Monday, December 22, 2008

இரசாயன உரம் உணவை நஞ்சாக்குகிறது இயற்கை வேளாண்மைக்குத் திரும்புங்கள் - பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

விவசாய முறைகளில் நஞ்சைத் தெளிக்காமல் இயற்கை வேளாண்மை முறைகளை விவசாயிகள் பயன்படுத்தினால் பயனீட்டாளர்களின் ஆரோக்கியம் ப¡துகாக்கப்பட்டு லட்சக்கணக்கான வெள்ளியைச் சேமிக்க முடியும் என்கிறது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

விவசாயத்தில் சேர்க்கப்படும் பூச்சி மருந்துகளே பல நோய்களுக்கு மூலகாரணமாகத் திகழ்கின்றது என்றார் பி.ப.சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ். மலேசியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இரசாயன உரம், களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி என்ற பெயரில் மண்ணின் வளமும், செழிப்பும் அழிக்கப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் இரசாயன உரமும், பூச்சிக்கொல்லிகளும் நமது உணவை நஞ்சாக்கி, மனிதர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவித்து வருகின்றன என்று வேதனையோடு கூறினார் இத்ரிஸ்.

“இயற்கை வேளாண்மையே பசுமை உலகின் வித்து” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இயற்கை விவசாய பயிலரங்கை தொடக்கி வைத்து உரையாற்றியபோது இத்ரிஸ் இவ்வாறு கூறினார். சுமார் 50 விவசாயிகள் கலந்துகொண்ட இப்பயிலரங்கு பி.ப.சங்க பணிமனையில் உள்ள விவசாயப் பகுதியில் நடைபெற்றது. இந்தப் பயிலரங்கு பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் சுகாதாரமான உணவையும் உட்கொள்வதற்கு இப்பொழுதுள்ள விவசாய முறை தொடராமல் இருக்க நமது பாரம்பரிய விவசாய முறைக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும். ஆராக்கியமான உணவும், சுகாதாரமான சுற்றுச்சூழலும் அனைவருக்கும் கிட்ட வேண்டும் என்றார் இத்ரிஸ். இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகள் மாறுவதால் மனிதகுலத்திற்கு அளப்பரிய சேவையைச் செய்கின்றார்கள். விஷமற்ற உணவைப் பயிராக்கி பயனீட்டாளர்களுக்கு ஆரோக்கியமான உணவைக் கொடுத்து மண்ணையும் வளமாக்குகிறார்கள் என்றார் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்.

அனைத்து இன விவசாயிகளும் கலந்துக்கொண்ட இந்த இலவச விவசாய பயிலரங்கில் 6 விதமான இயற்கை முறையிலான வழிகள் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு சொல்லித் தரப்பட்டன.

முதல் இரண்டு முறைகளை பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் செய்து காண்பித்தார்.
பயிர் வளர்ச்சிக்குப் பயன் தரும் முட்டை ரசம் என சொல்லப்படும் எலுமிச்சை முட்டை கரைசல் முறையை சுப்பாராவ் முதலில் செய்து காட்டினார். ஒரு பயிர் ஊக்கியாக செயல்படும் இந்த எலுமிச்சை முட்டை கரைசல, கரும்பு, வாழை, நெல், காய்கறிகள், கீரை வகைகள், பழ மரங்கள் மற்றும் பூச்செடிகளுக்கும் பயன்படுத்தலாம் என்றார் அவர்.

அடுத்தது வாழை மட்டையை உபயோகித்து மண்புழு உரம் தயாரிக்கும் மிக எளிமையான முறையையும் சுப்பாராவ் சொல்லிக்கொடுத்தார்.

அடுத்து ஜோகூர், கூலாயில் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வரும் த. கண்ணியப்பன் இயற்கை வேளாண்மயில் அனைத்து விவசாயிகளாலும் மிக எளிதாக பயன்படுத்தக்கூடிய மேலும் இரண்டு விதமான முறைகளைச் செய்துகாட்டி விவசாயிகளின் பாராட்டுதலைப் பெற்றார். மீன் கழிவு மற்றும் கருப்புச்சீனியை கலந்து பயன்படுத்தித் தயாரிக்கப்படும் குணப்பசலம் முறையைச் செய்து காட்டினார். அடுத்து பூச்சிகளைச் சாகடிப்பதற்கு இரசாயன மருந்துகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக, சில இலை தழைகளை தேர்வு செய்து அதன் மூலம் கிடைக்கும் நீரை உபயோகித்து பூச்சிகளை எவ்வாறு விரட்டலாம் என்பதையும் செய்துகாட்டினார். இது பயிலரங்களில் கலந்துகொண்ட விவசாயிகளை ஆச்சரியப்பட வைத்தது.

இறுதியாக, கெடா, லுனாசில் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளும் க.சன்மார்க்கம் பழங்கள் மூலமாக தயாரிக்கப்படும் நுண்ணுயிர் ஊக்கியை தயார் செய்து காட்டினார். இதனைப் பயன்படுத்துவதால் மண்ணை வளப்படுத்துவதோடு, பூஞ்சை மற்றும் பயிர்களுக்கு ஏற்படும் நோய்களையும் கட்டுப்படுத்துகின்றன. அடுத்ததாக சன்ம¡ர்க்கம், சாணம், கோமியம் மற்றும் கருப்புச்சீனி ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்படும் அமிர்தக் கரைசலையும் செய்து காட்டினார்.
கலந்துகொண்ட அனைத்து விவசாயிகளும் இந்த எளிமையான இயற்கை விவசாய முறையை பின்பற்றப்போவதாகத் தெரிவித்தனர். மலேசிய விவசாயிகள் இயற்கை வேளாண்மையை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்த பி.ப.சங்கம், விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு பி.ப.சங்கம் தயாராக இருப்பதாக எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

1 comment:

  1. sxdgby,ml.ie4wslkuireswwwwrtfkdkliwokli5ekimn kid5rkmnnlklirkmn

    ReplyDelete