Monday, May 25, 2009

"ஸ்பாம்” எனும் சாபக்கேடு - பாகம் 2

முதற்பகுதியில் “ஸ்பாம் “ (SPAM) பற்றிய ஒரு அறிமுகம் பார்த்தோம். ஸ்பாம் (SPAM) என்பது எப்பொழுது வேண்டாத ஒரு பிரச்சினையாகிறது நடக்கும் சாத்தியக் கூறுகள் என்ன என்பதனை இக்கட்டுரையில் பார்ப்போம்.

“ஸ்பாம்” (SPAM) என்பது எப்பொழுது ஒரு பிரச்சினையாகிறது?

1. நாம் விரும்பாத ஒரு செய்தியினை, நாம் கேட்காத பொழுதும், நம் மீது திணிக்கப்படும் பொழுதும்,

2. நாம் விரும்பாத அந்த செய்திகள் திரும்பத் திரும்ப அதிக அலவில் (in multiples) நம்மை வந்து தாக்கும் பொழுதும்,

3. நமது கணிப்பொறியின் ஞாபக சக்தி (Memmory Power), செய்திகளை சேமித்து வைக்கும் வசதி (Hard disc space) செயலாக்கத்திறன் (Performance, Speed of Processing) முதலியன் இதனால் குறையும் பொழுதும்

4. இதைத் தவிர்க்க, நாம் ஒவ்வொரு முறையும் இம்மின்னஞ்சல்களை அழிக்கும் வேலையினைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும் பொழுதும்

5. நாம் பயன்படுத்தாத போதும் இறக்கும் நேரம் (Down Loading Time), தொலைத் தொடர்புக் கட்டணம் முதலியனவற்றிற்காக அதிகக் கட்டணம் கட்ட வேண்டிய நிலை வரும் பொழுதும்,

6. நமக்குத் தெரியாமலே, நமது மின்னஞ்சல் முகவரியில், நம் பெயரில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாகத் தெரிய வரும் பொழுதும்,

7. நமக்குத் தெரியாமலே, நமது கணிணி, நம்க்கு முன்பின் அறிமுகமில்லாத யாரோ ஒருவரால் இயக்கபடுகிறது எனவும் இது ஒரு அத்து மீறிய செயல் (உரிமை மீறல்) அறிய வரும் பொழுதும்,

8. அத்தகு செயல்களால், வழக்கு விவகாரங்கள் உண்டாகும் பொழுதும்,

9. இது போன்ற நிகழ்ச்சிகளால் சட்ட ரீதியான பிரச்சினை ஏற்பட்டு, நமது கணிணி “ஸ்பாம் கட்டுப்பாட்டுச் சேவையினரால் தடை செய்யப்பட்ட ஒன்றாக, இணைய தளத் தொடர்பு துண்டிக்கப்படும் வாய்ப்பும் அண்மைக் காலத்தே இருக்கின்ற காரணத்தால், நாம் கணிணி சமுதாயத்தால் ஒதுக்கப்படுவோம் என்ற நிலை வரும் பொழுதும்

இது போல பற்பல வகையிலும் நாம் தொல்லைக்காளாகும் பொழுது, இந்த “ஸ்பாம்” ஒரு பெரிய பூதமாக உருவெடுத்து நம்மைப் பயமுறுத்துகிறது. இது எல்லாமே நமக்க்த் தெரியாமலேயே நடந்து இறுதியாக பாதிக்கப்பட்ட பின்னரே நமக்குத் தெரிய வருவதுதான் மிகக் கொடுமை.

இப்படியெல்லாம் கூட நடக்குமா?

இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்ற கேள்விக்கு, நடந்திருக்கிறது என்று கீழ்க் கண்ட அனுபவங்களை அடைந்தவர்கள் அளிக்கும் பதில், உறுதி செய்யும்.

உங்களுக்கும் இவ்வித அனுபவங்கள் ஏற்பட்டால், நீங்கள் ஸ்பாமினால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

1. எனக்குத் தொடர்பேயில்லாத மின் முகவரியிலிருந்து பல மின்னஞ்சல்கள் எனக்கு வருகிறது. இவர்கள் எனக்கு முன்பின் அறிமுகமில்லாதவர்கள்; அனுப்பப்படும் செய்திகளும் நான் விரும்பிக் கேட்டதில்லை.

2. நான் கேட்காமலேயே பல் பொருட்கள் மற்றும் சேவை பற்றிய விளம்பரங்கள் எனக்கு மின்னஞ்சலில் வருகிறது. இதில் குறிப்பிட்டபடி “REMOVE ME” கோரிக்கையினை “கிளிக்” செய்தும் கூட இது தொடர்கிறது சில சமயங்களில் அதிகமாகவும் ஆகிறது. இது எரிச்சலூட்டுவதாக இருக்கிறது.

3. நான் அனுப்பாத பொதும், என் பெயரில் மின்னஞ்சல் வருவதாக, சில சமயம் பிறரிடமிருந்து, எனக்குத் தெரிய வருகிறது. பன்னாட்டு அரங்கில், இது ஒரு வகையில் குற்றமென அறிய வரும் பொழுது அது எனக்குக் கலக்த்தைத் தருகிறது. நான் செய்யாத குற்றத்திற்கு தண்டனை கிடைக்குமோ என்ற அச்சம் என்னை வாட்டுகிறது.

4. எனது தனிப்பட்ட தகவல்கல் (வருமான வரி குறித்த PAN, வங்கிக் கணக்கு எண்கள் மற்றும் இன்ன பிற செய்திகள்) எனக்குத் தெரியாமலேயே வெளியாகியிருக்கிறது என்பதும், எனது வங்கிக் கணக்கிலிருந்து பணம் பட்டுவாடா ஆகியிருக்கிறது என்பதும் எனக்கு அதிர்ச்சியூட்டும் செய்திகளாம்.

5. நான் அனுப்பியதாக எனது மேலதிகாரிக்கும், அவர் அனுப்பியதாக எனக்கும் வரும் மின்னஞ்சல்களை அப்படியே ஏற்றுக் கொள்ளவும் முடிவதில்லை; ஒதுக்கித் தள்ளவும் முடிவதில்லை. ஏற்றுக் கொண்டு அவரை அணுகினால், அவர் இத்தகு செய்திகலைத் தான் அனுப்புவதில்லை எனக் கூறுவதோடு இத்தகைய இடையூறுகளால் தனது கவனம் சிதறுவதாகக் குற்ரம் சாட்டுகிறார். இதனால் எங்கல் அலுவலப் பணி சார்ந்த உறவு முறைகள் பாதிக்கபடக் கூடும் என நான் அஞ்சுகிறேன். இது எனது பதவி உயர்வு மற்றும் இதர முன்னேற்றங்களையும் கூட பாதிக்கலாம்.

6. எனது மின்னஞ்சல் IN BOX வேண்டாத இத்தகு செய்திகளால், நிரம்பி வழிகிறது. இதனை அழிப்பது எனக்கு ஒரு கூடுதல் வேலையாகிறது. இதனைச் செய்யாவிடில், புதிய மின்னஞ்சல்களைப் பெற இடம் இருப்பதில்லை; பெற முடிவதில்லை.

7. எனக்கு அறிமுகமில்லாதவரிடமிருந்து, பாலின உறவு குறித்த அருவருப்பான செய்திகள், படங்கள் மின்னஞ்சலில் வருகிறது. இதனால், குடும்பத்தில் நல்லுறவு கெடும் நிலையிருக்கிறது. எனது வயது வந்த மகன் மற்றும் மகள் இவர்கள் முன்னிலையில், கணிணியைப் பயன் படுத்தி மின்னஞ்சல்களைப் பார்க்க முடிவதில்லை. அவர்கள் “பார்வையில்” எனது “IMAGE” பாதிக்கப்படுகிறது.

8. அவர்களைக் கணிணியினைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாத அவல நிலை ஏற்படுகிறது.

9. கடந்த சில மாதங்களாக, எனது தொலை பேசிக் கட்டணம் அதிகரித்து வருகிறது. ஆனால் அந்த அளவு நானோ அல்லது எனது குடும்பத்தாரோ கணிணியையோ, தொலை பேசியினையோ பயன்படுத்துவதில்லை.

10. “MUSIC INDIA ON LINE” போன்ற இணையயதளத்திலிருந்து ஒரு நல்ல பாடல்களைக் கூட சரிவரக் கேட்க முடியாதபடி வேண்டாத விளம்பரங்கள் இடையிடையே வந்து எரிச்சலூட்டுகிறது.

11. இதையெல்லாம் தடுக்க நான் பல புதிய மென்பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. இதற்காக, எனது கணிணியின் சேமிப்பு வசதி, நினைவாற்றல் மற்றும் செயல் திறனை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. எனது கணிணியின் பராமரிப்புச் செலவு அதிகரிக்கிறது.

மின்னஞ்சல் அல்லது இணைய தளத்தினைப் பயன்படுத்துவோர் இத்தகைய தொல்லையினை அனுபவிக்காதிருந்தால், அவர்கள் மிகவும் “அதிர்ஷ்டசாலிகள்”; தடுக்க முடிந்தால் புத்திசாலிகள்.

இது எப்படி சாத்தியமாகிறது ? இது குறித்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்?

இந்தக் கேள்விகள் நியாமே. இருப்பினும், வேகமாக மாறிவரும் விஞ்ஞான யுகத்தில், இணைய தளம், மின்னஞ்சல் போன்ற பொது இடங்களில் அன்றாடம் பயணிக்கும் நாம் கவலைப்பட்டுக் கட்டுபடியாகாது என்றாலும், கவனமாக இருக்க வேண்டுவது அவசியமாகிறது. வருமுன் காத்தல் சிறப்பு.

இவற்றைப் பற்றி வரும் தொடரில் விளக்கமாகப் பார்ப்போம்.

தொடரும்......

No comments:

Post a Comment