Tuesday, December 30, 2008

புதிய அத்தியாயம் தேவை - ஆடிய ஆட்டமும், தின்று குவிந்த விருந்து உபசரிப்பும் போதும் - எளிமையான வாழ்க்கைக்கு திரும்புங்கள் - பினாங்கு பயனீட்டாளர் சங்கம

பிறந்து விட்ட இந்த 2009ம் ஆண்டில் மலேசியர்கள் அதிக அளவு சிக்கனத்தையும் - எளிமையான வாழ்க்கை முறையையும் கடைபிடிக்க வேண்டிய காலத்திற்கு வந்து விட்டதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறுகிறது.

இவ்வளவு காலம் நாம் அனுபவித்த சொர்க்க வசதிகள் இந்த ஆண்டும் தொடரும் என நாம் எதிர்பார்க்க முடியாது என்கிறார் பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ்.
பொருளாதாரம் வலுவிழந்து வருகிறது. கடந்த மூன்று மாதத்தில், பினாங்கில் மட்டும் 2000 தொழிற்சாலை தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வருகின்ற அடுத்தடுத்து மாதங்களில் எத்தனை பேர் வேலை இழந்து, பிற தொழிலுக்காக அலைய போகிறார்கள் என்று தெரியவில்லை என சுப்பாராவ் கூறினார்.
இது பினாங்கில் மட்டுமல்ல. மலேசியா முழுவதும் நடைபெறுகின்றது. ஆக தொழிற்சாலையே தங்கள் ஜீவ நாடி என நம்பிக்கை கொண்டிருந்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கின்ற சூழ்நிலையில் நாம் இன்னும் சிக்கனத்தையும் கடைபிடிக்காமல் இருப்பது வேதனை தருகின்றது என்றார் அவர்.

கூடுதல் நேர வேலை ரத்து, வேலை நேர அளவு குறைத்தல், போன்றவற்றையும் தொழிற்சாலைகள் தொடங்கி விட்டன. ஆனால் நாம் கூடுதலான விரையத்தை விடாமல் கட்டிக்காத்து வருகின்றோம் என்றார் சுப்பாராவ்.

விருந்து விருந்து என விரைய விருந்தோம்பல் வைத்து உணவை சாக்கடையில் கொட்டுகின்றோம். பல விதமான விழாக்களை நடத்தி பணத்தையும் நேரத்தையும் அனாவசியமாக்கின்றோம். ஆடம்பர வாழ்க்கையில் மிதக்க கனவு காண்கின்றோம்.
ஆனால், உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி தொடங்க ஆரம்பித்து விட்டது. குறைந்த கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்க ஆரம்பித்து விட்டது என்றும் சுப்பாராவ் எச்சரிக்கை விடுத்தார்.

நாம் ஆடிய ஆட்டம் போதும், ஆளவேண்டிய நாம் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றோம். வாழ்வதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட வேண்டிய காலகட்டாயத்திற்கு வந்து விட்டோம் என்றார் சுப்பாராவ்.

உங்களுடைய வாழ்க்கை இந்த புதிய ஆண்டில், ஜொலிக்கப் போகிறது. யோக காலம் கூடவே வருகிறது என ஜோசியர்கள் சொல்வார்கள். ஆனால் நாம், எந்த மாற்றத்தையும் செய்யாமல், சிக்கனத்தை கடைபிடிக்காமல், எந்த நேரமும் செலவு செலவு என விரையத்தைலேயே முழுமூச்சாக இருந்தோமானால், நிச்சயம் நாம் பல பொருளாதார-குடும்ப சிக்கல்களுக்கு ஆளாவோம்.

ஆபாய மணி அடிக்கப்பட்டு விட்டு எச்சரிக்கையும் தெரிவிக்கப்பட்டுவிட்டது. இனி மகிழ்ச்சிகரமான வாழ்க்கையையும், ஆனந்தமான சூழ்நிலையையும் உருவாக்க வேண்டிய புதிய அத்தியாயத்திற்கு நாம் தயாராக வேண்டும் என புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார் என்.வி.சுப்பாராவ்.

No comments:

Post a Comment