Tuesday, August 16, 2011

வாழ்க்கை மன்னிக்க மறுத்துவிடும்

அவ்வப்போது தொலைக்காட்சி மூலம் மற்றவர்கள் வாழ்க்கையில் நான் நுழைந்து கொண்டு இருக்கிறேன். என் வாழ்க்கையில் தொலைக்காட்சி நுழைந்ததா என்று யோசித்துப் பார்க்கிறேன்.
இல்லை. சிறு வயதிலிருந்தே வாழ்க்கை என்னைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது.

அதனால், தொலைக்காட்சி நம் தேசத்தில் அறிமுகமான ஆரம்ப வருடங்களில்கூட என்னைப் பெரிதாக வசீகரித்ததில்லை. வாழ்க்கையில் எதுவும் உருப்படியாக நடக்காதவர்கள்தாம்
தொலைக்காட்சியே கதி என்று கிடப்பார்கள். அதில் காணும் வேறு யார் மூலமோ தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொள்ள முற்படுவார்கள். பசுமையான மலையையோ, அழகான நீரோடையையோ பார்த்து ரசித்துவிட்டு வந்தபிறகும், அந்த அதிர்வுகள் வெகு நேரம் உங்கள்
மனதில் தங்கியிருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா?


தொலைகாட்சியின் அதிர்வுகளும் அப்படித்தான் உள்ளே இறங்கும். பார்த்த ஒவ்வொரு பிம்பத்தையும், ஒலியையும் மனம் அசைபோடும்.குடிக்காரர்கள்,கொலைகாரர்கள், போதை மருந்துக்கு அடிமையானவர்கள், மற்றவர் வாழ்க்கையைக் கெடுக்க சூழ்ச்சி செய்பவர்கள், இன்னும் யார் யார் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டுவிடக்கூடாது என்று கவனமாக இருக்க ஆசைப்படுவீர்களோ , யார் யாருடன் எந்த வித சகவாசமும் வைத்துக்கொள்ளவே கூடாது என்று தீர்மானமாக நினைக்கிறீர்களோ, அவர்களைத் தொலைக்காட்சி மூலம் உங்கள் வீட்டுக்குள் சுதந்திரமாக நுழைய அனுமதிக்கிறீர்கள்.

அவர்களால், உங்கள் வீட்டுக் குழந்தைகளின் புத்திசாலித்தனம் பெரிதளவு சிதைக்கப்படுகிறது. அவர்களின் மூளை வளர்ச்சி பெரும் அளவு தடை செய்யப்படுகிறது. தொலைக்காட்சி என்ற கண்டுபிடிப்பு அபாரமானது. ஆனால், அளவுக்கு அதிகமாக அதற்கு இடம் கொடுத்ததால், அது புத்தகங்கள் படிக்கும் வழக்கம், விளையாட்டில் ஈடுபடும் ஆர்வம் இவற்றைக் குழந்தைகளிடமிருந்து பறித்துவிட்டது. கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளை ஒரு நிலையாக உட்காரச் சொன்னால், வெகு இயல்பாக செய்கிறார்கள்.


சத்குரு ஜக்கி வாசுதேவ்

அதே நேரம், நகரத்து மாணவர்கள் உடைந்த பம்பரங்கள் போல் ஒரு புறமாகச் சாய்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுடைய உடல்நலம், விளையாட்டை மறந்து, அலட்சியப்படுத்தப்பட்டு இருக்கிறது. தொலைக்காட்சி முன் உட்கார்ந்து, யாரோ மலையேறுவதைப் பார்த்து, நீங்களே மலையேறிவிட்ட திருப்தி கொள்கிறீர்கள். யாரோ நடக்கிறார்கள். யாரோ μடுகிறார்கள்.

யாரோ நீந்துகிறார்கள். யாரோ காதலிக்கிறார்கள். உங்கள் வாழ்க்கையையே அந்த நபரின் மூலம் வாழப் பார்க்கிறீர்கள். வாழ்க்கையின் நேரடி அனுபவங்களைச் சந்திக்காமல், யாருடைய பிம்பம் மூலமாகவோ பொய்யாக வாழ்வது புத்திசாலித்தனமா? நாளைக்குத் தொலைக் காட்சித் திரையைப் பொருத்திவிட்டால், கல்லறையில் கூட உட்கார்ந்திருக்க நீங்கள் தயார். அப்படித்தானே? மக்களுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லி, அவர்களை மேம்படுத்தி சமூகக் கட்டுக்கோப்பையே மாற்றி அமைக்கக்கூடிய மிகச் சக்தி வாய்ந்த μர் ஊடகம், பயனற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே தயாரித்து வழங்கிக்கொண்டு இருப்பது எவ்வளவு அபத்தமான விஷயம். பணம் பண்ணுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நிகழ்ச்சிகளைத் தயாரிப்பவர்கள் பற்றித்தான் கவலையாக இருக்கிறது. அவர்கள் முதலில் தங்கள் ரசனையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

நிஜ வெள்ளத்தை மறந்து தொலைக்காட்சி வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினர் பொழுது போக்கு அம்சங்களே இருக்கக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், அவை மனதை அமைதிப்படுத்தி, புத்துணர்ச்சி ஊட்டுவதாக இருக்க வேண்டும். ஆனால், இன்று பெரும்பாலான தொடர்களின் உள்ளடக்கமும், தரமும் பார்ப்பவரின் புத்திசாலித்தனத்தின் மீது தொடுக்கப்படும் போராகவே இருக்கிறது. தொழில்நுட்பங்களில் மற்ற எந்தத் தலைமுறையை விடவும் நாம் முன்னணியில் இருக்கக்கூடும். ஆனால், உடல்ரீதியாக, மனரீதியாக மக்கள் தொகையில் பெரும் பகுதி மிகப் பலவீனமாகவே விளங்குகிறது.

உருப்படியாகச் செய்வதற்கு எவ்வளவோ இருக்க, பகல் நேரங்களில்கூட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டு ஜனத் தொகையில் ஒரு பெரும்பகுதி உட்கார்ந்திருந்தால், அந்த நாடு அழுகிக்கொண்டு இருக்கிறது என்று அர்த்தம். தொலைக்காட்சியோ, கைபேசியோ புதிதாக எது கிடைத்தாலும், சரியான பக்குவம் இன்றி, தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்துவிடுகின்றோம். பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல், வாழ்க்கையையே அவற்றின் மீது எழுப்ப முயற்சிக்கின்றோம்.

தவறான திசையில் வெகு தொலைவுக்குப் போய்விட்டால், விருப்பப்பட்டால்கூட நம்மால் சரி செய்ய முடியாத அளவுக்கு எல்லாம் சிடுக்காகி இருக்கும். வாழ்க்கை எல்லா சமயங்களிலும் நம்மைப் பொறுத்துக்கொள்ளாது. அது மன்னிக்க மறுத்துவிடும் நேரங்களும் உண்டு என்பதை மறக்காதீர்கள்.

நன்றி : ஆனந்த விகடன்

No comments:

Post a Comment