Thursday, October 30, 2008

உலகத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்கள்

"பச்சோந்தி தலைவர்களால் தமிழ் வாழாது"
மூத்தத் தமிழறிஞர் தமிழண்ணல் கருத்துரை

எழுத்தாளர்களின் சமூகக் கடமை கள் என்ற கருத்தரங்கத்தில் தொடக்கவுரை ஆற்றிய தமிழண்ணல் அவர்களின் உரை

தான் நேசிக்கும் பல தலைவர்களில் நூற்றுக்கு நூறு தான் நேசிக்கும் தலைவர் பழ.நெடுமாறன் எனவும் இதை தான் முகமனாகப் பேசவில்லை எனவும், நம்முடைய காலத்தில் ஏதேனும் ஒரு வெற்றி கிடைக்காதா என்ற ஏக்கத்தில் இருக்கின்ற நிலைமையில் தான் இருப்ப தாகவும் கூறி தன் உரையைத் துவக்கினார்.

இரண்டு திங்களுக்கு முன்னால் திரு.நெடுமாறன் அவர்கள் எழுதியிருந்த ஒரு கட்டுரையை - எந்த ஒரு துறையிலும் நாம் வெற்றி பெறவில்லை என்பதைப் பட்டியல் இட்டிருந்தாகச் சுட்டிக்காட்டி, நாம் ஆட்சிக்கட்டிலிலும் வெற்றி பெற வில்லை - தமிழைக் கல்விமொழியாக ஆக்குவதிலும் வெற்றி பெறவில்லை. வழிபாட்டு மொழியாக ஆக்குவதிலும் வெற்றிபெறவில்லை என்று வரிசையாகப் பட்டியல் இட்டிருந்ததாகவும், நாம் எதி லுமே இன்னும் சிறிதும் வெற்றி என்ற அந்த திசை நோக்கி முழுமையாகச் செல் லவில்லை என்று கூறி வருத்தப்பட்டார்.

தெலுங்கும் கன்னடமும் செம் மொழி ஆகப்போகின்றன என்பதைக் கூறி, நம்முடைய செம்மொழியோ நகர மறுத்து இருந்த இடத்திலேயே இருந்து கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டினார். மொழியைப் பொறுத்த மட்டில் நாம் உண்மையானவர்களாக வாழவில்லை என்பதைத் தெரிவித்துக் கொண்டார்.

பின்னர், நம்மை ஆதரிப்பவர் களை நமக்காக கடமை செய்பவர்களை நாம் போற்றுவதில்லை எனவும், அவர் களை ஆதரித்து நாம் உண்மையாக நடந்து கொள்வதில்லை எனவும் சுட்டிக் காட்டி மொழியைப் பற்றி வெறுமனே பேசிப் பயனில்லை என்று கூறினார்.

தலைவர்களில் பலர் பச்சோந்தி களாக இருப்பதாகவும் அப்படியிருந்தால் தமிழ் எப்பொழுது வாழும்? அப்படிப்பட்ட வர்களை இனம் கண்டு கொள்வதற்குக் கூட நம்முடைய மக்களுக்கு இன்னும் புலனாகவில்லையே?, நமக்கு உண்மை யான தலைவன் யார் என்று கண்டு கொள் வதற்கு நாம் ஏதேனும் ஒன்று செய்தாக வேண்டும் என வலியுறுத்தி நம்முடைய பொதுமக்கள் அனைவரும் மூளைச் சலவை செய்யப்பட்டிருப்பதால் உண்மையான தலை வர் யார் என்று தெரியாமல் தவிக்கிறார்கள் என்றார்.

தான் ஒரு முறை தினமணியில் - புலி வருகிறது புலி - என்று கட்டுரை எழுதி யதாகக் கூறி “திரும்பத்திரும்ப புலி வரு கிறது என்று நீங்கள் அச்சமூட்டிக் கொண்டி ருக்கிறீர்கள் நிச்சயமாக வெளிநாட்டில் மட்டுமல்ல - இலங்கையில் மட்டுமல்ல - தமிழீழத்தில் மட்டுமல்ல - தமிழகத்திலேயே புலி வந்தாலும் வந்துவிடும் என்று அதிலே நான் குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் தமிழகத்திலேயே புலி வந்தாலும் வந்து விடும் என்று அதிலே சொல்லியிருந்தேன். நான் மீண்டும் சொல்கிறேன். தமிழகத்திலும் புலிகள் வந்தால் தான் தமிழ் வாழும் என்று. மிக அழுத்தமாக இந்த அவையில் இந்த கருத்தை நான் சொல்கிறேன். ஏனென்றால் நம்முடைய குறிக்கோள் என்னவாக இருக்க வேண்டும் என்று சொன்னால் உண்மை யானவர்கள் வேண்டும். என அதில் குறிப்பிட்டிருந்ததாகவும் கூறினார்.

புலிகள் என்று சொன்னால் பல பேருக்கு கிலி ஏற்படலாம் எனவும் எனவே அந்த பேரை மாற்றி ஓர் அறப்போர்ப்படை அணிவகுப்பை நாம் தொடங்க வேண்டும் எனவும், கூட்டமாகப் பேசிப் பயனில்லை என்பதால்,- நூறு நூறு பேரை உட்கார வைத்துக் கொண்டு - நம் மாணவர்களுக் கும் இளைஞர்களுக்கும் அவர்களுக்கு வழிகாட்ட நூல்களை உருவாக்கி செய்தி களை அவர்களுக்குக் கொடுக்கின்ற திருவள்ளுவர் கழகம் போன்ற தமிழ் அமைப்புகள் - அரசியல் கலப்பில்லாத அமைப்புகள் - இலட்சக்கணக்கான அமைப்புகள் முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.. தமிழமைப்புகளின் முகவரிகளை எல்லாம் சேர்த்து நூறு நூறு பேரை உட்கார வைத்துக் கொண்டு அவர்களிடம் நாம் யாரை நம்ப வேண்டும் - நம் தலைவர் யார் - நாம் எதற்காகப் போராடுகிறோம்? நம் குறிக்கோள் என்ன என்பதை அந்த இளைஞர்களின் நெஞ் சிலே பதிய வைக்க வேண்டும் அப்போது தான் மொழியைப் பொறுத்த வரையில் வெற்றி பெற முடியும் என தன் கருத்தை வலியுறுத்தி அப்படிப்பட்ட ஒரு அணி வகுப்பைத் தொடங்குவதானால் முதலாவ தாக சில நூல்களை எழுதி அவர்களுககு உணர்வூட்டுகின்ற பணியினை இந்த இயக்கத்தின் சார்பாக தான் ஈடுபடத் தயாராக இருப்பதாகக் கூறி தன் உரையை முடித்தார்.
----------
"மொழி இனம் காப்பது எழுத்தாளர் கடமை"
முனைவர் க. நெடுஞ்செழியன் அறைகூவல்

சீன எழுத்தாளன் நூசிங் என்பவ ரைப் பற்றி நாம் அறிவோம். சாதாரண வறிய குடும்பத்தில் பிறந்தவன். இளமை யில் தன் தந்தையை இழந்தவன். தாய் அண்டை வீடுகளில் பாத்திரம் கழுவி அதில் வரக்கூடிய வருமானத்தில் குடும் பத்தை நடத்திக் கொண்டிருக்கிற பொழுது தான் அவன் பல் மருத்துவத்தைப் படிப் பதற்காக சப்பானுக்குச் செல்கிறான். இளமைத் துடிப்பும் மற்ற இளைஞர்களைப் போல வாழ வேண்டும் என்கிற ஏக்கமும் இருந்தாலும்கூட தன் குடும்ப வறுமையைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த அந்த இளைஞன் ஒரு நாள் ஒரு ஓவியக் கண்காட்சிக்குச் செல்கிறான்.
அப்போது ஒரு குறிப்பிட்ட ஓவியத்தை மட்டும் சப்பானியர்கள் மிக்க ஆர்வத்தோடு பற்று தலுடன் கூட்டம் கூட்டமாகப் பார்ப்பதும் அதைப் பற்றிப் பேசுவதுமாக இருப்பதைப் பார்த்த அவன், இவர்களின் பெருமைக்கும் பாராட்டுதலுக்கும் உரிய ஓவியம் என்ன வாக இருக்கும் என்கிற ஆர்வத்தோடு அந்த ஓவியத்தைப் பார்க்கச் செல்கிறான்.
அப்படி சென்று பார்த்த போது அவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சொல்லொணாத அதிர்ச்சி. இதயமே வெடித்து விடும் போல் ஒரு வேதனை. என்ன ஓவியம் என்றால் - அப்போது சீனத்திலே சன்-யாட்-சின் தலைமையிலே ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்காக போராடிக் கொண்டி ருந்த காலம். அப்படிப்பட்ட போராட்டத் திலே கலந்து கொண்ட ஒரு இளைஞனை சப்பானிய இராணுவம் எப்படிச் சித்திர வதை செய்து கொண்டிருக்கிறது என்பதை சப்பானிய ஓவியர்கள் ஒரு ஓவியமாக வைத்திருந்தார்கள். அந்தக் காட்சியைப் பார்த்துத்தான் அந்த சப்பானிய மக்கள் அவ்வளவு ஆர்வத்துடன் அந்த ஓவிய ரைப் பாராட்டுகிற பொழுது நெஞ்சம் வலிக்கிறது அந்த சீன இளைஞனுக்கு. தன்னை ஒத்த இளைஞர்கள் தேசிய நலனுக்காக தங்கள் இளமையைத் தியாகம் செய்து - துறந்து அந்த இளைஞர்கள் போராடிக் கொண்டிருக்கிற பொழுது - அப்படிப் போராடிக் கொண்டிருக்கிற ஒரு இளைஞனை - அடக்குமுறை இராணுவம் கொடுமைப்படுத்துவது அந்த சப்பானிய மக்களுக்கு மிகவும் பிடித்தது என்று சொன்னால் - அந்தக் கொடுமையை உடைத்தெறிவதுதான் என் நோக்கம் என்று சொல்லி, தான் படித்த படிப்பையும் தன் நோக்கத்தையும் தூக்கி எறிந்து விட்டு - அவன் எழுதத் தொடங்கினான். அந்த எழுத்துதான் சீனத்திலே மிகப் பெரிய புரட்சியை உண்டாக்கியது.

எழுத்தாளர்களுக்கு இருக்கக் கூடிய சமூகக் கடமை என்பது ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் அடித்தளத்தை அமைப்பதுதான் எனக் கூறி அந்த அடித் தளம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டு விட்ட காரணத்தினால்தான் முனைவர் பர்வீன் சுல்தானா அம்மையார் குறிப்பிட்டது போல திரைப்படங்களில் இவ்வளவு அசிங்கமான - அதாவது தில்லையாடி வள்ளியம்மை என்பவர் இந்திய விடுதலைப் போராட்டத் தின் உயிர்நாடியாக இருந்தவர். வீர முழக் கத்தின் குறியீடு. இந்த வரலாறு எல்லாம் தெரியாதவன் கவிஞனாக கவிப்பேரரசனாக விளங்கக் கூடிய காரணத்தினால் தான் நமக்கு இப்படிப்பட்ட அவமானம் ஏற்பட்டு இருக்கிறதே தவிர வேறொன்றும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

நம் மொழியை - இனத்தைப் பாது காக்கக் கூடிய வகையிலே நம் எழுத்தாளர் கள் தங்கள் படைப்புகளை உருவாக்க வேண்டும் என்று கூறி வரலாற்று ஆசிரி யன் என்பவன் நிகழ்ச்சிகள் நடந்து முடிந்த பிறகு - திரைப்படத்தில் வரக்கூடிய காவல் துறையைப் போல - நிகழ்ச்சிகள் நடந்து முடிந்த பிறகு - சொல்பவன் என்றும் ஒரு சமூகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை நிகழ்காலத்திலிருந்து திட்டமிடக் கூடியவன் தான் எழுத்தாளன் என்றும் சுட்டிக் காட்டினார்.. எழுத்தாளர்கள் மொழி உணர்வு மிக்கவர்களாக - சமுதாயத்தில் அக்கறை உள்ளவர்களாக - இருந்தால்தான் அந்தச் சமுதாயம் விடிவு பெறும் என்று வலியுறுத்தினார்.

தன் இனத்தைக் காக்கப் புறப்பட்ட ஒரு போராளி சரித்திரமே இல்லாத ஒரு இனமாக இருப்பதை விட சரித்திரத்தைப் படைக்க வாழ்வதைத் தான் பெருமையாகக் கருதுவதாகத் தன் காதலியிடம் கூறுகிறான் என்று ஓர் உதாரணத்துடன் கூறி ஒவ் வொரு இளைஞனுக்கும் இப்படிப்பட்ட சூழல் தனக்கு நேரும் பொழுது தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எழுத்தாளன் பதிய வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்படிப்பட்ட நிலையைத் தான் இந்த நாட் டிலே எழுத்தாளர்கள் உருவாக்க வேண்டும் என்று கூறி ஆனால் தமிழகத் தில் எந்த இடத்திற்குப் போனாலும் அப் படிப்பட்ட சூழல் இல்லை என்பதைச் சொல்லி வருந்தினார்.

இன்றைக்கு பள்ளிக்குக் குழந் தையை அனுப்பும் ஒவ்வொரு பெற்றோ ரும் தன் குழந்தை அமெரிக்காவுக்குப் போவானா? ஆசுதிரேலியாவுக்குப் போவானா? இங்கிலாந்துக்குப் போவானா என்ற ஏக்கத்துடன் தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தற்போது படித்தவர் களிடையே மூடநம்பிக்கை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது என்றும் நேரத்திற்கொரு வழிபாட்டு முறையில் இருக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டி இப் படிப்பட்ட சூழலில் எழுத்தாளரது கடமை என்பது மிக மிக இன்றியமையாதது என வும் எனவே எழுத்தாளர்களே இந்த இனத்தை மீட்பதற்கு இந்த இனத்தை எழுச்சி உள்ளதாகச் செய்வதற்கு தங்களு டைய எழுதுகோலைப் பயன்படுத்தும்படி கேட்டுக் கொண்டார். தமிழகத்தில் எழுச்சி வேண்டும். அதற்கு எழுத்தாளர்களின் படைப்புகள் உதவ வேண்டும் என்று கூறி வாய்ப்பினை நல்கிய அனைவருக்கும் நன்றியைத் தெவித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment