Monday, June 20, 2011

சட்ட விரோத கருத்தடை மாத்திரை விற்பனையும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களும் பெண்கள் ஆரோக்கியமான வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

கருத்தடை மாத்திரைகள் தொடர்பாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வில் அது மருந்துக்கடைகளில் மிகவும் எளிதாக கிடைக்கப்பெறுவது அம்பலமாகியுள்ளது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

இந்த கருத்தடை மாத்திரை விற்பனைகள் விஷ சட்டம் 1952ன் கீழ் வருகின்றன. கருத்தடை மாத்திரையை விற்பனை செய்பவர், வாங்குபவரின் விபரத்தை விஷ புத்தகம் என்ற பெயரிடப்பட்ட புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆனால் இப்படி பதிவு செய்யப்படாமலேயே இந்த கருத்தடை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சி தரும் விஷயமாகும். பினாங்கில் உள்ள மருந்துக்கடைகளிலும் கூலிம், கெடாவில் உள்ள மளிகைக்கடைகளிலும் இம்மாதிரியான சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. கோலாலம்பூரில் உள்ள சௌகிட் பகுதியிலும் கிராமப்புறங்களில் உள்ள மளிகைக் கடைகளிலும் கருத்தடை மாத்திரைகள் சட்டத்திற்கு விரோதமான முறையில் விற்கப்பட்டு வருவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

கருத்தடை மாத்திரைகள் விளைவிக்கும் பாதிப்புக்களை உணராத ஆயிரக்கணக்கான மலேசியப் பெண்கள் அதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

கருத்தடை மாத்திரைகளை விற்பனை செய்யும் 15 கடைகளில் சோதனையிட்ட பொழுது அவற்றில் 14 கடைகளில் விஷ புத்தகத்தில் வாங்குபவரின் பெயர் பதிவு செய்யப்படாமலேயேதான் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரே ஒரு மருந்துக்கடையில் மட்டும்தான் கருத்தடை மாத்திரையை வாங்குபவரின் பெயரைப் பதிவு செய்தார்கள். அதுவும் கூட அவர் கொடுத்த விபரங்கள் உண்மையா என்பது பரிசோதிக்கப்படவில்லை. அப்படியானால் விஷ புத்தகத்தில் தவறான தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கலாம். 14 மருந்துக் கடைகளில் 5 மருந்துக்கடைகள் மட்டுமே வாங்குபவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டு இறுதியில் மாத்திரையை விற்றன. ஓர் ஆணும் எந்த வித சிரமமும் இல்லாமல் மருந்தை வாங்க முடிந்தது என்றார் இத்ரிஸ்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மருந்துக்கடைகள் பினாங்கில் உள்ளவையாகும். அவை பள்ளிக்கூடத்திற்கு, பல்கலைக்கழகத்திற்கு, கடைகள் மற்றும் மக்கள் குடியிருக்கும் இடங்களுக்கு அருகில் இருந்தன. சில கருத்தடை மாத்திரைகளை உதிரியாகவும் விற்பனை செய்கின்றனர். அதில் மாத்திரை தொடர்பான விபரங்கள், பக்க விளைவுகள் தொடர்பான எந்த விபரங்களும் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

சில கடைகளில் மட்டுமே கருத்தடை மாத்திரையின் விலையை எழுதி வைத்திருந்தார்கள். ஒரே பிரண்டைக் கருத்தடை மாத்திரைகள் மவெ.4.80லிருந்து மவெ. 6.50 வரை விற்கப்படுகின்றன. வெவ்வேறு பிரண்டு கருத்தடை மாத்திரைகளுக்கான விலைகள் மவெ. 4.80லிருந்து மவெ.23.00 வரைக்கும் உள்ளன. சிலர் விலையைக் குறைத்து வாங்குகின்றனர்.

இந்த கருத்தடை மாத்திரைகள் எளிதில் கிடைக்கின்ற காரணத்தால் அதனை மலேசியப் பெண்கள் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன. கருத்தடை மாத்திரைகள் விளைவிக்கும் ஆபத்துக்கள் மற்றும் நீண்ட கால பாதிப்புக்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இவை மருத்துவரின் கண்காணிப்பின் கீழேயே விநியோகிக்கப்பட வேண்டும் என்றார் இத்ரிஸ்.

இந்த கருத்தடை மாத்திரைகளை அதனுடைய உண்மையான நோக்கத்தைத் தவிர்த்து பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயைத் தள்ளிப்போடுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. பரீட்சைக் காலங்களில் தங்களுடைய மாதவிடாயைத் தள்ளிப்போடுவதற்கும், சமய சம்பிரதாய நிகழ்வுகளில் தடையின்றி கலந்துகொள்வதற்காகவும் மாதவிடாயைத் தள்ளிப்போட இணையம் மூலம் ஆலோசனைக் கேட்டு வருவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. பெண்கள் இந்த மாத்திரைகளை ரமலான் மாதத்திலும் ஹாஜ் செலுத்தும் சமயத்திலும் பயன்படுத்தி வருகிறார்கள்.

கருத்தரித்த காலத்தில், இருதயக் கோளாறுகள், இரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன், இரத்த சோகை, புற்றுநோய், மூளை, குருதிக்குழாய் கோளாறுகள் போன்ற நிலையில் உள்ளவர்கள் இந்த மாத்திரையைப் பயன்படுத்தக்கூடாது.

கருத்தடை மாத்திரைகளின் மூலம் போலி ஹோர்மோன்களை உடலுக்குள் செலுத்தி சினை முட்டை வெளிப்படுவதைத் தடுப்பது உடலின் இயல்பான இயக்கத்திற்கு ஊறு விளைவிப்பதாகும். இது பெண்களுக்கு சௌகரியம், வலி, மன நிலையில் மாற்றம், மன அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்திவிடும். அதே நேரத்தில் எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் பெண்களுக்குப் பிரச்னைகளையும் ஏற்படுத்திவிடும் என்றார் இத்ரிஸ்.

கருத்தடை மாத்திரைகள் மன அழுத்தம், மார்பகக்கட்டி, மாதவிடாய் நேரத்தில் அதிக உதிரப்போக்கு, உயர் இரத்த அழுத்தம், உடலில் கொலெஸ்ட்ரோலின் அளவை அதிகரித்தல், காலில் இரத்தக் கட்டு, நெஞ்சு வலி, ஈரல் பாதிப்பு மற்றும் பக்கவாதத்திற்கான அறிகுறிகளை ஏற்படுத்திவிடும். கருத்தடை மாத்திரைகளில் உள்ள எஸ்ட்ரோஜனின் அளவே இவ்வளவு பாதிப்புக்களையும் ஏற்படுத்திவிடும்.

பெண்களுக்கான மாதவிடாய் சுற்று 27லிருந்து 29 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இதில் மாதவிடாய் அதிகபட்சமாக 7 நாட்கள் வரைக்கும் வரும். 8லிருந்து 10 நாட்களுக்கு சினை முட்டைகள் வெளிப்படும். 10லிருந்து 11 நாட்கள் மாதவிடாய் வருவதற்கான அறிகுறிகளுக்கான உடல் பாதிப்புக்கள் இருக்கும். இதையெல்லாம் கணக்கு வைத்துப் பார்க்கும்பொழுது பெண்களுக்கு வெறும் 5 நாட்கள் எந்த வலியும் வேதனையும் இல்லாத நாட்களாக இருக்கின்றன. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உடல் வலியும் மனஅழுத்தமும் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் இப்படி மாத்திரைகளை உட்கொள்வது மாதவிடாயின்போது ஏற்படும் பாதிப்புக்களை அதிகமாக்கிவிடுகின்றன.

மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பதாக வரும் உடல் நலப் பாதிப்புக்கள்

மார்பகத்தில் வலி, குமட்டல், வாந்தி, மன அழுத்தம், ஒலி மற்றும் வாசனைகளால் அதிகம் எரிச்சலுக்கு உள்ளாகுதல். இவை எல்லாம் மாதவிடாய் வருவதற்கு 5லிருந்து 11 நாட்களுக்கு முன்பதாகவே ஏற்பட்டுவிடுகின்றன. மாதவிடாய் ஆரம்பித்தவுடன் இந்த அறிகுறிகள் எல்லாம் போய்விடுகின்றன.

சினை முட்டை வெளிப்படும் சமயத்தில் ஏற்படும் வலிகள்
மாதவிடாய் ஆரம்பித்த 11லிருந்து 17வது நாளில் இந்த வலி ஏற்படுகிறது. வெள்ளைப்படுதல் மற்றும் இடுப்பு மற்றும் தொடையில் வலி ஏற்படுவதே இதற்கான அறிகுறி.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, குமட்டல், வாந்தி மற்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. அடி வயிறு, முதுகு வலி மற்றும் தொடைக்கும் வலி பரவுகிறது. கால்களில் விறைப்பு ஏற்படுகிறது. சிலருக்கு வயிற்று வலி அதிகமாகவும் உதிரப் போக்கு கட்டியாகவும் வெளிப்படும்.

விஷ சட்டம் 1952 பெண்களுக்கு எந்த விதமான பாதுகாப்பையும் வழங்கவில்லை. கருத்தடை மாத்திரைகளை எந்த பதிவும் எல்லாமல் பெண்கள் எளிதாக வாங்குவது தடை செய்யப்பட்ட மருத்துவரின் கண்காணிப்பின் கீழேயே கருத்தடை மருந்துகள் விநியோகிக்கப்பட வேண்டும். தற்போதுள்ள சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

கருத்தடை மாத்திரைகள் கொண்டு வரும் பாதிப்புக்களை எடுத்து விளக்கும் பொருட்டு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு மாற்றாக வேறு பாதுகாப்பான குறைவான உடல் நலப் பாதிப்புக்களை ஏற்படுத்தும் வழிகளைப் பரிந்துரைக்க வேண்டும்.

பெண்களில் உடல் நலனில் அக்கறை காட்டும் பொருட்டு ஆண்களும் தங்களுடைய பங்கை ஆற்ற வேண்டும். ஆணுறை, விந்து புகுதலை தவிர்க்கும் முறை (coitus interruptus) மற்றும் ஆண் குடும்பக் கட்டுப்பாடு (vasectomies) போன்ற முறைகளைப் பயன்படுத்தலாம். தாய்லாந்தில் ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வது பரவலாக வரவேற்கப்படுகிறது. 1984ல் அங்கு 164,511 ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டுள்ளனர். ஆகையால் குடும்பக் கட்டுப்பாடு என்பது பெண்களால் மட்டும் செய்துகொள்ளப்பட வேண்டியது ஒன்று அல்ல.

பெண்களுக்கான உடல் நலனும் வாழ்க்கைத் தரமும் மேம்பட ஆரோக்கியமான வழிகளை கடைபிடிக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment