Tuesday, May 26, 2009

"ஸ்பாம்” எனும் சாபக்கேடு - பகுதி 5

இதுவரை “ஸ்பாம்” (SPAM) என்றால் என்ன என்பதனைப் பற்றி விளக்கமாகப் பார்த்தோம். இனி அதனைக் கட்டுப்படுத்தும் வழிகளப் பார்ப்போம். அதிகமான தொழில் நுணுக்கப் பகுதிகளை எளிமை குறித்து விலக்கியுள்ளோம். அவற்றைக் குறித்துப் பிறகு தனியே பார்ப்போம்.

மின்னஞ்சலே “ஸ்பாம்” (SPAM) பரவ வகை செய்யும் ஒரு முதன்மையான சாதனமாக இருக்கிறது. எளிமையாக, எல்லோராலும் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம், மிகவும் குறைந்த செலவில் (பெரும்பாலும் அடுத்தவர் செலவில்) எண்ணிலடங்கா நபர்களுக்கு, அவர்கள் விரும்பாத பொழுதும், விளம்பரங்களை எடுத்துச் செல்ல வழி வகை செய்யும் சாதனம்.

இது பாலினக் கவர்ச்சித் தளங்களை அறிமுகப்படுத்துகிறது. எதிர்பாராத வகையில் உடனடியாகக் கோடீஸ்வரர் ஆகலாம் என்று ஆசை காட்டும் விளம்பரங்களை அளிக்கிறது. உங்களை எந்த வகையிலும் மயக்கி, “வைரஸ்” செயல் நிரைகளை உங்கள் கணிணியில் இறக்குமதி செய்து உங்கள் கணிணியினை “ஜோம்பீஸ்” (ZOMBIES) எனப்படும் அடிமைக் கணிணியாகப் பயன்படுத்தி, அதன் மூலம் உங்களையும் “ஸ்பாம்” (SPAM) எனும் குற்றத்திற்கு உடந்தை ஆக்குகிறது. இதெற்கெல்லாம் மேலாக, தங்கள் கணிணி பிறரால் ஆளப்படுகிறது என்பதும், “ஸ்பாம்” (SPAM) என்ற குற்றத்திற்குத் தாமும் துணை போகிறோம் என்று கூட அறியாத, விவரமறியாதவர்கள் இயக்கும் எல்லைக் கட்டுப்பாடற்ற ஒரே தொடர்பு சாதனம் என்பதனாலேயே, குறும்பர்களால் (HACKERS) பெரிதும் விரும்பப்படும் ஒன்று.

கீழ்க்கண்ட 8 வகைகளில் “ஸ்பாம்” (SPAM) அனுப்புபவர்கள் தங்கள் செயலைச் செய்ய முடிகிறது.

1. இணைய தளத்தைப் பயன்படுத்துவோர் தங்கள் மின் முகவரியினை, முன்பின் அறிமுகமில்லாத சந்தேகத்துக்குறிய தளத்தில் பதிவதன் மூலம் அவர்கள் மின் முகவரியினைத் திருடுவது எளிதாகிறது.

2. பயன்படுத்துவோர் குழுமத்திலிருந்து (USENET Forum) திருடுவது.

3. பயன்படுத்துவோர் உரையாடும் பகுதியிலிருந்து (CHAT SESSION) திருடுவது.

4. “SPAMBOT' என்ற செயல் நிரை+கணிணி கூட்டணியின் மூலம் @ என்ற சங்கேதக் குறி இருக்கும் வார்த்தைகளை மின் முகவரி என்ற வகையில் சிறைபிடித்து, பரிட்சார்த்த முறையில் முயற்சி செய்து “ஸ்பாம்” பரப்புவது.

5. பணம் கொடுத்து வாங்கும் மின்முகவரிகளைப் பயன்படுத்துவது. (இதற்காகவே சிலர் பணி செய்கிறார்கள்; பலன் அடைகிறார்கள்; அமெரிக்காவில் மின் முகவரியுள்ள ஒரு குறுந்தகடு 100 டாலர்!!). இங்கும் கூட, சில நிறுவனங்கள் இத்தகு விவரங்களைத் தருகின்றன என்பது, கைபேசியில் தாங்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில், முன்பின் அறிமுகமில்லாத நபரிடமிருந்து விளம்பரம் பெறுவோர் அறிந்த ஒன்று.

6. பயன்படுத்துவோருக்குக் கவர்ச்சிகரமான தொடர் மின்னஞ்சல் அனுப்பி அதன் மூலமும், அவர்களாகவே பதிவு செய்யத் தூண்டும் சில ஏமாற்றும் வழிகளிலும் மின் முகவரியினைப் பெற்று, “ஸ்பாம்” பரப்புவது.

7. உங்களின் DOMAIN பெயரில், சில கூட்டமைப்பபி்ல் மின் முகவரியினை உண்டாக்குவது (உ-ம் @yahoo.com என்றிருந்ததால், அதனுடன் kumar என்று சேர்த்து, kumar@yahoo.com என ஒரு மின் முகவரியினை உண்டாக்குவது.
8. உங்கள் அலுவலக SERVER பதிவு செய்திருக்கும் மின் முகவரியினைத் திருடிப் பயன்படுத்துவது.

இந்த “திருடுவது” என்ற காரணத்திற்காகத்தான் உங்கள் கணிணியின் பாதுகாப்பு வசதிகளை உடைக்க “வைரஸ்” செயல் நிரை எழுதுவோர் மற்றும் குறும்பர்களின் துணை நாடப்படுகிறது.

எனவே “ஸ்பாம்” (SPAM) பரவாமல் தடுக்க, மின்னஞ்சலைப் பயன்படுத்தும் பொழுதும் இணைய தளங்களுக்கு வருகை தரும் பொழுதும் சற்றே கவனமாக இருங்கள்.

“ ஸ்பாம்” (SPAM) அறவே வராமல் தடுக்க விரும்பினால், இணைய தளத்திற்குத் தொடர்பே கொடுக்காதீர்கள்!!!! தனிக் கணிணியாகப் பயன்படுத்துங்கள்!! பிரச்சினையே இல்லை!!

இது முடியாது என்றால்,

• எந்நேரமும் உங்கள் கணிணி இணைய தளத்துடன் தொடர்பு கொள்ளத்தான் வேண்டுமா எனத் தீர்மானியுங்கள். வேண்டாமெனில், செய்திப் பறிமாற்றங்கள் முடிந்தவுடன், இணையதளத் தொடர்பினைத் துண்டித்துவிடுங்கள்.

• இணையதளம் மற்றும் மின்னஞ்சலைப் பயன்படுத்துமுன், முதலில் உங்கள் கணிணியில் ஒரு நல்ல “ஸ்பாம்” (SPAM) மற்றும் “வைரஸ்” (VIRUS) கட்டுப்பாடு ஏற்பாட்டைச் செய்யுங்கள்.
• YAHOO, GOOGLE, HOTMAIL போன்ற பெரிய அமைப்புக்களின் மின்னஞ்சல் சேவையினப் பயன்படுத்துகள். அவர்களுக்குப் பணம் ஒரு பொருட்டல்ல. எனவே VIRUS CONTROL, SPAM BLOCKER போன்ற சிறப்பான கருவிகளைப் பயன்படுத்தி, வைரஸ், ஸ்பாம் இவற்றைக் கட்டுப்படுத்த முடிவதால், உங்களுக்குத் தொல்லையும், செலவும் குறையும்.

• ஒவ்வொரு முறையும் இணைய தளத்திற்குச் சென்று, உங்கள் செயல் முடிந்து கணிணியின் தொடர்பறுக்குமுன் அல்லது வேறு செயலினை ஆரம்பிக்கு முன், உங்கள் கணிணியில், “குக்கீஸ்” (COOKIES), நீங்கள் சென்று வந்த தள விவரங்கள் (HISTORY) மற்றும் அதன் மூலம் உருவான கோப்புகளை (FILES) முழுமையாக அழித்து விடுங்கள். பிறகே கணிணியின் செயல்பாட்டை நிறுத்த வேண்டும்.

• முதலில், எந்த ஒரு பொருளும் இலவசமாகக் கிடைக்கும் என்ற நினைப்பை ஒதுக்குங்கள். இலவசமாகத் தருவதாக ஆசை காட்டித்தான், தங்கள் தளத்திற்கு வருகை தரப் பலர் உங்களை ஊக்குவிக்கிறார்கள். இந்த வகை இலவசம் என்ற “மாய வலையில்” விழுந்த பலர் “ஸ்பாம்” (SPAM) வந்தபின் தான் அதனை உணருகிறார்கள்.
• உங்களுக்கு முன் பின் அறிமுகமில்லாத நபர் அல்லது நிறுவனம் இவர்களிடமிருந்து ஏதேனும் மின்னஞ்சல் வந்தால், உடனடியாகத் திறந்து பார்க்காதீர்கள். “PREVIEW” என்ற மின்னஞ்சலில் இருக்கும் அமைப்பைப் பயன்படுத்தினாலும் கூட, “ ஸ்பாம்” உருவாக்கும் நபர்கள் உங்கள் மின்முகவரியினைப் பிடிக்க ஒரு நூதன தொழில் நுணுக்கத்தை அமைத்து, உங்கள் முகவரியினைப் பதிவு செய்து விடுவார்கள். வழக்கமாக மின்னஞ்சலைப் பயன்படுத்துபவர்களுக்கு, யார் தங்களைத் தொடர்பு கொள்ள முயலுவார்கள் என்பது தெரிந்திருக்கும்.

• மின்னஞ்சல் மூலம் வரும் விளம்பரத்தை நம்பி, எந்தப் பொருட்களையும் (On Line Trading) வாங்க முயற்சிக்காதீர்கள். இத்தகு எண்ணத்தையே ஊக்குவிக்காதீர்கள்.

* இத்தகு மின்னஞ்சலுக்கு எந்த விதமான பதிலும் அளிக்காதீர்கள்; ஒரு முறை நீங்கள் அளிக்கும் பதில், உங்கள் மின் முகவரி உண்மை என்பதனை அவர்களுக்கு உறுதி செய்வதால், மென்மேலும் அவர்களிடமிருந்து உங்களுக்கு மின்னஞ்சல் வருவது உறுதி.

• தொடர் மின்னஞ்சல் குறித்த எந்த ஒரு வேண்டுகோளுக்கும் செவிசாய்க்காதீர்கள். இது ஒரு “முகவரிச் சுழற்சி”. ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இம்மின்னஞ்சலை அனுப்ப, மேலும் புது முகவரிகள் சேரும். அவர்கள் எல்லோருக்கும் “ஸ்பாம் (SPAM) மின்னஞ்சல் தொடரும். மற்றவர்களுக்கும் “ஸ்பாம் (SPAM) தொல்லை பரவ நீங்கள் காரணமாக இருக்காதீர்கள்.

* ஏதேனும் ஒரு காரணத்தால் அச்செய்திகள் பயனுடையவை என்று நீங்கள் உறுதியாக நம்பினால், அந்தச் செய்தியினை ஒரு புது மின்னஞ்சலாக, உங்களிடமிருந்து செல்வதாக அனுப்புவதன் மூலம் சங்கிலித் தொடரினைத் துண்டித்து விடுங்கள். உங்கள் கணிணியில் இருக்கும் மின்னஞ்சலையும் உடனடியாக அழித்துவிடுங்கள். அதோடு, உடன் வந்த இணைப்புக்களையும் அழித்துவிடுங்கள். இதற்கேற்றவாறு, உங்கள் மின்னஞ்சலின் அமைப்புக்களை வடிவமையுங்கள்.

• பெரும்பாலும் வைரஸ் செயல் நிரைகள் (VIRUS APPLICATIONS) மின்னஞ்சலில் வரும் இணைப்புகளாக, ஒரு செயலாக்கக் கோப்புகள் (EXECUTABLE FILE) மூலம் தான் வரும். அத்தகு கோப்புகளைத் திறக்காது உடனே அழித்துவிடுங்கள்.

• WINZIP கோப்புக்களாக வரும் செய்திகளையும், உங்களுக்குத் தெரிந்தவரிடமிருந்து வரும் நம்பகமான செய்தி என்றால் திறந்து படியுங்கள். இல்லையென்றால், அழித்துவிடுங்கள். சில சமயம் உங்கள் நண்பரின் கணிணி “ஸ்பாம்” (SPAM) தாக்குதலுக்கு ஆளாகியிருந்தால், அவரிடமிருந்து, (அவர்களுக்கே தெரியாமல் கூட) உங்களுக்கு “ஸ்பாம்” (SPAM) தாக்குதல் உண்டாகலாம். கவனமாக இருங்கள்.

• இணைய தளத்திற்குச் சென்றால், கீழ்க்கண்ட காரணங்களால், நீங்கள் “ஸ்பாம்” (SPAM) தாக்குதலுக்கு ஆளாவீர்கள். இதனைக் குறித்து கவனமாக இருங்கள்.

* முன்பின் அறிமுகமில்லாத, நம்பத் தகுதியில்லாத செய்திக் குழுவிற்கு (NEWS GROUP) எந்த செய்தியினையும் அளிக்காதீர்கள்.

* எந்தக் காரணம் கொண்டும், உங்கள் முகவரியினைக் கேட்கும், இணையதளச் சேவையினுக்கு அது நம்பகத் தன்மை இல்லாத ஒன்றாக இருக்குமானால், உங்கள் முகவரியினைத் தராதீர்கள்.

* ஆனால் சில தளங்கள் மின் முகவரி தரவில்லையென்றால், உங்களுக்கு அத்தளத்துள்ளே நுழைய அனுமதி மறுக்கலாம். இது அவர்கள் தளத்தினை, “ஸ்பாம்” (SPAM) தாக்குதலுக்கு உட்படாது தவிர்க்க அவர்கள் எடுத்துக் கொள்ளும் எச்சரிக்கை முயற்சி. அப்படித் தர வேண்டுமானால், பொது முகவரி அல்லது “ஒரு முறைப் பயன்பாட்டு முகவரிகளைப் ” பயன்படுத்துங்கள். YAHOO, HOTMAIL, GOOGLE போன்ற நல்லதொரு “ஸ்பாம்” (SPAM) மற்றும் “வைரஸ்” (VIRUS) கட்டுப்பாடுகள் சிறப்பாக உள்ள சேவைகளில் நீங்கள் உருவாக்கிய ஒரு முறைப் பயன்பாட்டு மின் முகவரியினைக் கொடுங்கள்.

•நீங்கள் ஏதேனும் வலைத்தளம் வைத்திருந்தால், உங்கள் மின் முகவரியினை அதில் குறிப்பிடாதீர்கள். “SPAMBOTS” எனப்படும் மின் முகவரியினைத் தேடி எடுக்கும் அமைப்பு “ஸ்பாம்” உருவாக்கும் நபர்களுக்காக, உங்கள் முகவரியினைப் பதிவு செய்து கொள்ளும்.

• எனது மின் முகவரியினை எடுத்து விடுங்கள்” (Remove My Email ID) என்று குறிப்பிடும் வசதியினை எப்பொழுதுமே நம்பாதீர்கள். பொதுவாக அத்தகு வசதிகள் உங்கள் முகவரி உண்மையானதுதானா, செயலில் இருக்கிறதா என அறிவதற்காக, “ஸ்பாம்” உருவாக்கும் நபர்கள் வைத்திருக்கும் “வலை”(TRAP).

• YAHOO, HOTMAIL, WEBMAIL, EUDORA போன்ற எல்லோரும் எல்லோராலும் அறியப்பட்ட மின்னஞ்சல் சேவைகள் சிறப்பான “ஸ்பாம்” (SPAM), மற்றும் “வைரஸ்” (VIRUS) கட்டுப்பாட்டு அமைப்புகளுடையவை. அவை செயலில் இருக்கிறதா என்பதனை அடிக்கடி உறுதி செய்து கொள்ளுங்கள். SPAM அல்லது JUNK MAIL என அதன் உதவிப் பகுதியில் (HELP FILES) உள்ள பக்கங்களைப் பார்க்கவும்.

* உதாரணத்திற்கு HOTMAIL.COM அமைப்பில் உள்ள சிறைப்படுத்தும் வசதி (QUARANTINE FOLDER) ஸ்பாமென நம்பும் மின்னஞ்சல்களை நீங்கள் அமைத்திருக்கும் விதிகளின்படி, தனிமைப் படுத்திவிடும் அல்லது அழித்துவிடும்.

* MICROSOFT நிறுவனத்தின் OUTLOOK /OUTLOOK EXPRESS இவற்றில் உள்ள வடிகட்டும் அமைப்பு (FILTERS) “ஸ்பாம்” (SPAM) என சந்தேகப்படும் மின்னஞ்சல்களை, அவற்றிற்கான விதிகளின்படி, பிரித்து, தனிமைப் படுத்தும் அல்லது அழித்துவிடும்.

* EUDORA அமைப்பில் உள்ள விதிகளின்படி, நீங்கள் ஸ்பாம் மின்னஞ்சல்களை இறக்குமுன்னரே, அழித்துவிடும் வசதி உள்ளது.

* இவற்றைத் தவிர ஸ்பாம் மற்றும் வைரஸ் இவற்றைக் கட்டுப்படுத்த தனிப்பட்ட சில சிறப்பான செயல் நிரைகள் உள்ளன.

* அவை உங்களின் மின்னஞ்சல் வரும் வழியில் உள்ள பிரதான SERVER பகுதியிலோ அல்லது இறங்கும் உங்கள் கணிணிப் பகுதியிலோ, அத்தகு ஸ்பாம்/வைரஸ் மின்னஞ்சலைக் கண்டுபிடித்து, அழித்துவிடும்.

* SERVER பகுதியில் அழிக்கும் வசதி நீங்கள் இறக்குமதி செய்யும் (DOWN LOAD) செலவினையும் குறைக்கும்.

இவை அனைத்திலுமே “FILTERS” எனப்படும் “வடிகட்டிகள்” பயன்படுத்தப்படுகின்றன. அவை “தடை செய்யப்பட்ட மின் முகவரிகள்” (BLACK LIST) “அனுமதிக்கப்பட்ட மின் முகவரிகள்” (WHITE LIST) என்றதன் பேரில் மின்னஞ்சலைப் பிரித்து, “அனுமதிக்கப்பட்ட மின் முகவரிகள்” (WHITE LIST) உள்ள மின்னஞ்சலை மட்டும் அளிக்கிறது. இந்த வடிகட்டிகளை உருவாக்க விதிகள் அடிப்படையிலான அணுகுமுறைகள் (LOGICS) பல உண்டு. அவற்றைப் பற்றி பிறிதொரு முறை பார்ப்போம்.

சில செயல் நிரைகள் மின்னஞ்சலில் உள்ளே இருக்கும் செய்திகளைப்படித்து, அவற்றில் உள்ள தடை செய்யப்பட்ட எழுத்துக்கள், சொற்கள், கோப்புகளின் இறுதி விரிவுகள் (FILE EXTENSION) இவற்றுக்கான ஏற்கனவே அமைக்கப்பட்ட விதிகளின்படி, பிரிக்கின்றன.

இவை அனைத்திலுமே “உண்மையான மின்னஞ்சல்” என்பது நம்மால் மட்டுமே கண்டுபிடிக்கக் கூடியது என்பதே உண்மை. எனவே JUNK MAIL அல்லது தனித்திருக்கும் கோப்புகளிலிருந்து பார்த்து அவை உண்மையானதா இல்லையா என நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும். இப்படிக் கண்டுபிடித்தவற்றுள் “ஸ்பாம்” என நாம் நினைப்பவற்றை “JUNK MAIL BOX” செல்ல மாற்றிவிடுங்கள். இதன் தர்க்க ரீதியான அமைப்பைப் படித்து, அதில் உள்ள மின் முகவரியிலிருந்து எதிர்காலத்தில் வரும் எந்த ஒரு மின்னஞ்சலையும் “JUNK BOX” ல் இறக்கிவிடும் அல்லது அழித்துவிடும்.

இது எல்லாவற்றையும் விட “பாட்னெட்ஸ்” (BOTNETS) எனப்படும் பல்லாயிரக்கணக்கான அகலக்கற்றை இணைப்புடைய (Broadband Connectivity) வீட்டுக் கணிணிகளின் ஒருங்கிணைந்த வலைக்கட்டு (NETWORK) மூலம் உண்டாக்கப்படும் தொல்லை சொல்லி மாளாது. இத்தகு கணிணிகள் “MALWARE அல்லது ADWARE எனப்படும் விளம்பரம் எளிதாகச் செய்ய வழிவகுக்கும் செயல் நிரைகளை உள்ளடக்கியதாய், மூன்றாம் மனிதர்களால் கட்டுப்படுத்த ஏதுவாக உள்ளது. ஸ்பாம் உருவாக்குபவர்கள் இத்தகு கணிணியினைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அதன் மூலம் பல்லாயிரக்கணக்கில் தானியிங்கி மின்னஞ்சல்களை உருவாக்கி பெரிய நிறுவனங்களின் NETWORK மற்றும் SERVER செயல்பாட்டினை அழிக்கிறார்கள். இது பலவகைகளில் ஸ்பாம் அனுப்புபவர்களுக்கு உதவுகிறது.

1. பல்லாயிரக்கணக்கான கணிணிகள் முதலீடு செய்யாமல் கிடைக்கிறது.
2. இவற்றின் மூலம் அனுப்பப்படும் மின்னஞ்சலுக்குக் கட்டணம் கணிணியின் உரிமையாளர்தான் கொடுக்கப் போகிறார்கள் என்பதால், ஸ்பாம் அனுப்புபவ்ர்களுக்கு இலவசம்.
3. எண்ணிக்கை காரணமாகவும், இவை உலகின் பல இடங்களில் இருப்பதாலும், இவற்றைக் கண்டுபிடிப்பது “ஸ்பாம்” கண்காணிப்பவர்களுக்கு ஒரு சவால்; அப்படியே கண்டுபிடித்தாலும் கட்டுப்படுத்துவது உடனடியாக நடக்க வாய்ப்பில்லை; அப்படியே கண்டுபிடித்தாலும், யாரோ அதற்காகத் தண்டிக்கப்படப் போகிறார்கள்.
4. ஒரே நேரத்தில் பல்லாயிரக் கணக்கான மின்னஞ்சல் அனுப்பும் வசதி செலவே இல்லாமல் எளிதாகக் கிடைக்கிறது.
5. நம்முடைய கவனக் குறைவாலும், விவரமறியாது கணிணியினைப் பயன்படுத்துவோர் அதிகம் என்பதாலும், “ஸ்பாம் அனுப்புபவர்களுக்கு, மென்மேலும் அதிகமான கணிணிகள் ஒவ்வொரு நாளும் கிடைக்கிற வாய்ப்பிருக்கிறது.

மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்புவதும், CHAT எனப்படும் உரையாடலும் பெருகி வரும் இக்காலத்தில், இந்த ஸ்பாம் தடுக்கப்பட, பயன்படுத்துவோர் கணிணி பயன்பாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய மின்னஞ்சல், இணையதளம் மற்றும் CHAT எனப்படும் உரையாடல் குறித்த அனைத்திலும் அறிவுடையராக இருப்பதும், கவனமாக இருப்பதும் பெரிதும் அவசியமாகிறது என்று அறிவுரையுடன், இக்கட்டுரை இதனுடன் இனிதே முடிகிறது.

கணிணிப் பயன்பாடு, இணையதளத் தொடர்பு, மின்னஞ்சல் மூலம் தொடர்பு எனப் பல தேவைகள், தவிர்க்கப்பட முடியாத ஒன்றாகிவிட்ட காரணத்தால், முடிவாக ஒரு செய்தி.

“ஸ்பாம்” (SPAM) தாக்குதலைத் தவிர்க்க ஒவ்வொருவரும், எடுக்கும் முயற்சிகள் அதற்காகச் செய்யும் செலவுகள், இவையெல்லாம் பார்க்கையில், அதனைப் பற்றி அதிகம் கவலைப்பாடாமல், மேலே குறிப்பிட்டபடி விழிப்புணர்வுடன் செயல்பட்டு, அதோடு இணைந்து வாழக் கற்றுக்கொள்வதும், வந்தால், சரிசெய்து கொண்டு மேலே செல்ல வேண்டுவதும், பெரிதும் அவசியமாகிறது.

முற்றும்.

No comments:

Post a Comment