தொண்டு நிறுவனங்கள் தாம் உணவுப் பொருட்களை கொண்டு வந்து மக்களுக்கு அளித்துக் கொண்டிருந்தனர். அதையும் சிங்கள அரசு தடுத்துவிட்டது. மேலும் தொண்டு நிறுவனங்களை வன்னியை விட்டு வெளியேறவும் சொல்லிவிட்டது. அரசின் உத்தரவையும் மீறி ஒரு சில தொண்டு நிறுவனங்கள் மட்டுமே அங்கு இயங்கி வருகின்றன.

சமைப்பதற்கான பொருள் கிடைத்தாலும், சமைப்பதற்கான உபகரணங்களைச் சுமந்து வர இயலாத நிலையில், விறகு வைத்துத்தான் சமைக்க வேண்டும். ஒரு சைக்கிள் சுமை விறகு 300 ரூபாய்க்கு விற்கிறது. அதற்குரிய பணத்தை இடம் பெயர்ந்து வாழும் மக்களால் செலுத்த இயலாது. இந்த காரணங்களால் அன்றாட சமையல் மற்றும் உணவு வழங்கல் என்பது மிகப் பெரிய சவாலாகவே இருக்கிறது. வன்னிப் பகுதி முழுவதுமே காட்டுப் பகுதி நிலமாதலால், மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக ஆகிவிடும். இந்தச் சூழலில் வெட்ட வெளிகளில், மரங்களுக்குஅடியில் கூட்டமாக நெருங்கி வாழ நேரிம்போது பல்வேறு சமூக, சுகாதார பிரச்சனைகளும், காட்டுப் பகுதியில் வாழ்வதால் விஷ உயிரினங்களினாலான ஆபத்துக்களையும் சந்திக்க வேண்டியுள்ளது.

Eleam_ வன்னிப் பகுதியில் பெரிய ஆறுகள் இல்லை; குளங்களும், மழை நீர் பெற்று ஓடும் சிற்றாறுகளுமே உண்டு. இதனால் சமையல் மற்றும் பிற தேவைகளுக்கான தண்ணீருக்காக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும். குறைந்தபட்சமாக ஒரு சராசரி மனிதனுக்கு, சமையல் மற்றும் சுய சுகாதாரத் தேவைகளுக்காக, எட்டு லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது, அணைகளுக்கு அருகிலோ அல்லது துப்புரவற்ற கிணறுகளுக்கோ அருகில் உள்ளவர்களில் சிலர் அந்தத் தண்ணீரையே சமையல், குளியல் மற்றும் பிற தேவைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர். இது, நோய்கள்
பரவும் தன்மையில் முக்கியமாக ஓர் அதிகப்படியான சுகாதார முறைகேட்டைத் தோற்றுவிக்கிறது. அருகில் கழிவறை வசதிகள் அற்றவர்கள் தங்களின் கழிவுகளை வெளியேற்ற அகழிகள் உருவாக்க வேண்டும். இது, மக்கள் குறைவாக கூடி வாழ்கின்ற இடங்களில் பிரச்சனையாக இல்லாவிடினும், மக்கள் அதிகப்படியாக சேர்ந்து வாழும் இடங்களில் மிக அதிக அளவிலான சுகாதார சீர்கேட்டை உருவாக்குகிறது.

இவை தவிர, காட்டுப் பகுதிகளில் வாழ்வதால் நேரக்கூடிய பாம்புக் கடிகள், விஷ பூச்சிகளின் கடிகள் போன்றவற்றிற்கான மருந்து என்பது கிடைக்க வாய்ப்பே இல்லை. மிகவும் அவசர சிகிச்சைத் தேவைப்படும் நோயாளிகளை தூக்கிச் செல்வதற்கான ஆம்புலன்ஸ் போன்ற எந்த வசதிகளும் கிடையாது. இதனால் மிதிவண்டிகளிலும், மாட்டு வண்டிகளிலுமே நோயாளிகளை எடுத்துச் செல்லும் நிலை இருக்கிறது.

இயற்கை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு புறம், குண்டு வீச்சுகளினால் காயம்பட்டவர்கள் மறுபுறம் என மருத்துவமனைகள் எப்போதும் நிரம்பியே இருக்கின்றன. ஆனால் அத்தனை நோயாளிகளையும் கவனிக்க போதுமான மருத்துவர்கள் இல்லை. பெரும்பாலும் மருத்துவ உதவியாளர்களே சிகிச்சைகளை கவனிக்க வேண்டும். வன்னிப் பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனைகளில் பெரியதும் ஓரளவு வசதிகள் உடையதுமான கிளிநொச்சி மருத்துவமனை, அண்மையில் சிங்கள ராணுவத்தின் விமான குண்டு வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளானது. இருந்த ஒரே நல்ல மருத்துவமனையும் சிதைக்கப்பட்ட நிலையில், மருத்துவ சிகிச்சை என்பதே பெரும் கேள்விக்குறியாகி நிற்கிறது.

பொதுவாக ஈழத் தமிழர்கள் கல்விக்கு பெரும் முக்கியத்துவம் அளித்து வந்திருக்கின்றனர். கல்விக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவம் காரணமாக, மக்கள் இடம் பெயரும் போது, பள்ளிகளும் இடம் பெயரும் விந்தையான சூழல் நிலவுகிறது. பள்ளிகள் இடம் பெயர்வது என்பது, வெறும் உபகரணங்களின் இடப்பெயர்வு அல்ல. அப்பள்ளியில் பயின்ற, பயிலுகின்ற அனைத்து மாணவர்கள் பற்றிய ஆவணங்களையும் பாதுகாப்பாக இடம் மாற்றுவது மிகப் பெரும் பணி. கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 115 பள்ளிகள் இடம் பெயர்ந்துள்ளன. ஒன்றிணைக்கப்பட்ட பள்ளிகள் பிரதான பள்ளிகளில் இயங்குகின்றன. சில இடங்களில் ஒரே வளாகத்தில் 10 பள்ளிகள் ஒருங்கிணைக்கப்பட்டு இயங்கும் நிலையும் உள்ளது. இந்த எதிர்பாராத சூழல் காரணமாக ஆசிரியர்கள், வகுப்பறைகள், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் ஆகியவற்றில் பற்றாக்குறைகள் ஏற்பட்டுள்ளன.

இந்த இடப்பெயர்வின் அழுத்தம் மாணவர்களையும் வெவ்வேறு விதங்களில் பாதித்துள்ளன. தேசிய மட்டத்திலான தேர்வுகள் மற்றும் பாடத்திட்டங்கள் சீரற்றவையாக உள்ளன. தங்களின் தேர்வுகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலையில், கல்வியை மேற்கொண்டு தொடர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. தேர்வுகளை எழுதிக் கொண்டிருந்த
தருணங்களில் சிங்கள விமானங்கள் பள்ளி வளாகத்தில் குண்டு வீச்சை நடத்திய காரணத்தினால், பள்ளிக்கூடங்களை விட்டு நிற்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

உளவியல் தாக்கம் என்பதும் மிகவும் அதிகப்படியானதாகவே இருந்துள்ளது. பல மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதற்கு அஞ்சுகின்றனர். வகுப்புகளோ, தேர்வுகளோ எது நடந்து கொண்டிருந்தாலும் விமான சத்தம் கேட்டால் எழுந்து ஓடி பதுங்கு குழிகளுக்குள் இறங்கிவிட வேண்டும் என்பது, குழந்தைகளுக்கு ஒரு பயிற்சியாகவே அளிக்கப்பட்டுள்ளது. குண்டு சத்தத்திற்கு அஞ்சி கண்ணையும் காதையும் இறுக மூடித் திறப்பதற்குள் - அருகிலிருந்தவர் செத்து விழும் கொடுமையை காண நேரும் குழந்தைகள், பெரும் மன அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். பெற்றோரை விட்டு பள்ளியில் இருக்கும் நேரத்தில், இதுபோன்ற அனுபவங்களினால் மிகப் பெரிய அளவில் பாதுகாப்பின்மை மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அதனால் பெற்றோரை விட்டு பள்ளிக்கு வரவே அஞ்சுகின்றனர். வெளியேறிய இடங்களில் உள்ள ஆசிரியர்களும் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக, அவர்கள் இந்தப் பள்ளிகளின் தற்காலிக வளாகங்களில் இருந்து வெகு தூரத்தில் இடம் பெயர்ந்துள்ளதால், தங்களின் பள்ளிகளில் தொடர்ந்து கற்பிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில், இந்தப் பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாகவே ஏற்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் விட, இடப் பெயர்வு என்பது பெரும் சமூகச் சிக்கல்களை தோற்றுவித்துள்ளது. ஓர் ஊரில் பல தலைமுறைகளாக ஒரே சமூகமாக கூடி வாழ்ந்த மக்கள் பல திசைகளில் சிதறும் பொழுது, சமூகப் பிணைப்பு பாதிக்கப்படுகிறது. திருமணம் போன்று வாழ்வில் இயல்பாக நடக்க வேண்டிய நிகழ்வுகள் அதனதன் போக்கில் நடக்க இயலாமல் தேக்கம் ஏற்படுகிறது. இதனால் பல ஆண்களும் பெண்களும் திருமண வயதைக் கடந்தும் திருமணம் ஆகாமல் வாழ்கின்றனர். எந்தவொரு அவலத்திலும் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே என்பதற்கு இச்சமூகமும் விதிவிலக்கல்ல. அடிக்கடி நிகழும் சாவு, உணவுக்காக கையேந்தி நிற்கும் நிலை, நிரந்தர வாழ்விடம் இன்றி மாறிக் கொண்டேயிருப்பது போன்றவை, குழந்தைகள் மனதில் பெரும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இனம், மொழி, மதம், தேசம் ஆகியவற்றை கடந்த துயரம் இது. இத்தகைய அவலம் உலகில் எந்தப் பகுதியில், யாருக்கு நேர்ந்திருந்தாலும் அத்துயரைத் துடைக்க முன் நிற்பதே - மனித நேயமிக்க ஒவ்வொருவரின் கடமை. உண்மைக்கு முன்னால் நடுநிலைமை என்று ஒன்று இல்லை. ஆனால், போருக்கு முன்னால் நடுநிலைமை என்பது உண்டு. போரினால் அல்லலுறும் மக்களின் பக்கம் நிற்பதே அது.

Wednesday, November 19, 2008

சட்டக் கல்லூரி: பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை... அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம்!

‘முடிந்து விட்டது’ என்று நினைத்தோம். ‘முடிய விடக்கூடாது’ என்பதில் பெரும் முனைப்பு காட்டுகிறது சன் டிவி. சட்டக்கல்லூரி கலவரத்துக்கு பின்னணி இசையும் சேர்த்து எப்படியாவது தமிழகத்தைப் பற்றவைத்து விட வேண்டும் என்ற வெறியுடன் திரும்பத் திரும்ப ஒளிபரப்புகிறது.

ஜெயா டிவியைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் ஸ்ரீதர் வாண்டையார், சேதுராமன் எல்லோரும் இந்த மனித உரிமை மீறலுக்கு எதிராகக் குமுறுகிறார்கள். கொந்தளிக்கிறார்கள்.

அடித்தவர்கள் என்ன சாதி, அடிபட்டவர்கள் என்ன சாதி என்பதை டிவிக்கள் சொல்வதில்லை. அது பத்திரிகை தருமமில்லை என்பதனால் மட்டுமல்ல, அது தேவைப்படவில்லை. மனித உரிமைக்காக வாண்டையார் குரல் கொடுப்பதைப் பார்த்த பிறகு கூட, பாதிக்கப்பட்ட மனிதர்கள் எந்த ‘இனத்தை’ச் சேர்ந்தவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மாங்காய் மடையர்களா என்ன தமிழர்கள்?

பிதுங்கி வழியும் சென்னை மாநகரின் மின்சார ரயிலில், சுற்றியிருப்பவர்களில் யார் என்ன சாதி என்று தெரிந்து கொள்ளமுடியாத அந்தச் சூழலில் ஐகோர்ட் விவகாரத்தை இப்படி அலசுகிறார்கள் பயணிகள்.

“பாக்கவே குலை நடுங்குது சார். அந்தப் பையனோட அம்மா அழுவுறதப் பாக்கமுடியலன்னு என் வொய்ப் டிவியையே ஆஃப் பண்ணிட்டா.”

“இவாள்ளாம் ஜட்ஜா வந்தா நாடு உருப்பட்ட மாதிரிதான்.”

“செத்த நாயக்கூட இப்படி அடிக்க மனசு வராது சார். எந்த ஜாதியா இருந்தா என்ன சார்? அதுக்காக இப்படியா? இப்போ நீங்க என்ன ஜாதின்னு எனக்குத் தெரியுமா, நான் என்ன ஜாதின்னு உங்களுக்குத் தெரியுமா?”

“டிரான்ஸ்போர்ட்டுக்கு ஜாதி தலைவர் பேர வச்சாங்க - கலவரம். மாவட்டத்துக்கு ஜாதி தலைவர் பேர வச்சாங்க - அதுக்கும் கலவரம். அதையெல்லாம் எடுத்தாச்சுல்ல, அதே மாதிரி காலேஜுக்கும் எடுத்துர வேண்டியதுதானே.”

சாதியின் பெயரைச் சொல்லாமலேயே, சாதிச் சார்பை நிலைநாட்டிக் கொள்ளும் இந்த உரையாடலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு செல் உயிரினங்களும், தாவரங்களும் தமக்குள் பரிமாறிக் கொள்ளும் சங்கேத மொழியை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால், காதலைப் போலவே கண்ஜாடையையும் மவுனத்தையும்கூட ஒரு மொழியாக மாற்றி தன் இனத்தை அடையாளம் காணும் வித்தையைக் கண்டுபிடித்திருக்கிறது சாதி. புத்தன் முதல் பெரியார் வரை எத்தனை பேர் வந்தால் என்ன, பாஷாணத்தில் புழுத்த புழுவல்லவோ சாதி?

ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த வன்முறை, தாக்குகின்ற மாணவர்களுக்கும், வேடிக்கை பார்த்து நின்ற போலீசுக்கும் எதிராக வலுவான ‘பொதுக்கருத்தை’ உருவாக்கியிருக்கிறது. பொதுவாக எல்லா வன்முறையையும் எதிர்ப்பது போலவும், சாதியை வெறுப்பது போலவும், சட்டத்தின் ஆட்சிக்காகக் குரல் கொடுப்பதைப் போலவும் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தப் பொதுக்கருத்தின் ஒவ்வொரு கல்லையும் இணைக்கும் சாந்து ‘ஆதிக்க சாதி சிந்தனை’. அம்பேத்கரின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ‘இந்து மனோபாவம்’.

“தலித்துகள் தாக்குகிறார்கள், நம்மாளு அடிபடுகிறான், போலீசு வேடிக்கை பார்க்கிறது” இந்த மெசேஜ் கடைசித் ‘தமிழனின்’ மண்டை வரை இறக்கப்பட்டிருக்கிறது. எனினும், நாம் அஞ்சியது போல இதுவரை தமிழகம் பற்றி எரியவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலாகத்தான் இருக்கிறது. ஆயினும் இதை நினைத்து மனப்பூர்வமாக மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை. இந்த அமைதிக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

கணிதத்தில்கூட ‘சமன் செய்யும் பிழை’ (compensating error) என்று ஒன்று உண்டு. வரவுக்கணக்கில் 900 ரூபாய் கூட்டல் பிழையால் அதிகமாகி, செலவுக் கணக்கில் 100 ரூபாயை 1000 என்று தவறாக எழுதியிருந்தாலும் கடைசியில் கணக்கு டாலி (tally) ஆகிவிடும். அதுபோல இந்த அமைதியைத் தோற்றுவித்த காரணிகள் பலவாக இருக்கலாம். இதை வைத்தே தமிழகம் சாதிவெறியற்ற சமத்துவப் பூங்காவாகி விட்டது என்று அமைதி கொள்வதற்கு இடமில்லை.

இது தொடர்பாக என்னுடைய வலைப்பக்கத்தில் எழுதப்பட்ட முந்தைய பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்ட சில பதிவர்களின் கருத்துகள் கீழ்க்கண்டவாறு இருக்கின்றன:

“வன்முறை எந்த வடிவத்தில் யாரிடமிருந்து வந்தாலும் கண்டிக்க வேண்டும். வினவு நடுநிலை தவறி தலித் தரப்பை ஆதரிக்கிறது. இதன் மூலம் வன்முறையை மேலும் தூண்டி விடுகிறது.”

“தேவர் சாதியினரின் நியாயத்தைப் பேச யாருமில்லை. இது வரை சாதி பார்க்காத நான், இனி தேவர் சாதிக்காக நிற்கப் போகிறேன்.”

“பார்ப்பனியம் என்ற சொல்லை எதற்கு நுழைக்கிறீர்கள். பிராமணர்களுக்கும் இந்த வன்முறைக்கும் என்ன சம்மந்தம்?”

“நான் தனிப்பட்ட முறையில் சாதி பார்ப்பதில்லை. எனக்குப் பல தலித் நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஒரு சிலரின் தவறுக்காக அந்தச் சாதியையே குற்றம் சொல்வதை என்னால் ஏற்க முடியாது”

இந்தப் பதிவர்கள் ஒவ்வொருவரின் கருத்துக்கும் தனித்தனியே பதில் எழுதுவது கடினம். அதைக்காட்டிலும் இத்தகைய பின்னூட்டங்களை ஆளுகின்ற மனோபாவத்திற்கு பதிலளிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

சட்டக்கல்லூரி வன்முறை என்பது ஒரு ஒளிபரப்பப்பட்ட வன்முறை. நியாயங்களும், அறிவும், காட்சிப் படிமங்களால் தோற்கடிக்கப்படும் காலம் இது. ஒரு சாதிவெறியனின் அனல் கக்கும் பேச்சு ஏற்படுத்தக் கூடிய மனப்பதிவைக் காட்டிலும் அழுத்தமான மனப்பதிவை இந்தக் காட்சிப் படிமங்கள் ஏற்படுத்தியுள்ளன.

“தலித்துகள் தாக்குகிறார்கள், நம்மாளு அடிபடுகிறான், போலீசு வேடிக்கை பார்க்கிறது” என்ற “இந்த ஸ்டோரியின் ஒன்லைனில்” நம்மாளு என்ற சொல் தேவர் சாதியை மட்டும் குறிப்பதல்ல. அது ஆதிக்க சாதியினர் அனைவரையும் தழுவி நிற்பது. இன்று அடங்கியிருப்பது போலத் தோன்றினாலும் நாளை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் (நிச்சயமாக வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில்) லேசாகத் தண்ணீர் தெளித்து விட்டால் கூட, குப்பென்று சிலிர்த்து எழக்கூடியது. எனவே, இதனுடைய வேரைக் கெல்லி எடுத்துப் பார்ப்பது அவசியம்.

ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த வன்முறைக் காட்சி மிகவும் கொடூரமாக இருக்கிறது என்பதிலோ, பிள்ளை அடிபடுவதைப் பார்த்துப் பதறும் அந்தத் தாயின் கண்ணீர் நெஞ்சை உருக்குகிறது என்பதிலோ ஐயமில்லை. அடிபட்ட மகனுக்காகத் துடிக்கும் அந்தத் தாயோ, அல்லது தந்தையோ சாதிவெறியர்களாக இருக்கக் கூடும் என்று நாம் ஊகிக்கவும் இல்லை. எனினும், இந்த வன்முறை அரிதானது. அதாவது தலித்துகள் ஆதிக்க சாதியினரைத் திருப்பித் தாக்கும் இந்த வன்முறை மிகவும் அரிதானது. தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் செலுத்தி வரும் வன்முறை அரிதானதல்ல. அது மிகவும் பொதுவானது. ஆதிக்க சாதி மனோபாவத்தைப் பொருத்தவரை அது ‘இயல்பானது’.

தலித் மக்கள் மீது திணிக்கப்படும் அடிமைத் தொழில்கள், தனிக்குவளை, தனிச்சுடுகாடு, தனிக் குடியிருப்பு போன்ற ‘வழக்கங்கள்’ இன்றளவும் எல்லா கிராமங்களிலும் நீக்கமற நின்று நிலவுவதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. இந்த வழக்கங்கள் அல்லது மரபுகள் கடந்து போன காலத்தின் எச்சங்கள் என்றும் இன்று காலம் ரொம்பவும் மாறிப்போச்சு என்றும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள், கல்லூரி மாணவர் விடுதிகள்கூட ஏன் தனித்தனியாக இருக்கின்றன என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும்.

மாணவர் விடுதிகளும், மாணவியர் விடுதிகளும் ஏன் தனித்தனியாக இருக்கின்றன என்று யாரையாவது கேட்டுப் பாருங்கள். இப்படிப்பட்ட ‘கேனத்தனமான’ கேள்வி அவர்களுக்கு ஆச்சரியமூட்டும். “பஞ்சையும் நெருப்பையும் யாராவது பக்கத்தில் வைப்பார்களா? ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அன்றுமுதல் இன்றுவரை தனி விடுதிதானே” என்று பதிலளிப்பார்கள். ஆணாதிக்கத்தின் அபாயத்திலிருந்து பெண்களைப் பாதுகாக்க வேறு வழியில்லாத காரணத்தினால்தான் பெண்களைத் தனியாகப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது என்ற சாதாரணமான உண்மைகூட ஆண் மனதுக்கு உரைப்பதில்லை.

அது போலவே, “எஸ்.சி - பி.சி ஹாஸ்டல்கள் தனித்தனியே அமைக்கப்பட்டிருப்பதும்” சாதி ஆதிக்கத்தின் விளைவுதான் என்பது ஆதிக்க சாதியினருக்கு உரைப்பதில்லை. இது நூற்றாண்டு காலமாக நின்று நிலவும் வழக்கமோ மரபோ அல்ல. ஆதிக்க சாதியினரின் மன உணர்வைப் புரிந்து கொண்டு அரசாங்கம் செய்திருக்கும் ஏற்பாடு. சட்டக்கல்லூரி விடுதி ஒன்றாக இருந்ததும் பிரச்சினை ‘வெடிப்பதற்கு’ ஒரு காரணம்.

வெடிக்கும்போது மட்டும்தான் இத்தகையதொரு சாதிப் பிரச்சினை சமூகத்தில் நிலவுவதே தங்களுக்குத் தெரியவருவது போல நடிப்பதற்கு ஆதிக்க சாதியினரின் மூளை நன்றாகப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

உலகப்புகழ் பெற்ற இசைஞானி இளையராஜாவின் ஊரும், தமிழ் சினிமாவின் பாடல் பெற்ற தலமுமான பண்ணைப்புரத்தில், மாஸ்ட்ரோ ராஜாவின் மாமன் மச்சான்களுக்கு தனிக்குவளைதான். எமது அமைப்பைச் (ம.க.இ.க.) சேர்ந்த தோழர்கள் அதை எதிர்த்துப் போராடிய பிறகுதான் ‘அப்படியா?’ என்று புருவம் உயர்த்தியது தமிழ்நாடு. இன்னமும் இந்தச் சேதி பலருக்குத் தெரியாமல் இருக்கக் கூடும். ஒருவேளை தெரிந்தாலும், “ஒரு தலித்தின் இசை என்பதற்காகப் புறக்கணிக்காமல், அதனைக் கொண்டாடிய தமிழர்தம் தகைமை குறித்த பெருமிதத்தை ஒப்பிடுகையில் தனி கிளாஸ் பிரச்சினை ஒரு சில்லறை விவகாரமே” என்று கூட ஆதிக்க மனோபாவம் அமைதி கொள்ளக் கூடும்.

பண்ணைப்புரம் மட்டுமா? கண்டதேவி, சேலம் மாரியம்மன் கோயில், பாப்பாபட்டி, கீரிப்பட்டி, மேலவளவு, திண்ணியம்.. இன்னும் எத்தனை எடுத்துக்காட்டுகள் வேண்டும்? எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதனாலேயே இவை சகஜமாகி விடுகின்றனவோ?

திண்ணியம் கிராமத்தில் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்ட குற்றத்துக்காக, தலித்துக்கு சூடு வைத்து, வாயில் மலம் திணிக்கப்பட்ட வன்முறை சட்டக் கல்லூரி வன்முறையைக் காட்டிலும் மென்மையானதா? அந்தக் குற்றவாளிகளை நீதிமன்றம் தீண்டாமைக் குற்றத்துக்காக தண்டிக்கவில்லை என்பதை பதிவர்கள் அறிவார்களா?

தேவர் சாதியினர் சூழ்ந்து நின்று கொண்டு வார்த்தை வார்த்தையாக சொல்லிக் கொடுக்க, “யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. நானாகத்தான் பஞ்சாயத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று பாப்பாபட்டி தலித் பஞ்சாயத்து தலைவர் டி.வி காமெராவின் முன் சொல்ல வைக்கப்பட்டாரே, அந்த வன்முறையைக் கண்டு கோடிக்கணக்கான தலித் மக்களின் சுயமரியாதை உணர்வு புழுவாய்த் துடித்திருக்குமே, அதை யாராலாவது உணரமுடிகிறதா?


அனைத்திந்தியப் புகழ் பெற்ற ‘கயர்லாஞ்சி படுகொலை’யில் போட்மாங்கே என்ற தலித்தின் நிலத்தைப் பறித்துக் கொண்டு, அதற்கெதிராக போலீசில் அவர் புகார் கொடுத்த குற்றத்துக்காக, அவரது மனைவியையும் கல்லூரியில் படிக்கும் மகளையும் கற்பழித்துக் கொலை செய்து, மகன்கள் இருவரையும் கொலைசெய்த ஆதிக்க சாதிக் குற்றவாளிகளில் ஒருவர் கூட தீண்டாமைக் குற்றத்துக்காக தண்டிக்கப்படவில்லை என்பதை அறிவீர்களா? மேல் முறையீட்டில் விடுதலையாவதற்குத் தோதான ஓட்டைகளை வைத்துத்தான் அவர்களில் சிலருக்குத் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலவளவு படுகொலையை விசாரித்த செசன்ஸ் நீதிபதி தேவர் சாதியைச் சேர்ந்தவர் என்பதும், கொலைகாரர்களின் சாதிவெறி நீதிமன்றத்தின் சாதிவெறியை விடக் கொடியதாக இருந்தது என்பதும் உங்களுக்குத் தெரியுமா? “உண்மையான கொலைகாரர்கள் பலர் தண்டிக்கப்படவில்லை” என்று சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பிலேயே குறிப்பிட்டிருந்தும், தமிழகத்தின் கழக அரசுகள் அதனை இதுவரை கண்டுகொள்ளவில்லை என்பதை அறிவீர்களா?

எத்தனை கொலைகள், எத்தனை வல்லுறவுகள்.. அவற்றையெல்லாம் பட்டியலிட்டால் இந்தப் பதிவு மீட்டர் கணக்கில் நீளும்.

ஒளிபரப்பப்பட்ட ஒரு வன்முறை - ஒளிபரப்பப்படாத ஆயிரம் வன்முறைகள்!

மேலவளவும், திண்ணியமும் ‘லைவ்’ ஆக ஒளிபரப்பப்படாத காரணத்தினால்தான் தமிழகம் குமுறிக் கொந்தளிக்கவில்லையோ? இந்தக் காட்சிகள் எல்லாம் ‘லைவ்’ ஆகக் காமெராவில் கிடைக்காத துர்ப்பாக்கியத்தினால்தான் சன் டிவியும், ஜெயா டிவியும் அவற்றை ஒளிபரப்பவில்லையோ? சட்டக்கல்லூரியில் அடிபட்ட தமிழர்களுக்காகவும், ஈழத்தில் அடிபடும் தமிழர்களுக்காகவும் பதறித் துடிக்கும் வைகோவின் வரையப்பட்ட மீசை, மேற்கூறிய தமிழர்களுக்காக என்றுமே இப்படித் துடித்ததில்லையே, ஏன்? கருணாநிதியை ஒழித்துக் கட்ட அன்றாடம் கிடைக்கின்ற இத்தகைய பொன்னான வாய்ப்புகளை இவர்களெல்லாம் தெரிந்தே கைநழுவ விடுவது ஏன்?

“ஏனென்றால் இவை ஒளிபரப்பப்படவில்லை” என்று சொல்லி சமாதானமடைந்து கொள்வோமா? மேன்மை தங்கிய ஆதிக்க சாதி மனோபாவத்தின் கருணை உணர்ச்சியை உசுப்பி விடும் வகையில் அவர்களுடைய மனசாட்சியின் சந்நிதியில் இவை சமர்ப்பிக்கப்படவில்லை என்று நியாயம் கற்பித்துக் கொள்வோமா? அத்தகைய ‘நியாயம்’ பதில் ஷகீலா படத்தை விடவும் அம்மணமாகவும், ஆபாசமாகவும் இருப்பதை உங்களால் உணர முடியவில்லையா?

இவையெல்லாம் ஒளிபரப்பப்படவில்லை என்பது வேறு கதை. ஒருவேளை ஒளிபரப்பப்பட்டாலும் நாம் பார்க்க விரும்பும் காட்சிகளை மட்டுமே பார்ப்பதற்கு கண்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. கேட்க விரும்பும் செய்திகளைக் கேட்பதற்கு மட்டுமே செவிகள் பக்குவப் படுத்தப்பட்டிருக்கின்றன. உணர்ச்சிவயப்பட விரும்பும் சம்பவங்களுக்கு மட்டுமே உணர்ச்சி வயப்படுமாறு இதயம் தடிமனாக்கப் பட்டிருக்கிறது.

ஏனென்றால் இது பல நூற்றாண்டுகளாய் சவாரி செய்து சவாரி செய்து காய்த்துப் போன புட்டம். “பல நூற்றாண்டுகளாய் சுமந்து சுமந்து குதிரையின் முதுகும் காய்த்துப் போயிருக்க வேண்டுமல்லவா? அதுதானே இயற்கையின் நியதி?” என்று ஆதிக்க சாதியினரின் புட்டம் சிந்திக்கிறது. தங்களது புட்டத்தின் இந்த சிந்தனையை அனுதாபத்துடன் பரிசீலிக்குமாறு தலித் மக்களுக்கும் சாதி ஒழிப்பாளர்களுக்கும் ஆதிக்க சாதி மனோபாவம் வேண்டுகோள் விடுக்கிறது.

அம்பேத்கரிடம் காந்தி விடுத்த வேண்டுகோளும் இதுதான். “ஆழ்ந்த இறை நம்பிக்கை உள்ள ஒரு தலித்தை சங்கராச்சாரி ஆக்கி, அவர் காலில் பார்ப்பனர்கள் விழுந்து வணங்கத் தயாரா? தீண்டாமையைக் கடைப்பிடிப்பவன் காங்கிரசில் உறுப்பினராக இருக்க முடியாது என்று விதி செய்யத் தயாரா?” என்ற கேள்விகளை அம்பேத்கர் எழுப்பியபோது காந்தி அளித்த பதிலின் சாரம் என்ன?

“தலித் மக்களுக்கு சாதி இந்துக்கள் இழைத்த கொடுமைக்கு பரிகாரம் தேடிக்கொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்” - இதுதான் காந்தியின் பதில். எப்போது பரிகாரம் தேடுவார்கள்? அதற்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தேவைப்படும்? அவர்களுக்கு விருப்பப்பட்டபோது, அவர்களுக்கு விருப்பப்பட்ட முறையில் பரிகாரம் தேடுவார்கள். அதுவரை ‘குதிரை’ காத்திருக்கவேண்டும். சுமக்கவும் வேண்டும்.

காந்தியின் பதிலில் இருந்த ‘நேர்மை’ கூடத் தமிழகத்தின் ஆதிக்க சாதியினரிடம் இல்லை. ராஜினாமா செய்வதையே முதல் நிபந்தனையாகக் கொண்டு பாப்பாபட்டி தேவர்சாதியினரால் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ தலித் பஞ்சாயத்து தலைவர், டிவி காமெராவின் முன் தனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறார். அடுத்த கணமே, “நாங்களெல்லாம் அண்ணன் தம்பி போல வித்தியாசமில்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். வெளி ஆட்கள்தான் எங்களிடம் பிரிவினையை உருவாக்குகிறார்கள்” என்று தேவர்சாதியினர் பேட்டி கொடுக்கிறார்கள்.

இப்படியொரு பச்சைப் பொய்யை சொல்வதற்காக அவர்கள் கடுகளவும் கூச்சப்படவில்லை. ஏனென்றால் “இதுதான் இயற்கை நியதி, இதுதான் மரபு” என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த மரபு இந்து மதத்தால் புனிதப்படுத்தப்பட்ட மரபு. “பார்ப்பனர்களை ஏன் இழுக்கிறீர்கள்?” என்று சில பதிவர்கள் கொதிக்கிறார்களே, அந்தப் பார்ப்பனர்களால் இன்றளவும் அவர்கள் போற்றி வரும் பார்ப்பனியத்தால், சுருதிகள், ஸ்மிருதிகள், புராணங்களால் நியாயப்படுத்தப்படும் மரபு. சங்கராச்சாரிகளால் நிலைநாட்டப்பட்டு வரும் மரபு. அரியானாவில் மாட்டைக் கொன்றதாக 5 தலித்துகளை கண்டதுண்டமாக வெட்டிப் போட்டு, ‘அதுதான் எங்கள் தருமம்’ என்று பாரதிய ஜனதா எம்.பி வேதாந்தியால் பிரகடனப்படுத்தப்பட்ட மரபு. இதன் காரணமாகத்தான் “இந்து மதம் என்பது அறவுணர்ச்சியே இல்லாத மதம்” என்றார் அம்பேத்கர்.

தேவர் ஜெயந்தி பற்றிய எமது பதிவுக்குப் பின்னூட்டம் போட்ட ஒரு பதிவர், “என்னைப் பொறுத்தவரை நான் சாதி பார்ப்பதில்லை. யாரோ ஒரு சிலர் செய்யும் குற்றத்துக்காக ஒரு சாதியையே பழிதூற்றுவது என்ன நியாயம்?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அந்தப் பதிவரின் நேர்மையை நாம் சந்தேகிக்கவில்லை. ஆனால், “என்னைப் பொருத்தவரை நான் திருடன் இல்லை, பொறுக்கி இல்லை” என்று கூறி ஒதுங்கிக் கொள்ளும்படியான தனிநபரின் ஒழுக்கம் குறித்த விவகாரமல்ல சாதி.

அது மாத்திரமல்ல, “நான் திருடன் இல்லை என்றால், திருடர்களை உதைப்பதற்கு நான் ஏன் முன்வருவதில்லை? என் மாமனோ மச்சானோ சொந்தக்காரனோ அந்தக் குற்றத்தை இழைக்கும்போது அதை எதிர்க்கவிடாமல் என்னை மவுனமாக இருக்கச் செய்வது எது?” என்ற கேள்விக்கும் அந்தப் பதிவரைப் போன்றோர் பதில் தேட வேண்டும்.

இந்த மவுனத்துக்கு ஆயிரம் விளக்கங்கள் சொல்லி நியாயப்படுத்தலாம். ஆனால் மவுனத்தின் விளைவு சம்மதம்தான். வாங்கிய சம்பளத்துக்கு உரிய கடமையை ஆற்றாமல், “அந்த அநீதியான வன்முறையை”ப் பார்த்துக் கொண்டு நின்ற குற்றத்துக்காக சட்டக்கல்லூரியின் வாயிலில் நின்ற போலீசாரை தமிழகமே சபிக்கிறது. தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறது அரசாங்கம். போலீசாரின் மவுனம், சட்டப்படி கடமை தவறிய குற்றமாகிவிட்டது. சொந்தக்காரனும் சாதிக்காரனும் இழைக்கும் அநீதிகளைப் பார்த்துக் கொண்டு நிற்கும் ‘நல்லவர்களின் மவுனத்திற்கு’ யார் தண்டனை வழங்குவது? அவர்களை எதிலிருந்து சஸ்பெண்டு செய்வது?

“என்னை தேவர் என்றோ, படையாச்சி என்றோ, பிராமணன் என்றோ நான் கருதிக்கொள்வது இல்லை” என்பது உண்மையானால், தேவர் சாதியையும் பார்ப்பன சாதியையும் இடித்துரைக்கும்போது, அந்தச் சாதியினரின் வரலாற்றுக் குற்றங்களையும், நிகழ்காலக் குற்றங்களையும் சாடும்போது, எனக்கு ஏன் தசையாட வேண்டும்? சாதி அடையாளம் இழிவானது என்று புரிந்து அதனைத் துறந்தவனுக்கு அந்த அடையாளத்தின் பால் ஏன் அனுதாபம் பிறக்க வேண்டும்?

நல்லெண்ணம் கொண்டோராகவும், சாதி உணர்வு இல்லாதவர்களாகவும் தங்களைக் கருதிக் கொள்பவர்கள் இதனைப் பரிசீலித்துப் பார்க்கவேண்டும். “எம்பேரு கோபாலகிருஷ்ணன்” என்று நீங்கள் சொல்லி, ஊர்க்கார பயக ஒத்துக் கொள்ளாமல் “சப்பாணி” என்று சொன்னால் கோபப்படுவதற்கு, இது ஒரு தனிப்பட்ட மனிதனின் பெயர் சம்மந்தப்பட்ட விவகாரம் இல்லையே. அவனுடைய சமூக நடத்தை தொடர்பான பிரச்சினையாயிற்றே!

“சட்டக் கல்லூரி பிரச்சினை வெடிப்பதற்கான பொறி, தேவர் ஜெயந்தி போஸ்டர்தான்” என்கிறார்கள். தேவர் நல்லவர், வல்லவர் என்றெல்லாம் பல பின்னூட்டங்கள் வந்தன. இப்போது அதற்குள் நாம் போகவில்லை. இன்று தேவர் குருபூஜை எதற்காக நடத்தப்படுகிறது? அவர் நேதாஜியுடன் இணைந்து சுதந்திரப் போரில் ஈடுபட்டார் என்பதற்காகவா, அல்லது சில பதிவர்கள் கூறுவது போல அவர் தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார் என்பதற்காகவா? இன்று காங்கிரசு, பாஜக, திமுக, அதிமுக முதல் கம்யூனிஸ்டு கட்சிகள் வரை குருபூஜைக்குப் போய் சாமி கும்பிடுகிறார்களே, அங்கே உலக வர்த்தகக் கழகத்துக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்களா, அல்லது தீண்டாமை ஒழிப்பு உறுதி ஏற்கிறார்களா?

இன்னும் புரியும்படி சொல்வதென்றால், காந்தி நினைவு நாளுக்கு பனியா குருபூஜை என்றோ, கட்டபொம்மன் பிறந்த நாளுக்கு நாயக்கர் குருபூஜை என்றோ, மருதுவின் நினைவுநாளுக்கு சேர்வை குருபூஜை என்றோ, வ.உ.சி பிறந்த நாளுக்கு பிள்ளைவாள் குருபூஜை என்றோ காமராசர் பிறந்த நாளுக்கு நாடார் குருபூஜை என்றோ பெயரிடப்படாததது ஏன்? அந்தந்த சாதிக்காரர்களுக்கு அப்படியொரு சாதி அபிமானம் இருக்கத்தான் செய்கிறது. என்றாலும் தேவருக்கு மட்டும்தான் ‘குருபூஜை’. அங்கே மட்டும்தான் மொட்டை போட்டு சாமி கும்பிடுவது போன்ற வழிபாட்டு முறைகள். பாப்பாபட்டி, கீரிப்பட்டி முதல் மேலவளவு வரை தேவர் சாதிவெறியர்களால் ரணமாக்கப்பட்டிருக்கும் தலித் இளைஞர்களின் மன உணர்வுகள் “இந்த சாதி வழிபாட்டை சகித்துக் கொள்ள வேண்டும். இதற்கு போஸ்டரும் பானரும் வைத்தால் முகம் சுளிக்கக் கூடாது” என்பது சாதி வெறியர்களின் எதிர்பார்ப்பு.

சட்டக் கல்லூரி தலித் மாணவர்கள் இதையும் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலவளவில் தலித் ஊராட்சித் தலைவரை வெட்டியெறிந்ததைப் போலவே, சட்டக்கல்லூரியின் முன்னால் இருந்த ‘அம்பேத்கர்’ பெயரையும் வெட்டியிருக்கிறார்கள் சாதிவெறியர்கள். தாங்கள் அடிமை நிலையிலிருந்து விடுபடவும், கல்வி கற்கவும் ஆதாரமாக இருந்த தலைவரின் பெயரை வெட்டியெறிந்ததையும் தலித் மாணவர்கள் மவுனமாகச் சகித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது சாதிவெறியர்களின் எதிர்பார்ப்பு.

சாதித் தலைவரான தேவரை தேசியத் தலைவராகவும், தேசியத் தலைவரான அம்பேத்கரை சாதித் தலைவராகவும் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யும் இந்த வன்முறையை எதிர்த்து நியாயமாக அனைத்து மாணவர்களும் கிளர்ந்தெழுந்திருக்க வேண்டும். அது ஏன் நடக்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலாக, தலித் மாணவர்களின் வன்முறை இன்று விவாதப் பொருளாகியிருக்கிறது. மிகத் தந்திரமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பொதுக்கருத்தால் தலித் மக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். தலித் மாணவர்களைத் தேட தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.

“என்னதான் இருந்தாலும் ஒரு மாணவனை பத்து பேர் சேர்ந்து கொண்டு நாயை அடிப்பது போல அடிக்கிறார்களே இது என்ன நியாயம்?” என்ற உருக்கமான முறையீடும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்படும் அந்தக் காட்சிகளும், கடையக் கடையத் திரண்டு வரும் நஞ்சைப் போல, தலித்துகளுக்கு எதிரான மிகப்பெரும் வன்முறையாகத் திரண்டு எழுந்து வருகின்றன.

ஒரு மாணவனைப் பத்து பேர் சேர்ந்து அடிப்பது! எப்பேர்ப்பட்ட அநீதி! இதே போன்றதொரு கொடுமையை நானும் கண்டிருக்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் பெரியார் (ஈரோடு) மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் என் தலித் நண்பனொருவனுடைய வீட்டுக்குப் போயிருந்தேன். கவுண்டர்களும், படையாச்சிகளும் அந்த கிராமத்தின் பெரும்பான்மை சமூகம். வழக்கம்போல ஊருக்கு வெளியிலிருந்தது காலனி. ஒரு பத்து இருபது வீடு இருக்கும். அவ்வளவுதான்.

டவுனிலிருந்து வந்திருக்கும் பாண்ட் சட்டை போட்ட (மேல் சாதி) பையன் என்பதால் எனக்கு காலனி மக்களின் உபசரிப்பு ரொம்ப அதிகம். இதை விளக்கத் தேவையில்லை. முக்கியமாக என் நண்பனின் தாத்தா. கடலைக் கொட்டை அவித்துக் கொடுப்பது என்ன, இளநி வெட்டிக் கொடுப்பது என்ன, அவருடைய முகத்தில் அப்படியொரு ஆனந்தம். பெருமை.

காலை உணவெல்லாம் முடித்த பின், கறி எடுப்பதற்காக நண்பன் பக்கத்திலுள்ள சிறு நகரத்துக்குப் போய்விட்டான். கிராமத்தின் அலுப்பூட்டும் மதிய வேளை. ‘ஒரு டீ குடித்து விட்டு வரலாம்’ என்று வெளியில் வந்தேன். டீயை சொல்லி விட்டு ஒரு சிகரெட்டையும் பற்றவைத்து ரெண்டு இழுப்பு இழுத்த பிறகுதான் பார்த்தேன் - டீக்கடை தடுப்புக்கு அந்தப் புறத்தில் குத்துக்கால் போட்டு உட்கார்ந்திருந்தார் தாத்தா.

கூச்சப்பட்டு அவசரம் அவசரமாக சிகரெட்டடை மறைத்து அணைத்தேன். “சும்மா பிடிங்க சார், அதிலென்ன இருக்கு. ஊர்ப்பயலுவளே மூஞ்சியில ஊதுறானுங்க” என்றார் கடைக்காரர்
“பரவாயில்லீங்க. தாத்தாவுக்கும் ஒரு டீ சேத்துப் போடுங்க” என்றேன். முதலில் எனக்குத் தயாரான டீயைக் கையில் கொடுத்தார் கடைக்காரர். அதை தாத்தாவிடம் கொடுத்தேன். அவர் அதைக் கையில் வாங்காமல், “நீ சாப்பிடு கண்ணு” என்றார்.

“நீங்க சாப்பிடுங்க சார், அவருக்கு நான் போடறேன்” என்றார் கடைக்காரர்.

கடையின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு அலுமினியக் குவளையைக் கழுவி நீட்டினார் தாத்தா. அப்போதுதான் எனக்கு விசயம் மண்டையில் உறைத்தது. பதட்டமானது. குப்பென்று வியர்க்கத் தொடங்கியது.

“ஏன் அவருக்கும் கிளாஸிலயே கொடுங்களேன்” என்றேன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

கடையில் ஒரு பத்து பேர் ஆங்காங்கே நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று பேச்சு நின்றது. ஒரு அசாதாரணமான மவுனம்.

“நீ சாப்பிடு கண்ணு” என்றார் தாத்தா. அவர் முகம் வெளிறியிருந்தது.

“நீங்க சாப்பிடுங்க சார்” என்றார் கடைக்காரர்.

“சார் வெளியூர் போல... நீங்க சாப்பிடுங்க” என்றார் கூட்டத்திலிருந்த இன்னொருவர்.

என்னுடைய கேவலமான நிலைமையை எண்ணி கைகால்கள் நடுங்கின. சண்டை போடுவதா? இப்போது சண்டை போட்டு விட்டு ராத்திரி பஸ் ஏறி நான் போய்விடுவேன். தாத்தாவின் கதி என்ன? பிறகு காலனி மக்களின் கதி என்ன?

தாத்தாவின் குவளையில் இன்னும் டீ ஊற்றப்படவில்லை. என்னுடைய டீயையும் இன்னும் நான் குடிக்கவில்லை.

அவர்கள் பத்து பேர் - நானும் தாத்தாவும் மட்டும். கோபம், பயம்.. கண்ணீர் முட்டியது.

“எனக்கும் டீ வேண்டாங்க” என்று சொல்லி விட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு காலனிக்கே போய்விட்டேன். மாலை கிளம்பிவிட்டேன். நடந்தது என்ன என்பது எனக்கும் தாத்தாவுக்கும் மட்டும்தான் தெரியும். புறப்படுவதற்கு முன் அவருடைய கையை ஒரு முறை அழுந்தப் பற்றியதைத் தவிர வேறு எதையும் நான் அவருக்குச் சொல்லவில்லை. சொல்ல முடியவுமில்லை.

இது முன்னொரு நாள் நான் நேரில் அனுபவித்த வன்முறை. தாத்தாவுக்கு அது அனுபவித்துப் பழகிய வன்முறை. குஜராத் முஸ்லிம் மக்கள் அனுபவிக்கும் வன்முறை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் இந்த நாட்டின் தலித் மக்கள் அனுபவித்து வரும் வன்முறை. பார்ப்பனர் முதல் வேளாளர், முதலியார், செட்டியார், தேவர், வன்னியர், கவுண்டர் போன்றோரடங்கிய “பெரும்பான்மை இந்துக்கள்” பல்லாயிரம் ஆண்டுகளாக தலித் மக்கள் மீது மிகவும் இயல்பாகச் செலுத்தி வரும் வன்முறை.

ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தச் சம்பவத்தை டீக்கடைக்காரர் மறுநாளே மறந்திருப்பார். தாத்தாவும் கூட மறந்திருக்கக் கூடும். ஆனால் இந்த வன்முறையின் தழும்பை என்னுடைய நினைவுகள் தீண்டும் ஒவ்வொரு முறையும், குத்துக்காலிட்டபடி கையில் குவளையுடன் அமர்ந்திருக்கும் தாத்தாவின் முகம் சுரீரென்று நெஞ்சைக் குத்துகிறது.

பேச வந்த விசயத்திலிருந்து நான் வெகுதூரம் விலகிப் போய்விட்டேனோ? நாம் சட்டக்கல்லூரி மாணவர் வன்முறையைப் பற்றியல்லவா பேசிக்கொண்டிருந்தோம்.

பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை அடிக்கும் வன்முறை - அடேயப்பா, அது எவ்வளவு காட்டுமிராண்டித்தனமானது!

Tuesday, November 18, 2008

மனித உடலின் அணுக்களை (செல்) தாக்கும் குளிர்பானங்கள்

அணுக்களைச்(செல்) சாகடித்து, உடல் பருமனை ஏற்படுத்தும் அதிக கலோரியைக் கொண்ட குளிர்பானங்களின் விற்பனையை நிறுத்த வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கேட்டு கொண்டார்.

உலகம் முழுவதிலும் உள்ள பல பயனீட்டாளர் கழகங்கள் “உலகளாவிய நிலையில் குளிர்பானத்தை மறுப்போம்” என்ற பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. உலக அளவில் சிறார்களிடையே உடல் பருமன் பிரச்னைக்குக் காரணமாக இருக்கும் அதிக கலோரி கொண்ட குளிர்பானங்களின் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என உலகம் முழுதிலும் உள்ள நாடுகளின் அரசாங்கங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றன.

குளிர்பானங்களில் இருக்கும் அதிகமான சீனியினால் மட்டுமே பாதிப்பு இருக்கிறது என்று கிடையாது. அதில் மிக பரவலாக பயன்படுத்தப்படும் சோடியம் பென்சொயித் என்ற பதப்பொருள் மரபணுக்களில் முக்கிய அம்சங்களைக் குளறுபடியாக்கி கடுமையான அணுசிதைவை ஏற்படுத்துகிறது என பிரிட்டன் பல்கலைகழக ஆய்வு ஒன்று கூறுகின்றது. முதுமை மற்றும் மது பழக்கத்தினால் ஏற்படும் ஈரல் இறுக்கி நோயான சிரோசஸ் மற்றும் ஓயாத உறுப்புக்கள் நடுக்கத்தை ஏற்படுத்தும் பார்கின்சன் நோயையும் ஏற்படுத்தும் என்று கூறுப்படுகிறது என்று இத்ரிஸ் கூறினார்.

உலகம் முழுவதிலும் குளிர்பானங்களைக் குடிக்கும் இலட்சக்கணக்கான மக்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. உணவுகளில் சேர்க்கப்படும் செயற்கை சுவைக்கூட்டுப்பொருள் குழந்தைகளிடையே மிகை சுறுசுறுப்பை ஏற்படுத்துகிறது என்பதும் இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

சோடியம் பென்சோயித் இ211, கேஸ் பானங்களில் மிக பரவலாக உலகம் முழுவதிலும் பயன்படுத்தப்படுகிறது. பென்சோயித் அமிலத்திலிருந்து தருவிக்கப்படும் சோடியம் பென்சொயித் குளிர்பானங்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

சோடியம் பென்சொயித் புற்றுநோயுடன் சம்பந்தப்படுத்தப்பட்டு வருகிறது, காரணம் குளிர்பானங்களில் இருக்கும் வைட்டமின் சியுடன் இது கலக்கும் போது பென்சின் என்ற இரசயானத்தை உருவாக்கிறது. பென்சின் இரசாயனம் புற்றுநோய் காரணிகளில் ஒன்றாக இருக்கிறது.

உணவு விதி 1985ன் கீழ் பென்சோயிக் அமிலம் அல்லது சோடியம் பென்சோயித் உணவுகளில் பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சுவை சேர்க்கப்பட்ட பானங்களில் 2000 பிபிஎம் அளவும், குளிர்பானங்களில் 800பிபிஎம் அனுமதிக்கப்பட்ட அளவாகும்.

ஊட்டச்சத்து என்று பார்க்கும் போது குளிர்பானங்களில் மிக குறைந்த அளவே இருக்கிறது ஆனால், சுகாதார கேடுகள் என்று பார்க்கும் போது அதில் ஏரளாமாக மலிந்து கிடக்கிறது. பெரும்பாலான குளிர்பானங்கள¢ல் ஆபத்தான கேஸ், வர்ணம், அமிலம், சுவைப்பொருள், சீனியூட்டப்பட்ட நீர் மட்டுமே இருக்கின்றது. இந்தப் பொருட்களினால் புற்றுநோய், எலும்பு தேய்மானம், உடல் பருமன் சொத்தைப்பல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

சோடியம் பென்சோயித் ஏராளமான சுகாதார கேடுகள் சம்பந்தப்பட்டிருப்பதால், சுகாதார அமைச்சு இதனை மறு ஆய்வு செய்து, அதன் பயனீட்டை நிறுத்த வேண்டும். இந்த அமிலம் குளிர்பானம் உட்பட மற்ற உணவுகளில் பயன்படுத்தப்படுத்துவதற்கு உணவு விதி 1985 அனுமதிக்கிறது.

இளைஞர்களை புகையிலிருந்து விடுவியுங்கள்

உலக புகைபிடிக்காத தினம் 2008 ஆண்டு கொண்டாட்டத்தில் 2.73 மில்லியன் புகைபிடிப்பவர்கள் கலந்து கொள்ளப் போகின்றார்கள். இவர்களில் 2.61 மில்லியன் ஆண், 120,000 பெண் புகையாளர்களும் அடங்குவர். சராசரி நாள் ஒன்றுக்கு மவெ.15 மில்லியன் சிகரெட்டுக்காக செலிவிடப்படுகின்றது என பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர் எஸ்.எம். இத்ரிஸ் கூறினார்.

இந்த வருட கொண்டாட்டம் “இளைஞர்களைப் புகையிலிருந்து விடுவியுங்கள்” என்ற கருவுடன் கொண்டாப்படுகிறது. 18 வயதுக்கு கீழ்பட்ட 45லிருந்து 50 மலேசிய இளைஞர்கள் ஒவ்வொரு நாளும் புகைபிடிக்க தொடங்குக¢ன்றனர், இவர்களில் 8விழுக்காட்டினர் பள்ளி சிறார்களாவர். 2000கும் 2005ம் ஆண்டுக்கும் இடையில் பதின்ம வயதுடைய பெண்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை அவர்களிடைய 4 விழுக்காட்டிலிருந்து எட்டு விழுக்காடு அதிகரித்திருக்கிறது. மொத்தத்தில் 2004ம் ஆண்டில் ஐந்து மலேசிய இளைஞர்களிடையே ஒருவர் புகைப்பிடிப்பவராக இருக்கிறார் என இத்ரிஸ் கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலகத்தில் ஒவ்வொரு நாளும் 60,000க்கும் 100,000க்கும் இடைப்பட்ட குழந்தைகள் தினமும் புகைபிடிக்க தொடங்குகின்றனர். இதில் பெரும்பகுதியினர் ஆசியாவைச் சார்ந்தவர்கள்.

சிகரெட்டில் 4,000 விதமான இரசாயனங்கள் இருக்கின்றன, இதில் 2000 இரசாயனங்கள் நச்சுத்தன்மையானவை, 63 புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை. இருப்பினும் உலகலாவிய நிலையில் நாள் ஒன்றுக்கு அதன் விற்பனை 15 பில்லியன் அல்லது நிமிடத்திற்கு 10 மில்லியனாக இருக்கிறது. ஒவ்வொரு சிகரெட் பிடிக்கப்படும்போது மனிதனின் வாழ்நாளில் ஐந்து நிமிடத்தை அது குறைத்து விடுகிறது. உலகத்தில் ஒவ்வொரு எட்டு வினாடிக்கு ஒருவர் புகைபிடிப்பதனால் அல்லது அது சம்பந்தப்பட்ட நோய்களினால் செத்து மடிகின்றனர்.

மலேசியாவில் மட்டும், ஒவ்வொரு வருடமும் 10,000 இறப்புக்கள் புகையினால் சம்பவிக்கிறது. இதில் குறைந்த பட்சம் 3000 நுரையீரல் புற்றுநோய், இருதய நோய் மற்றும் கடுமையான நுரையீரல் நோயாக இருக்கிறது.

சிகரெட் வாங்குபவர்களின் வயது 18லிருந்து 21க உயர்த்தப்பட வேண்டும் என இத்ரிஸ் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். அதோடு வாங்குவதை மட்டும் தடை செய்யாது இளம் குழந்தைகள் புகைபிடிப்பதையும் அரசாங்கம் அடியோடு தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

அமெரிக்காவில் இல்லிநோயிஸ் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து கெடுபிடியான சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட பிறகு, 69விழுக்காட்டினர் புகைபிடிப்பதை கைவிட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. வயது குறைந்தவர்கள் சிகரெட் வாங்குவதைக் கட்டுப்படுத்திய பிறகு அவர்களிடையே சிகரெட் வாங்குபவர்களின் எண்ணிக்கை 3லிருந்து 70 விழுக்காடாக குறைந்திருக்கிறது என அந்த ஆய்வு காட்டுகிறது.

பொதுவாக குடும்பங்களாக செல்லக்கூடிய பொது இடங்களான உணவு கடைகள், உணவகங்கள் பொது கேளிக்கை இடங்களிலும் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என பி.ப.சங்கம் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறது.

அரசாங்கம் சுகாதார அமைச்சு மூலமாக, நெடுஞ்சாலைகளில் இருக்கும் ஓய்வு இடங்கள், பொது கேளிக்கை இடங்கள், ரெஸ்டாரண்டுகள் மற்றும் அதிகமாக பொதுமக்கள் செல்லக்கூடிய இடங்களில் சிகரெட்டுக்கு தடை வ¢திக்க வேண்டும் என்றும் இத்ரிஸ் கேட்டு கொண்டார். இது பொதுமக்களுக்குப் பாதுகாப்பான ஒரு சூழலை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் இரண்டாவது புகையாளராக மாறுவதிலிருந்தும் தடுக்கிறது.

710 மில்லியன் குழந்தைகள் உலக அளவில் இரண்டாவது புகையாளராக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. 6லிருந்து 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இரண்டாவது புகையாளராக இருக்கும் போது அவர்களிடயே வாசிப்பு, கணித மற்றும் சிந்தனை திறன் குறைவதாக அமெரிக்க சிஞ்சினாத்தி மருத்துவமனையின் ஆய்வு காட்டுகிறது.

பினாங்கில் அமைந்திருக்கும் இளைஞர் பூங்கா மற்றும் பூந்தோட்டத்தில் பொதுமக்கள் புகைபிடிப்பதாக பி.ப.சங்கத்திற்கு புகார்கள் வந்திருக்கின்றன. ஆகையால் இந்த இரு இடங்களிலும் புகைபிடிக்கக்கூடாத பகுதியாக அறிவிக்கும்படி பினாங்கு மாநில அரசாங்கத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டு காள்கிறது. இங்கு வருகை புரியும் பொதுமக்கள், மற்றும் உடற்பயிற்சியாளர்களின் நலன் கருதி இந்நடவடிக்கை மிக அவசிமாகிறது என இத்ரிஸ் கூறினார்.

இத்தகைய நடவடிக்கை இளைஞர்களைப் புகையிலிருந்து காப்பதற்காக உதவுவதோடு மட்டுமல்லாமல், புகையிலையின் ஆபத்தைப் பற்றி தனிநபர் மற்றும் சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அமயும் என்று பி.ப.சங்க தலைவர் எஸ்.எம். இத்ரிஸ் கூறினார்.

Tuesday, November 11, 2008

இளையோரிடம் அலட்சியப் போக்குகள் அதிகம்

அன்றாட வாழ்வில் சினிமா பிரிக்க முடியாத ஒரு அங்கமாகிவி்ட்டது. திரையில் தோன்றும் கதாநாயக - நாயகிகள், இளையோர்களை மெய் மறக்கச் செய்யும் வசீகரச் சக்தி அவர்களுக்கு இருக்கிறது. ஒரு இளைஞன் தான் எப்படியிருக்க வேண்டும் என்று நினைப்பதை ஏதோ ஒரு வகையில் திரையில் தோன்றும் கதாபாத்திரங்கள் பூர்த்திச்செய்யும் போது, அவர்கள் இளையோரின் கனவு நாயக - நாயகளாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். இன்று நேற்றைய கதையில்லை இது. கருப்பு வெள்ளை யுகத்திலேயே ஆரம்பமாகி விட்டது.

இளையோரை நல்வழிப்படுத்துவது கடினமான ஒரு விசயமாகும். காரணம் துள்ளும் இளமை பருவத்தில் இருப்பவர்கள் அவர்கள். அதோடு இளையோரிடம் அலட்சியப் போக்குகள் நிறையவே காணப்படுகின்றன. அவர்களின் ஆர்வத்தையும் இளமைத் துள்ளல்களையும் நம்மால் தணிக்கைச் செய்ய முடியாது. ஆனால் கலாச்சார சீரழிவுக்குக் காரணமாக இருந்து வரும் திரைப்படங்களை நம்மால் தணிக்கைச் செய்ய முடியும்.

தணிக்கை வாரியங்கள், புகை, மது, ஆபாசம் மற்றும் அளவுக்கு மீறிய வன்முறைகள் சம்பந்தப்பட்டக் காட்சிகளெல்லாம் தணிக்கைச் செய்யப்பட வேண்டும். நம் நாட்டு சட்டத் தி்ட்டங்கள் என்று வரும்பொழுது, ஒரு திரைப்படங்களில் குறிப்பிட்ட வரையில்தான் வன்முறைக் காட்சிகள் இடம் பெற்றிருக்க வேண்டும். அதுதான் இங்கு சட்டமும் கூட. ஒரு திரைப்படத்தைச் சம்பந்தப்பட்ட புகை நிறுவனங்களோ அல்லது மது நிறுவனங்களோ விளம்பரம் செய்தால் அதை உடனடியாக அரசாங்கம் தடை செய்ய வேண்டும். வளரும் தலைமுறைகளான பள்ளி மாணவர்களுக்குத் திரைப்படங்களால் ஏற்படும் கலாச்சார சீரழிவுப் பற்றி விழிப்புணர்ச்சிகளை அரசாங்கம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

ஒரு மாறுதல் ஏற்பட வேண்டும் என்றால், அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஏற்படுத்த வேண்டும். ஆதலால் வளர்ந்து வரும் இளையோர்களுக்கு நாம் விழிப்புணர்ச்சிகளை ஆழமாக அவர்களின் மனத்தில் பதிய வைத்து விட்டால், அவர்கள் நிச்சியமாக திசை மாறிப் போகமாட்டார்கள் என்று நம்பிக்கை கொள்ளலாம்.

-இக்கட்டுரை 15 மே 2005, தமிழ் நேசனின் வாசகர் களம் என்ற சிறப்பு பகுதியில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

Monday, November 10, 2008

தாய்மொழிவழிக் கல்வி : தமிழால் இயலாது என்பது தவறு.

ஒவ்வொருவருக்குமான முதன்மையான அடையாளம் என்பது அவரவர் தாய்மொழியால் பெறப்படுவதே ஆகும். குழந்தை தாயின் கருப்பையி லிருக்கும்போதே மொழியைக் கற்கத் தொடங்கி விடு கிறது. எனவே உலகின் அறிவுத் துறைகள் யாவற்றை யும் எந்தெந்த மொழிகளின் வழியாகப் பெற்றாலும் சிந்தனை என்பது தம் தாய்மொழி வழியாகவே அமையும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனவேதான் உளவியலறிஞர்களும் மானுடவியலாளர் களும் கல்வி என்பது அவரவர் தாய்மொழியில் அமைந் தால் மட்டுமே கல்வியின் முதன்மை நோக்கமாகிய சிந்தனைத்திறன் வளர்ச்சியும் படைப்பாற்றல் மேம் பாடும் நிகழும் என்கின்றனர். சிந்திப்பது ஒரு மொழி யிலும், கல்வி கற்றலென்பது ஒரு மொழியிலுமாக அமைவது அறிவியல் அடிப்படையிலேயே தவறானது.

குறிப்பாகத் தமிழகத்தின் பெரும்பான்மைப் பெற்றோர்கள், தாம் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் சிறப்பான முறையில் கல்வி பெற்றுயர்ந்ததை உணர்ந்தும் கூட, ஆங்கிலமோகம் கொண்டவர்களாகவே இருப்பது தமிழகத்தின் அவலச் சூழல்.

ஆங்கிலம் பயிலல் என்பது வேறு. ஆங்கிலத்தின் வழியாகப் பயிலுதல் என்பது வேறு. பிற மொழிகளைக் கற்றுக் கொள்வது என்ற நோக்கில் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் வயது, கற்றல் வேகம், சூழல் சார்ந்து கற்றுக் கொள்வதென்பது வரவேற்கத்தக்கதே. ஆனால் அடிப்படையான அறிவு வளர்ச்சிக்கான பாடங்கள் யாவற்றையும் எந்தக் காரணகாரியங்களும் இன்றி ஆங்கில வழியாகவே (ஆநனரைஅ டிக நுபேடiளா) பயின்றால் தான் அறிவு வளரும் என்பதான பெற்றோர்களின் எண்ணம் குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. ஆங்கிலம் என்பதனை அறிவின் மொழியாகவும் உலகின் அறிவுப்புலங்களுக்கெல்லாம் அதுவே வாயி லாகவும் எண்ணிக்கொள்கிற பல பெற்றோர்கள், தன் குழந்தை குறித்து ‘பிற பாடங்களெல்லாம் நன்றாகப் படிப்பான். ஆங்கில வழியிலேயே படித்ததால் தமிழ் தான் சரியாக வருவதில்லை’ என்று சொல்லிக் கொள்வ தில் பெருமையடைகிறார்கள்.

இன்றைக்கும் பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா, கியூபா, சீனா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஆங்கிலேயர் ஆண்டு விடுதலை வழங்கிய பல நாடுகளிலும் அவரவர் தாய்மொழியில்தான் ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை வழங்கப்படுகிறது. இன்று உலகையே தன் தொழில்நுட்ப அறிவால் ஆளுகிற ஜப்பானிய விஞ்ஞானி கள் பலருக்கும் ஆங்கிலம் தெரியாது என்பது நாம் அறிய வேண்டியது. அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் அளப்பரிய சாதனைகள் செய்து நோபல் பரிசு பெற்ற பல அறிஞர்களில்கூட ஆங்கிலம் தெரியாதவர் உள்ளனர். எனவே, ஆங்கிலப் புலமை என்பது அறிவின் அடையாளம் என்ற தவறான மனப்போக்கு மாற வேண்டும்.

நுண்ணிய நூல் பல கற்பினும் தத்தம்
உண்மை அறிவே மிகும்.
- என்ற வள்ளுவர் வாக்கை இப்போக்கில்கூடப் பார்க்கலாம்.

ஒரு குழந்தை இரண்டாவது மொழியாக ஆங்கி லத்தை மட்டுமல்ல வேறு எந்த மொழியைக் கற்க வேண்டுமானாலும் அது முதலில், தன் தாய்மொழியைச் சரியாகக் கற்று வளம் பெற்றால்தான் அந்த இரண்டா வது மொழியறிவையும் வெற்றிகரமாகப் பெறமுடியும். எனவேதான் உளவியல் மற்றும் மொழியியல் அறிஞர் கள் ஒரு குழந்தை தன் தாய்மொழியில் ஓரளவிற்குப் பயிற்சி பெற்ற பின்னர் பிறமொழி அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென்கின்றனர். ஆனால் இங்கோ அ, ஆவிற்கு முன் ஹ, க்ஷ, ஊ, னு அறிமுகப் படுத்தப் படுவதே கௌரவமாகக் கருதப்படும் சூழல். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பு வதைத் தடை செய்ய வேண்டும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வளர்ச்சியடையாத ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எழுதுவது, படிப்பது, கணக்கு சொல்லிக்கொடுப்பது தடை செய்யப்பட வேண்டும். பள்ளிப் பைகளின் எடை குழந்தையின் எடையில் பத்து சதவீதம் (10சதவீதம்) அதாவது 1 முதல் 1 1 /2 கிலோ வரை இருக்க வேண்டும் என்று இந்திய குழந்தைகள் மருத்துவக்கழகம் அறிவுறுத்துகிறது.

தட்பவெப்பச்சூழலுக்கு முற்றிலும் முரணான வகையில் கழுத்தில் இறுகும் பட்டையையும் (டை) காலுறையையும் (சாக்ஸ்) புதையடியையும் (ஷு) இறுக்கிக் கட்டி குழந்தையின் பிஞ்சு உடலும் மனமும் அரைவேக் காடாகும் வண்ணம் விலங்குகளை அடைப்பதுபோல் அள்ளிக்கொண்டு செல்லும் ஊர்திகளில் ஏற்றி ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்புவதில் அலாதி இன்பம் காண்கின்றனர் கற்றறிந்த பெற்றோர்கள்கூட.

பெரும்பாலும் தமிழ்வழிக்கல்வி என்பது கிராமப் புற ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கானது என்பது போலவும் ஆங்கில வழிக்கல்வி மேல்தட்டு மக்களுக் கானது என்பது போன்றதுமான மாயைச் சூழலைக் களையத் தற்போது சமச்சீர்க்கல்விக்கான முன்வைப்பு கள் மகிழ்ச்சி தருகிறன. பாமரனும்கூட தன் பிள்ளை ஆங்கில வழியில்தான் பயில வேண்டும் என்று முனைப்பு காட்டுவதுதான் தமிழ்ச்சமூகம் ஆங்கில மோகத்தின் வழி, மெக்காலே கண்ட கனவின் வழி மீண்டும் ஓர் அடிமைத்தனத்திற்குத் தயாராகிறது என்பதன் அடையாள மாகும்.

பல்லாண்டுகளுக்கு முன்பே கல்லணை கட்டிய சோழனின் தொழில்நுட்ப அறிவு இன்றைய பொறியியல் கல்லூரிகள் தந்ததா? கப்பல் கட்டிய அறிவு இங்கிலாந் தில் பெற்றதா? ஒவ்வொரு மொழியும் அவ்வினமும் அறிவுத் தோற்றவியல்( நுயீளைவநஅடிடடிபல) சார்ந்து தனக்கான அறிவுத்தேடலின் பயணப் பதிவை தத்தம் மொழியில் செய்திருக்கின்றன. அம்மொழியில் இன்றைய நவீனத் திற்கும் அதற்கு மேலுமான தொழில்நுட்ப அறிவு புதைந்திருக்கிறது.

அவ்வகையில் நம் செம்மொழித் தமிழால் மருத்துவம், அறிவியல், சட்டம், பொறியியல் கற்பிக்க இயலாது என்பது முற்றிலும் தவறானது. உயர்கல்வி யினைச் சிறப்பாகத் தமிழில் தர முடியும். கல்லூரிப் பாடங்களெல்லாம் ஆங்கிலத்தில் உள்ளன. எனவே தான் எங்கள் குழந்தைகளை ஆங்கில வழிப்பள்ளியில் படிக்க வைக்கிறோம் எனும் பெற்றோர்கள் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். படித்த, சென்ற தலைமுறைப் பெற் றோர்களின் ஆங்கிலப் புலமை இத் தலைமுறையினரை விடச் சிறப்பாகத்தான் இருக்கிறது. அவர்கள் ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்தவர்களில்லை. ஒரு மொழிப் பாடமாக மட்டும் ஆங்கிலத்தைப் பயின்றவர்கள்தான்.

உயர்கல்வி பெறும் பருவ வயதிற்கான கேட்டல், எழுதுதல், படித்தல், புரிதல் நிலை வளர்ச்சிவேறு.

“கல்விக்கு சரியான அடிப்படை ஒழுக்கத்தைக் கற்பிப்பதே. ஆங்கிலத்தில் எல்லா பாடங்களையும் போதிக்கும் பள்ளிக்கூடங்களுக்கு என் பிள்ளைகளை ஆப்பிரிக்காவில்கூட அனுப்பவில்லை. தாய்மொழி யில்தான் மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும். எங்களோடு டால்ஸ்டாய் பண்ணையில் வாழ்ந்த குழந்தைகளுக்கு தமிழும், உருதும் சொல்லிக் கொடுப் பதை நான் ஏற்றுக்கொண்டேன்” (சத்தியசோதனை - 238) என்ற மகாத்மா காந்தியடிகளின் கூற்றிற்கேற்ப குழந்தைகளின் வாழ்வு செப்பமானதாக்க தாய்மொழி வழிக்கல்வியை நாடுவோம்.

மன்னார்குடி இரெ.இராசகணேசன்

ஜெயலலிதா, சோ ராமசாமி, இந்து ராம் மற்றும் சில பூனைகள்

குண்டுகள் ஆலங்கட்டி மழை போல் பொழிந்தாலும்நாங்கள் பாசிஸ்டுகளுக்கு ஒரு அடி நிலத்தைக் கூட கொடுக்க மாட்டோம்.எங்களது தோழர்கள், ஆதரவாளர்களும் எங்களுக்குப் பின் நிற்கின்றனர்.எங்களுக்குப் பின்வாங்குதல் என்பது கிடையவே கிடையாது.

நான் வானத்தைப் பார்த்தேன்...அது எனது கண்களை வசியம் செயதது...நாங்கள் அனைவரும் சிற்பபாக சுடக் கூடியவர்கள், சுதந்திரமானவர்கள்...எங்களது ஒவ்வொரு தோட்டாவும் எதிரியை எழ விடாமல் செய்தது..
(ஜப்பானுக்கு எதிரான சீனப் புரட்சியின் போது கனேடிய புரட்சியாளரும் மருத்துவருமான தோழர் நார்மன் பெத்யூன் குழுவினரின் பாடல்கள்)

‘‘தமிழ்நாட்ல ஏன் சார் இப்படி’’

‘‘இன்னும் ரெண்டு கிலோமீட்டர்ல அவங்களை பிடிச்சுருவாங்களாமே? அவங்க கதை முடிஞ்சிடுமா?" வட இந்திய ஊடக நண்பரின் குரலில் கலந்திருந்த பதட்டமும் சந்தோஷம் கலந்த எதிர்பார்ப்பும் எனக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை.

நான் இப்படி அவருக்குப் பதில் சொன்னேன்.

‘‘நீங்கள் பல முறை அவர்களை காட்டிக் கொடுத்து விட்டீர்கள். சில முறை அவர்களை களவாடியிருக்கிறீர்கள். உங்கள் விருப்பங்கள் பல முறை உங்களால் நிகழ்த்திக் காட்டப்பட்டது. ஆனால் மீண்டும் மீண்டும் ஒன்றை மறந்து விடுகிறீர்கள். உங்களின் நண்பர்கள் பல முறை அவர்களை வென்று விட்டதாகச் சொன்ன கதைகளை தமிழகமே கதைகள் என்று நிரூபித்தது. இனியும் நிரூபிக்கும்.’’ என்றேன்.

வட இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்துக்குள்ளும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றினால் சிங்களர்கள் கொண்டாடுவார்களோ இல்லையோ காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் இவர்கள் கொண்டாடி விடுவார்கள் போல. சரி கிடக்கட்டும். காலம் இவர்கள் கிழித்த எத்தனையோ கோடுகளை அழித்துப் போட்டிருக்கிறது.

கடந்த 14ஆம் தேதி ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் இனவெறிப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரும்படியான கோரிக்கையோடு தமிழக முதல்வர் கலைஞரின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. கடந்த பத்தாண்டுகளில் இப்படியான ஒருங்கிணைந்த அரசியல் கட்சிகளின் கூட்டம் தமிழகத்தில் நடைபெறுவதால் இந்தியாவின் ஒட்டு மொத்த மீடீயாக்களும் தமிழகத்தின் அந்த முடிவுக்காக காத்திருந்தன. பல நேரலை ஒளிபரப்பு வாகனங்கள் தமிழகத்தின் போராட்ட மேடைகள் தோறும் வலம் வர இந்தியா முழுக்க கவனம் பெற்றது தமிழகத்தின் கொந்தளிப்பு.

கடந்த பத்தாண்டுகளில் குழந்தைகளும், பெண்களும், ஆண்களுமாய் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போதெல்லாம் தமிழக தமிழர்கள் கொதிப்பை மனதுக்குள் பூட்டியே வைத்திருந்தார்கள். தொடர்ந்து கட்டப்பட்ட புலிவேஷம் மத்திய மாநில அரசுகளுக்கு பொருந்தியே வந்தது. ஈழம், புலிகள், தமிழ்ச்செல்வன் என எதைப் பேசினாலும் அடக்குமுறைச் சட்டங்களால் காட்டிய பூச்சாண்டிப் புலி வேஷம் பல நேரங்களில் அரசியல் ரீதியாக பழிவாங்கவும் பயன்படுத்தப்பட்டது.

பொடா சட்டம், தடா சட்டம் போன்ற கொடிய ஆள்தூக்கிச் சட்டங்கள் பலதையும் கடந்து வந்த தமிழகம் அதனூடாக இந்தியாவுக்கே சில கோரிக்கைகளை முன்வைத்தது. இந்திய அளவிலான மனித உரிமை ஆர்வலர்கள் தங்களின் மனித உரிமைக் குரல்களை சென்னையில் இருந்து ஒலிக்கவும் துவங்கவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது அந்தக் கொடிய சட்டங்கள். புலி வேடம் போட்டவர்களின் தடாவும் பொடாவும் இன்று இல்லை. பயங்கரவாதத்தின் பெயரால் இதை விடக் கொடிய சட்டங்கள் நாளை வரலாம் புலி வேஷத்தோடு.

அதற்குள், மொத்த தமிழகமும் இன்று ஈழத்தமிழருக்காய் திரண்டிருக்கும் சூழலை ஆதிக்கத்தின் மேல் விழுந்த உடைப்பு எனலாம். இந்த கட்டுரைக்கு உடைப்பு என்று பெயர் வைத்தால் கூட அது பொருத்தமானதாகத் தானிருக்கும். இந்த உடைப்பு அதிகப்படியான தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியையும் வழக்கம் போல சிலருக்கு கொதிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

சர்வ கட்சிக் கூட்டம் நடந்த அன்று காலை வெளிவந்த ஹிந்து நாளிதழில் மாலினி பார்த்தசாரதி என்ற ஒரு பத்திரிகையாளர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். The dangers of tamil chauvinism என்கிற தலைப்பில் வெளிவந்த அந்தக் கட்டுரை திட்டமிட்டு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் அன்று இந்து பத்திரிகையால் வெளிக் கொணரப்பட்டது. சரி ஆங்கில அறிவாளிகள் அல்லவா? ஏதாவது விஷயம் இருக்கும் என நினைத்து வாங்கிப் பார்த்தால் அந்தக் கட்டுரை ஈழத்தமிழர் தொடர்பில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பு தொடர்பாக ஹிந்து பத்திரிகைக்கும் அதன் ஆசிரியர் ராம் அவர்களுக்கும் எழுந்துள்ள கொதிப்பை உணர்த்தியது. அந்தக் கொதிப்பில் உள்ள நியாயத்தை பார்ப்பதற்கு முன் வெங்காயத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்

# ஈழம் தொடர்பாக தமிழக அரசியல்வாதிகள் ஒரு புதிய டிரெண்டை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் எழுந்துள்ள இந்த அச்சுறுத்தல் இந்திய சமூகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது. தீவீரவாதமாக உருப்பெறும் தன்மை இந்த திரட்சிக்கு உண்டு. தெருவுக்குத் தெரு இது (ஈழ ஆதரவு) வளர்ந்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியும், மதிமுகவும் இதை உச்ச கட்ட நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

# வட இலங்கையில் நடக்கும் போருக்கு இங்கு (தமிழகத்தில்) கேம்பெய்ன் மாதிரி நடத்துகிறார்கள். எல்லோரையும் திரட்டி விட்டார்கள். ஆனால் இலங்கை ராணுவம் புலிகளின் தலைமையகத்தை பிடிக்க இன்னும் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலேயே இருக்கிறது. இலங்கை ராணுவம் இது வரை இப்படி ஒரு வெற்றியை அடைந்ததில்லை. வேலுப்பிள்ளை பிரபாகரனை பிடித்து விடுவார்கள். இவர் யார் என்றால் பாரதப் பிரதமரை படுகொலை செய்ய மூளையாகச் செயல்பட்டவர்.

# தமிழக அரசியல்வாதிகள் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு எதிராக செயல்படுகிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் இங்கிருந்து கொண்டு காஷ்மீரிகளையும் ஜிகாதிகளையும் ஆதரிப்பதற்கு சமமாக இருப்பதுபோல் இருக்கிறது.

# இதை(ஈழத்தை) ஆதரித்தால் அதை (காஷ்மீரை) ஆதரிக்கத்தானே வேண்டும். இதையும்( ஈழத்தையும்) அதையும் (காஷ்மீரையும்) ஒன்றாக வைக்க முடியுமா?

# புலிகள்தான் தென்கிழக்காசியாவில் தீவீரவாதத்தை துவங்கியது. அவர்களால்தான் அகதிகளாக தமிழர்கள் தமிழகம் வருகிறார்கள். அவர்களின் பிரச்சனையில் இங்குள்ளவர்களை இன்வால்வ் ஆக்குகிறார்கள்.

# இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு 83லிருந்து வெறும் இருபது வருட வரலாறே தெரியும்.

# இவர்கள் புலிகளின் மாஸ்டர் மைன்டாக செயல்படுகிறார்கள். ஒரே இரவில் இவர்கள் விழித்துக் கொண்டார்கள்.

# இந்திய மத்திய அரசு கடந்த பத்து வருடமாக சக்ஸசாக போய்க் கொண்டிருக்கிறது. (ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது போல புரிந்து கொள்ளவும்) இந்நிலையில் இந்த மாஸ்டர் மைன்டுகளை வளரவிட்டால் அது இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆபத்து.

என்றெல்லாம் இந்திய உபகண்ட உலக வரலாறு தெரிந்த மாலினி பார்த்தசாரதி எழுதியிருக்கிறார்.

தோழர்களே - நீங்கள் கற்றுக் கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் அப்படி எந்த புதிய கள்ளும் இந்த பழைய மொந்தையில் இல்லையாதலால் நீங்கள் அவர் எழுதிய கட்டுரையை படிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்தக் கட்டுரைக்கு எவ்விதத்திலும் பதில் சொல்ல முடியாத அளவுக்கு அந்தக் கட்டுரையின் தரம் இருந்தாலும் விடுதலைப்புலிகள் தீவீரவாதிகள் ஆக வேண்டும் என்று வேண்டி விரும்பி ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு கள முனைக்கு வரவில்லை என்பதை உணர்த்த சில வரிகளில் சிங்கள இன வெறி வரலாற்றை நினைவுறுத்த வேண்டியிருக்கிறது....

# வாளை செங்குத்தாக ஏந்திப் பிடித்திருக்கும் சிங்கக் கொடியோடு 1948 பிப்ரவரியில் சிங்களம் ஆட்சிக்கு வந்தபோது டான் ஸ்டீபன் சேனநாயகா அதன் முதல் பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற ஒரு வருடத்துக்குள் அவர் ‘பிரஜா உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்தார். அடர்ந்த காடுகளைத் திருத்தி காப்பியும் தேயிலையும் பயிர் செய்த மலையக மக்கள் சிங்கள் இன வெறிக்கு முதல் பலியானார்கள். 1840லிருந்து 1850 வரை கிட்டத்தட்ட பத்து இலட்சம் கூலி அடிமைகள் தமிழகத்தின் தென் ஆற்காடு, வட ஆற்காடு, திருச்சி, மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குடியுறிமை மறுக்கப்பட்ட அவர்களைத்தான் இன்று வரை மலையகத் தமிழர்கள் என்றும், இந்திய வம்சாவளிகள் என்று வரலாறு பதிவு செய்திருக்கிறது.

# 1956ல் பண்டாரநாயகா பதவிக்கு வந்த ஜூன் மாதத்தில் தனிச் சிங்களம் சட்டம் கொண்டு வரப்பட்டது. இலங்கை அரசின் கல்வித்துறையில் இருந்து ஒட்டு மொத்த தமிழ் மாணவர்களும் புறக்கணிக்கப்பட்டார்கள்.

# இவ் வேறுபாட்டின் கொடுமைகளை அன்றே அனுபவித்த தந்தை செல்வா அதை ஜனநாயக வழிகளில் அவர் நம்பிய அஹிம்சா கொள்கைகள் வழியே தீர்க்கலாம் என நம்பினார். அதனாலேயே சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஆதரவை வழங்கினார். சேனநாயகா, பண்டாரநாயகா, ஜெயவர்த்தனா என்று சிங்கள வெறியர்களோடு அவர் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் யாவும் பௌத்த பிக்குகளாலும் சிங்கள அடிப்படைவாதிகளாலும் கிளித்தெறியப்பட்டது. அஹிம்சா போராளிகள் மீது வன்முறை ஏவிவிடப்பட்டது.

# 1981ல் யாழ்நூலகம் எரிக்கப்பட்டது. தமிழர்களின் வரலாற்று மூலமான 90,000 நூல்கள் எரிந்து சாம்பலாயின

# தேடுதல் வேட்டையினால் பல நூறு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். அவர்கள் வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். 1983 ஜூலை 25 ஆம் தேதி சிங்கள கைதிகள் அரசின் ஆதரவோடு மிகப்பெரிய வன்முறையில் இறங்கினர். 34 கைதிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். ஜெகன், தங்கத்துரை, குட்டிமணி என ஏராளமான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இரண்டு நாள் கழித்து மேலும் 18 பேர் கொல்லப்பட, தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல் எங்கும் பரவியது. கிட்டத்தட்ட 3,000 தமிழர்கள் கோரமாக கொல்லப்பட்டனர். உலகின் கறுப்பு வரலாற்றில் இந்த இன வெறித்தாக்குதலை ஜூலை கலவரம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

# குமுதினி, செம்மணி, செஞ்சோலை என சிங்கள இனவெறி வரலாற்றில் கோரமாக கொல்லப்பட்ட தமிழ் மக்களின் கதைகளை நாம் குறைவாகவே பதிவு செய்திருக்கிறோம். அது போல 1956, 1958, 1961, 1974, 1981, 1983 என்று வரலாற்றின் மிக நீண்ட தக்குதல்களால் ஈழத்தமிழர்கள் உயிரையும் உடமைகளையும் இழந்திருக்கிறார்கள். 83 ஜூலை கலவரங்களுக்கு பிறகு ஆயுதம் தாங்கிய இளைஞர்களின் எழுச்சி ஏற்பட்ட பிறகுதான் சிங்களர்கள் தமிழர்களை படுகொலைகள் செய்வதை நிறுத்தினர். ஆனால் சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிராக செய்ததை இப்போது இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது. இன வெறி அன்றும் இன்றும் அரசு பயங்கரவாதமாக இலங்கையில் இருக்கிறது

வெறும் இருபது வருடங்களுக்குள் அடங்காத பாசிசத்தின் கோரமுகம் இப்போதும் பல்லிளிக்கிறது அதே கோரத்தோடு.

‘‘இந்த நாடு சிங்கள மக்களுக்கு மட்டுமே சொந்தமானது தமிழர்கள் இருந்து கொள்ளலாம் இங்கே’’ என்று இலங்கை ராணுவத்தளபதி சரத்பொன்சேகா சொல்லும் போது இன வெறிப் பாசிசத்தின் இறுகிய வடிவமான அந்த வார்த்தைகள் இந்தியா வகுத்துக் கொடுக்கும் இலக்கணத்தின் படியே சொல்லப்படுகிறது. இன்று நூற்றுக்கணக்கான சிங்கள ராணுவத்தினர் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆயுதப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி பயிற்சி எடுக்கும் சிங்கள ராணுவத்தினருக்கு ஊக்கத் தொகையும் கொடுத்து உற்சாகப்படுத்துகிறது இந்தியா. இது அவரை உற்சாகப்படுத்துவதாய் சரத் பொன்சேகா சொல்கிறார்.

இது இன்றைய கதை.

அன்று, அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பி ஆயிரக்கணக்கான ஈழ மக்களை கொன்று குவித்தது.

# திலீபனின் உயிரைக் காவு வாங்கியது

# குமரப்பா புலேந்திரன் உடபட 17 பிரதானப் போராளிகளை சிங்களனிடம் காட்டிக் கொடுத்தது இந்தியா.

# கிட்டுவின் மரணத்துக்குக் காரணமானது.

இதற்கெல்லாம் இன்று இந்தியாவிடம் பதில் இல்லை. மௌனம் மட்டுமே பதில். அந்த மௌனம்தான் இன்று யுத்த தந்திரமாக ஈழத்தில் தமிழர்களை கொன்று குவிக்கிறது. ஆனாலும் இன்று தமிழகம் கொந்தளித்த பிறகு முதன் முதலாக வாய் திறந்திருக்கிறது இந்தியா. ‘‘இந்தியாவின் பிராந்திய நலனும் இந்து மகாசமுத்திரத்தில் வேறு எந்த நாடும் ஆதிக்கம் செய்வதை இந்தியா விரும்பவில்லை. ஆகவே இலங்கைக்கு ஆயுத உதவி செய்கிறோம்’’ என்கிறது. இந்துமாக்கடல் பிராந்தியத்தை அமெரிக்காவும், சீனாவும், பாகிஸ்தானும் பங்கு போட்டிருக்கிறது. திருகோணமலை துறைமுகத்தை தன் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க நினைக்கிறது அமெரிக்கா.

எண்பதுகளில் போராளிக் குழுக்களுக்கெல்லாம் ஆயுதமும் பயிற்சியும் கொடுத்து வளர்த்த இந்தியா அவர்களை தனது செல்லப் பிள்ளைகளாக்க நினைத்தது. தூண்டிலில் வைத்த இறை மீனுக்கு உணவு என்று நம்பி இந்தியாவிடம் ஏமாந்தவர்கள் இன்று இலங்கை அரசின் ஆதரவோடு இயங்குகிறார்கள். 1989ல் மாலத்தீவில் இந்தியாவின் ரா அமைப்பு நிகழ்த்திய போலிக் கிளர்ச்சிக்கு பயன்பட்டவர்களை காரியம் முடிந்ததும் கழட்டி விட்டார்கள். சில ஆயுதக்குழுக்களை போராளிகள் என்று உருவாக்கியது இந்தியா. அதன் விளைவைத்தான் முப்பதாண்டுகாலமாய் நீண்டு கொண்டிருக்கும் ஈழப் போர் வலி நிறைந்த கதைகளோடு உலகுக்கு உணர்த்துகிறது. உண்மையான போராளிகள் போரிட்டார்கள். அன்று போராளிகளுக்கு ஆயுதம் கொடுத்த இந்தியா இன்று சிங்கள அரசுக்கு ஆயுதம் கொடுக்கிறது.

2004ம் ஆண்டு தெற்காசியாவின் கடலோரங்களை காவு கொண்ட சுனாமி தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. கிட்டதட்ட பத்தாயிரம் தமிழர்கள் தமிழகத்தின் நாகையிலும் குமரியிலும் சுனாமிக்கு பலியானார்கள். இந்திய அரசின் உதவிகள் கிடைக்க நான்கு நாட்கள் ஆனது. ஆனால் சுனாமி வந்த மறுநாளே இந்தியாவின் விமானங்கள் இலங்கையையும் மாலத்தீவையும் சென்றடைந்தது. சொந்தக் குடிகள் ஆயிரக்கணக்கில் மடிந்தபோது வராத விமானமும், கப்பலும் மாலத்தீவுக்கும் இலங்கைக்கும் செல்கிற நோக்கத்தின் ரகசியம் இந்து மகாசமுத்திரத்தில் பொதிந்திருக்கிறது. ஆனால் நீங்கள் எந்த கடலைக் காரணம் காட்டி இலங்கைக்கு ஆயுதம் கொடுக்கிறீர்களோ அந்தக் கடலில்தான் இன்று சீனா தனது கண்காணிப்பை தீவீரப்படுத்தி இருக்கிறது. தென்னகத்தில் உள்ள உங்களின் அனல் மின் நிலையங்களையும் ரஷ்யாவின் உதவியோடு இந்தியா நிறுவிக் கொண்டிருக்கும் கூடங்குளம் அணு மின் நிலையத்தையும் அது தீவீரமாக கண்காணிக்கிறது. அது இந்துமாக்கடலையும் தாண்டி வங்காள விரிகுடா, அரபிக்கடல் என தன் ராணுவக் கண்காணிப்பை இலங்கையின் உதவியோடு தீவீரப்படுத்தி இருக்கிறது.

அது போல அகதிகளாக ஈழத்தமிழர்கள் இங்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் வேறு எங்குதான் போவார்கள். இந்தியாவின் கையாலாகத்தனத்தால்தான் ஈழப்பிரச்சனை ஐய்ரோப்பிய நாடுகளை நோக்கி திரும்பியது. ஈழ அகதிகளுக்கு நீங்கள் செய்து கொண்டிருப்பது துரோகம், பெருந்துரோகம். காரணம் சீனாவோடு முரண்பட்டு இந்தியாவுக்கு வருகிற திபெத்தியர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கர்நாடகாவின் கூக்ளியில் பல நூறு ஏக்கர் பசுமைப் பள்ளத்தாக்கை திபெத்திய அகதிகளின் சுய சார் பொருளாதரத்திற்கு கொடுத்து உதவியது இந்தியா. இன்று அவர்கள் பொருளாதார ரீதியில் வலுவான சக்திகளாக வளர்ந்து வரும் சூழலில் எங்கள் மக்கள் மட்டும் இன்னும் அகதி முகாம் என்னும் திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைந்து கிடந்து சாகத்தான் வேண்டுமா?

இந்தக் கேள்விகள் நீண்ட காலங்களாகவே எங்களால் கேட்கப்பட்டுக் கொண்டுதான் வருகிறது. இன்றைய கொந்தளிப்புகள் இந்தியாவின் நாடகங்களைப் புரிந்து கொண்டு எதிர் உணார்வால் எழுந்தது. ஆக இந்த எதிர்ப்பு எப்படி இலங்கை அரசுக்கு எதிரானதோ அது போல இந்திய அரசுக்கு எதிரானதும் கூட, தமிழகத்தின் பெரும் பங்கு மக்கள் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்வதாக நம்புகிறார்கள். அதை பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

முதலில் இந்திரா காலத்தில் எண்பதுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு, பின்னர் அமைதிப்படை இலங்கையிலே நிகழ்த்திய மனித உரிமைகளுக்கு எதிரான கொந்தளிப்பு, பின்னர் போருக்கு எதிராக இப்போது ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பு என தொடர்ந்து கொண்டிருக்கிறது ஈழத்துக்கும் தமிழகத்துக்குமான உறவு. ஆனால் இந்த உடைப்புகளில் இருந்து கொந்தளிப்புகளிலிருந்து நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள். ஈழமும் தமிழகமும் ஒன்றிலிருந்து இன்னொன்றாக பிரிக்க முடியாத கலாசாரப் பின்னணியைக் கொண்ட இரு வேறு நாடுகள். அதாவது ஒரு கடல் இரு கரைகள் (நன்றி சா.பாலமுருகன்) அவ்வளவுதான்.

கடந்த பத்து ஆண்டுகளாக வெள்ளம் பாத்தியில் ததும்பிக் கொண்டிருந்தது. இப்போது அது உடைந்து ஓடிக் கொண்டிருக்கிறது.... காலம் கிழித்து விட்ட இந்த பத்தாண்டுகள் இடைவெளியில் நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்; நாங்கள் நாங்களாகவே இருக்கிறோம் என்பதைக் காலம் இன்னுமொரு முறை நீரூபித்திருக்கிறது.

நீங்கள் இது வரை காட்டிய புலிப்பூச்சாண்டியையே மீண்டும் காட்டுகிறீர்கள். ஜெயலலிதா, ‘சோ’ ராமசாமி, இந்து ராம், சுப்ரமணியன் ஸ்வாமி நீங்களெல்லாம் யார்? யாரின் நலனுக்காக இப்படி வரிந்து கட்டிக் கொண்டு தமிழர்கள் மீது உங்கள் கொதிப்பைக் கொட்டுகிறீர்கள்? இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலையிடும் வரை கலைஞர் பட்டும் படாமலுமே இருந்தார். காரணம் இரண்டு முறை அநியாயமாக அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. எவ்வித சம்பந்தமும் இல்லாமல் திமுக பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கிறது. ஆனாலும் இன்று மீண்டும் தன் முழு சக்தியையும் செலவழிக்க கலைஞர் வீதிக்கு வந்திருக்கிறார். தன் அதிகாரத்தை இன்னொரு முறை ஈழ மக்களுக்காக துறக்க கலைஞர் உணர்வுப்பூர்வமாய் வந்திருக்கிறார்.

கம்யூனிஸ்டுகளின் உண்ணாவிரதத்துக்கு திமுக அழைக்கப்படாத சூழலில் அழைத்து, வருவதாக ஒப்புக் கொண்ட ஜெயலலிதா கடைசி நேரத்தில் காலை வாரினார். ‘‘ஈழத்தமிழர் படுகொலைக்கு மத்திய அரசே மௌன சாட்சி’’ என்று ஈழ மக்கள் மீது பரிவு காட்டினார். ஆனால் ஒரு இரவுக்குள் காட்சி மாறியது. மறுநாள் போய்ஸ்கார்டனில் நடந்தது அந்தச் சந்திப்பு. சோ ராமசாமியும் ‘ஜெ’வும் போயஸ் கார்டனில் சந்தித்துக் கொண்டனர். மறுநாளே ஜெயலலிதாவின் குரல் மாறுகிறது. கருணாநிதி பதவி விலக வேண்டும். மத்திய ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று அம்மா சாமியாடியது.தொடர்ந்து 14ஆம் தேதி சர்வக் கட்சிக் கூட்டத்தை அறிவிக்கிறார் கலைஞர். அன்று காலையில்தான் இந்து பத்திரிகை தன் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாலினியின் கட்டுரையை வெளியிடுகிறது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவின்படி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜ்யசாபா உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்றார் கலைஞர். வைகோ தான் எங்கே ஈழ விவகாரத்தில் தனிமைப்பட்டு விடுவோமோ என்று பயந்து தனது எம்பிக்களும் பதவி விலகுவார்கள் என்று அறிவிக்கிறார்.

மத்திய அரசுக்கு தமிழகம் என்ன நெருக்கடியைக் கொடுக்க முடியுமோ அந்த நெருக்கடியை கொடுக்கிறார் கலைஞர். உடனே ஜெயலலிதா சொல்கிறார். ‘‘இலங்கை அரசை போரை நிறுத்தச் சொல்லி இந்திய அரசு உத்தரவிட முடியாது. அது புலிகளுக்கு ஆதாயமாகப் போய் முடியும்’’ என்கிறார். முந்தின நாள் ஈழ மக்களுக்கு எதிரானதாகத் தெரிந்த போர் ஒரு இரவுக்குள் புலிகளுக்கு எதிராக திரும்புகிற வித்தையை நாம் போயஸ்கார்டனில் மட்டுமே கற்றுக் கொள்ள முடியும். சந்திப்புகள் போரை தங்கள் சுயலாபத்துக்கு மாற்றுகிறது.

ஹிந்து பத்திரிகை மாலினி பார்த்தசாரதியின் கட்டுரையும் ஜெயலலிதாவின் இந்த அறிக்கைகளும் ஒரு புள்ளியில் இணைகின்றன. அந்தப் புள்ளி பார்ப்பனீயம் என்னும் இந்திய தத்துவ மரபில் இருக்கிறது. ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் சந்திரிகா அம்மையார் அடிக்கடி சென்னைக்கு வருவார். இருவரும் சந்தித்துப் பேசுவார்கள். இலங்கை அதிபரான சந்திரிகாவுக்கு பல முறை போயஸ்கார்டனில் விருந்து சமைக்கப்பட்டிருக்கிறது.

சந்திரிகாவின் கணவர் ஹிந்து ராமுக்கு நண்பர். சந்திரிகாவை போயஸ் கார்டனுக்கு அழைத்துப் போனது ஹிந்து ராம். அன்றிலிருந்துதான் தமிழகத்தின் பிரதான திட்டமான சேதுக் கால்வாய் திட்டத்தை தடுக்கப் போராடினார் ஜெயலலிதா. இதே சேதுக் கால்வாயை சந்திரிகா அம்மையாரும் எதிர்த்தார். ஜெயலலிதாவும் சந்திரிகாவும் நட்புக்கூட்டணி போட்ட காலத்தில்தான் (2006ல்) ஹிந்து ராமிற்கு இலங்கை அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘சிங்கள கேல்’ விருது சந்திரிகா அம்மையாரால் வழங்கப்பட்டது. அதற்கு நன்றிக் கடனகாக இந்து தன் பார்ப்பன பாசிசத்தை வெளிப்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்வதில் நமக்கு சிரமம் ஒன்றும் இல்லை.

உண்மையில் தமிழகத்தின் நாற்பது எம்பிக்களும் பதவி விலக வேண்டும் என்பது அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எடுத்த முடிவு. ஆனால் ‘ஜெ’ கலைஞரை தனிமைப்படுத்தி தாக்க முயற்சிக்கிறார். இவர்கள் அனைவரும் ஒன்றிணையும் புள்ளி பார்ப்பன பாசிசம் அல்லாமல் வேறென்ன தோழர்களே? தமிழக எம்பிக்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்ளும் பட்சத்தில் என்ன நடக்கும். மத்தியில் ஆட்சி கவிழும் அல்லது திமுக மத்திய அரசில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும். இந்த இரண்டில் ஏதோ ஒன்று நடக்கும். ஈழத்தமிழர் பிரச்சனையில் என்ன நடக்கும்?

எதுவும் நடக்காது.

உலகிலேயே இன்று பாசிச அரசாக திகழும் ராஜபக்ஷே அரசு இந்தியாவை தூக்கி எறிந்து விட்டு சீனாவின் பக்கமும் பாகிஸ்தான் பக்கமும் சாய்வது ஒரு பக்கம் இருந்தாலும் உதைக்கிற தம்பியை அண்ணன் எப்படி அணுகிறான் எனப் பார்ப்போம்.

நாம் மீண்டும் மீண்டும் சொல்கிறோம். இலங்கையை அது சிங்கள மக்கள் தமிழ் மக்கள் வாழும் பகுதியாக இருந்தாலும் போரற்ற பகுதியாக மாற்ற வேண்டும். ஈழத் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்படும் போரை இலங்கை அரசு உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்கிறோம். ஆக்ரமிக்கப்பட்டு சிங்கள சிப்பாய்களின் பூட்ஸ் கால்களில் மிதிபடும் எமது விவசாய நிலங்களில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும் என்கிறோம். அதுதான் இந்தியாவுக்கு தமிழகம் வைக்கும் நிபந்தனை அல்லது வேண்டுகோள்.

ஆனால் இந்தியா இலங்கையுடன் கெஞ்சுகிறது, எப்படி தெரியுமா? ‘‘யுத்தத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. போரில் மக்கள் எவ்வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. மக்களுக்கு பாதகம் இல்லாமல் ஒன்றுபட்ட இலங்கைக்குள் பிரச்சனையை பேசித் தீர்க்க வேண்டும்’’ என மீண்டும் மீண்டும் கெஞ்சுகிறது இந்தியா.

சரத்பொன்சேகா சொல்கிற ஒன்றுபட்ட இலங்கை சிங்கள மக்களுக்கே சொந்தமாக இருக்கும்போது தமிழ் மக்கள் தங்களுக்கான ஒரு சுதந்திர ஈழத்தைக் கோருவதில் என்ன தவறு? ஒன்று அதைக் கண்டிக்கிற அரசியல் நேர்மை இருக்க வேண்டும் இல்லை என்றால் ‘‘போரை நிறுத்துங்கள் பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும்’’ இந்த இரண்டு அரசியல் நேர்மையும் அற்ற இந்தியா இலங்கையில் தலையிட மாட்டோம் என்று சொல்லிக் கொண்டே ஆயுதங்கள் கொடுக்கிறபோது தெற்காசியாவில் பாசிசத்துக்கு நீங்கள் துணை போகிறீர்கள் என்றுதானே அர்த்தம்.

உங்களின் அடுத்த கவலை, தனி ஈழத்தை ஆதரித்தால் காஷ்மீரையும் ஆதரிக்க வேண்டுமே..... என்பது. ஆனால் என்ன செய்ய? ஈழத்தில் நாம் தனி ஈழத்தை ஆதரிக்கிறோமோ இல்லையோ காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே என்பதில் ஜனநாயகத்தை பேணக் கோருகிறோம். காஷ்மீரை ஆக்ரமித்திருக்கும் பாகிஸ்தானும் இந்தியாவும் அங்கிருந்து வெளியேற வேண்டும். ஏற்கனவே கொடுக்கப்பட்ட நேரு காலத்திய வாக்குறுதிகளின்படி காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுடன் இருக்க விரும்புகிறார்களா? இந்தியாவுடன் இருக்க விரும்புகிறார்களா? இல்லை இந்த இருவரிலிருந்தும் விலகி தனியாக இருக்க விரும்புகிறார்களா? என்று வாக்கெடுப்பு நடத்தி அதை அந்த மக்களின் முடிவுக்கே விட வேண்டும்.

அது போலத்தான் ஈழமும். அங்கு போர் நிறுத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் கோரிக்கையே தவிர அது சுதந்திர தமிழீழமா? இல்லை ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி அதிகாரம் பெற்ற ஈழமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய உரிமையும் பொறுப்பும் ஈழ மக்களுக்கு மட்டுமே உண்டு. எந்த மூன்றாவது நாடும் அதைத் தீர்மானிக்க முடியாது. இந்தியாவுக்கும் அந்த உரிமை இல்லை. இதைச் சொன்னால் நம்மையும் ஜிகாதிகளின் பட்டியலில் சேர்த்து விடுகிறார்கள்.

1987ல் தீர்வைச் சொல்கிறேன் என்று அதிகப்பிரசங்கித்தனமாக இலங்கை விவாகரத்தில் ஒரு தலைப்பட்சமாக தலையிட்டது இந்தியா. ஈழ மக்களை சதுரங்கக் காய்களாக்கி இந்தியாவும் இலங்கையும் ஆடிய விளையாட்டில் பலியானதென்னவோ ஈழ மக்களும் இந்திய சிவிலியன்களும்தான். ஈழ மக்களுக்காய் போராடிக் கொண்டிருந்த புலிகளோ அதை வேடிக்கை பார்க்கும்படியாயிற்று. கடைசியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீர்களை இழந்து, அமரிக்கா வியட்நாமில் சந்தித்ததை இந்தியா ஈழத்தில் சந்தித்தது. சர்வதேச சமூகத்தின் முன்னால் தோல்வி முகத்தோடு நாடு திரும்பும்படியாயிற்று. இந்திய இலங்கை ஒப்பந்தம் என்பது வெறும் அரசியல் ரீதியிலான ராணுவ ரீதியிலான தோல்வி மட்டுமல்ல நமது ராஜதந்திரத்தின் மீது விழுந்த அசிங்கமான அடியாகும்.

வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்திய அந்த ஒப்பந்தத்தின் சாரமே இன்று இலங்கை அரசால் கிழித்தெறியப்பட்டிருக்கிறது. வடக்கையும் கிழக்கையும் பிரித்து அதில் கிழக்கை துரோகக் குழுவான கருணா, பிள்ளையான் குழுவிடம் ஒப்படைத்திருக்கிறது இலங்கை அரசு. (இப்போது பிள்ளையானும் கருணாவுமே ஒருவரை ஒருவர் கொல்லத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தனிக்கதை)

உலகெங்கிலும் நடைபெற்ற இன விடுதலைப் போராட்டங்களை உண்மையாக இந்தியா ஆதரித்த காலம் ஒன்று உண்டு. பாலஸ்தீனத்துக்கு தார்மீக ஆதரவைக் கொடுத்த காலம் உண்டு. மத்திய கிழக்கோடு உறவு வைத்த காலங்களும் உண்டு. எப்போதெல்லாம் இந்தியாவை அண்டி நடக்கும் இன விடுதலைப் போரை அது ஆதரித்தது வந்ததோ அப்போதெல்லாம் இந்தியாவின் இறைமை காக்கப்பட்டதும் உண்டு. ஆனால் பாலஸ்தீனத்தை ஆதரித்தவர்கள் இப்போது இஸ்ரேலின் டெக்சார் ஏவுகணையை சிறிகரிகோட்டாவில் இருந்து ஏவிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியே பாலஸ்தீனத்திற்கு 100 கோடி ரூபாய் உதவியும் செய்கிறார்கள். அப்படியானால் இந்தியாவின் வெளியிறவுக் கொள்கைதான் என்ன? அணிசேராக் கொள்கை என்னவானது?

சரி ஈழத்தை ஆதரித்தால் இந்தியாவின் வட கிழக்கில், காஷ்மீரில், தமிழகத்தில் கொந்தளிப்புகள் உருவாகும் என்பதெல்லாம் கடந்த முப்பதாண்டுகளக சொல்லப்பட்டு வந்த புனைவாகும். காஷ்மீரின் சுயாட்சிக் கோரிக்கையும், வடகிழக்கின் கொந்தளிப்புகளையும் புரிந்து கொண்டு பார்த்தால் இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்பவர்கள் பார்ப்பன இந்துப் பாசிஸ்டுகளே அன்றி உழைக்கும் மக்கள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் கேரளா, கர்நாடகா, ஆந்திர அரசுகள் தண்ணீருக்கான நமது உரிமையை மறுத்தாலும் பெங்களூரில், மும்பையில் தமிழர்கள் தாக்கப்பட்டாலும் பிற இன மக்களுடன் சேர்ந்து வாழும் சாத்தியக் கூறுகள் இந்தியாவில் அறுந்து போகவில்லை. மாறாக தேசியம் என்பது இங்கு தரகு முதலாளித்துவம் சார்ந்ததாகவும், சாதியத்தைப் பேணுவதாகவும் பெண்ணடிமைத்தனத்தைப் போற்றுவதாகவும் இருக்கிறது. இது தங்கள் இன மக்களை தாங்களே சுரண்டும் உரிமை கோரும் முறையாக இருப்பதால் இனவாரி தேசியத்தை இன்று ஏற்றுக் கொள்வதில் சிக்கல் இருக்கிறது.

இந்தியாவின் பன்மைத்தன்மையில் சாதி இழிவு, சுரண்டல் பொருளாதாரம், பார்ப்பன பாசிசம், இவைகளைத் தவிற பல்லின உழைக்கும் மக்களிடம் கொண்டாடவும் உறவு கொள்ளவும் எவ்வளவோ கலாசார அம்சங்கள் இருக்கிறது. தவிரவும் பிற இன உழைக்கும் மக்கள் எப்போதும் இன்னொரு இன மக்களிடம் துவேசம் காட்டியதில்லை என்பதே என் கருத்து. ஆனால் இந்தியாவின் இந்த பன்மைத் தன்மையை சிதைத்தவர்கள் யார்? பாபர் மசூதியை உடைத்தவர்கள் யார்? தேவாலயங்களைத் தாக்கி கிறிஸ்தவர்களைக் கொன்றவர்கள் யார்? ஈழத்தில் இன்று வரை படுகொலைகளை செய்தது யார்? ஈழப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பவர்கள் யார் என்றால் இன்று ஏகாதிபத்திய அடிவருடிகளுக்கு பல்லக்கு தூக்குபவர்கள் யாரோ அவர்கள்தான் இன்று பார்ப்பனர்களின் மாஸ்டர் மைன்டாக செயல்பட்டு இதை செய்கிறார்கள். அவர்களே இந்த நாட்டை இந்துப் பாசிசமாக மாற்றுகிறார்கள். இலங்கையில் சிங்களப் பாசிசத்துக்கு உதவி புரிகிறார்கள்.

தோழர்களே! நமக்கெல்லாம் இந்த நாட்டில் பூர்வீக இடமொன்று உண்டு. மலையாளிக்கும், தெலுங்கர்களுக்கும், கன்னட மக்களுக்கும், கூர்க்காக்களுக்கும், தமிழர்களுக்கும் ஓர் இடம் உண்டு. கலாசார ஓர்மைகளுடன் வாழவும் மொழியைப் பேணவும் ஒரு மாநில அமைப்புக்குள் முரண்பாடுகளோடு இருந்து கொண்டே இந்த தேச நலனில் அக்கறை பேணுகிறோம். ஆனால் இந்த நாட்டில் பார்ப்பனர்களுக்கான இடம் எது? எந்த மாநிலம் உங்கள் மாநிலம்? உங்கள் மொழி எந்த மாநிலத்தில் பெருமளவு மக்களால் பேசப்படுகிறது? என்றால் இந்த கேள்விகளுக்கு விடையாகத்தான் நீங்கள் இந்துப் பாசிச கலாசார தேசியத்தை கட்டமைக்கிறீர்கள். அதற்குத் தோதாக தேசிய இனங்களின் சிறைச்சாலையான இந்தியா உங்களுக்கு வாய்த்திருக்கிறது. சிறைகள் உடைவது இயல்பு வெலிக்கடை சிறையைப் போல....

அப்படி ஒரு வேளை இந்தியா சிதறுமானால் அழிந்து போவது பார்ப்பனர்கள் மட்டுமே... இப்போது உங்களுக்குப் புரிகிறதா, ‘ஜெ’ ஏன் மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வந்தார் என்பதும், காஷ்மீர் பண்டிட்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்பதும். இந்து ராம் ஏன் ஈழத்துக்கும் காஷ்மீருக்கும் முடிச்சுப் போடுகிறார் என்பதும் என்ன காரணத்திற்காய் அவருக்கு சந்திரிகாவின் தலைமையிலான அரசு விருது கொடுத்தது என்பதும். அக்டோபர் 14ஆம் தேதி மாலினி பார்த்தசாரதிக்கு ஏன் கொதிப்பு வருகிறது என்பதும் உங்களுக்குப் புரிகிறதுதானே?

ஈழத்தமிழர்களுக்காக எழுந்திருக்கும் இந்தக் கொந்தளிப்புகள் தேர்தல் நேர ஸ்டன்ட் என்றிருக்கிறார்கள் சிங்களத் தலைவர்கள். ஜெயலலிதாவும், வைகோவும் வேறு வேறு நிலைப்பாடுகளை எடுத்திருப்பதாக பத்திரிகையாளர்களிடம் சந்தோசமாகச் சொல்கிறார்கள் சிங்களத் தலைவர்கள். அவர்கள் அப்படி சொல்லும் நிலையில்தான் வைகோவின் அரசியலும் இருக்கிறது என்பது வேறு கதை. ஆனால் இப்போது நம்முன்னால் திரண்டிருக்கும் கேள்விகள் இரண்டு.

ஒன்று இந்த கொந்தளிப்புகள் உண்மையிலேயே தேர்தல் நேர ஸ்டண்ட் மட்டும்தானா?இரண்டு இந்த கொந்தளிப்புகளை எத்தனை காலத்துக்கு எடுத்துச் செல்லப் போகிறோம்.

இவைகள் சிக்கலான கேள்விகள். ஆனால் விடை கண்டாக வேண்டிய கேள்விகள். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், வெளியுறவுக் கொள்கைகள் (அமெரிக்காவின் ராணுவக் கொள்கைதான் இன்று இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை) கூட இன்று நேரடியாக மாநில அரசுகளைப் பாதிக்கும் சூழலில் தமிழக அரசு மின்வெட்டு, விலைவாசி உயர்வு, போன்ற எளிய மக்களை பாதிக்கும் சிக்கல் சுழலில் சிக்கியிருக்கிறது. அது மக்களையும் பாதிக்கிறது. ஆனால் இதற்கு முழுக்க முழுக்க மாநில அரசு மட்டுமே பொறுப்பேற்க முடியாது. மக்கள் விரோத காங்கிரஸ் அரசுதான் இந்த விலைவாசி உயர்வுகளுக்கு காரணம். தமிழகத்தில் கொண்டு குவிக்கப்படும் அந்நிய முதலீடு மக்களை ஏற்றத் தாழ்வு என்னும் வகிடில் நின்று இரண்டாகப் பிரிக்கிறது என்பதை கலைஞர் அரசு உணர வேண்டும்.

அதே சமயம், மீண்டும் தமிழக அரசியலில் ஜெயலலிதா என்கிற பார்ப்பன பாசிஸ்ட் ஆட்சிக்கு வருவார் என்றால் இதே விலைவாசியையும், மின்வெட்டையும் தமிழ் மக்கள் சந்திக்க நேரிடுவதோடு மக்கள் விரோத ஜனநாயகமற்ற ஒரு பாதையில் தமிழகம் இன்னொரு முறை பயணிக்க நேரிடும். ஏனென்றால் கருத்துரிமை, பேச்சுரிமை, வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்ட காலங்களை ஜெயலலிதாவின் கடந்த ஆட்சி வரை நாம் காண முடியும். திரட்சியான மக்கள் போராட்டங்களின் போது, மக்களுக்கு எதிரான தவறான திட்டங்களை தன்னுடைய ஆட்சியில் கலைஞர் ஒத்திப் போட்டே வந்திருக்கிறார்.

ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சியில் இவைகள் எதுவும் மறுக்கபட்டு ஜனநாயகமற்ற ஏதேச்சதிகாரமான நடைமுறைகளை மட்டுமே நாம் அனுபவிக்க நேர்ந்தது. காலமும் சூழலும் கனிந்துள்ள இந்த வேளையில் நாம் கலைஞரின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். ஈழத் தமிழர்களுக்காக.இல்லை என்றால் நாம் அழிந்துதான் போவோம். முதலில் அவர்கள் பின்னர் நாம்.

- பொன்னிலா

முதன் முதலாக (1)

1. இன்று தொடர் கதைகளில் முடிவில் ' முற்றும், ' முற்றிற்று' என்று சொற்களை எழுதுகிறோமே! இதை முதன் முதலில் எழுதி வழிக் காட்டியவர் யார் தெரியுமா?
இளங்கோவடிகள், சிலப்பதிகாரத்தின் ஒவ்வொரு காண்டத்தின் முடிவிலும், நூலின் முடிவிலும் அவர் இச்சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

2. முதன் முதலில் தமிழில் ' சதுரகராதி' என்னும் அகராதியை இயற்றியவர் இத்தாலி நாட்டவரான ஒரு பாதிரியார்தான். அவர் பெயர் " கான்ஸ்டன்டின் ஜோசப் பெஸ்கி' என்பது. ஆனால், நமது நாட்டார் அவரை ' வீரா முனிவர்' என்று அன்புடன் அழைத்தார். 1732-ல் வெளிவந்தது அவ்வகராதி.

3. திருசெந்தூரில் இருந்த கடவுள் படிவம் ஒன்றை டச்சுக்காரர்கள் கைப்பற்றி அது 1853-ல் மீட்கப்பட்டபோது ' வென்றி மலை கவராயர்' என்பது ஒரு கீர்த்தனை நூல் பாடினார். இதுவே கீர்த்தனை என்ற பெயரில் எழுந்த முதல் நூல் ஆகும்.

4. தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய இலக்கியக்கலை களஞ்சியத்துக்கு ' அபிதானகோசம்' என்று பெயர் இயற்றியவர் ' ஆ.முத்துத்தம்பி பிள்ளை. வெளிவந்த ஆண்டு 1902, இடம்: யாழ்ப்பாணம்.

5. 'சென்னை இலக்கியச் சங்கம்' என்று அழைக்கப்படும் ஓர் அரிய நூல் நிலையத்தைப் பற்றி நம்மில் அநேகம் பேருக்குத் தெரியாது.

6. தமிழில் 1879- ஆம் ஆண்டு வெளிவந்த முதல் நாவல் ' பிரதாப முதலியார் சரித்திரம்' . எழுதியவர் : '' முனிசீப் மாயூரம் வேதநாயகம் பிள்ளை".

7. தமிழ்மொழியில் முதல் பயண நூலை எழுதியவர் " சே.ப. நரசிம்மலு நாயுடு". இதுதவிர 94 நூல்களின் ஆசிரியரான இவர் சிறந்த மேடைப் பேச்சாளர். மதுரை சங்கத்தின் உறுப்பினராகவும் இவர் இருந்திருக்கிறார்.

8. 1842- ல் ரெவ. பெ. பெர்சிவல் எனும் பாதிரியார் " தமிழகப் பழமொழிகள்' என்னும் நூலை வெளியிட்டார். இதுவே தமிழில் வெளிவந்த முதல் பழமொழித் தொகுப்பு.

9. தமிழில் 1943 -ல், தான் முதன் முதலாக நாட்டுப்புறப் பாடல்களின் தொகுப்கு வெளி வந்தது. " காற்றிலே மிதந்த கவிதை" என்ற இந்தத் தொகுப்பை மு. அருணாசலம் என்பவர் வெளியிட்டார்.

10. மாத இதழ்களில் முதலில் தோன்றியது ' ஜன விநோதினி', இந்தத் தமிழில் இதழ் 1870- ல் வெளிவந்தது.

Wednesday, November 5, 2008

"தண்ணீர் பழக்கம் சுடுகாடு மட்டும்"


இச்சித்திரம் மதுவிற்கு அடிமையானவர்களின் நிலைமையையும் வாழ்க்கையின் அழிவையும் மிகவும் விளக்கமாக சித்திரிக்கப்பட்டுள்ளது.

ஓவியர் : புருஷோத்தமன்,

ஆங்கில மாதங்களுக்கு பெயர் வந்த விதம்

ஒவ்வொரு மாதத்திற்கும் பெயர் விழாவை நடத்தியவர் 'ஜுலியஸ் சீஸர்'. அவர் ஒவ்வொரு ஆங்கில மாதத்திற்கும் ரோமானியக் கடவுள்களின் பெயர்களே அதிகமாக வைத்தார்.

ஜனவரி : ரோமானியர்களின் மிக முக்கியமான கடவுளின் பெயர் ' ஜன்ஸ் '. எனவே, ஆண்டின் முதல் மாதத்திற்கு ஜனவரி எனப்பெயர் வைத்தார்.

பிப்ரவரி : ரோமானியர்கள் தங்கள் வாழ்க்கையில் செய்த தவறுகளை நீக்க கொண்டாடும் பண்டிகை 'ப்ருவா' இவ்வகையில் பிப்ரவரி மாதம் தோன்றியது.

மார்ச் : ரோதானியர்களை போர்களில் வெற்றி பெறுவதற்காக 'மார்ஸ்' என்ற கடவுளை வணங்குவார்கள். அது மார்ச் மாதமாயிற்று.

ஏப்ரல் : ரோமானியர்கள் விவசாயம் செய்ய ஆரம்பிக்கும் காலத்தில் 'ஏபிரோ' என்ற தெய்வத்தை வழிப்படுவார்கள். எனவே, அந்த மாதம் 'ஏப்ரல்' என்றாயிற்று.

மே : உலகத்தை மேம்படுத்தும் ரோமானியத் தேவதையின் பெயர் 'மேயா'. அதனால் ஏற்பட்டது 'மே' மாதம்.

ஜுன் : ரோமானியர்களின் சொரக்கத்தின் கடவுள் 'ஜோனா' அது ஜுன் மாதம்.

ஜுலை : ஜுலியஸ் வருஷத்தில் ஏழமவது மாதம் பிறந்தார். அவர் அதற்கு 'ஜுலை' எனப்பெயர் வைத்தார்.

ஆகஸ்டு : ரோமானியர் சாம்ராஜ்யத்தை நிறுவியவன் ' அகஸ்டஸ்'. அவன் நினைவாகப் பிறந்தது ஆகஸ்டு மாதம்.

பிறகு வந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர், மாதங்களுக்குப் பெயர்கள் வந்ததற்கான ஆதாரங்கள் இல்லை.

தலையணை இன்றி தூங்கினால் அனைத்து நோய்களும் பறந்து விடும்.

கோயம்புத்தூர் காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள கமலா ஸ்டோர் உரிமையாளரும் யோகாசன ஆசிரியருமான யோகராஜ் பா.அய்யாத்துரை கோயம்புத்தூர் ' பிரஸ் கிளப்' பில் நேற்று முன்தினம் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :
இன்றைய விஞ்ஞான உலகில் புதுப்புது நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன. சிறுவர்களுக்கு எந்தெந்த நோய்கள் வராது என்று கூறினோமோ அந்த நோய்கள் எல்லாம் தற்போது சிறுவர்களைத் தாக்கத் தொடங்கி உள்ளன. ஏன், பிறந்த குழந்தைகளைக் கூட நோய் தாக்கும் நிலைமை உள்ளது. எனவே, நோய்களை விரட்டி அடிக்க வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். தினமும் தூங்கும் போது தலையணை இல்லாமல் தூங்க வேண்டும். தலையணை அகற்றப்பட்டால் தரணியில் தலை நிமிர்ந்து நடக்கலாம் என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் செய்து வருகிறேன். தலையணை வைத்துப்படுப்பதால் தலைக்கு இரத்தமும், இருதயத்துக்குப் பிராண வாயுவும் செல்வது தடுக்கப்படுகிறது.

அதன் விவரம் வருமாறு :
கூன் விழாது, இளமையில் முடி நரைக்காது, கண் பார்வை கெடாது. பற்கள் உறுதியாகும், தலை வலிக்காது, கண் எரிச்சல் வராது. அலர்ஜி வராது, குறட்டை வராது, காச நோய் வராது, மாரடைப்பு வராது, இரத்தக்குழாய் அடைப்பு வராது, கண் புருவத்தின் கீழ் கருவளையம் தோன்றாது : குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மொத்தத்தில் எல்லா விதமான நோயகளும் பறந்தோடி விடும். நான் எனது 20 ஆண்டு கால ஆராய்ச்சியில், பல வயதானவர்களுக்கு இளமை திரும்ப வைத்துள்ளேன். ஆஸ்துமா நோயைக் குணமாக்கி இருக்கிறேன். அறிவில் சிறந்த மாணவர்களை உருவாக்கி இருக்கிறேன். பல ஆயிரக்கணக்கான மக்கள் சமுதாயத்தைச் சுறுசுறு்ப்பாக இயங்க வைத்திருக்கிறேன்.

நான் என்றுமே தலையணை வைத்துத் தூங்குவதில்லை. எனக்கு 81 வயது ஆகிறது. நான், இந்த வயதிலும் கண்ணாடிப் போட்டு பத்திரிக்கைப் படிப்பது இல்லை. எனது பற்கள் உறுதியாக இருக்கின்றன. எனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களும், எனது குடும்ப உறுப்பினர்களும், பேரன், பேத்திகளும் தலையணை வைத்துத் தூங்குவது இல்லை. மேற்கண்ட நபர்களை எந்த நோயும் தாக்கியது இல்லை. எனது பிரச்சாரத்துக்கு இவர்கள் அனைவருமே சாட்சி. எனவே நோயற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றால் அனைவரும் தலையணை வைத்துப்படுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, November 4, 2008

ஈழச்சிக்கலில் தமிழுணர்வு - ஒரு பார்வை

தமிழ்த்தேசிய முழக்கங்கள் எல்லாம், சிறைக் கம்பிகளின் அழுத்தத்திற்குப் பயந்து இந்திய இறையாண்மை பற்றிப் பேசியது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானபோது ஒரு பக்கம் அழுவதா இல்லை சிரிப்பதா என்கிற இனம் புரியாத ஒரு கலவையான உணர்வு எனக்குள் உருவாகியது. கட்டுரையின் சாரத்திற்குள் நுழைவதற்கு முன்னர், நாம் வாழுகின்ற ஒரு நிலப்பரப்பின் அரசியல் உணர்வையும், புரிந்துணர்வையும் நமது இளைஞர்களுக்குள் உருவாக்க வேண்டிய கடமை உணர்வுடன் இந்தக் கட்டுரையை வடிக்கிறேன். ஊடகங்களில் எழுதும் நண்பர்களுக்கும் இதே வேண்டுகோளை விடுக்கிறேன்.

விரும்பியோ, திணிக்கப்பட்டோ, இந்திய தேசியம் என்கிற அமைவுக்குள், அதன் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழும் ஒரு நிலவியல் அமைப்பிலும், அது சார்ந்த அரசியல் இயங்கியலுக்கு இடையிலும் நாம் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறோம், மக்களாட்சித் தத்துவம் என்கிற ஒரு வலுவான அரசியல் அமைப்பில்தான் நாம் வாழ்கிறோம், கம்யூனிச, சோஷலிஷ நாடுகளில், அதன் இயங்கியலில் கிடைக்கப் பெறாத பல்வேறு உரிமைகளை மக்களாட்சி என்கிற ஒரு உயரிய அரசியல் இயங்கியலின் மூலம் நம்மால் பெறமுடியும் என்பது ஒரு அசைக்கமுடியாத உண்மை.

நிறை, குறைகளற்ற எந்த ஒரு அறிவியல் இயங்கியலும் உலக வரலாற்றில் மட்டுமன்றி இந்தப் பேரண்டத்தின் மீதும் செயல்பட்டதுமில்லை, இனி செயலாக்கம் பெறுவதற்கான வாய்ப்புகளும் இல்லை. மிகப்பெரும் போராட்டங்களில் மக்கள் புரட்சியில் பெறப்பட்ட கம்யூனிசத் தத்துவங்களால் உருவாக்கப்பட்ட அரசியல் இயங்கியல் "சோவியத் யூனியன்" என்கிற மிகப்பெரிய நிலப்பரப்பில் தோல்வியுற்ற போது அந்த இயங்கியலில் குறைகள் மட்டும் வெளிவரவில்லை, உலகின் சமநிலை என்பது கிடைக்கப்பெறாத ஒரு நிலைப்பாடு என்பதும் நமக்குப் புரிந்தது. அதனை 1999 இல் "சோவியத் யூனியன்" என்கிற அமைப்பைக் கலைத்து உரையாற்றிய "மிகேஅல் கோர்பசேவ்" பின்வருமாறு விளக்கினார்,

"The reason could already be seen: The society was suffocating in the vise of the command-bureaucratic system, doomed to serve ideology and bear the terrible burden of the arms race. It had reached the limit of its possibilities. All attempts at partial reform, and there had been many, had suffered defeat, one after another. The country was losing perspective. We could not go on living like that. Everything had to be changed radically".

சமநிலையிலான வாழ்வியல் இயங்கியலை இயற்கை தன்னுடைய தேர்வாகக் கொள்ளவில்லை, அப்படி இயற்கை தன்னுடைய தேர்வைக் கொண்டிருக்குமானால், "சுழிய நிலை" (0 VALUE) என்கிற உயிர்ப்பற்ற ஒரு அறிவியல் கோட்பாட்டில் தான் நாம் அல்லது நம்மை உள்ளடக்கிய புவி இருந்திருக்க வேண்டும்.

சரி, இயற்கையின் இயங்கியலுக்கும் இந்தக் கட்டுரைக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. இருக்கிறது நண்பர்களே, "தகுதியானவை மட்டுமே எஞ்சி நிற்கும்" (THE FITTEST WILL SURVIVE - CHARLES DARWIN) என்கிற சார்லஸ் டார்வினின் கோட்பாடு தான் இயற்கை தனது தனது தேர்வாகக் கொண்டிருக்கிற ஒரு கோட்பாடாகும். இனமாகட்டும், உயிரினக் குழுக்கள் ஆகட்டும், மொழியாகட்டும் இல்லை, கோட்பாடுகளாகட்டும் தகுதியானவை மட்டுமே எஞ்சி நிற்கமுடியும் என்பது அறிவியல் ஆய்வுகளால் உறுதி செய்யப்பட்ட உண்மை.

இதன் அடிப்படையில், உலக அரசியலை கூற்றியலுக்கு உட்படுத்தினால் ஆசிய நிலப்பரப்புகளில், இந்திய தேசியம் என்கிற ஒரு கட்டமைப்பு உருவாக வேண்டிய கால கட்டாயமும், காரணிகளும் இருந்தன, விடுதலைக்கு முன்னர் நூறு ஆண்டுகள் பின்னோக்கிப் பயணித்தால் இந்தியா என்கிற தேசியக் கட்டமைப்புப் பற்றி நீங்கள் அப்போதைய நகைச்சுவைக் கதைகளில் கூட அறிந்து கொள்ள வாய்ப்பில்லை. நல்ல வேலையாக அவசர கோலத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் கட்டமைப்பு மக்களாட்சித் தத்துவங்களைப் பின்பற்றும் தலைவர்களை அந்த நேரத்தில் பெற்றிருந்தது, பல்வேறு இன, மொழி, கலாச்சார, கலை அடையாளங்கள் ஒரு குடையின் கீழ்க் கொண்டு வரப்பட்டன. பல்வேறு வளர்வு நிலைகளில் மக்களால் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் இயற்றுகின்ற சட்ட முன்வடிவுகள், திருத்தங்கள் போன்ற துருப்புச் சீட்டுகள் இன்றும் இந்திய தேசியத்தில் மக்களிடம்தான் இருக்கிறது.

குறிப்பிட்ட சில இனக் குழுக்களின் அல்லது மொழியினரின் ஆதிக்கம் அன்றைய காலகட்டங்களில் செயல்பட்டத்தின் விளைவாக இந்தி எதிர்ப்புப் போராட்டம், நிலப் பகிர்வு, நீர்ப்பகிர்வு மற்றும் மொழிசார்ந்த சிறு சலசலப்புகள் இந்திய தேசியத்திற்குள் நுழைய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தின, அவற்றை எல்லாம் நாம் வரலாற்றை ஆழமாகப் படிக்கும் போது உலகின் பல்வேறு பகுதிகளிலும் இதே போன்ற சிக்கல்களைச் சந்திக்கலாம்.

இலங்கைத் தமிழர்களும், அரசியல் இயங்கியலும்

இலங்கையில் வாழுகின்ற தமிழர்கள் ஒரு தனியான பேரினமாக இன்றைய இலங்கையின் வடகிழக்கில் வாழ்ந்து வந்தார்கள் என்பதும், லெமூரியா என்கிற இன்றைய தாய்த்தமிழக நிலப்பரப்புடன் சேர்ந்து தமிழின வரலாற்றின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்திருக்கும் வாய்ப்புகளும் உள்ளதை புவி அமைப்பியல் வரலாறும் மறுக்கவில்லை, இந்நிலையில் தொடர்ந்து தாய்த்தமிழக மக்களுடனான உறவும் நீடித்தே வந்திருக்கிறது என்றாலும், தற்கால அரசியல் இயங்கியல் சூழல்களில் நாம் இலங்கைத் தமிழர்களை நிலப்பரப்பு சாராத இன உறவுகளாக, அதாவது வேற்றுநாட்டில் வாழும், ஒரே இனமாக அடையாளம் காணலாம், ஆனால், நேரடியான அரசியல் குறுக்கீடுகளை, அவர்களின் அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் நம்மால் செய்ய இயலாது என்பது ஒரு அடிப்படை அரசியல் உண்மை. (கவனத்தில் கொள்ளவும், நேரடியான அரசியல் குறுக்கீடு)

தாய்த் தமிழக மக்களின் உணர்வும், நிலையும்.

உணர்வுப்பூர்வமாக இலங்கைத் தமிழ் மக்களின் நிலை குறித்தும், அவர்களின் இன விடுதலைப் போராட்டத்தின் உயிர்ப்புள்ள வீரம் குறித்தும் பல்வேறு கலவையான மனநிலை எனக்குள் ஊற்று எடுத்தாலும், ஒரு மனிதனாக சகமனிதனின் வலியை ஆற்றுப்படுத்தும் பகிர்வே இது.

மண்டலப் பகுதியின் பெரிய நாடு என்கிற நிலையிலும், நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரிய தொடர்பு உள்ள தேசியம் என்கிற நிலையிலும் நம்மால் இலங்கை அரசியல் இயங்கியலை ஓரளவு சீரமைக்கவும், மக்களின் வாழ்வியல் அடிப்படை உரிமைகளைக் காப்பாற்றவும் சில கொள்கை வகுப்பாக்கங்களை உறுதியாகச் செய்ய முடியும்.

இந்திய தேசியத்தின் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது ஒரு கணிசமான கொள்கை வகுப்பாளர் எண்ணிக்கை என்றே கொள்ளலாம், வெளிநாடு வாழுகின்ற தமிழர்களின் வாழ்வில், உரிமைகள் கேள்விக்குள்ளாகும் போதும், ஒருங்கிணைந்த குரலை நாடாளுமன்றங்களில் பதிவு செய்யும் போதும், கடுமையான கண்டனங்களை மக்கள் அரங்குகளில் எதிரொலிக்கும் போதும், ஒரு தேசத்தின் வெளியுறவுக் கொள்கைகளில் கூட மாற்றங்களை நம்மால் செய்ய முடியும் என்பதை அருகாமை அரசியல் நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன, எனவே நமது இன்றைய தேவை ஒற்றுமை, ஒற்றுமை, ஒற்றுமை ஒன்று மட்டுமே. அரசியல் வேறுபாடுகளும், தலைவர்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளும் தான் ஒரு வண்ணமயமான ஊடக உள்வாங்கலையும், ரசிப்புத் தன்மையையும் கொடுத்தாலும், இது போன்ற மனித உரிமை சார்ந்த சிக்கல்களில் ஒருமித்த செயல்பாடுகளை நிகழ்த்த வேண்டும் என்பதே தமிழ் அடையாளம் என்றில்லை மனித நேயம் கொண்டிருக்கும் மனிதனின் விருப்பாக இருக்க முடியும்.

உலக வரலாற்றில், இயற்கையும், அதன் தாக்கங்களும் மட்டுமே உயிர்களின் நிலைப்பாட்டை உறுதி செய்கிற ஒரேகாரணியாக இருக்கிறது, இலங்கை மட்டும், அதற்கு விதிவிலக்கு அல்ல. அருகாமை ஆழிப்பேரலையின் சீற்றத்தின் விளைவாய் இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்ற வேண்டிய நிலையை இயற்கை உருவாக்கியது, அதற்கு சரியான எடுத்துக்காட்டு.

இவை எல்லாவற்றையும் விடப் பசியாலும், பிணியாலும், ஒடுக்குமுறைகளாலும், போர் வெறியின் விளைவாலும், வெங்கொடுமைச் சாக்காட்டில் வீழுகின்ற இனம் தமிழினமாக மட்டுமில்லை, சிங்கள இனமாக இருப்பினும், இதயத்தின் ஓரத்தில் இருந்து கசிகிற எம்தமிழ் மக்களின் ஈரத்தை மட்டும் யாராலும் குறை சொல்லி விட முடியாது.

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்கிற நாகரீகத்தின் மேலான கவிதை வரிகளை உலக நாகரீகத்திற்கு வழங்கிய ஒரு பேரினத்தை எத்தனை பண்டாரநாயக்கர்களும், ஜெயவர்தனேக்களும், ராஜபக்ஷேக்களும் முயன்றாலும் அழித்து விட முடியாது,

"ஏனென்றால் நாங்கள் மனிதத்தை நேசிக்கும் மனிதநேய அடைமொழியின் ஊற்றுக் கண்கள்".

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடியினர் என்பதை மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது"

அப்படி மறுப்பீர்களானால், நீங்கள் முதலில் மனிதர்கள் இல்லை, பிறகு, உறுதியாக, அறுதியிட்டுச் சொல்ல, உரக்கக் கூவ என்னால் முடியும்....

நீங்கள் " தமிழர்கள் இல்லை".

- அறிவழகன் கைவல்யம் - arivazhagankaivalyam@gmail.com

Sunday, November 2, 2008

நூற்றாண்டுகால தனிமையும் தொடரும் துரோகமும்....

இன்றைய அறிக்கை நாளைய ஆவணம். தமிழகத்தின் தமிழினத் தலைவர்களின் அறிக்கைகள் கூட எதிர்கால இளம் தலைமுறையினருக்கு கடந்த காலத்தின் சாட்சியமாய் இருக்கும். துரோகமும் பெருந்துரோகமுமாய் கொந்தளிப்பாய் நம்மை இதுவரை கடத்தி வந்த தலைவர்களின் வாக்குமூலங்களாய் அவைகள் பல்லிளிக்கக் கூடும். முன்னெப்போதையும் விட கடந்த பத்து நாட்களில் தமிழக அரசியல் அறிக்கைகளால் ஆனதாய் மாறியிருக்கிறது. வாழும் காலத்தில் காந்திகளாகவும் மடிந்த பிறகு ஹிட்லர்களாகவும் தலைவர்களை வரலாறு புரட்டிப் போட்டிருக்கிறது. ஆனால் இவர்கள் மகாத்மாக்களா? ஹிட்லர்களா என கணிப்பதே சிரமமாக இருக்கிறது. இந்த அம்மணமான அவமான அரசியலுக்கு அவர்கள் வைத்துக் கொண்ட பெயர் அரசியல் ராஜதந்திரம். நாமோ அதை “தொடரும் துரோகம்” என்கிறோம்.

“கொடுங்கையூரில் ராஜீவ்காந்தி சிலை உடைக்கப்பட்டதன் மூலம் தமிழகத்தில் புலிகளின் நடமாட்டம் இருப்பது உறுதியாகி இருக்கிறது” இப்படி ஒரு அறிக்கையை அண்மையில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு விட்டிருந்தார். படித்த உடன் கண்ணைக் கட்டியது. இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த மக்கள் தலைவர் ஒருவரின் சிலையை அல்லவாஉடைத்திருக்கிறார்கள். ஆனாலும் புலிகள் இப்படி கொடுங்கையூருக்கு வந்து ராஜீவ்காந்தி சிலையை உடைத்திருக்கக் கூடாது என்பதே என் கருத்து. அதுவும் கிளிநொச்சி சிங்கள ராணுவத்தின் முற்றுகையில் இருக்கும்போது தமிழ் மக்களைப் பாதுகாப்பதை கைவிட்டு கொடுங்கையூருக்கு தங்களின் பிரதான தளபதிகளை சிலை உடைக்க அனுப்பி வைத்ததை மானமுள்ள, தேசபக்தி உள்ள, பாரத மாதாவின் உண்மை புத்திரர்கள் யாரும் கண்டிக்காமல் இருக்க முடியாது. ஆகவே புலிகளை நானும் கண்டிக்கிறேன் ராஜீவ்காந்தியின் சிலையை உடைத்ததற்காக.

இன்னும் எதைக் கண்டிக்க வேண்டும், எதைப் பாராட்ட வேண்டும்? “ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவே மௌனசாட்சி என்றும் இந்தியா கொடுக்கிற ஆயுதங்களில் தான் ஈழ மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்றும் சொன்ன ஜெயலலிதாவைப் பாராட்டுவதா? அல்லது மறுநாளே.”இலங்கைப் போரை நிறுத்தச் சொல்லும் அதிகாரம் இந்தியாவுக்குக் கிடையாது. புலிகள் பயங்கரவாதிகள் அவர்கள் என்னை கொல்லத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்” என்று சொன்ன ஜெயலலிதாவைக் கண்டிப்பதா?

இரண்டு நாள் கழித்து, டில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் “விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் அல்ல. தமிழர்களின் விடுதலைக்காக போராடும் இயக்கம்” என்று சொன்னதை பாராட்டுவதா? இல்லை மறுநாளே பாட்டாளி மக்கள் கட்சியின் ஜி.கே.மணி “புலிகள் பற்றி மருத்துவர் ராமதாஸ் சொன்னது வருத்தத்திற்குரியதுதான். புலிகளை நாங்கள் பார்த்தது கூட கிடையாது. (நல்ல வேளை ஈழம் என்பது எங்கிருக்கிறது என்பது கூடத் தெரியாது என்று சொல்லாமல் விட்டாரே) மருத்துவர் அப்படி (போராளிகள் என்று) சொல்லியிருக்கக் கூடாது” என்று சொன்ன மணியைக் கண்டிப்பதா?

அடுத்து அதிரடியாக காட்சிக்கு வந்தார் கருணாநிதி.

“இதோ, இன்று வெளிவந்துள்ள "ஹிந்துஸ்தான் டைம்ஸ்" ஆங்கிலப் பத்திரிகையில் ஜெயலலிதா நம்முடைய அனைத்துக் கட்சி தீர்மானத்திற்குப் பதிலாக வெளியிட்ட மறுப்பறிக்கையை பாராட்டி, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மூத்த ஆலோசகர் பசில் ராஜபக்ச என்பவர் கொடுத்த பேட்டி வெளிவந்துள்ளது. அதில் அவர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?. ‘நிலைமையை நாங்கள் கவனித்து வருகிறோம். இந்திய அரசு ஏதாவது அறிக்கை வெளியிடுகிறதா என்பதை நாங்கள் பார்ப்போம். அது மாத்திரமல்ல, கருணாநிதிக்கு எதிராக ஜெயலலிதா பேசியிருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.’ இந்த அளவிற்கு சிங்கள அரசுக்கு ஆதரவாக ஜெயலலிதா இருப்பதை அவர்களே ஒத்துக்கொண்டு சொல்லியிருப்பதைப் படிக்கும்போது, தமிழா, இப்போதாவது புரிகிறதா?. உண்மையில் காட்டிக் கொடுக்கின்ற கபட நாடகம் ஆடுவது யார் என்று?” என்று கருணாநிதி சொன்னதை உணர்ச்சிவசப்பட்டு பாராட்டுவதா...

இல்லை இப்போது போர் நிறுத்தக் கோரிக்கையை தூக்கி ஓரமாக வைத்து விட்டு ‘நாற்பதாண்டு காலப் போரை நான்கு நாளில் முடிவுக்கு கொண்டு வர முடியாது.’ என்கிற பிரணாப் முகர்ஜியின் கருத்தையே வழிமொழிந்து “இவ்விஷயத்தில் மத்திய அரசுக்கு திமுக எவ்வித நெருக்கடிகளையும் கொடுக்காது” என்கிற கருணாநிதியைக் கண்டிப்பதா?

நம்மை வழிநடத்திச் செல்கிற, செல்லப்போகிற அய்யாக்களையும், அம்மாக்களையும், புரட்சிப் போராளிகளையும் சரியாக கணித்த ஒருவர் இருக்கிறார். அவரை பாராட்டியே ஆக வேண்டும். போர் வெறிபிடித்த பாசிச இலங்கை அரசின் ஊடகத்துறை அமைச்சராக இருக்கும் லஷ்மன் யாப்பாதான் அவர். தமிழகத்தில் எழுந்த ஈழத் தமிழர் ஆதரவுக் கொந்தளிப்புகள் தொடர்பாக ஊடகத்துறையினரிடம் பேசிய அவர். “இந்தியாவில் தேர்தலொன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் எழுந்திருக்கும் இந்த சூடான நிலைமை, தேர்தல் முடிவடைந்த பின்னர் தணிந்து விடும். இதை கண்டு கொள்ளத் தேவையில்லை” என்றிருக்கிறார். நமது தமிழினத் தலைவர்களை நம்மை விட நமது எதிரி எவ்வளவு துல்லியமாக கணித்திருக்கிறார். அந்த பாசிச அரசின் பிரதிநிதியை பாராட்டாமல் என்ன செய்ய? அவர் தேர்தல் முடிந்த பிறகு தணிந்து விடும் என்றார். மத்தியில் தேர்தல் வர இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறது. அதற்குள்ளாகவே முடிந்து போய் விட்டதே.

இரண்டு வார காலத்திற்குள் இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட இந்தியா வழியேற்படுத்தாவிட்டால் தமிழகத்தின் நாற்பது எம்பிக்களும் தங்களின் ராஜிநாமா கடிதங்களை மத்திய அரசுக்கு அனுப்புவார்கள் என்ற முடிவு அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எடுத்த முடிவு. திமுகவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடிதமும் கருணாநிதியின் கைக்குப் போனது. முடிவுகள் முடிவுகளாக இருந்தன. பாட்டாளி மக்கள் கட்சியோ தங்கள் கட்சி எம்பிக்களின் ராஜிநாமா குறித்து கருத்துச் சொன்ன போது “ராஜிநாமாவை தி.மு.க. தலைவர் அனுப்பினால் நாங்களும் அதனைப் பின்பற்றுவோம்.” என்றார் ராமதாஸ்.

திமுக தனது ராஜிநாமா கடிதங்களை மத்திய அரசுக்கு அனுப்பாவிட்டாலும் பாட்டாளி மக்கள் கட்சி எம்.பிக்கள் தங்களின் ராஜிநாமா கடிதங்களை மக்களவைத் தலைவருக்கு அனுப்புவார்கள் என்று சொல்ல பாட்டாளி மக்கள் கட்சிக்கு கசக்கிறது.

ஓட்டுச் சீட்டு அரசியலையும் பாராளுமன்ற பதவிகளையுமே பிரதானமாக நினைக்கும் இவர்கள் அரசியலற்ற அரசியல் நடத்துகிறார்கள். மக்களையும் அரசியலற்ற அரசியலுக்குத் தூண்டுகிறார்கள். உண்மையில் இந்தக் கொந்தளிப்பை நீங்கள் உருவாக்கவில்லை. அது தமிழக மக்களிடம் தன்னெழுச்சியாய் உருவான ஒன்று. அதை அறுவடை செய்யலாம் என தமிழினத் தலைவர்கள் முயன்றார்கள். காங்கிரஸ் கட்சி ஈழ மக்களுக்கு ஆதரவான போர் நிறுத்தக் கோரிக்கையை விடுதலைப் புலிகளின் பிரச்சனையாக மாற்றியது. திமுக தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வன்னிப் போர் முனையில் சிக்கியுள்ள பல லட்சம் மக்களின் வாழ்க்கையை பலிகடாவாக்கியிருக்கிறது.

நாடகங்கள் வெகு வேகமாக அரங்கேறின. இந்தியத் தரப்பில் இருந்து போரை நிறுத்தக் கோரி எவ்விதமான கோரிக்கைகளும் இலங்கை அரசுக்கு விடப்படவில்லை. இலங்கை இனப்பிரச்சனைக்கு ராணுவத் தீர்வின் மூலம் முடிவு காண முடியாது என்கிற மட்டில் கருத்துச் சொன்னார்கள். அவைகள் முடிவுகள் அல்ல கருத்துகள். அதே சமயம் இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்குவதாக எடுக்கப்பட்டது கருத்தல்ல முடிவு. அந்த முடிவுகளை இந்திய அரசாங்கம் செயல்படுத்தியது. இலங்கை கடற்படையோடு சேர்ந்து கூட்டு ரோந்து என்பதும் கருத்தல்ல முடிவு. இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சியளிப்பதாக எடுக்கப்பட்டதும் கருத்தல்ல முடிவு.

இந்நிலையில் தான் தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்று சேர்ந்து இலங்கையில் போர் நிறுத்தம் என்ற கோரிக்கையை தமிழகத்தின் முடிவாக எடுத்து அதை மத்திய அரசுக்கு கோரிக்கையாக அனுப்பி வைத்தார்கள். இரண்டு வாரகாலத்திற்குள் இந்தியா தலையிட்டு போர் நிறுத்தம் அறிவிக்காவிட்டால் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்பதுதான் அந்த முடிவு. ஆமாம் தமிழகத்தின் முடிவு. மத்திய அரசுக்கோ அது ஒரு கோரிக்கை அவ்வளவுதான்.

கடந்த ஐம்பதாண்டுகால ஈழத் தமிழரின் மீதான துரோக வரலாற்றில் இதுவரை தமிழகம் கை நனைக்காமலேயே இருந்து வந்தது. அதை மட்டும் விடுவானேன் அதையும் செய்து விடுவோம் என்று நினைத்தார்களோ என்னவோ ஒரு இன அழிப்பின் மீதான இந்தியத் தீர்ப்புக்கு இவர்கள் குறிப்பாக அதிமுகவும், திமுகவும், பாட்டாளி மக்கள் கட்சியும் குறிப்பெழுதிக் கொடுத்து விட்டார்கள். அதனால்தான் கருணாநிதி இலங்கை தொடர்பாக இந்தியா எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கிறார். அதாவது போர் தீர்வல்ல என்று கருத்துச் சொல்கிறவர்களை பாராட்டுகிறார்

சூழலை ஆனது ஆனபடி ஒப்பேற்றியபடி இனவெறியன் பசில் ராஜபட்சேவோடு விருந்து உண்ட கையோடு வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்தார். இந்தியா 800 டன் உணர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு அனுப்பும் என்றும் இதை முறைப்படி இலங்கை அரசே தமிழ் மக்களுக்கு வழங்கும் என்றும் நாற்பதாண்டு காலமாக நடக்கிற போரை நான்கு நாட்களில் முடிவுக்கு கொண்டு வர முடியாது என்றும் நார்வேயின் தலைமையில் அமைதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், கிழக்கு மக்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதன் மூலம் அங்குள்ள மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும் என்றும் கலந்து கட்டி இலங்கை அதிபர் ராஜபட்சேயின் கருத்துக்களை சென்னையில் திமுகவின் ஆதரவோடு கொட்டிக் கொண்டிருந்தார் பிரணாப் முகர்ஜி.

இதில் வேடிக்கையான ஒன்று தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்ததான ஒன்றும் இருந்தது. இனி இலங்கை அரசு கடல் எல்லையை அளந்து இந்தியாவிடம் சொல்லுமாம். அதன்படி அங்கீகரிக்கப்பட்ட படகுகளில் எல்லை தாண்டிச் செல்லும் மீனவர்களை பத்திரமாக இலங்கை திருப்பி அனுப்புமாம். அப்படி இலங்கை அரசு சொன்னபோது 2005ல் இலங்கை அரசோடு போடப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி இந்தியா கேட்டுக் கொண்டதாம்.
2005ல் போடப்பட்ட இலங்கை இந்திய ராணுவ ஒப்பந்தம் என்பது தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை ஒட்டு மொத்தமாக இலங்கை அரசிடம் அடகு வைக்கிற ஒப்பந்தம். தவிரவும் இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் சேர்ந்து நிகழ்த்தும் கூட்டு ரோந்து என்கிற முடிவு இருக்கிறதல்லவா? அந்த முடிவும் இந்த ராணுவ ஒப்பந்தத்தின் கீழ்தான் வருகிறது.

இதில் தமிழகம் வைத்த போர் நிறுத்தக் கோரிக்கை எங்காவது வந்ததா? அதற்குப் பதில் மத்திய அரசு என்ன செய்திருக்கிறது என்று பார்த்தால், இது வரை தமிழகத்தில் எழுந்த அரசியல் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைத்திருந்த கூட்டு ரோந்து, ராணுவ ஒப்பந்தம் போன்ற விஷயங்களை மிகவும் தந்திரமாக மாநில முதல்வரிடம் ஒப்புதல் வாங்கிச் சென்றிருக்கிறது. இதில் வெற்றி தோல்வி யாருக்கு என்று பார்த்தால் தோல்வி தமிழக மக்களுக்கும் ஈழ மக்களுக்கும்தான், இம்முறையும் வெற்றி சிங்களர்களுக்குத்தான். எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பசில்ராஜபட்சே எரிகிற தீயில் தண்ணீரை ஊற்றி அணைத்து விட்டு வெற்றியோடு கொழும்புக்குச் சென்றிருக்கிறார். இவர்களோடு கூட்டு சேர்ந்த தமிழக தலைவர்கள் டில்லி காங்கிரஸ்காரர்களோடு சேர்ந்து தமிழகத்துக்கு பட்டை நாமம் போட்டு விட்டுப் போய் விட்டார்.

இலங்கையின் முன்னாள் அதிபரும் பாசிச தலைவருமான ஜெயவர்த்தனே விரித்த வலையில் எப்படி ராஜீவ்காந்தி சிக்கிக் கொண்டாரோ அப்படி அண்ணனும் தம்பியுமான ராஜபக்ஷேவும், பசில்ராஜபக்ஷேவும் விரித்த வலையில் மன்மோகன் சிங் வகையாக சிக்கிக் கொண்டிருக்கிறார். இப்போது தமிழினத் தலைவர் கருணாநிதி என்ன சொல்கிறார் என்றால், “கிட்டத்தட்ட அவர் (பிரணாப் முகர்ஜி) சொல்கிற மாதிரி 40 ஆண்டுகளாக நீடிக்கிற யுத்தம் நான்கு நாட்களில் முடியாது. நாம் போர் நிறுத்தம் வேண்டும் எனச் சொன்னது பொது மக்களை இன்னல்களில் இருந்து காப்பற்றத்தான். இப்பொழுது இலங்கை அரசு நாங்கள் பொதுமக்களை நிச்சயம் தாக்க மாட்டோம் என்ற உறுதி மொழியை அளித்திருக்கிறது” என்கிறார்.

நண்பர்களே, இந்திய அரசின் அக்கிரமமான இந்த முடிவை கருணாநிதி ஆதரிக்கிற போது ‘நாம்’ என்ற சொல்லை பயன்படுத்துகிறார். அதாவது அனைத்துக் கட்சித் தலைவர்களும் போர் நிறுத்தம் என்று சொன்னது மக்களை இன்னல்களில் இருந்து காக்கத்தான் என்பதை தந்திரமாக சுருக்கிக் கதைக்கிறார். ஈழ மக்களை சோற்றால் அடித்தால் விழும் பிண்டங்கள் என நினைக்கிறார். அதனால்தான் யுத்த முனையில் வன்னிக்காடுகளில் பாம்புக்கும் தேளுக்கும் மத்தியில் குண்டு மழைக்கு செத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு தயிர்சாதமும் புளி சாதமும் போடக் கேட்கிறார்.

இவர்களின் இந்தக் கூட்டு சதியை கூட்டு நாடகத்தை மருத்துவர் ராமதாஸ் மத்திய அரசு இறங்கி வந்து விட்டதுபோலப் புகழ்கிறார். அவர்கள் தமிழ் மக்களுக்கு வீசி வைத்திருக்கும் வலையைப் புரிந்து கொண்டே இவர்கள் இந்த நூற்றாண்டு கால துரோகத்தைச் செய்கிறார்கள். சரி இலங்கை அரசு ஒப்புக் கொண்டபடி வன்னிப் பகுதிக்கு உணவுப் பொருட்களை அனுப்புமா? என்றால் அனுப்பும்; உணவோடு கூடவே ராணுவத்தினருக்குத் தேவையான தளவாடங்களையும் சேர்த்தே அனுப்பும். தற்காப்புத் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் புலிகளோ ஆயுதம் வரும்போது அதை தாக்கக் கூடும். உடனே “இதோ பாருங்கள் இந்தியா கொடுத்த உணவுப் பொருட்களை நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினோம். ஆனால் புலிகள் அதை தாக்கியழித்து விட்டார்கள்” என்று இலங்கை பிரச்சாரம் செய்யும்.

தமிழகத்தில் எப்போதெல்லாம் கொந்தளிப்புகள் எழுந்து வந்தனவோ அப்போதெல்லாம் அதை தங்களுக்கு சாதகமாக மாற்றுவதுதான் போர் வெறி பிடித்த இலங்கை அரசின் யுத்த தந்திரம். அப்படி மக்களின் எழுச்சியை போருக்கு பலியாக்குகிற அளவுக்கு நமது தமிழக தலைவர்கள் இருந்தார்கள்; இன்றும் இருக்கிறார்கள். அதி வேகத்தில் தமிழகத்தில் எழுந்த ஈழ ஆதரவு அலை ஓய்ந்து விட்டதா? என்றால் இல்லை. அது எளிய மக்களிடம் பெரும் கொந்தளிப்பாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சிதான் இந்த எழுச்சியை புலிகள் பிரச்சனையாக மாற்றுகிறது. எழுகின்ற ஆதரவு அலையை விட அதிக சத்தம் கேட்கும்படியாக இந்த ஆதரவோடு விடுதலைப் புலிகளை முடிச்சுப் போட்டு பேசுகிறவர்களின் வாயை அடைக்கிறது.

தேர்தல் நெருங்கி வரும் போது கூட்டணியைக் கணக்கிட்டே இந்த துரோகங்கள் அரங்கேறுகின்றன. திமுகவைத் தவிர்த்து விட்டு காங்கிரஸ் தலைமையில் அணிசேர வேண்டும் என நினைக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. அடுத்தவன் முதுகில் ஏறியே இது வரை சவாரி செய்த காங்கிரஸோ விஜயகாந்தோடும் ரகசிய பேரத்தை நடத்தி முடித்திருக்கிறது. ஒரு வேளை இன்னும் மீதியிருக்கிற ஆறு மாத காலத்தை முழுவதுமாக காங்கிரஸ் அரசு பூர்த்தி செய்து பின்னர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் என்றால் - தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் பட்சத்தில் - அதிமுக பிஜேபியோடு கூட்டணி சேரும் பட்சத்தில் - கம்யூனிஸ்டுகள் தனித்தோ விஜயகாந்துடனோ சேர்ந்து தேர்தலைச் சந்திக்கும் பட்சத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கருணாநிதி நினைக்கிற மாதிரி இருக்காது.

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைய வாய்ப்பே இல்லை. மக்கள் விரோத காங்கிரஸ் கட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள். பாசிச பிஜேபி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். ஆனால் மாநிலத்தில் ஆளும் திமுக காங்கிரஸ் தயவில் இன்னும் இரண்டரை ஆண்டுகளை ஒட்டியாக வேண்டும் என்கிற சூழலில் - நண்பர்களே இதை முடிந்தால் நினைவில் வையுங்கள் - திமுக அரசை காங்கிரஸ் கவிழ்த்து விடும். காரணம் காங்கிரஸ் விஜயகாந்தின் முதுகில் குதிரை ஏறப் போய்விடும். துரோகம் என்றால் அதற்கு மறுபெயர் காங்கிரஸ் இது கருணாநிதிக்கும் தெரியும்.

காங்கிரஸ்காரர்கள் ஏன் ஈழ மக்கள் மீது இவ்வளவு வன்மத்தோடு நடந்து கொள்கிறார்கள் என்றால் ராஜீவ்காந்தியைக் கொன்று விட்டார்கள் என்கிறார்கள். ஆமாம் கொன்று விட்டார்கள். கடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்தக் கொலையை கண்டித்தாயிற்று. ஏராளமாய் அழுதாயிற்று இப்போது வேண்டுமானால் மீண்டும் கண்டிக்கிறேன். ராஜீவ்கொலை படுபாதகம். இந்தியாவுக்கு மட்டுமல்ல அமெரிக்கா, அய்ரோப்பா, ஆப்ரிக்கா போன்ற அகில உலகத்துக்கே அது பேரிழப்பு. ஏனென்றால் உலகின் சகல பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் வல்லமையும், சாதுரியமும் உடையவர் அல்லவா? அவர் இல்லாமல், அகில உலகமும் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது, குறிப்பாக ராகுல் காந்தியும், ப்ரியங்காவும் தகப்பனை இழந்து போதிய வருவாய் இல்லாமல் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகத்தான் இருக்கிறது. ஆகவே நானும் ராஜீவ்கொலையைக் கண்டிக்கிறேன்.

சரி, கண்டனங்கள், காரியங்கள், அரசியல் விளையாட்டுகள், கைதுகள் எல்லாவற்றையும் கடந்து இரு கேள்விகள் பாக்கியிருக்கின்றன. அது...

அமீரும் சீமானும் ஏன் கைது செய்யப்பட்டார்கள்? கலைஞர்களின் (Freedom Of Expressions) உணர்வுகளுக்கு சுதந்திரம் உண்டா இல்லையா?

இந்த இரண்டாவது கேள்வியை இவர்களிடம் கேட்பதே அபத்தம். முதலாவது கேள்விக்கு அவர்களில் ஒருவர் பிரிவினைவாதம் பேசினார். இன்னொருவர் புலிகளை ஆதரித்தார். ஆகவே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். புலிகளை ஏன் ஆதரிக்கக் கூடாது என்றால் அவர்கள் ராஜீவைக் கொன்று விட்டார்கள் என்பது பதில். அவர்கள் ஏன் ராஜீவைக் கொல்ல வேண்டும் என்ற நமது இரண்டாவது கேள்வியைக் கேட்டால் அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கிற கேள்வி என்கிறார்கள். ஆனால் பதில் தெரிந்தாக வேண்டிய கேள்வியல்லவா? ஒரு இளம் தலைவனை நாம் ஏன் இழந்தோம் என்று எனது குழந்தை கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?

இந்திராகாந்தியை அவரது சீக்கிய மெய்ப்பாதுகாவலர்கள் ஏன் கொன்றார்கள்? என்று ஒரு இந்தியக் குழந்தை கேட்டால் மன்மோகன்சிங் பிரதமராக இருப்பதால் இம்மாதிரி கேள்விகளெல்லாம் கேட்கக் கூடாது என்று காங்கிராஸ்காரர்கள் சொல்ல முடியாது. கேட்கிற உரிமையையும் அதை அறிந்து கொள்கிற உரிமையையும் இந்திய அரசியல் சாசனம் எனக்கும் என் சந்ததிக்கும் வழங்கியிருக்கிறது. ஆக, ராஜீவ்காந்தி ஏன் மனித வெடிகுண்டின் மூலம் கொல்லப்பட்டார் என்றால் அதற்கான பதிலை ஈழத்தில்தான் தேட வேண்டும்.

ராஜீவ்காந்தி எதற்காக கொல்லப்பட்டார் என்பதை இன்னொரு கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம். இந்திராவைப் பற்றி உங்களிடம் யாராவது கேட்டால் நீங்கள் கூட எழுதலாம். சரி காங்கிரஸ்காரன் பிரச்சனை புரிகிறது. நமது தமிழினத் தலைவர்களுக்கு என்னதான் பிரச்சனை என்றால் ஒன்றே ஒன்றுதான். அது சென்னை ஜார்ஜ் கோட்டையிலே இருக்கிற மாநில முதல்வர் நாற்காலி என்பதுதான். அதில் யாராவது ஒருவர்தான் அமர முடியும். அதுதான் இவர்களின் பிரச்சனை. இந்திய அரசு இப்படி ஒரு முடிவு எடுக்கிறது என வைத்துக் கொள்வோம். அதாவது ஒரு மாநிலத்தை இரண்டு முதல்வர்கள் ஆளலாம். அதாவது இனி மாநில முதல்வர் நாற்காலி என்பது இரண்டு நாற்காலியாக இருக்கும் என்று முடிவெடுக்கிறது என வைத்துக் கொள்வோம். இவர்களின் பிரச்சனை முடிந்தது. ஜெயலலிதாவும் கருணாநிதியுமே கூட்டணி வைப்பார்கள். ராமதாசும் விஜயகாந்தும் கூட ஒன்றாக இணையும் வாய்ப்பு உண்டு.

ஆக உங்களின் பிரச்சனை உங்களோடு இருக்கட்டும். மக்களை மந்தைகளாக்காதீர்கள். அவர்களை அரசியலற்ற வெற்று வெடிகளாக்கி வேடிக்கை காட்டாதீர்கள். எண்பதுகளில் எழுந்த ஈழ ஆதரவு அலையை பயன்படுத்தித்தான் இந்திராவும் அதன் பின்னர் ராஜீவும் ஈழத்தில் தலையிட்டு வேண்டாத நிகழ்வுகளை உருவாக்கிக் கொண்டார்கள். உங்களின் தலையீடு இலங்கையில் அவசியம்தான். அது ஈழ மக்களுக்கு ஆதரவாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே பயனளிக்கும். அதுவல்லாமல் கூலிக்கு மாரடிக்கிற ராணுவத்தையும் கொள்கைக்காகப் போராடுகிற ஈழ மக்களையும் ஒன்றாக வைத்து அளவிட வேண்டாம். உங்களின் கோஷங்கள் தமிழனத்தின் தலைமைக்கான அறைகூவலகள் எல்லாவற்றையும் உங்கள் மட்டில் மேடைகளில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். மக்கள் உங்களை விட மகாத்தானவ்ர்கள். அவர்கள் எப்போதும் போராளிகளை ஆதரிக்கிறார்கள். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு துளி கண்ணீரேனும் சிந்துவார்கள்.

நன்றி : பொன்னிலா